Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 24 மே, 2018

தலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.,க்கள் கைது! May 24, 2018

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்டனர்.

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை தொடர்பாக அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏ-க்கள் தலைமைச்செயலகம் சென்றனர். அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விவாதிக்க முதல்வரை சந்திக்க மு.க.ஸ்டாலின் அனுமதி கோரினார். 

அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, முதல்வர் அறை முன்பு ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து ஸ்டாலினை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியே கொண்டு வந்தனர். 

இதைதொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஆதரவாளர்கள் தலைமைச் செயலகம் முன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். 

சாலைமறியல் போராட்டம் காரணமாக ராஜாஜி மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே ஸ்டாலினை கைது செய்து அழைத்து சென்ற காவல்துறை வாகனத்தை சிறைபிடித்து திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, தன்னைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாக ஸ்டாலின் தவறான தகவலை வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். பத்திரிகைகளில் செய்தி வருவதற்காக தவறான தகவலை வெளியிட்டு வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.