Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 12 அக்டோபர், 2022

சந்தேகத்தின்பேரில் மூன்றரை லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகை நிறுத்திவைப்பு-அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

 

தமிழகத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்றரை லட்சம் பேரின் முதியோர்
உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்,மக்களின் துயர் துடைப்பதே அரசின்
கடமை என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில், மேற்கொள்ளப்பட்டு வரும்
அரசு திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கடலூர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வருவாய் துறை அமைச்சர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வேளாண்
மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தொழிலாளர்
நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், அதற்காக கடலூர் மாவட்டத்தை தயார்படுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எங்களை இங்கு அனுப்பியுள்ளார். பொதுவாக கடலூர் மாவட்டம் மழை, வெள்ளம், புயல் போன்றவற்றால் அதிகம் பாதிக்கக்கூடிய மாவட்டமாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அதிகம்  பாதிக்கக்கூடிய பகுதி, குறைவாக பாதிக்க கூடிய பகுதி என்று மொத்தம் 228 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மொத்தம் சுமார் 1 ½ லட்சம் பேர் தங்குவதற்காக திருமண மண்டபங்கள், பள்ளிகள், கல்லூரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள 1077 என்ற தொலைபேசி எண் உள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடனடியாக அரசு இயந்திரம் அந்த இடத்திற்கு விரைந்து வந்து தனது செயல்பாடுகளை தொடங்கும்.

இதுபோக கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் சுமார் 5000 பேருக்கு பேரிடர் மீட்பு
பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக மேலும் 2000 மீட்பு படையினர் தயாராக
உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 325 கிலோமீட்டர் வடிகால் வாய்க்கால்கள்
தூர்வாரப்பட்டுள்ளது. மேலும் 3521 கி.மீ கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இதர
பகுதிகளில் 117 கிலோ மீட்டர் தூர்வாரப்பட்டுள்ளது. எனவே இந்த வடகிழக்கு
பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது, இதில் தமிழகத்தில்
இதுவரை விளிம்பு நிலையில் உள்ள 1.50 லட்சம் பேருக்கு மனை பட்டா
வழங்கப்பட்டுள்ளது.

அதுபோக கடலூர் மாவட்டத்தில் 6,241 பேருக்கு எஸ்டி சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல தமிழகத்தில் மூன்றரை லட்சம் முதியோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டு பரிசீலனை செய்து தகுதியுள்ள நபர்களுக்கு
வழங்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 34 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 681 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.


source https://news7tamil.live/3-5-lakh-senior-citizen-allowance-withheld-due-to-suspicion-minister-ramachandran-informs.html