Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடுங்கள்;

 DMK protest in Chennai against NEET exam

சென்னையில் திமுகவின் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்

நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும் ஆளுநரையும் கண்டித்து, மதுரையை தவிர தமிழ்நாடு முழுவதும் தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

உண்ணாவிரதத்தில் நிறைவுரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வை பற்றி கடந்த 5 ஆண்டுகளாக மிக அதிகமாக பேசிவிட்டேன். இந்த உண்ணாவிரதத்தில் நான் அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ கலந்து கொள்ளவில்லை. சாதாரண உதயநிதி ஸ்டாலினாக, இறந்துபோன 20 குழந்தைகளின் அண்ணனாக கலந்து கொள்கிறேன்.

நீட் உண்ணாவிரதம் போராட்டத்தில் கலந்து கொண்டால் உங்களுக்கு சட்ட சிக்கல் வரும். உங்கள் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என கூறினார்கள். அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் கூட இது குறித்து புகார் அளித்துள்ளார். ஆனால் எனக்கு அமைச்சர் பதவி முக்கியமல்ல; இதற்காக பதவி போனாலும் பரவாயில்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு என்ன திமிரு, எவ்வளவு கொழுப்பு. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்ட கூட்டத்தில், அம்மாசியப்பன் என்பவர் ‘என் மகன் நீட் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார். எனக்கு வசதி இருந்தது. இதனால் என்னால் கோச்சிங் செண்டருக்கு அனுப்ப முடிந்தது. இதனால் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்’ என்றார்.

ஆனால் இதை கேட்ட ஆளுநர். ‘ஐ நெவர் எவர்’ என்று சொல்கிறார். நான் ஆளுநரை கேட்கிறேன். நீங்கள் யார்? நீங்கள் என்ன மக்கள் பிரதிநிதியா? நீங்கள் ஒரு தபால்காரர் மட்டும்தான்?

நீங்கள் உங்கள் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடுங்கள். தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிடுங்கள். தி.மு.க சார்பில் தலைவர்கள் யாரும் இல்லை. தி.மு.க.,வின் கடைக்கோடி தொண்டனை எதிர்த்து போட்டியிட்டு நீங்கள் வெற்றி பெறுங்கள். அப்படி நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால் நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்கிறோம். உங்கள் சித்தாதங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் சொல்லுங்கள், அவர்கள் செருப்பை கழற்றி அடிப்பார்கள்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதில் தி.மு.க உறுதியாக உள்ளது. உண்ணாவிரதம். நாம் ஒவ்வொரு கல்லூரிக்கும் செல்ல வேண்டும். ஜல்லிக்கட்டு உரிமைக்காக போராடினோம். மாணவர்களின் உரிமைகளுக்காக போராட வேண்டாமா? மாணவர்கள் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தலைவர் நிச்சயமாக தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவார்.

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். ஏனெனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நீட் தேர்வை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

பா.ஜ.க.,வையும் அ.தி.மு.க.,வையும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக வாக்களித்துள்ளன, எனவே அ.தி.மு.க மதுரை மாநாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

நீட் தேர்வுக்கு எதிராக பிரதமர் இல்லம் முன் போராட்டம் நடத்த, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க பிரதிநிதிகளை அனுப்பு வேண்டும். அந்த போராட்டத்தில் வெற்றி பெற்று, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் அதற்கான முழுப் புகழையும் அ.தி.மு.க எடுத்துக் கொள்ளட்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/udhayanidhi-stalin-slams-tamil-nadu-governor-rn-ravi-at-neet-hunger-strike-741234/