செவ்வாய், 27 மே, 2025

இந்தியாவின் புதிய போர் வியூகம்; ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்திய "ரெட் டீமிங்" உருவானது எப்படி?

 

Indian ASrmy

இந்திய ராணுவம் சமீபத்தில் பாகிஸ்தானில் நடத்திய ஆபரேஷன் சிந்து நடவடிக்கையில் ஒரு முக்கியமான மற்றும் புதுமையான போர் யுக்தியைப் பயன்படுத்தியுள்ளது. "ரெட் டீமிங்" (Red Teaming) என்று அழைக்கப்படும் இந்த உத்தி, எதிரியின் மனோபாவம், அவர்கள் கையாளும் தந்திரங்கள் மற்றும் அவர்களின் எதிர்வினை முறைகள் குறித்து ஆழமான அறிவு கொண்ட நிபுணர்கள் குழுவை திட்டமிடல் செயல்பாட்டில் ஈடுபடுத்துவதை உள்ளடக்கியது.

இந்த குழு, நமது இராணுவத் திட்டங்களை விமர்சன ரீதியாக ஆராய்ந்து, எதிரியின் சாத்தியமான எதிர்வினைகளை உருவகப்படுத்தி, நாம் வகுத்துள்ள போர் வியூகத்தின் வலிமையை சோதிக்க உதவுகிறது. இது குறித்து வெளியான ஆதாரங்களின்படி, இந்திய இராணுவம் ஒரு உண்மையான இராணுவ நடவடிக்கையில் இந்த கருத்தை சோதனை செய்வது இதுவே முதல் முறையாகும். இது இந்தியாவின் மூலோபாயக் கோட்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. 

மேலும், இதன் மூலம், எல்லை தாண்டிய இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் முன்னறிவிப்புடன் கூடிய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. இந்த விரிவான திட்டமிடல் செயல்பாட்டில் 5 மூத்த அதிகாரிகள் அடங்கிய "ரெட் டீம்" ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இவர்கள் நாட்டின் பல்வேறு கட்டளைகள் மற்றும் பதவிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

ரெட் டீமிங்" என்பது வெளிநாடுகளில், குறிப்பாக பனிப்போரின்போது சோவியத் ஒன்றியத்தின் உத்திகளை முன்கூட்டியே கணிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இருப்பினும், இந்திய இராணுவத்தில் இது சமீபத்தில் தான் சோதனை செய்யப்பட்டுள்ளது. "ரெட் டீம்" என்ற சொல் போர் விளையாட்டுப் பயிற்சிகளில் இருந்து உருவானது. இதில் ஒரு குழு, "ரெட் டீம்" என்று அழைக்கப்பட்டு, எதிரி படைகளின் தந்திரோபாயங்களை உருவகப்படுத்தி, தற்காப்புப் படைகளுக்கு எதிராக (ப்ளூ டீம்) கற்பனையான தாக்குதல்களை நடத்தும்.

இந்திய இராணுவத்தில், இந்த கருத்துக்கு மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு ஆலோசகராக இருந்த "விதுர வக்தா" என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது சில காலமாக விவாதத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது பல்வேறு இராணுவ கட்டளைகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு செயல்பாட்டு சூழ்நிலைகளில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, அணுகுமுறையை மேலும் செம்மைப்படுத்த பல நிலைகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.

2024 அக்டோபரில் நடைபெற்ற இராணுவ தளபதிகள் மாநாட்டிற்குப் பிறகு இந்த கருத்து அறிமுகப்படுத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, 15 அதிகாரிகள் "ரெட் டீமிங்" குறித்து சிறப்புப் பயிற்சி பெற்றனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் "விதுர வக்தா" திட்டத்தை விரிவுபடுத்தி முறைப்படுத்துவதற்கான வரைபடம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் நிபுணத்துவத்தை வளர்த்து, இறுதியில் வெளிநாட்டு பயிற்சியாளர்களைச் சார்ந்திருப்பதை குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது போல, எதிரிப் படைகளாக செயல்பட்டு யதார்த்தமான போர் விளையாட்டுகளை நடத்தி போர் தயார்நிலையை மேம்படுத்துவதற்காக ஒரு பிரத்யேகப் பிரிவை (OPFOR - Opposing Force) உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை இராணுவம் ஆராயத் தொடங்கியது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் போர் பயிற்சிகளின்போது எதிரி நடத்தையை உருவகப்படுத்த இதுபோன்ற பிரிவுகளை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றன.

இந்திய இராணுவத்தில் ஏற்கனவே சிம்லாவை தலைமையிடமாகக் கொண்ட பயிற்சி கட்டளையின் (ARTRAC) கீழ் REDFOR (Red Forces) என்ற பிரிவு உள்ளது. இது போர் விளையாட்டுத் திட்டங்கள் மற்றும் உருவகப்படுத்துதல்களை (பொதுவாக காகிதம் அல்லது மணல் மாதிரிகளைப் பயன்படுத்தி நடத்தப்படுவது) சரிபார்ப்பது மற்றும் இந்த பயிற்சிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டிய அளவுருக்கள் மற்றும் விதிமுறைகளை வகுப்பது போன்ற பணிகளை மேற்கொள்கிறது.

இருப்பினும், REDFOR எதிரி தந்திரோபாயங்களை உருவகப்படுத்தி பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக இருக்கும் நிலையில், "ரெட் டீம்" நமது சொந்தத் திட்டங்களையும், அவை எதிரியின் மீது ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் எதிரியின் எதிர்வினையையும் ஆய்வு செய்கிறது என்று அதிகாரிகள் விளக்கினர்.


source https://tamil.indianexpress.com/india/first-in-operation-sindoor-red-teams-of-experts-to-map-mind-of-adversary-9309511