திங்கள், 16 ஜூன், 2025

52 நிபந்தனைகளுடன் அனுமதி - ஐகோர்ட் உத்தரவு

 

Madurai HighCourt questions over Thiruchendur kandha sasti darsan fee Tamil News

காவல் துறை விதித்த 6 நிபந்தனைகளை மாற்றியமைக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.

மதுரையில் ஜூன் 22-ம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்த வழக்கில், 52 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநாடு வளாகத்தில் 2 டிரோன்களை மட்டுமே பறக்கவிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ளது. மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைத்து பூஜைகள் நடத்த காவல் துறை அனுமதி மறுத்தது. காவல் துறை விதித்த 6 நிபந்தனைகளை மாற்றியமைக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.

முருக பக்தர்கள் மாநாடு மற்றும் அறுபடை வீடுகள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என மக்கள் கலை இலக்கியக் கழகம், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகள் அமைத்து பூஜை நடத்தவும், இந்து முன்னணி சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்ப்பித்துள்ள உத்தரவின் முழு விவரம் வெளியாகி உள்ளது. நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், “இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25 ஒவ்வொரு நபருக்கும் தங்கள் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றவும், பரப்புரை செய்யவும் உரிமை அளித்துள்ளது. ஆகவே, எந்தவொரு தனி நபர் அல்லது அமைப்புக்கு மத நம்பிக்கை அடிப்படையில் செயல்படுவதற்கு சுதந்திரம் உள்ளது. இந்தியா பல மதங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாடு.” என்று தெரிவித்துள்ளது.

மேலும், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரம் என்பது சட்டம் - ஒழுங்கு, மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இந்த மாநாடு அரசியலுக்காக நடத்தப்படுகிறது என இடையீட்டு மனுதாரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதற்கு ஆதாரமாக இந்து முன்னணி மாநில தலைவர் மற்றும் மத்திய அமைச்சரின் பேட்டிகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

“மத அமைப்புகளை அரசியலுக்காக பயன்படுத்தினால் அது தொடர்பாக 1988-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, நாடு முழுவதும் இருந்து முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். அவர்கள் தனித்தனியாக அந்தந்த உட்கோட்ட டி.எஸ்.பி-யை சந்தித்து அணுகி பாஸ் பெறுவது கடினம் என மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், வாகன நெரிசலைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த நிபந்தனை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். இதனால் இதில் தலையிட வேண்டியதில்லை. அதே நேரத்தில் வாகன பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் 24 மணி நேரத்தில் வழங்க வேண்டும். மறுத்தால் உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் இரண்டு ட்ரோன்கள் பறக்க அனுமதி, அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்க அறநிலையத்துறை, மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டியதில்லை, மாநாடு நடைபெறும் இடத்தில் வீடுகள், பள்ளிகள் இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அரசு தரப்பு கூறுவத ஏற்க முடியாது. ஏனெனில் அந்த இடத்தில் ஏற்கெனவே பல்வேறு கட்சிகளின் மாநாடுகள் நடத்த போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது என்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

“முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தின் முன்பு தேசிய நெடுஞ்சாலை இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க காவல் துறை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். மாநாட்டால் மத நல்லிணக்கம் சீர்குலைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. அதற்கு ஆதாரமாக திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்தில் சிலரின் உரைகளை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே, முருக பக்தர்கள் மாநாட்டில் மத நல்லிணக்கம் காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று நீதிபதி புகழேந்தி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/god-murugan-devotees-conference-permission-with-52-conditions-high-court-order-9366034