புதன், 18 ஜூன், 2025

ஒலி மாசுபாட்டால் திக்குமுக்காடும் தி.நகர்.. இரவு நேரத்திலும் விதிமீறல்!

 T nagar air pollution

சென்னை தி.நகர் பகுதி, ஒலி மாசுபாட்டால் திக்குமுக்காடுகிறது. ரியல் டைம் ஒலி கண்காணிப்பு நிலையங்களின் தரவுகளின்படி, இங்கு இரவு நேரங்களில்கூட அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சத்தம் நிலவுவது தெரியவந்துள்ளது. தி.நகரில் நடந்துவரும் கட்டுமானப் பணிகளும், குறுகிய உட்புற சாலைகளில் செல்லும் கனரக வாகனங்களின் போக்குவரத்துமே இந்த அதீத சத்தத்திற்கு முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதுடன், அப்பகுதியை நிரந்தர ஒலி மாசுபாட்டு மையமாகவும் மாற்றியுள்ளது.

18 6 2025 

அளவீடுகளின்படி, நள்ளிரவில் கூட தி.நகரில் ஒலி அளவு 65 டெசிபலுக்கு மேலாகவே உள்ளது. வணிகப் பகுதிகளுக்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த 55 டெசிபல் வரம்பை விட 10 டெசிபல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் ஒலி மாசு, அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.

தி.நகர் மட்டுமல்ல, சென்னையின் மற்ற பகுதிகளிலும் ஒலி மாசுபாடு உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள எழும்பூர், அண்ணா நகர் போன்ற அமைதி மண்டலங்களில் பகல் பொழுதில் வழக்கமாக 60dB-65dB ஒலி அளவு பதிவாகிறது. இந்த மண்டலங்களுக்கான உச்சவரம்பு 50dB என்பது குறிப்பிடத்தக்கது.

குடியிருப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்ட சௌகார்பேட்டை, கடந்த 366 நாட்களில் 269 நாட்களும் அனைத்து இரவுகளில் ஒலி விதிமீறல்களை பதிவு செய்துள்ளது. இதேபோல், வேளச்சேரி மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளும் இரவு நேரங்களில் 100% விதிமீறலையும், பகல் நேரங்களில் 80% க்கும் அதிகமான விதிமீறல்கள் பதிவாகி உள்ளன.

முன்னாள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆர். ராஜமாணிக்கம் மற்றும் தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் எஸ். நாகன் ஆகியோர் நடத்திய தனிப்பட்ட ஆய்வும் இதை உறுதிப்படுத்துகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் இது ஒரு தொடர்ச்சியான நிலையாக இருந்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

"வாகனங்களின் இரைச்சலே முதன்மைக் காரணம், அதைத் தொடர்ந்து ஒழுங்குபடுத்தப்படாத கட்டுமானப் பணிகள்" என்று சமூக ஆர்வலர் கமல் தெரிவித்துள்ளார். இந்தத் தொடர்ச்சியான ஒலி மாசுபாடு, பொதுமக்களின் உடல்நலம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதீத ஒலி மாசுபாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், அதற்கான தீர்வுகளும், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் இன்னும் போதிய அளவில் இல்லை என்பதே நிதர்சனம். தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் நாகன் கருத்துப்படி, ஒலி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கட்டுமானப் பணிகளின்போதே துவங்க வேண்டும். "பள்ளிகளில் இரட்டை அடுக்கு ஜன்னல்கள் (double-paned windows), மேம்பாலங்களில் ஒலித் தடைகள் (noise barriers), தொழிற்சாலைப் பகுதிகளில் polycarbonate அல்லது ஒலியை உறிஞ்சும் கான்கிரீட் (sound-absorbing concrete) போன்றவற்றை பயன்படுத்துவது உதவும்" என்று அவர் குறிப்பிட்டார்.

'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பொறியாளர் பிரபாகரன் வீரராசு, திட்டமிடப்படாத நகரமயமாக்கலே இந்த ஒலி மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டினார். நகரங்கள் வளர்ச்சி அடையும்போது சுற்றுச்சூழல் அம்சங்கள் புறக்கணிக்கப்படுவதால் இதுபோன்ற பிரச்னைகள் தலைதூக்குவதாக அவர் தெரிவித்தார்.

சென்னையின் பெருகி வரும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) கடந்த 2024 ஆம் ஆண்டில் IIT-மதராஸ் உடன் இணைந்து புதிய ஆய்வைத் தொடங்கியுள்ளது. இந்த ஆய்வின் கீழ், நகரின் 40-50 மண்டலங்கள் வரைபடமாக்கப்பட்டு, அங்கு நிலவும் ஒலி அலைகளின் அதிர்வெண்கள் மற்றும் அவற்றின் காரணங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

"இந்த ஆய்வு குறிப்பிட்ட பிரச்னைகளுக்கான தீர்வுகளை வடிவமைக்க உதவும்" என்று IIT-மதராஸின் பேராசிரியர் சிவ் நாகேந்திரா தெரிவித்து உள்ளார். இதன்மூலம், எந்தப் பகுதியில் எந்த வகையான சத்தம் அதிகமாக உள்ளது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ற சிறப்புத் திட்டங்களை வகுக்க முடியும். இருப்பினும், நீண்ட கால அடிப்படையில் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கொள்கை ரீதியான முன்னெடுப்புகள் அவசியம் என 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் வீரராசு வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசு 2021-ம் ஆண்டில் ஒலி வரைபடத் திட்டத்தை முன்மொழிந்து, 106 ஒலி மீட்டர்களை நிறுவ ரூ.1.85 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால், இந்தத் திட்டம் இன்னும் செயல்படாமல் கிடப்பில் உள்ளது. இதற்கிடையில், அங்கீகரிக்கப்படாத ஹாரன்கள் பயன்படுத்துவது தொடர்பாக ஆண்டுக்கு சுமார் 9,300 வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/t-nagar-has-emerged-the-noisiest-neighbourhood-with-noise-levels-exceeding-permissible-limits-even-at-night-9372577

தொடங்கியது 'போர்' என ஈரான் சுப்ரீம் லீடர் முழக்கம்!

 

தொடங்கியது 'போர்' என ஈரான் சுப்ரீம் லீடர் முழக்கம்! 18 6 2025 

Israel-Iran Conflict

நிபந்தனையின்றி சரணடை டிரம்ப் எச்சரிக்கை: தொடங்கியது 'போர்' என ஈரான் சுப்ரீம் லீடர் முழக்கம்!

இஸ்ரேல்-ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதியிலே வெளியேறினார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் கரோலின் லீவிட் வெளியிட்ட பதிவில், "ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் கியெர் ஸ்டார்மருடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கைழுத்திட்டு உடனடியாக வெளியேறினார். மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தால், உச்சிமாநாட்டு பயணத்தை முடித்துவிட்டு வெள்ளை மாளிகைக்கு திரும்ப உள்ளார்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இரு நாடுகளும் தாக்குதலை தொடருவதால் ஈரான் தலைநகா் தெஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெளியேற வேண்டும் என்று இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்திருந்தது மட்டுமின்றி, ஈரானை அமெரிக்காவும் தாக்க வேண்டும் என்று இஸ்ரேல் கோரிக்கை வைத்திருந்தது.

ஈரானின் போர்க்கால தலைமை தளபதியாக அடையாளம் காணப்படும் மூத்த ராணுவ தளபதியான அலி ஷத்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்திய இஸ்ரேலிய ராணுவ செய்தி தொடர்பாளர், தெஹ்ரானில் வைத்து அலி ஷத்மானி கொல்லப்பட்டதாகவும், அவர் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா கமெனிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஈரான் சுப்ரீம் லீடர் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் இணையதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஈரானின் சுப்ரீம் லீடர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவரை கொல்ல இப்போதைக்கு திட்டம் தீட்டவில்லை. எவ்வித நிபந்தனையுமின்றி சரணடைவதே சிறந்த தீர்வு. அமெரிக்காவின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Latest Tamil News

ஆனால் பொதுமக்கள் மற்றும் அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஈரானின் வான்வெளி எங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்கள் வந்துள்ளது. ஈரானிடம் நல்ல ஸ்கை டிராக்கர்கள் மற்றும் பிற தற்காப்பு உபகரணங்கள் ஏராளமாக இருந்தன. ஆனால் அது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, பொருட்களுடன் ஒப்பிட முடியாது. அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களைவிட ஈரானின் ஆயுதங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இவ்வாறு அதில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் மிரட்டலுக்கு ஈரானின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனி எக்ஸ்தளத்தில் "உன்னதமான ஹைதரின் பெயரால், போர் தொடங்குகிறது" என்று எச்சரித்துள்ளார். 

டிரம்பின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஈரான் கடும் பதிலடி கொடுக்கும் என்று தனது கருத்தை மீண்டும் அயதுல்லா அலி கமேனி குறிப்பிட்டார்.


source https://tamil.indianexpress.com/international/after-trumps-surrender-warning-iran-supreme-leader-says-battle-begins-9372596

செவ்வாய், 17 ஜூன், 2025

ஈரான், காசா மீது தாக்குதல்: ஸ்டாலின், பினராயி விஜயன் இஸ்ரேலுக்கு கண்டனம்

 

ஈரான், காசா மீது தாக்குதல்: ஸ்டாலின், பினராயி விஜயன் இஸ்ரேலுக்கு கண்டனம் 17 6 2025 

Stalin and Pinarayi

இஸ்ரேலின் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அறிக்கையிலிருந்து இந்தியா விலகி நின்றபோதிலும், இரண்டு முக்கிய எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களான தமிழகத்தின் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினும், கேரளாவின் சி.பி.ஐ(எம்) மூத்த தலைவர் பினராயி விஜயனும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இது இரு நாடுகளுக்கிடையே ஒரு போரைத் தூண்டியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஜூன் 13 அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைக் குறிப்பிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் (X) பக்கத்தில், "ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்கள் ஒரு பரந்த போரைத் தூண்டும் அபாயகரமான ஆக்கிரமிப்புச் செயலாகும். காசா மீது தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும் பாலஸ்தீன பொதுமக்கள் படும் துயரங்களுடன், இந்த வன்முறைப் பாதையை கண்டிக்க வேண்டும். கட்டுப்பாட்டையும், நீதியையும், அர்த்தமுள்ள இராஜதந்திரத்தையும் உலகம் வலியுறுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில், "ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச அளவில் குரல் கொடுக்க வேண்டும். அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்தி கூட்டணியின் மறைமுக ஆதரவுடன், இஸ்ரேல் மேற்கு ஆசியா முழுவதும் அதன் அப்பட்டமான மற்றும் ஆக்கிரமிப்பு தாக்குதல்களைத் தொடர்கிறது. இதுபோன்ற அட்டூழியங்கள், குறிப்பாக காசாவில் நடந்து வரும் இனப்படுகொலைக்கு எதிராக அமைதியை விரும்பும், கண்ணியமான எந்த ஒரு நபரும் மௌனமாக இருக்க முடியாது. இப்பகுதியில் அமைதி மற்றும் இயல்பு நிலையை மீட்டெடுக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

தி.மு.க முக்கிய நிர்வாகி மற்றும் எம்.பி. அருண் நேரு தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், "மேற்கு ஆசியாவில் மோதல் குறித்த தி.மு.க-வின் நிலைப்பாடு தெளிவானது. பகைமையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் பிராந்திய ஒருமைப்பாட்டை நாங்கள் நம்புகிறோம். அனைத்து பயங்கரவாத உள்கட்டமைப்புகளையும் நாங்கள் எதிர்க்கும்போது, பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று விரும்புகிறோம்." என்று கூறினார். 

மேலும், தனது கட்சி "எந்த மோதல்களையும் நாடாமல் இராஜதந்திர தீர்வுகளைப் பின்பற்ற வேண்டும்" என்று எப்போதும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார். "மேற்கு ஆசியாவில் இஸ்ரேலால் நடத்தப்படும் தாக்குதலை ஸ்டாலின் எதிர்க்கிறார்" என்று தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்தன.

பினராயி விஜயனின் நிலைப்பாடு சி.பி.ஐ(எம்)-இன் கொள்கையை பிரதிபலிப்பதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். இது "காசாவில் இனப்படுகொலையை" கடுமையாக எதிர்த்துள்ளது.

சி.பி.ஐ(எம்) பொலிட்பீரோ வெளியிட்ட அறிக்கையில், "ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான சர்வதேச அமைப்பு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த தாமதமின்றி தலையிட வேண்டும். இந்த தாக்குதலுக்கு உலகளாவிய கண்டனக் குரலுடன், இந்திய அரசும் தனது குரலை சேர்க்க வேண்டும். உடனடியாக இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்த வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதில் இந்தியா விலகி நின்ற" முடிவையும் சி.பி.ஐ(எம்) கண்டித்துள்ளது. "இத்தகைய நடவடிக்கைகள் இஸ்ரேலையும் அதன் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பையும் இப்பகுதியில் ஊக்குவிக்க மட்டுமே உதவும்" என்றும் அது கூறியுள்ளது.

சி.பி.ஐ(எம்) பொலிட்பீரோ தலைவர் அசோக் தவாலே கூறுகையில், "தோழர் விஜயனின் நிலைப்பாடு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் குறித்த சி.பி.ஐ(எம்)-இன் தெளிவான நிலைப்பாட்டிற்கு இணங்க உள்ளது. உண்மையில், இது மேற்கு ஆசிய மோதல் குறித்த இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாட்டிற்கு இணங்க உள்ளது. சி.பி.ஐ(எம்) காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான இனப்படுகொலையையும், ஈரானுக்கு எதிரான அதன் சமீபத்திய தாக்குதலையும் கண்டித்துள்ளது. இஸ்ரேலுக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் இந்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது, ஏனெனில், நமது சுதந்திரக் காலத்திலிருந்தே பாலஸ்தீன போராட்டத்துடன் நாம் மிகவும் ஒத்துப்போகிறோம். கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் தலைநகராகவும், (1967-க்கு முந்தைய எல்லைகளின்படி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் தங்கள் மாநில அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ளும்) இரு-அரசு தீர்வுதான் நடைமுறைத் தீர்வு என்பதை நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம்," என்றார்.

அரசின் அறிக்கைகள்:

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளையும் எந்த "மோதல் படிகளையும்" தவிர்க்கவும், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் பிரச்சனைகளைத் தீர்க்கவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. "இந்தியா இரு நாடுகளுடனும் நெருங்கிய மற்றும் நட்பு உறவுகளைக் கொண்டுள்ளது மற்றும் சாத்தியமான அனைத்து ஆதரவையும் நீட்டிக்க தயாராக உள்ளது," என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான SCO-ன் அறிக்கையிலிருந்து விலகி, வெளியுறவு அமைச்சகம், "மேற்கண்ட SCO அறிக்கையின் விவாதங்களில் இந்தியா பங்கேற்கவில்லை... மோதல்களைக் குறைக்க பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிகளை பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் மேலும், இந்த திசையில் சர்வதேச அமைப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்" என்று கூறியது.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், SCO அறிக்கையின் விவாதங்களில் பங்கேற்காததற்காக பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை விமர்சித்தது. காசாவில் போர்நிறுத்தத்திற்கான ஐ.நா. பொதுச் சபை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகி நின்றதற்காகவும் மத்திய அரசை, காங்கிரஸ் விமர்சித்தது. இந்தியாவின் வெளியுறவு கொள்கை "குழப்பத்தில்" இருப்பதாகக் குற்றம் சாட்டியது. இந்த முடிவு காரணமாக நாடு "கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறி, மேற்கு ஆசியாவில் போர்நிறுத்தம், அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக இந்தியா தனது கொள்கை நிலைப்பாட்டைக் கைவிட்டுவிட்டதா என்று கட்சி கேள்வி எழுப்பியது.

Nikhila Henry

source https://tamil.indianexpress.com/india/pinarayi-vijayan-mk-stalin-israel-iran-gaza-9368848

இஸ்ரேல்-ஈரான் மோதல் குறித்த ஜி7 வரைவில் கையெழுத்திட டிரம்ப் மறுப்பு

 

இஸ்ரேல்-ஈரான் மோதல் குறித்த ஜி7 வரைவில் கையெழுத்திட டிரம்ப் மறுப்பு 17 6 2025

Trump tariffs

'ஈரான் வெல்லப் போவதில்லை'.. இஸ்ரேல் - ஈரான் மோதல் குறித்த ஜி7 வரைவில் கையெழுத்திட டிரம்ப் மறுப்பு

கனடிய ராக்கி மலைத்தொடரில் நடைபெற்று வரும் ஜி7 நாடுகளின் வருடாந்திர உச்சிமாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதலைத் தணிக்கக் கோரும் வரைவு கூட்டறிக்கையில் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துவிட்டார். இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தி உள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, ஜி7 தலைவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த வரைவு அறிக்கை, இஸ்ரேல்-ஈரான் மோதலில் பதற்றத்தைத் தணிக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியது. இருப்பினும், டிரம்ப் இந்த அறிக்கையில் கையெழுத்திட மறுத்ததன் மூலம், சர்வதேச அளவில் இஸ்ரேல்-ஈரான் பதட்டங்கள் குறித்த அணுகுமுறையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மற்ற ஜி7 நாடுகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியுள்ளார்.

இந்த ஆவணத்திற்கு ஆதரவளிக்காத டிரம்பின் முடிவை வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். ராய்ட்டர்ஸிடம் பேசிய அவர், "டிரம்பின் வலுவான தலைமையின் கீழ், உலகெங்கிலும் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியில் அமெரிக்கா மீண்டும் முன்னிலை வகிக்கிறது. ஈரான் அணு ஆயுதத்தை பெற முடியாது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் டிரம்ப் தொடர்ந்து செயல்படுவார்" என்று கூறினார்.

கனடா பிரதமர் மார்க் கார்னியுடனான இருதரப்பு சந்திப்பின் தொடக்கத்தில், ஈரான் உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "ஈரான் இந்த போரில் வெற்றி பெறவில்லை என்று நான் சொல்வேன், அவர்கள் பேச வேண்டும், காலம் கடந்துவிடும் முன் உடனடியாகப் பேச வேண்டும்" என்று கார்டியன் செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்துக்களில் அவர் கூறினார்.

கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி7 உச்சி மாநாடு ஆல்பர்ட்டாவில் திங்கட்கிழமை தொடங்கியது. இஸ்ரேல்-ஈரான் மோதல், வர்த்தகப் பதற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க இந்த தலைவர்கள் கூடினர்.

source https://tamil.indianexpress.com/international/iran-is-not-winning-trump-declines-to-sign-g7-draft-on-israel-iran-conflict-9369475

மதராஸி கேம்ப் இடிப்பு: பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்த தமிழக அரசு

 

மதராஸி கேம்ப் இடிப்பு: பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்த தமிழக அரசு

Madarasi Camp

டெல்லி மதராஸி கேம்ப் பாதிப்பு - ரூ. 50 லட்சம் நிதியுதவி அறிவித்த ஸ்டாலின்

டெல்லியில், மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

டெல்லியில் பாதிக்கப்பட்ட 370 தமிழர்களின் குடும்பங்களின் ஊழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சிறப்பு நிகழ்வாக வீடுகளை இழந்தவர்களுக்கு ஒருமுறை நிதியுதவியாக தலா 8 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மசாலாப் பொருட்கள் அடங்கிய 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிடவும் ஏதுவாக, இன்று (16-6-2025) முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஜங்புரா பகுதியில், மதராசி கேம்ப் எனப்படும் குடிசைப் பகுதியில் தமிழர்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்டுள்ள சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதை உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை ஈடுக்குமாறு வலியுறுத்தி டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தார். 

17 6 2025 

அக்கடிதத்தினை கடந்த 10-6-2025 அன்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர், டெல்லி முதல்வர் ரேகா குப்தா அவர்களை நேரில் சந்தித்து வழங்கியதோடு, கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தினர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-announces-relief-for-tamil-families-evicted-madrasi-camp-in-delhi-9369565

மீண்டும் புத்துயிர் பெறுமா? மாடித் தோட்டம் திட்டம்: நிதி, அலட்சியம், மக்கள் ஆர்வம் இன்மை காரணமா?

 

மீண்டும் புத்துயிர் பெறுமா? மாடித் தோட்டம் திட்டம்: நிதி, அலட்சியம், மக்கள் ஆர்வம் இன்மை காரணமா?

Do it yourself

மீண்டும் புத்துயிர் பெறுமா? மாடித் தோட்டம் திட்டம்: நிதி, அலட்சியம், மக்கள் ஆர்வம் இன்மை காரணமா?

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட, வீட்டு மாடிகளில் காய்கறி மற்றும் பழங்கள் வளர்க்கும் திட்டம், தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருந்தது. தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. ”Do It Yourself” என்ற இந்தத் திட்டம், 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ரூ.900-க்கு காய்கறி மற்றும் பழச்செடிகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. 

இத்தொகுப்புகளில் விதைகள் மட்டுமன்றி, மண்வெட்டி, களைக்கொத்தி, உரங்கள் மற்றும் விளக்க உரை போன்ற கருவிகளும் அடங்கியிருந்தன. தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், மக்களின் வீடுகளுக்குச் சென்று, எவ்வாறு தோட்டம் அமைப்பது? என்பதை செயல்விளக்கம் அளித்தனர். மேலும், மாதந்தோறும் கண்காணிப்பு மேற்கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய தொகுப்புகளையும் வழங்கினர். ஒரு நபர் ஒரே நேரத்தில் 2 தொகுப்புகள் வரை வாங்கிக் கொள்ள முடியும் என்று இருந்தது.

இத்திட்டம் நகர மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதால், ஜெயலலிதா இத்திட்டத்தை 2016-ஆம் ஆண்டு மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தினார். அந்தக் காலகட்டத்தில் சுமார் 1,000 முன்பதிவுகளைக் கண்ட இத்திட்டம், தற்போது வெறும் காகித அளவிலேயே உள்ளது.

தற்போது வாரத்திற்கு 100-க்கும் குறைவான முன்பதிவுகளே வருகின்றன. இத்தொகுப்புகளை விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ‘இ-தோட்டம்’ செயலி, iOS மற்றும் Android ஆகிய 2 தளங்களிலிருந்தும் நீக்கப்பட்டுவிட்டது. தோட்டக்கலைத் துறையின் வலைத்தளத்தின் மூலமாக இத்தொகுப்புகள் விற்பனை செய்யப்பட இருந்தன. 

ஆனால், TOI (டைம்ஸ் ஆஃப் இந்தியா) OTP ஐப் பயன்படுத்தி தொகுப்புகளை முன்பதிவு செய்தபோது, துறையுடன் தொடர்பில் இல்லாத ஓய்வு பெற்ற அதிகாரிகளின் தொடர்புகள் மட்டுமே கிடைத்தன. இந்த ஓய்வுபெற்ற அதிகாரிகளைத் தொடர்புகொண்டபோது, மாதவரம், பெரம்பூர், அண்ணா நகர், செம்மொழி பூங்கா மற்றும் திருவான்மியூர் ஆகிய நகரிலுள்ள 5 தோட்டக்கலைத் துறை கிடங்குகளில் உள்ள அதிகாரிகளை அணுகுமாறு தெரிவித்தனர்.இக்கிடங்குகளிலேயே தொகுப்புகள் விற்பனை செய்யப்பட வேண்டும்.

கிடங்குகள் மூடல் மற்றும் நிதிப்பற்றாக்குறை:

அண்ணா நகர் மற்றும் செம்மொழி பூங்காவில் உள்ள நாற்று கிடங்குகள் மூடப்பட்டுள்ளன. திருவான்மியூரில் உள்ள கிடங்கில் இருப்பில்லை. அண்ணா நகர் கிடங்கின் முன்னாள் துணை தோட்டக்கலை அலுவலர் பிரபாகரன், திட்டத்திற்கு நிதி இல்லை என்றும், சித்த மருத்துவக் கல்லூரி நில வாடகையை உயர்த்தியதால் கிடங்கை மூடிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தனியார் நாற்றங்கால்கள் பெருகிவிட்டதால், மக்கள் அவற்றையே விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அணுகல் இல்லாமை மற்றும் தரக்குறைபாடு:

அரசு 5 ஆண்டுகளுக்கு முன் நாற்று தொகுப்புகளின் விலையை ரூ.450 ஆகக் குறைத்தபோதிலும், பயனாளிகள் இல்லை. 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளின் கொள்கைக் குறிப்புகளிலும் இத்திட்டம் இடம் பெறவில்லை. விழிப்புணர்வு இல்லாமை மற்றும் தொழில்நுட்பத்தை புதுப்பிப்பதில் அதிகாரிகளின் அலட்சியம் ஒருபுறம் இருக்க, அணுகல் இல்லாமை மற்றும் தொகுப்புகளின் தரம் குறைவு போன்ற காரணங்களையும் பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மாடித்தோட்ட ஆர்வலர் கே. சாந்தகுமார், குறைந்த எண்ணிக்கையிலான கிடங்குகள் காரணமாக, நகரத்தின் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தொகுப்பு வாங்குவது கடினம் என்று கூறினார்.

மீண்டும் புத்துயிர் பெறுமா?

வேளாண்மைத் துறை செயலாளர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், இத்திட்டம் செயல்படாமல் இல்லை. "ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட் இறுதி செய்யப்பட்ட பிறகு, பொதுவாக ஜூலை மாதம் நிதி ஒதுக்கீடு செய்கிறோம். கிடங்குகள் ஏன் மூடப்பட்டுள்ளன என்பதை விசாரித்து, அவற்றை மீண்டும் செயல்படுத்துவோம்," என்று அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்தார்.

நகர்ப்புற வனங்களை உருவாக்கும் ஹாஃபீஸ் கான், அரசு கட்டிடங்கள் மற்றும் பெரிய இடவசதி கொண்ட உள்கட்டமைப்புகளில் மாடித் தோட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார். "தோட்டம் வளர்க்க நிலம் கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது. எனவே, மாடித்தோட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். இது கட்டிடங்களை குளிர்விக்கவும் உதவுகிறது," என்று அவர் கூறினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tns-rooftop-gardening-scheme-has-now-withered-9369502

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உடனே வெளியேறுக: டிரம்ப் எச்சரிக்கை

 

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உடனே வெளியேறுக: டிரம்ப் எச்சரிக்கை 17 6 2025 

Trum warning

தெஹ்ரானில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுத்துவிட்டதோடு, இஸ்ரேல் நடத்திவரும் அதிரடி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதனிடையே, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்காக மசோதாவை தயாரிக்க ஈரான் நடாளுமன்றம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை, ஈரான் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பகாயி உறுதிப்படுத்தி உள்ளார்.

இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடங்கி 5-வது நாள் தொடங்கியுள்ள நிலையில், இஸ்ரேலில் பலி எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. தாக்குதல் சம்பவம் அதிரித்து வரும்நிலையில் இரு நாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலால் பல இடங்கள் கடும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகின்றன. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 224ஆக உயர்ந்துள்ளது.  

இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இஸ்ரேலின் போர் விமானங்கள் ஈரானுக்குள் நூற்றுக்கணக்கான கி.மீ. தூரத்துக்கு உள்ளே வந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. குறிப்பாக, ஈரானின் மேற்கு பகுதியில் இருந்து தலைநகர் டெஹ்ரான் வரை ஈரானின் வான் பகுதியை தங்கள் போர் விமானங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், எந்தவித தடையும் இன்றி தாக்குதல் தொடுத்து வருவதாகவும் இஸ்ரேல் கூறியது.

இந்த தாக்குதலில் ஈரானின் 120 ஏவுகணை லாஞ்சர்கள் அழிக்கப்பட்டதாகவும், அவற்றின் மூலம்தான் கடந்த 3 நாட்களாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் எப்பி டெப்ரின் கூறியுள்ளார். மேலும் டெஹ்ரானில் உள்ள ஈரான் புரட்சிகர படையின் 10 கட்டளை மையங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு கூறுகையில், 'டெஹ்ரான் வான்பகுதியை எங்கள் விமானப்படை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அணு ஆயுத அச்சுறுத்தலை நீக்குதல் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை நீக்குதல் ஆகிய 2 குறிக்கோள்களை அடைவதற்கான பாதையில் நாங்கள் இருக்கிறோம்' என கூறினார். மேலும் அவர், 'நாங்கள் வெற்றியின் பாதையில் இருக்கிறோம். அந்த இலக்கு எட்டப்படுகிறது. அற்புதமான பணிகளைச் செய்யும் எங்கள் வீர விமானிகள் மற்றும் எங்கள் அற்புதமான தரைப்படை குழுவினருக்கு நன்றி' என்றும் தெரிவித்தார்

இந்நிலையில் அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப்பதிவில் , "நான் கையெழுத்திடச் சொன்ன 'ஒப்பந்தத்தில்' ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். என்ன ஒரு அவமானம், மனித உயிரை வீணடிப்பது. எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டேன். அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இஸ்லாமிய நாடு அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்றும் எச்சரித்தார். 

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் இருந்து முன்கூட்டியே வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்தார். தேசிய பாதுகாப்பு கவுன்சிலை தயாராக இருக்கவும், கட்டுபாட்டு அறையை கூட்டவும் டிரம்ப் கேட்டுகொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இஸ்ரேல்-ஈரான் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது குறித்த விவாதங்கள் நடந்து வருவதாக ஜி 7 தலைவர்களிடம் டிரம்ப் கூறியதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.

source https://tamil.indianexpress.com/international/trump-urges-all-of-tehran-to-evacuate-immediately-set-to-leave-g7-summit-early-as-tensions-intensify-9369466

திங்கள், 16 ஜூன், 2025

இஸ்ரேல் – ஈரான் இடையே ஒப்பந்தம் ஏற்படும் – டிரம்ப்

 

ஈரான் இடையே ஒப்பந்தம் ஏற்படும் – டிரம்ப் 15 6 2025 

trump

தனது உண்மை சமூக தளத்தில் ஒரு சிறப்பியல்பு சுய-வாழ்த்து பதிவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கில் இரண்டு பரம எதிரிகளான ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த முடியும் என்று கூறி, ஏற்கனவே மறைமுக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறினார்.

ஈரானும் இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும், ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்" என்று ஞாயிற்றுக்கிழமை டிரம்ப் எழுதினார், வெற்றிகரமான இராஜதந்திர தலையீடுகள் என்று அவர் கூறியதை மீண்டும் செய்ய விரும்புவதாகவும் டிரம்ப் கூறினார். "நான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் (ஒரு ஒப்பந்தம்) செய்ய வைத்தது போல, அந்த விஷயத்தில், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யலாம் என்ற வாக்குறுதியுடன், விரைவாக ஒரு முடிவை எடுத்து மோதலை நிறுத்த முடிந்தது, இரண்டு சிறந்த தலைவர்களுடனான பேச்சுவார்த்தையில் பகுத்தறிவு, ஒற்றுமை மற்றும் நல்லறிவைக் கொண்டுவர முடிந்தது!"

அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையே கடந்த மாதம் முழுமையான இராணுவ மோதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்துவதில் அமெரிக்காவின் பங்கைக் குறிப்பிடுவதாக டிரம்ப் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் ராஜதந்திர ரீதியாக எட்டப்பட்டதாக இந்தியா கூறியுள்ளது.

மேலும், தனது முந்தைய பதவிக் காலத்தில், ஆழமாக வேரூன்றிய இனப் பதட்டங்களைக் கொண்ட செர்பியா-கொசோவோ பிராந்தியத்தில் மோதல்கள் ஏற்படுவதைத் தனது தலைமை தடுத்ததாகவும் டிரம்ப் அறிவித்தார். "சில முட்டாள்தனமான முடிவுகளால் ஜோ பிடன் நீண்டகால வாய்ப்புகளைப் பாதித்துள்ளார், ஆனால் நான் அதை மீண்டும் சரிசெய்வேன்!" என்று டிரம்ப் கூறினார்.

நைல் நதிப் பிரச்சினையில் எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்தியதாகவும் டிரம்ப் கூறினார். “மற்றொரு வழக்கு எகிப்து மற்றும் எத்தியோப்பியா, மற்றும் அற்புதமான நைல் நதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பெரிய அணைக்காக அவர்களுக்கு இடையேயான சண்டை. எனது தலையீட்டால் குறைந்தபட்சம் இப்போதைக்கு அமைதி நிலவுகிறது, அது அப்படியே இருக்கும்!” என்று டிரம்ப் எழுதினார்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் டிரம்ப் கூறினார். “இப்போது பல அழைப்புகள் மற்றும் சந்திப்புகள் நடைபெறுகின்றன,” என்று டிரம்ப் விவரங்களை வழங்காமல் கூறினார்.

“நான் நிறைய செய்கிறேன், எதற்கும் ஒருபோதும் பெருமை பெறுவதில்லை, ஆனால் அது சரி, மக்கள் புரிந்துகொள்கிறார்கள்,” என்று அவர் அதே பதிவில் கூறினார், அது அவரது கையெழுத்து மலர்ச்சியுடன் முடிந்தது, ஒரு ட்விஸ்டுடன்: “மத்திய கிழக்கை மீண்டும் சிறந்ததாக்குங்கள்!

இஸ்ரேல்-ஈரான் மோதல்கள்

ஜூன் 13 அன்று, இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது, இது ஈரானில் உள்ள 170 க்கும் மேற்பட்ட தளங்கள் மற்றும் 720 இராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது, இதில் நடான்ஸ், கோண்டாப் மற்றும் கோர்ராமாபாத் அணுசக்தி நிலையங்கள், இராணுவ தளங்கள் மற்றும் ஏவுகணை உற்பத்தி தளங்கள் ஆகியவை அடங்கும்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஒரே இரவில் தீவிரமடைந்தது, இது தொடர்ச்சியான பேரழிவு தரும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் நடந்து வருகிறது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடைவிடாத தாக்குதல்கள் தொடுப்போம் என்று உறுதியளிக்கிறார், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) "இன்னும் வலிமையான மற்றும் விரிவான" பதிலடி கொடுக்கப்படும் என்று கூறுகிறது, இரு நாடுகளின் தலைவர்களும் சண்டை தொடரும் என்று வலியுறுத்துகின்றனர்.

இதுவரை, உயர் அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் உட்பட 14 மூத்த ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

தெஹ்ரான் அடுக்குமாடி கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 60 பொதுமக்கள் இறந்ததாக ஈரானிய அரசு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலை குறிவைத்து சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 100 ட்ரோன்கள் மூலம் ஈரான் பதிலடி கொடுத்தது, டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் உள்ளிட்ட இராணுவ மற்றும் பொதுமக்கள் தளங்களைத் தாக்கியது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள், ஏவுகணைகள் வான் பாதுகாப்புப் பகுதிகளைத் தாண்டிச் சென்றதாலோ அல்லது இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் இடிபாடுகளாலோ சேதம் ஏற்பட்ட 22 இடங்களைப் பற்றி அறிவித்தன. குறைந்தது 10 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


source https://tamil.indianexpress.com/international/india-pakistan-issue-trump-says-israel-iran-will-make-a-deal-9366069

NEET UG 2025: கணிசமாக குறைந்த நீட் மார்க்; தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் எப்படி இருக்கும்?

 15 6 2025

NEET

நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக ஆகும். 

இந்த நீட் தேர்வுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. நீட் தேர்வு முடிவுகளின் படி, கடந்த ஆண்டை விட கட் ஆஃப் 125 வரை குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தநிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கல்வி ஆலோசகர் செந்தில்நாதன் விளக்கியுள்ளார்.

இந்த ஆண்டு 2025 எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப்

அரசு மருத்துவக் கல்லூரிகள்

பொதுப் பிரிவு – 540 - 545

பி.சி – 495 - 500

பி.சி.எம் – 485 - 490

எம்.பி.சி – 470 - 575

எஸ்.சி – 433 - 437

எஸ்.சி.ஏ – 380 - 385

எஸ்.டி – 380 - 390


source https://tamil.indianexpress.com/education-jobs/neet-ug-2025-exam-expected-cut-off-tamilnadu-government-medical-colleges-after-results-released-9365743

52 நிபந்தனைகளுடன் அனுமதி - ஐகோர்ட் உத்தரவு

 

Madurai HighCourt questions over Thiruchendur kandha sasti darsan fee Tamil News

காவல் துறை விதித்த 6 நிபந்தனைகளை மாற்றியமைக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.

மதுரையில் ஜூன் 22-ம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்த வழக்கில், 52 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநாடு வளாகத்தில் 2 டிரோன்களை மட்டுமே பறக்கவிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ளது. மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைத்து பூஜைகள் நடத்த காவல் துறை அனுமதி மறுத்தது. காவல் துறை விதித்த 6 நிபந்தனைகளை மாற்றியமைக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.

முருக பக்தர்கள் மாநாடு மற்றும் அறுபடை வீடுகள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என மக்கள் கலை இலக்கியக் கழகம், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகள் அமைத்து பூஜை நடத்தவும், இந்து முன்னணி சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்ப்பித்துள்ள உத்தரவின் முழு விவரம் வெளியாகி உள்ளது. நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், “இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25 ஒவ்வொரு நபருக்கும் தங்கள் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றவும், பரப்புரை செய்யவும் உரிமை அளித்துள்ளது. ஆகவே, எந்தவொரு தனி நபர் அல்லது அமைப்புக்கு மத நம்பிக்கை அடிப்படையில் செயல்படுவதற்கு சுதந்திரம் உள்ளது. இந்தியா பல மதங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாடு.” என்று தெரிவித்துள்ளது.

மேலும், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரம் என்பது சட்டம் - ஒழுங்கு, மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இந்த மாநாடு அரசியலுக்காக நடத்தப்படுகிறது என இடையீட்டு மனுதாரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதற்கு ஆதாரமாக இந்து முன்னணி மாநில தலைவர் மற்றும் மத்திய அமைச்சரின் பேட்டிகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

“மத அமைப்புகளை அரசியலுக்காக பயன்படுத்தினால் அது தொடர்பாக 1988-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, நாடு முழுவதும் இருந்து முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். அவர்கள் தனித்தனியாக அந்தந்த உட்கோட்ட டி.எஸ்.பி-யை சந்தித்து அணுகி பாஸ் பெறுவது கடினம் என மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், வாகன நெரிசலைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த நிபந்தனை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். இதனால் இதில் தலையிட வேண்டியதில்லை. அதே நேரத்தில் வாகன பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் 24 மணி நேரத்தில் வழங்க வேண்டும். மறுத்தால் உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் இரண்டு ட்ரோன்கள் பறக்க அனுமதி, அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்க அறநிலையத்துறை, மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டியதில்லை, மாநாடு நடைபெறும் இடத்தில் வீடுகள், பள்ளிகள் இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அரசு தரப்பு கூறுவத ஏற்க முடியாது. ஏனெனில் அந்த இடத்தில் ஏற்கெனவே பல்வேறு கட்சிகளின் மாநாடுகள் நடத்த போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது என்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

“முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தின் முன்பு தேசிய நெடுஞ்சாலை இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க காவல் துறை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். மாநாட்டால் மத நல்லிணக்கம் சீர்குலைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. அதற்கு ஆதாரமாக திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்தில் சிலரின் உரைகளை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே, முருக பக்தர்கள் மாநாட்டில் மத நல்லிணக்கம் காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று நீதிபதி புகழேந்தி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/god-murugan-devotees-conference-permission-with-52-conditions-high-court-order-9366034

வேலூரில் ரூ.498 கோடியில் 4 வழிச் சாலை:

 vellore 4 way

வேலூரில் ரூ.498 கோடியில் 4 வழிச் சாலை: போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு

வேலூர் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) ரூ.498 கோடி மதிப்பிலான புதிய நான்கு வழி புறவழிச்சாலை திட்டத்திற்கான டெண்டர்களை கோரியுள்ளது. இந்த 20.492 கிலோமீட்டர் நீளமுள்ள புறவழிச்சாலை, NH-75 மற்றும் NH-38 தேசிய நெடுஞ்சாலைகளை மாநில நெடுஞ்சாலை-240 வழியாக இணைக்கும்.

இத்திட்டத்தின்படி, புதிய 4 வழிச்சாலை NH-75ல் உள்ள வந்தரந்தாங்கலில் தொடங்கும். NH-75 வேலூரை கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருவுடன் இணைக்கிறது. புறவழிச்சாலை NH-38-ல் உள்ள சாத்துமதுரையில் முடிவடையும். NH-38 வேலூர்-திருவண்ணாமலை-விழுப்புரம் சாலை வழியாகத் தூத்துக்குடியை இணைக்கிறது.

இந்த புறவழிச்சாலை திட்டம் நிறைவடைந்ததும், வேலூர் நகரப் பகுதியின் நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விழுப்புரம், கலசபாக்கம் மற்றும் ஆரணி போன்ற பகுதிகளில் இருந்து பெங்களூரு, சித்தூர் மற்றும் குடியாத்தம் போன்ற இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் வேலூர் நகரத்திற்குள் நுழையாமல் நேரடியாக செல்ல முடியும். மண்டல அளவிலான இணைப்பை மேம்படுத்துவதோடு, பயண நேரத்தையும் கணிசமாகக் குறைக்கும்.

டெண்டர் ஆவணங்களின்படி, ரூ.498.14 கோடி மதிப்பீட்டில், பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC) மாதிரியில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் வடிகால்களுக்காக 6 culverts, ஒரு சாலைச் சந்திப்பும் (at-grade junction) இடம்பெறும். முக்கிய போக்குவரத்துப் பாதை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க ஏற்றவாறு வடிவமைக்கப்படும். இருபுறமும் அமைக்கப்படும் சேவைச் சாலைகள் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க ஏதுவாக இருக்கும்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், வேலூர் புறவழிச்சாலை அமைப்பதற்காக ரூ.752.94 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இந்த புதிய 4 வழி புறவழிச் சாலை NH-75 மற்றும் NH-38 தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் என்றும், வேலூர் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்

அமைச்சர் தெரிவித்தபடி, இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும்போது, வழக்கமான 30 மீட்டருக்குப் பதிலாக 50 மீட்டர் உரிமை வழி (Right-of-Way - RoW) கையகப்படுத்தப்படும். இந்த கூடுதல் அகலம், எதிர்காலத்தில் இந்த சாலையை ஆறு வழிச்சாலையாகவும், 2 வழி சேவைச் சாலைகளுடனும் விரிவாக்கம் செய்வதற்கு வசதியாக இருக்கும். எதிர்கால போக்குவரத்துத் தேவைகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முக்கிய முடிவு ஆகும்.

கூடுதல் அம்சங்களாக, இத்திட்டத்தில் சூரிய சக்தியில் இயங்கும் தெருவிளக்குகள், கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள் (truck lay-bys), பேருந்து நிறுத்தங்கள், சாலை அடையாளப் பலகைகள் (signage), நடைபாதைகள், சாலை பாதுகாப்பு உள்கட்டமைப்பு போன்றவையும் அமைக்கப்படும்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/centre-plans-rs-498-crore-four-lane-bypass-to-decongest-vellore-9366350

புனே அருகே பாலம் இடிந்து விபத்து; 4 பேர் மரணம்; ஆற்றில் விழுந்த 38 பேர் மீட்பு

 15 6 2025 


source https://tamil.indianexpress.com/india/bridge-collapses-over-indrayani-river-near-pune-several-feared-drowned-9365506

pune bridge collapse

மகாராஷ்டிராவின் புனே அருகே இந்திரயானி ஆற்றின் மீது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பாலம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் இறந்தனர் மற்றும் பல சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, இரண்டு பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று மாவட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, 10 முதல் 15 பேர் வரை அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவசரகால நடவடிக்கையின் ஒரு பகுதியாக மீட்புப் படகுகள் மற்றும் தீயணைப்பு இயந்திரங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

பிம்ப்ரி-சின்ச்வாட் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி விட்டல் பன்ஹோட்டே தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார். மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கியதாக அவர் கூறினார். இதுவரை 38 பேரை அவர்கள் மீட்டுள்ளனர்.

“சுற்றுலாப் பயணிகள் இருந்தபோது பாலம் இடிந்து விழுந்தது. என்.டி.ஆர்.எஃப் சம்பவ இடத்தில் உள்ளது,” என்று பன்ஹோட்டே கூறினார். இந்தப் பாலம் புனே ஜில்லா பரிஷத்தால் கட்டப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இயற்கையான பள்ளங்கள், பள்ளத்தாக்குகள் மற்றும் தனித்துவமான பாறை அமைப்புகளுக்கு பெயர் பெற்ற பிரபலமான சுற்றுலாத் தலமான தலேகானில் உள்ள குண்ட் மாலா அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது. புனே மற்றும் மும்பை ஆகிய இரு நகரங்களுக்கும் அருகாமையில் இருப்பதால் இந்தப் பகுதிக்கு அதிக மக்கள் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

கனமழை காரணமாக இந்திராயனி ஆற்றில் நீர்மட்டம் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், நீரோட்டம் கணிசமாக வலுவடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிரமடைந்த பருவமழை காரணமாக பாதுகாப்பு காரணங்களுக்காக, நீர்நிலைகள் மற்றும் சில இயற்கை இடங்களை சுற்றுலாப் பயணிகள் அணுகுவதைத் தடைசெய்து புனே மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர துடி இந்த மாத தொடக்கத்தில் தடை உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.

இடிந்து விழுந்த பாலத்தை சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி ஆற்றைக் கடக்க அல்லது புகைப்படம் எடுக்கப் பயன்படுத்தினர். வார இறுதி கூட்டத்தின் காரணமாக பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். சம்பவத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் காவல்துறை அதிகாரிகள் இருவரும் குவிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, டைவர்ஸ் மற்றும் அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர்.

முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கையில், சம்பவத்தில் இரண்டு பேர் இறந்ததை உறுதிப்படுத்தினார்.

“முதற்கட்ட தகவலின்படி, இந்த சம்பவத்தில் 2 பேர் இறந்துள்ளனர்… அவர்களின் குடும்பத்தினரின் துயரத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். சிலர் அடித்துச் செல்லப்பட்டதால், தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பவ இடத்தில் என்.டி.ஆர்.எஃப் படையினர் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். இதுவரை 38 பேர் மீட்கப்பட்டுள்ளனர்… 32 பேர் காயமடைந்தனர், அவர்களில் ஆறு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,” என்று ஃபட்னாவிஸ் மராத்தியில் ட்வீட் செய்துள்ளார்.

மேலும், சம்பவ இடத்தில் உள்ள உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

துணை முதல்வர் அஜித் பவார் ஒரு அறிக்கையில், விசாரணைக்குப் பிறகு சரிவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

"காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ பராமரிப்பு வழங்கப்படுவதையும், தேவையான உதவி வழங்கப்படுவதையும் நாங்கள் உறுதி செய்வோம்," என்றும் பவார் கூறினார்.

ஞாயிறு, 15 ஜூன், 2025

இஸ்ரேல் – ஈரான் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் – பற்றி எரியும் எண்ணெய்க் கிடங்கு!

 

இஸ்ரேல் – ஈரான் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் – பற்றி எரியும் எண்ணெய்க் கிடங்கு!

ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது நேற்று முன்தினம் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரானின் மூன்று முக்கிய படைத்தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். மிகப்பெரிய அணு ஆயுத தளம் பலத்த சேதம் அடைந்தது. மேலும் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார்.

இதற்குப் பதிலடியாக, இன்று காலை வரை ஈரான் “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. இந்த தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 34 பேர் காயமடைந்தனர். மேலும் ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில் 19 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் இஸ்ரேல் – ஈரான் நாடுகள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கு பற்றி எரிந்து வருவதாக ஈரானிய எண்ணெய் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை பல ஆண்டுகளுக்கு தாமதப்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தி சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.



source https://news7tamil.live/rising-war-tensions-between-israel-and-iran-oil-depot-on-fire.html

ஈரான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் – 78 பேர் உயிரிழப்பு!

 

ஈரான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் – 78 பேர் உயிரிழப்பு! 14 06 2025 

ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது நேற்று ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரானின் மூன்று முக்கிய படைத்தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். மிகப்பெரிய அணு ஆயுத தளம் பலத்த சேதம் அடைந்தது.

இதனால் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல்- ஈரான் ஆகிய இரு நாடுகளும் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உட்பட 78 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 320க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாக ஈரானின் ஐ.நா., தூதர் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலடியாக, ஈரான் “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. இந்த தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து இன்று அதிகாலை வரை இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இஸ்ரேல் பல ஈரானிய ஏவுகணைகளை அமெரிக்காவின் உதவியுடன் இடைமறித்ததாகக் கூறியது. இந்த நிலையில் இரு நாடுகளும் மேலும் தாக்குதல்களைத் தொடரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

source https://news7tamil.live/israels-series-of-attacks-on-iran-78-people-killed.html

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

 

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் 13 06 2025 

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்டவை குறித்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஈரானில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. அதேபோல், ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்பதால், இஸ்ரேலும் தனது வான்வெளியை மூடியுள்ளது. இந்த நிலையில் ஈரான், இஸ்ரேல் வழியாக இந்தியாவுக்கு வரும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானங்கள் திரும்பி வருவதாகவும், லண்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் இருந்து டெல்லி நோக்கி வரும் விமானங்கள், ஈரான் வான்வெளியை தவிர்த்து மும்பைக்கு மாற்றி அனுப்பப்பட்டிருப்பதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து ஈரான் வழித்தடத்தில் செல்லும் விமானங்கள் ரத்து செய்வதற்கு வாய்ப்புள்ளது.


source https://news7tamil.live/israeli-airstrike-on-iran-air-service-in-india-affected.html