Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 14 ஜூன், 2020

முதல்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கோரி ஆர்.எஸ்.பாரதி ஐகோர்ட்டில் மனு

தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு குறித்து வழக்கு பதிய கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுமார் 12 ஆயிரத்து 524 கிராமங்களுக்கு 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1950 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டத்திற்கு டெண்டர் கோரப்பட்டது.


இந்த டெண்டரில் கலந்து கொண்ட பெரும்பாலான நிறுவனங்களை வைத்து விட்டு, குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் பங்கு உள்ளதாகவும் எனவே இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இருவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறியுள்ளார்.

கொரோனா அச்சம் பரவத் தொடங்கிய டிசம்பர் மாதத்தில் அதில் கவனம் செலுத்தாமல் குறிப்பிட்ட இரு நிறுவனங்களை தேர்வு செய்யும் நோக்குடன், விதிகளை மாற்றம் செய்வதில் அரசு கவனம் செலுத்தியதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி மற்றும் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோரின் விருபத்திற்கு இணங்க டெண்டர் ஒதுக்கும்படி தகவல் தொழில்நுட்ப துறை செயலாளராக இருந்த சந்தோஷ்பாபு மற்றும் டான்ஃபினெட் நிர்வாக இயக்குனர் எம்.எஸ்.சண்முகம் ஆகியோருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.