/indian-express-tamil/media/media_files/2025/12/09/puducherry-opposition-leader-and-dmk-puducherry-convenor-r-siva-on-ponlait-scam-tamil-news-2025-12-09-16-24-09.jpg)
"பாண்லே நிர்வாக சீர்கேட்டிற்கான ஆதாரம் உள்ளதால் அடுத்து நீதிமன்றத்தை நாடுவோம். இப்போராட்டம் தீவிரமடையும்." என்று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா கூறினார்.
பாண்லே நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, புதுச்சேரி மாநில தி.மு.க மற்றும் தொ.மு.ச பேரவை சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குருமாம்பேட் பாண்லே நிறுவன வாயில் முன்பு இன்று காலை நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆற்றிய கண்டன உரையில் பேசியதாவது:
1971–ஆம் ஆண்டுகளில் கிராமப்புற பால் உற்பத்தியாளர் சங்கங்களை இணைத்து உருவாக்கப்பட்ட பாண்லே நிறுவனம் துவக்க காலத்தில் 70 ஆயிரம் லிட்டர் அளவிற்கு பால் கொள்முதலும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் விற்பனையும் நடந்தது. புதுச்சேரி மக்களுக்கு தேவையான பாலை புதுச்சேரியிலேயே கொள்முதல் செய்த காலம் மாறி, இன்று அண்டை மாநிலத்தில் அதிக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய பால் புரட்சி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அதேபோல் நல்ல வாய்ப்புள்ள புதுச்சேரியில் ஊழலால் பாண்லே நிர்வாகம் சீர்கெட்டுள்ளது.
தமிழகத்தில் வைக்கோல் வாங்கி தருகிறார்கள். புதுச்சேரியில் அரசில் ஏமாற்றுகிறார்கள். தற்போது 40 ஆயிரம் லிட்டர் பால் தான் உள்ளூர் மக்களிடம் வாங்குகிறார்கள். ரூ. 35 லிட்டருக்கு கஷ்டப்பட்டு தருகிறார்கள். வெளி மாநிலத்தில் அதிக கமிஷன் தருவதால் அதிகளவில் பால் வாங்குகிறார்கள். புதுச்சேரியில் தனியார் பால் நிறுவனங்கள் வளர்ச்சி பெற பாண்லே நிறுவாகமே காரணம். ஊழலால் கையூட்டு பெற்று பாண்லேவை மோசடி செய்து சீர்குலைத்து விட்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் கூட்டுறவு நிறுவனங்களான பாப்ஸ்கோ, ஸ்பின்கோ, அமுதசுரபி போன்றவைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், பாண்லே நிறுவனம் ரூ. 40 கோடிக்கு மேல் கடனைத் தாங்கி தள்ளாடிக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. பெயரளவிற்கு செயல்படும் பாண்லே நிர்வாகத்தில் ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். 15 லட்சம் லிட்டருக்கு பணிகள் செய்யலாம். ஆனால் செய்வதில்லை. கொள்ளைப்புற ஆட்கள் திணிப்பால் மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாண்லே நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய நிலம் வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளது. கூட்டுகொள்ளையில் அன்றைய தினம் ரூ. 20 கோடிக்கு வாங்கினர். அந்த மதிப்பு கிடைக்கவில்லை. பணமும் கிடைக்கவில்லை. அந்த சொத்தை வைத்து கடன் வாங்க முடியாத நிலை உள்ளது. அதை வாங்கியோர் மீது நடவடிக்கையே இல்லை. மோசடியில் பெரும் பணம் கைமாறி உள்ளது.
அரசு சொசைட்டி பால் வாங்க வேண்டுமானால் தமிழகத்தில் கேட்கலாம். கர்நாடகத்திலோ, ஆந்திரத்திலோ கேட்கலாம். தற்போது மோசமான நிறுவனத்திடம் லிட்டருக்கு ரூ. 47 கொடுத்து வாங்குகிறார்கள். இதில் மிகப்பெரிய தவறு நடக்கிறது. அமுல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறீர்கள். அதிலும் ஊழல் நடக்கிறது. பல மோசடிக்கு இங்குள்ள அதிகாரிகள் துணைபோகி உள்ளனர். பல வகையிலும் பணத்தை பிரித்து கொடுத்துள்ளனர். பாண்லே நிர்வாகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்ற ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும்.
புதுச்சேரி விவசாயிகளிடம் பால் வாங்கவே முடியாத நிலையில் பாண்லே அதிகாரிகள் உள்ளனர். ஆனால் ரூ. 150 கோடி கடன் கேட்டு 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்ய திட்டமிடுவது சரியானதல்ல. டேங்கர் வசதியும் இல்லை. அதுக்கு காரணம் கமிஷன்தான். இது ஏழை விவசாயிகள் பணம். பாண்லே நிர்வாகத்தில் தேர்தல் நடத்தாமல் உள்ளதால் ஊழல், முறைகேடு அதிகரித்துள்ளது. விவசாயிகள் உழைப்பை பங்கு போட்டு கொள்ளை அடிப்பது தவறு. பாண்லே நிர்வாகத்தை மீண்டும் இலாபத்தில் இயக்க ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும். கால்நடை பிரிவில் லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள். ஆனால் சினைஊசி பணம் தந்தால்தான் போடுகிறார்கள்.
பாண்லே நிர்வாகம் சிறப்பாக நடத்த வேண்டும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் எதிர்காலம் சிறக்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். அதற்காகத்தான் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தினோம். பாண்லே நிர்வாக சீர்கேட்டிற்கான ஆதாரம் உள்ளதால் அடுத்து நீதிமன்றத்தை நாடுவோம். இப்போராட்டம் தீவிரமடையும்.
இவ்வாறு பேசினார்.
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி.
source https://tamil.indianexpress.com/india/puducherry-opposition-leader-and-dmk-puducherry-convenor-r-siva-on-ponlait-scam-tamil-news-10895547