/indian-express-tamil/media/media_files/2025/03/26/8jq7uDG02WzTwyqakzc1.jpg)
"விவசாயிகளுக்கு 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் கடன் என்ற அறிவிப்பு கடுமையான நெருக்கடியை உருவாக்கும். எனவே, இந்த திட்டத்தை உடனடியாக திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'” என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.
சிபில் ஸ்கோர்' அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது விவசாயிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக அரசின் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் வங்கிகளில் 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என சுற்றறிக்கையை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சமீபத்தில் அனுப்பியுள்ளார். இந்நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய திட்டத்தால் விவசாயிகள் கடனுதவி பெறுவதில் சிரமம் ஏற்படும். ஏற்கனவே கூட்டுறவுத்துறை வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் குறைவாகவே வழங்கபட்டு வரும் நிலையில் 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் இனி கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் இது போன்ற திட்டங்களை அமல்படுத்தினால் விவசாய தொழிலை பலர் கைவிட வழிவகுக்கும்.
சிபில் ஸ்கோர் என்பது வங்கிகளில் எடுத்த கடன்களை அடைத்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் நிதி தரமதிப்பீடு. விவசாயிகள் பெரும்பாலும் இயற்கை பேரழிவுகள், விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் கடன்களை அடைக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த சூழலில், சிபில் ஸ்கோரை கட்டாயமாக்குவது அவர்களது வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கும். கடந்த காலங்களில், கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும்போது சிபில் ஸ்கோர் கட்டாயமாக வைக்கவில்லை – இது சமூக நல அடிப்படையில் இருந்தது.
சிபில்' என்ற தனியார் அமைப்பின் அறிக்கை எந்த வகையில் நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதே தெரியாத நிலையில், விவசாயிகளுக்கு 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் கடன் என்ற அறிவிப்பு கடுமையான நெருக்கடியை உருவாக்கும். எனவே, இந்த திட்டத்தை உடனடியாக திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'” என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/selvaperunthagai-crop-loans-in-cooperative-bank-based-on-cibil-score-will-create-crisis-for-farmers-9349781