வெடிகுண்டு கலாச்சாரத்தை ஒழிப்பதே புதுச்சேரி அரசின் நோக்கம்!” : நாராயணசாமி November 22, 2017
புதுச்சேரியில் வெடிகுண்டு கலாச்சாரத்தை ஒழிப்பதே அரசின் நோக்கம் என முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியை அடுத்த ஷண்முகாபுரம் என்.ஆர்.ராஜா நகரில், பெருமாள் என்பவரை மிரட்டுவதற்காக, நான்கு பேர்கொண்ட கும்பல் அவரது வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்றது. இதில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்தை முதலமைச்சர் நாராயணசாமி நேற்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், புதுச்சேரி மாநிலத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை ஒழிப்பதே அரசின் நோக்கம் என்று தெரிவித்தார்.