Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 15 டிசம்பர், 2018

மனிதர்கள் உடலில் மருத்துவம் எனும் பெயரில் மோசமான சோதனைகள் செய்துவந்த தனியார் பரிசோதனை மையம்! December 14, 2018

தனியார் பரிசோதனை மையம் ஒன்று சிலரது ஏழ்மையை பயன்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்  பரிசோதனைகளை மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையிடம் புகார் அளிக்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
   
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர் கிருஸ்ணமூர்த்தி. 36 வயதான இவர் கோவை 
சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள காஸ்டிங் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி  குடும்ப சூழ்நிலை காரணமாக உடன் பணியாற்றும் நண்பரிடம் பணம் கடன் கேட்டுள்ளார்.
அப்போது அந்த நண்பர் ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்து, அந்த நபரிடம் பேசுமாறும், அவர் பணம் உதவி செய்வார் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி அந்த எண்ணைத் தொடர்பு கொள்ள  வெள்ளகிணறு அருகில் உள்ள 
ஸ்பினாஸ் என்னும் ஆய்வகத்திற்கு வருமாறும் அங்கு சத்து மாத்திரை கொடுப்பார்கள் என்றும் கூறியுள்ளனர். அதை உட்கொண்ட பிறகு  மூன்று நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் அதற்கு 8 ஆயிரம் ரூபாய் தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணமூர்த்தி அங்கு சென்றவுடன் முழு உடல் பரிசோதனை செய்து விட்டு மனித உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கான ஆய்வு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். அங்குள்ள மருந்தக ஆய்வாளர் ஒருவர், இந்த ஆய்வுக்கு முன் கிருஷ்ணமூர்த்தியின் உடல் மற்றும் இதயத்தை முழுமையாக 
பரிசோதனை செய்து உடல் நிலையின் தன்மையை உறுதி செய்துள்ளனர்.
பின்னர் கிருஷ்ணமூர்த்திக்கு கொழுப்புதன்மையை அதிகரிக்கும் அளவிற்கு தேவைக்கு அதிகமான கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவு கொடுத்துள்ளனர்.அதேபோல கொழுப்பை அதிகரிக்கும் மருந்து மாத்திரைகளை கொடுத்தும் ஆய்வு செய்ததாகவும் இந்த ஆய்வின் போது 1 மணி நேரத்திற்கு ஒரு முறை சுமார் ஐந்து 
Image
முறைக்கு மேல் இரத்தத்தை எடுத்ததாகவும் கூறும் கிருஷ்ணமூர்த்தி அதற்காகத் தனக்கு 8 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் கூறுகிறார்.
இதேபோல் பணத்திற்கு ஆசைப்பட்டு மூன்று முறை அந்த ஆய்வகத்திற்கு சென்ற கிருஷ்ண்மூர்த்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு கிருஷ்ணமூர்த்தி மருத்துவரைப் பார்த்தபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. கொழுப்பு இதயத்தில் அடைத்திருப்பதாகவும்  உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளனர் மருத்துவர்கள். பிறகு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கிருஷ்ணமூர்த்தி தன்னைப் போல் 18 பேருக்கு அந்த ஆய்வகத்தில் சோதனை மேற்கொண்டதாகவும் கூறுகிறார். இதுகுறித்து காவல் துறையிடமும் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்துள்ளார்.
இது குறித்து சம்பவ இடத்தில் நியூஸ் 7 கள ஆய்வு மேற்கொண்ட போது ,அந்த ஆய்வகம் முழுவதும் சிசிடிவி கட்டுப்பாட்டுக்குள் உள்ளது தெரிந்தது. மேலும் அங்கிருந்த தனியார் காவலர்களும்,  இங்கே யாரும் நிற்க கூடாது எனவும் உடனே இங்கிருந்து கிளம்புங்கள் என்றும் கூறினர். நாம் ஆய்வகத்தின் உரிமையாளர்களிடம் பேச வேண்டும் என்றோம். அதற்கும் அவர்கள் மறுத்ததோடு வீடியோ எடுக்கவும் அனுமதிக்கவில்லை. இதையடுத்து ஆய்வகத்தை நடத்துபவர்களிடம் பேச வேண்டும் என்று நாம்  நேரிலும் ,தொலைபேசியிலும்  பலமுறை முயற்சித்தோம் .ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
 
ஒருவரின் வறுமையை பயன்படுத்தி இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.. 
source:ns7.tv