Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 3 ஜூலை, 2017

ஜிஎஸ்டி வரியால் முடங்கும் அபாயத்தில் கடலைமிட்டாய் தயாரிப்பு! July 03, 2017

ஜிஎஸ்டி வரியால் முடங்கும் அபாயத்தில் கடலைமிட்டாய் தயாரிப்பு!


கடலை மிட்டாய் தொழிலுக்கு கடந்த காலங்களில் வரி விதிக்கப்படாத நிலையில், தற்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பதால் ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு போன்று கோவில்பட்டி கடலைமிட்டாய் பிரசித்தி பெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்கள், குடிசைத்தொழிலாக கடலை மிட்டாய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், கடலைமிட்டாய்க்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் தங்கள் தொழில் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

கடலை மிட்டாய் தொழிலுக்கு கடந்த காலங்களில் எந்த வரியும் விதிக்கப்படாத நிலையில், தற்போதைய ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சிறு நிறுவனங்களின் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10 சதவீதம் லாபம் வைத்து விற்பனை செய்யும் தங்களிடம், 18 சதவீதம் வரி செலுத்த கூறினால், எப்படி கட்ட முடியும் என்றும் கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

20 லட்சத்துக்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள நிறுவனங்கள், வரி செலுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், இந்த அறிவிப்பின் மூலம் கார்ப்ரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு வழிவகை செய்வதாக கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

கடலை மிட்டாய் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரம்பரியமாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.