Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 19 ஜூன், 2025

இஸ்ரேல்-ஈரான் மோதல்: 'ஆபரேஷன் சிந்து' மூலம் 110 இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்பு!

 

இஸ்ரேல்-ஈரான் மோதல்: 'ஆபரேஷன் சிந்து' மூலம் 110 இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்பு! 19 6 2025 

இஸ்ரேல்-ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13-ந்தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்கு உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி முதற்கட்டமாக, 'ஆபரேஷன் சிந்து' திட்டத்தின் கீழ் ஈரானில் இருந்து சுமார் 110 இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் அர்மேனியா நாட்டின் தலைநகர் யெரெவானுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து இண்டிகோ விமானம் மூலம் மாணவர்கள் அனைவரும் அமெரிக்கா வழியாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விமானம் இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. மாணவர்களை வரவேற்க அவர்களின் பெற்றோர் விமான நிலையத்தில் திரண்டு இருந்தனர். ஈரானில் இருந்து மீட்கபட்ட மாணவர்களில் 90 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள். பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு ஜம்மு-காஷ்மீர் மாணவர் சங்கம் நன்றி தெரிவித்தது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

மீதமுள்ள அனைத்து மாணவர்களும் விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறோம் என ஜம்மு-காஷ்மீர் மாணவர் சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஈரானில் எம்.பி.பி.எஸ் படித்து வரும் 21 வயது மாணவர் மாஸ் ஹைதரின் தந்தை ஹைதர் அலி, "நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மாணவர்கள் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஆனால், தெஹ்ரானில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் இன்னும் மீட்கப்படாதது எங்களுக்கு வருத்தமாக உள்ளது," என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். மேலும், ஈரானில் சிக்கியுள்ள மற்ற மாணவர்களையும் வெளியேற்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலி வலியுறுத்தினார்.

இஸ்ரேல்-ஈரானுக்கு இடையே போர் ஏற்படும் அச்சங்களுக்கு மத்தியில், ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற 'ஆபரேஷன் சிந்து' திட்டத்தை தொடங்கியுள்ளதாக புதன்கிழமை அறிவித்தது. இந்தியா தனது வெளியேற்றும் பணிகளைத் தொடங்கிய நிலையில், ஈரானிய தூதரக அதிகாரிகள், சில இந்திய மாணவர்கள் தாக்குதலில் காயமடைந்ததாகவும், ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

indian students in iran, israel iran conflict

தனது மகன் சமீர் ஆலமுக்காக விமான நிலையத்தில் காத்திருந்த பர்வேஸ் ஆலம் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: "அவன் உர்மியாவில் படித்து 2 வருடங்கள் ஆகின்றன. எல்லாம் நன்றாகத்தான் இருந்தது, ஆனால் சமீபத்தில் நிலைமை மோசமடைந்தது. நாங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். ஆனால் இந்திய அரசு மாணவர்களை அர்மீனியாவுக்கு வெளியேற்றியது, அங்கு அவர்கள் நல்ல ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்திய அரசுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்றார்.

முதற்கட்ட வெளியேற்ற நடவடிக்கையில் டெல்லியில் தரையிறங்கிய 110 மாணவர்களில் ஒருவரான மீர் காலிஃப், ஈரானில் நிலைமை மிகவும் பதற்றமாக இருந்ததாகத் தெரிவித்தார். "எங்களால் ஏவுகணைகளைப் பார்க்க முடிந்தது. ஒரு போர் நடந்துகொண்டிருந்தது. எங்கள் அக்கம் பக்கங்கள் குண்டுவீசப்பட்டன. நாங்கள் சூழ்நிலை குறித்து மிகவும் பயந்தோம். அந்த நாட்களை மீண்டும் பார்க்க மாட்டோம் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

டெல்லியைச் சேர்ந்த மாணவரான அலி அக்பர், தாங்கள் அர்மீனியாவை நோக்கி பேருந்தில் பயணித்தபோது ஒரு ஏவுகணையும், ஒரு ட்ரோனும் விழுவதைப் பார்த்ததாக விவரித்தார். "செய்திகளில் காட்டப்படும் சூழ்நிலை சரியானது. இது மிகவும் மோசமாக உள்ளது. தெஹ்ரான் அழிக்கப்பட்டுள்ளது," என்று அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.


source https://tamil.indianexpress.com/india/flight-carrying-110-indian-students-evacuated-to-armenia-from-iran-lands-in-delhi-9375676