13 11 2021 தமிழகத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அனைகள், ஏரிகள் உள்ளிட்ட பல நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், ஆற்றுக்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மழை வெள்ளத்திற்கு சென்னை மாநகர் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது
மேலும் தமிழகம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்ங்களில் வயல்வெளிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளி்க்கிறது. நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர். இதில் தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு்ளளன.
தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்து விட்ட நிலையில், தமிழகத்திற்கு கொடுக்கப்பட்ட ரெட்அலார்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் தற்போது தமிழகம் முழுவதும் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில், கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முக்கிய அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக சென்னை மற்றும் கடலூரில் ஆய்வு மேற்கொண்ட அவர் தற்போது டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் இன்று தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின், பயிர் சேதங்களுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறுகையில்,
மழை வெள்ளத்தில் அதிகாரிகள், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் களப்பணியாளர்கள் என அனைவரும் துரிதமாக செயல்பட்டதால் பெரிய சேதங்கள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. முடிந்த அளவுக்கு பயிர் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு தொடர்பாக மத்திய அரசிடம் பேசியுள்ளோம். சென்னையில் மழைவெள்ள பாதிப்புகளை தடுக்க நிரந்தர தீர்வை நோக்கி திமுக அரசு செயல்படுகிறது. எந்த காலத்திலும் திமுக அரசு விவசாயிகளை கண் போல காக்கும். இந்த பேரிடர் காலத்தில் அரசியல் லாபத்திற்காக சிலர் விமர்சனம் செய்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், வெள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-stalin-carried-out-research-on-the-impact-of-floods-368912/