சென்னை தி.நகர் பகுதி, ஒலி மாசுபாட்டால் திக்குமுக்காடுகிறது. ரியல் டைம் ஒலி கண்காணிப்பு நிலையங்களின் தரவுகளின்படி, இங்கு இரவு நேரங்களில்கூட அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சத்தம் நிலவுவது தெரியவந்துள்ளது. தி.நகரில் நடந்துவரும் கட்டுமானப் பணிகளும், குறுகிய உட்புற சாலைகளில் செல்லும் கனரக வாகனங்களின் போக்குவரத்துமே இந்த அதீத சத்தத்திற்கு முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதுடன், அப்பகுதியை நிரந்தர ஒலி மாசுபாட்டு மையமாகவும் மாற்றியுள்ளது.
18 6 2025
அளவீடுகளின்படி, நள்ளிரவில் கூட தி.நகரில் ஒலி அளவு 65 டெசிபலுக்கு மேலாகவே உள்ளது. வணிகப் பகுதிகளுக்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த 55 டெசிபல் வரம்பை விட 10 டெசிபல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் ஒலி மாசு, அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
தி.நகர் மட்டுமல்ல, சென்னையின் மற்ற பகுதிகளிலும் ஒலி மாசுபாடு உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள எழும்பூர், அண்ணா நகர் போன்ற அமைதி மண்டலங்களில் பகல் பொழுதில் வழக்கமாக 60dB-65dB ஒலி அளவு பதிவாகிறது. இந்த மண்டலங்களுக்கான உச்சவரம்பு 50dB என்பது குறிப்பிடத்தக்கது.
குடியிருப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்ட சௌகார்பேட்டை, கடந்த 366 நாட்களில் 269 நாட்களும் அனைத்து இரவுகளில் ஒலி விதிமீறல்களை பதிவு செய்துள்ளது. இதேபோல், வேளச்சேரி மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளும் இரவு நேரங்களில் 100% விதிமீறலையும், பகல் நேரங்களில் 80% க்கும் அதிகமான விதிமீறல்கள் பதிவாகி உள்ளன.
முன்னாள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆர். ராஜமாணிக்கம் மற்றும் தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் எஸ். நாகன் ஆகியோர் நடத்திய தனிப்பட்ட ஆய்வும் இதை உறுதிப்படுத்துகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் இது ஒரு தொடர்ச்சியான நிலையாக இருந்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
"வாகனங்களின் இரைச்சலே முதன்மைக் காரணம், அதைத் தொடர்ந்து ஒழுங்குபடுத்தப்படாத கட்டுமானப் பணிகள்" என்று சமூக ஆர்வலர் கமல் தெரிவித்துள்ளார். இந்தத் தொடர்ச்சியான ஒலி மாசுபாடு, பொதுமக்களின் உடல்நலம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதீத ஒலி மாசுபாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், அதற்கான தீர்வுகளும், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் இன்னும் போதிய அளவில் இல்லை என்பதே நிதர்சனம். தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் நாகன் கருத்துப்படி, ஒலி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கட்டுமானப் பணிகளின்போதே துவங்க வேண்டும். "பள்ளிகளில் இரட்டை அடுக்கு ஜன்னல்கள் (double-paned windows), மேம்பாலங்களில் ஒலித் தடைகள் (noise barriers), தொழிற்சாலைப் பகுதிகளில் polycarbonate அல்லது ஒலியை உறிஞ்சும் கான்கிரீட் (sound-absorbing concrete) போன்றவற்றை பயன்படுத்துவது உதவும்" என்று அவர் குறிப்பிட்டார்.
'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பொறியாளர் பிரபாகரன் வீரராசு, திட்டமிடப்படாத நகரமயமாக்கலே இந்த ஒலி மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டினார். நகரங்கள் வளர்ச்சி அடையும்போது சுற்றுச்சூழல் அம்சங்கள் புறக்கணிக்கப்படுவதால் இதுபோன்ற பிரச்னைகள் தலைதூக்குவதாக அவர் தெரிவித்தார்.
சென்னையின் பெருகி வரும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) கடந்த 2024 ஆம் ஆண்டில் IIT-மதராஸ் உடன் இணைந்து புதிய ஆய்வைத் தொடங்கியுள்ளது. இந்த ஆய்வின் கீழ், நகரின் 40-50 மண்டலங்கள் வரைபடமாக்கப்பட்டு, அங்கு நிலவும் ஒலி அலைகளின் அதிர்வெண்கள் மற்றும் அவற்றின் காரணங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
"இந்த ஆய்வு குறிப்பிட்ட பிரச்னைகளுக்கான தீர்வுகளை வடிவமைக்க உதவும்" என்று IIT-மதராஸின் பேராசிரியர் சிவ் நாகேந்திரா தெரிவித்து உள்ளார். இதன்மூலம், எந்தப் பகுதியில் எந்த வகையான சத்தம் அதிகமாக உள்ளது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ற சிறப்புத் திட்டங்களை வகுக்க முடியும். இருப்பினும், நீண்ட கால அடிப்படையில் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கொள்கை ரீதியான முன்னெடுப்புகள் அவசியம் என 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் வீரராசு வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசு 2021-ம் ஆண்டில் ஒலி வரைபடத் திட்டத்தை முன்மொழிந்து, 106 ஒலி மீட்டர்களை நிறுவ ரூ.1.85 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால், இந்தத் திட்டம் இன்னும் செயல்படாமல் கிடப்பில் உள்ளது. இதற்கிடையில், அங்கீகரிக்கப்படாத ஹாரன்கள் பயன்படுத்துவது தொடர்பாக ஆண்டுக்கு சுமார் 9,300 வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.