/indian-express-tamil/media/media_files/XWZs4Gbu15oFPhu4U5w2.jpg)
சனாதன தர்மம் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்களுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய உதயநிதி, சமூக நீதிக்கு எதிரானது தான் சனாதனம் என்றும், சனாதனத்தை டெங்கு மற்றும் மலேரியா போல நினைத்து அவற்றை ஒழிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
உதயநிதியின் சனாதனம் குறித்த கருத்து சர்ச்சையாக வெடித்தது. இதற்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே பல்வேறு மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குகள் பதியப்பட்டன.
இதற்கிடையே, ஜெகநாதன் உள்ளிட்ட 3 பேர், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்கு எதிராக ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கவும், உதயநிதி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் கோரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பெல்லா திவேதி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற விசாரணையின்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மனுக்களை ஏற்க கூடாது என வாதிடப்பட்டது. அதே சமயம் மனுதாரர் தரப்பில் விசாரணை வேண்டும் என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி தள்ளுபடி செய்தார்.
மேலும், சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு எதிரான ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. ரிட் மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து, வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/supreme-court-rejects-writ-petitions-against-tamil-nadu-deputy-cm-udhayanidhi-stalin-sanathana-comments-8658758