
source ns7tv
சமூகச் சீரழிவுக்கு வழிவகுக்கும் TikTok மொபைல் செயலியை தடை செய்ய வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயனாளிகள் தங்களிடம் உள்ள ஆடல், பாடல் உள்ளிட்ட தனித்திறமைகளை 15 வினாடிகளில் வெளியுலகுக்கு தெரியப்படுத்துவதற்கு உதவுவது தான் இந்த TikTok செயலி எனக் கூறி அறிமுகப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஓவியம் வரையும் முயற்சி கிறுக்கலாக மாறிப் போனதைப் போன்று, TikTok செயலி தற்போது ஆபாசக் களஞ்சியமாக மாறிப் போயிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
TikTok செயலியில் ஒரு பதிவுக்கு ஒரு முறை ஆயிரம் பேரிடமிருந்து வரவேற்பு கிடைத்தால், அடுத்த முறை அதை இருமடங்காக்கும் எண்ணத்தில் கூடுதல் ஆபாச சேட்டைகளை அரங்கேற்றுகின்றனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். மாணவர்களிடம் கவனச் சிதறலை ஏற்படுத்தும் இந்த TikTok செயலியின் உள்ளடக்கங்கள் பல்வேறு நாடுகளில் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். சமூகச் சீரழிவுக்கு வழிவகுக்கும் TikTok செயலியை தடை செய்ய வலியுறுத்தியுள்ள ராமதாஸ், பெற்றோர்கள் இந்த செயலியின் தீய விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கு எடுத்துக்கூற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.