Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 31 அக்டோபர், 2025

17 குழந்தைகளை பணயக் கைதிகளாக வைத்திருந்த நபர் சுட்டுப் பிடிப்பு; மும்பையில் பரபரப்பு

 30 10 2025

Hostage scare at Powai studio

17 குழந்தைகளை பணயக் கைதிகளாக வைத்திருந்த நபர் சுட்டுப் பிடிப்பு; மும்பையில் பரபரப்பு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பவாய் பகுதியில் உள்ள ஸ்டூடியோவில், ஒரு நபர் 17 குழந்தைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த நிலையில், பரபரப்பான மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு அந்தக் குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்தக் குழந்தைகளைப் பிடித்து வைத்திருந்த ரோஹித் ஆர்யா என்ற நபர், காவல்துறையினரால் சுடப்பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

வியாழக்கிழமை மதியம், மஹாவீர் கிளாசிக் கட்டிடத்தில் உள்ள 'ரா ஸ்டூடியோ'வில் இச்சம்பவம் நடந்தது. 10 முதல் 12 வயதுக்குட்பட்ட இந்தக் குழந்தைகள், ஆடிஷன் (audition) நிகழ்வுக்காக அந்த ஸ்டூடியோவுக்கு வந்திருந்தனர். அப்போது, அங்கிருந்த ரோஹித் ஆர்யா என்ற நபர் குழந்தைகளை அறைக்குள் வைத்து பூட்டியதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கட்டிடத்தின் பின்புறம் இருந்த அறையின் கிரில்லை உடைத்து உள்ளே நுழைய முற்பட்டனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, போலீஸ் அதிகாரி ஒருவர் ஒருமுறை சுட்டார். அந்த துப்பாக்கிக் குண்டு ஆர்யாவின் மீது பட்டு அவருக்கு காயம் ஏற்பட்டது என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். காயமடைந்த ஆர்யா உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மீட்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, "17 குழந்தைகளும் ஸ்டூடியோவில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்" என்று கூடுதல் ஆணையர் ஆஃப் போலீஸ் சத்ய நாராயண் சௌதரி உறுதிப்படுத்தினார். மேலும், இதுகுறித்து அடுத்தகட்ட விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

10 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் ஆடிஷனுக்காக ஸ்டூடியோவில் இருந்தனர். ஆர்யா கடந்த 4 அல்லது 5 நாட்களாக ஸ்டூடியோவுக்கு வந்துள்ளார் என்று மற்றொரு மூத்த அதிகாரி தெரிவித்தார். சம்பவம் நடப்பதற்கு முன்பு, ஆர்யா குழந்தைகளை ஒரு அறைக்குள் பூட்டிவிட்டு வீடியோ ஒன்றை பதிவுசெய்தார். அதில், "எனக்கு சிலருடன் பேச வேண்டும். நான் ரோஹித் ஆர்யா" என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். மேலும், தன்னைப் பேச அனுமதிக்காவிட்டால், "எல்லாவற்றையும் தீ வைத்துக் கொளுத்திவிடுவேன்" என்றும், தன்னையும் குழந்தைகளையும் காயப்படுத்துவேன் என்றும் அச்சுறுத்தியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் அவர்களது பெற்றோர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். "தற்போது ஆர்யா குறித்து எங்களுக்கு அதிக தகவல்கள் இல்லை. அவரது பின்னணி குறித்த விவரங்களைச் சேகரித்து வருகிறோம். சம்பவ இடத்தில் பஞ்சநாமா (Panchnama) நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஸ்டூடியோ மற்றும் கட்டிடத்தில் இருந்தவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகிறோம்," என்றும் அந்த அதிகாரி கூறினார்.



source https://tamil.indianexpress.com/india/hostage-scare-at-powai-studio-mumbai-police-rescue-17-children-accused-hurt-in-firing-10607779