Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 10 ஜூன், 2025

சென்னையில் வீடு இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; மாநகராட்சி கணக்கெடுப்பில் தகவல்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

 

Homeless People

தமிழகத்தில் வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை 11,000-ல் இருந்து 13,000 அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சியின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. குறிப்பாக ராயபுரம் மண்டலத்தில் உள்ள ஜார்ஜ் டவுன் மத்திய வணிக மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் வீடு இல்லாத மக்கள் வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இது குறித்து, சென்னை மாநகராட்சி ஜனவரி மாதம் நடத்திய வீடு இல்லதாதவர்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பின்படி, நகரத்தில் வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை, முந்தைய கணக்கெடுப்பான 11,000-ல் இருந்து அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது, மேலும், கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வாய்ப்புகளைத் தேடி பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.

பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் 9623 ஆக இருந்த வீடற்ற நபர்களின் எண்ணிக்கை, மே மாத கணக்கெடுப்பின் முடிவில் 13,000 ஐத் தாண்டியுள்ளதாக கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜி.சி.சி) கண்டறிந்துள்ளது. இது குறித்து தி இந்து –ல் வெளியான தகவலின்படி, ராயபுரம் வார்டு 57 கவுன்சிலர் ராஜேஷ் ஜெயின் கூறுகையில், “ஆந்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் ராயபுரம் மண்டலத்தில் உள்ள எனது வார்டுக்கு வேலை தேடி வந்துள்ளனர், அவர்களில் சிலர் வீடற்றவர்களாக உள்ளனர்.

எனது வார்டின் பல பகுதிகளில் ஆண்களை விட வீடற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பிற மாவட்டங்களிலிருந்தும் பலர் வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளனர். வால் டேக்ஸ் சாலை மற்றும் பிரகாசம் சாலை போன்ற பகுதிகளில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்களுக்கு வீட்டு வசதிகளைக் கோரத் தொடங்கியுள்ளனர். பிற மாநிலங்களிலிருந்து நகரத்திற்கு குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான உண்மையான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை.

இது அவர்களின் சொந்த கிராமங்களில் விவசாயம் தோல்வியடைந்ததா என்பதை நாம் சரிபார்க்க வேண்டும். அவர்களுக்கு உதவ நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். வீடற்ற குழந்தைகளில் சுமார் 10% பேர் பள்ளிக்குச் செல்வதில்லை. குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்க ஜி.சி.சி வார்டில் இரண்டு பள்ளிகள் உள்ளன, ”என்றும் அவர் கூறியுள்ளார்.

வார்டு 56 கவுன்சிலர் வி. பரிமளம் இது குறித்து கூறுகையில், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவப்படுவதை சுட்டிக்காட்டி, வீடற்ற குழந்தைகளை பள்ளிக்குச் செல்ல வற்புறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், அவர்கள் மற்ற சவால்களையும் எதிர்கொள்கின்றனர்.

இதனிடையே, ஜனவரி மாதம் கணக்கெடுப்பின் போது ராயப்பேட்டையில் வீடற்ற குடியிருப்பாளராக அடையாளம் காணப்பட்ட ஆர். மணிகண்டன், குடிமை நிறுவனங்களால் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தியதால் அவர் முன்பு வசித்து வந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.  மே மாதம் அவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தாலும், இந்த மாதம் ரூ3500 வாடகையை அவரால் செலுத்த முடியவில்லை.

நகரத்தில் தங்குமிடங்கள் இல்லாத கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா கூறினார். "அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அரசாங்கம் அத்தகைய நபர்களின் கண்ணியத்தை உறுதி செய்ய வேண்டும். கணக்கெடுப்பில் அடையாளம் காணப்பட்ட பல வீடற்ற நபர்களிடம் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் இல்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "இன்னும் ரேஷன் கார்டுகள் பெறாதவர்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்க நாங்கள் வசதி செய்வோம்" என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-chennai-corporation-survey-for-homeless-persons-in-city-update-9349795