Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 27 மே, 2025

தமிழகத்தில் ராஜ்ய சபா எம்.பி தேர்தல் தேதி அறிவிப்பு: புதிதாக வாய்ப்பு பெறும் 6 பேர் யார்?

 

தமிழகத்தில் ராஜ்ய சபா எம்.பி தேர்தல் தேதி அறிவிப்பு: புதிதாக வாய்ப்பு பெறும் 6 பேர் யார்? 27 5 2025 

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், வருகின்ற ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்கள் பா.ம.க-வின் அன்புமணி ராமதாஸ், தி.மு.க.-வின் எம். சண்முகம், முகமது அப்துல்லா, பி. வில்சன், அ.தி.மு.க-வின் என். சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.

ஜூன் 9 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும், வேட்புமனுவைத் திரும்பப் பெற ஜூன் 12 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலங்களவை பதவிக்கு போட்டி நடைபெறும் பட்சத்தில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 19-ஆம் தேதி மாலை 5 மணிக்கு எண்ணி முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதே போல், அசாம் மாநிலத்தில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தமிழகத்துடன் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு எப்படி நடக்கும்?

ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் தி.மு.க. கூட்டணிக்கு 159, அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 என்ற அளவில் எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. இதைவைத்து பார்க்கும்போது, தி.மு.க.வுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அ.தி.மு.க.வுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது, தி.மு.க.வில் வைகோ, அப்துல்லா, வில்சன், சண்முகம் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. அ.தி.மு.க.வில் சந்திரசேகரனின் பதவிக்காலம் முடிவடைகிறது. கடந்த முறை பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க. உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாசின் பதவிக்காலமும் முடிவடைகிறது.

எம்.பி.யாகும் கமல்ஹாசன்:

தி.மு.க. சார்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், வழக்கறிஞர் வில்சன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுமா? அதிமுக சார்பில் தே.மு.தி.கவுக்கு மாநிலங்களவை இடம் கொடுக்கப்படுமா? அன்புமணி மீண்டும் போட்டியிடுவாரா? என்பது விரைவில் தெரியவரும். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் இருந்து யார் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



source https://tamil.indianexpress.com/india/rajya-sabha-elections-in-tamilnadu-on-june-19-9307230