Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 2 ஜூலை, 2018

நீரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இண்டர்போல்! July 2, 2018

வங்கி மோசடியில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இண்டர்போல் காவல்துறை.
Image
பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலியாக கிரெடிட் கடிதங்கள் அளித்து சுமார் 13,000 கோடி ரூபாய் வரை கடன் பெற்று ஏமாற்றிவிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி.

தப்பிச் சென்ற நீரவ் மோடியை இந்தியாவிற்கு கொண்டு வர கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது சிபிஐ. கடந்த மாதம், The International Criminal Police Organization (Interpol) என்று அழைக்கப்படும் சர்வதேச காவல்துறையை இது தொடர்பாக அணுகிய சிபிஐ, அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு வலியுறுத்தியது. தொடர்ந்து நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பிய பின்னர் தற்போது சிபிஐயின் முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது.

கடந்த ஜூன் 29ஆம் தேதி நீரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் எனப்படும் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிக்கான அறிவிக்கையை பிறப்பித்துள்ளது இண்டர்போல். எனினும் அவர் தப்பியோடுவதை தவிர்க்க இந்தத் தகவலை இன்று தான் அதிகாரப்பூர்வமான வெளியிட்டுள்ளனர்.

ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதன் மூலம் சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு கிடைக்கும் 192 நாடுகளில் நீரவ் மோடி குறித்த தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. நீரவ் மோடி மட்டும் அல்லாது இந்த மோசடியில் தொடர்புடைய நீரவ் மோடியின் சகோதரர் நீஷல் மோடி ( பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர்), அவருடை நிறுவனத்தில் பணியாற்றிய சுபாஷ் பாரப் ஆகியோருக்கும் இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நீரவ் மோடியின் பாஸ்போர்டுகளை மத்திய அரசு முடக்கி இருந்தது, அதே போல நீரவ் மோடியினை அனுமதிக்க வேண்டாம் என சில நாடுகளுக்கும் இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இண்டர்போலின் இந்த நடவடிக்கை மூலம் நீரவ் மோடி விரைவாக கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.