புதன், 21 மே, 2025

மதச்சார்பற்ற நாட்டில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?” – வக்ஃபு வழக்கில் அடுக்கடுக்கான கேள்விகளையும், வாதங்களையும் முன்வைத்த மூத்த வழக்கறிஞர்கள்

 

மதச்சார்பற்ற நாட்டில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?” – வக்ஃபு வழக்கில் அடுக்கடுக்கான கேள்விகளையும், வாதங்களையும் முன்வைத்த மூத்த வழக்கறிஞர்கள் 20 5 2025

வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. காலைமுதல் வாதங்கள் தொடர்ந்த நிலையில் 1.30 மணிக்கு வழக்கு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2.30க்கு வாதம் தொடங்கியது. பிற்பகலுக்கு பிறகான வழக்கு விசாரணையில் இன்று மூத்த வழக்கறிஞர்கள் எடுத்து வைத்த வாதங்களை இங்கு காணலாம்.

கபில் சிபல்:-

புதிய வக்ஃபு சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 3(D), 3(E) பிரிவுகள் நாடாளுமன்றத்தில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கு சில நிமிடங்கள் முன்பு சேர்க்கப்பட்டது. அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவில்லை. வரைவு மசோதாவிலும் அந்த பிரிவுகள் இல்லை. நாடாளுமன்ற கூட்டுக்கு குழு முன்பாகவும் அது விவாதிக்கப்படவில்லை.

தலைமை நீதிபதி

இந்த பிரிவுகள் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவில்லையா? என்று கேள்வி எழுப்பினர்.

கபில் சிபல்:-

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மசோதாவில் அந்த பிரிவுகள் இல்லை. அதன் மீது விவாதமும் நடைபெறவில்லை.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா:-

இந்த விவகாரம் தொடர்பாக நான் விளக்கம் அளிக்கவுள்ளேன்.

கபில் சிபல்:-

வக்ஃபு சொத்து குறித்து சர்வே நடத்தும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். ஆறு மாதத்தில் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

இந்த சட்டம் என்பது இஸ்லாமியர்களின் உரிமைகளை மொத்தமாக அபகரிக்கும் திட்டம். இதற்கு எதிராக நீதிமன்றங்களில் முறையிடவும் முடியாது. நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்துக்களை அரசு மொத்தமாக எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

வக்ஃபு சொத்து பதிவு செய்யப்படாவிட்டால், வழக்குத் தொடர முடியாது, வழக்குத் தொடரும் எனது உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு பிரிவு 14ஐ மீறும் செயலாகும், இதைவிட மோசமானது எதுவும் இருக்க முடியாது. இந்த சட்டத்தின் மூலம் ஒரு சமூகத்தின் சொத்துக்களை அரசு கையகப்படுத்துகிறது, வக்ஃபு-வின் நிலைத்தன்மை குலைக்கப்படுகிறது.

தலைமை நீதிபதி:

ஆனால் முந்தைய பழைய சட்டத்தின்படி வக்ஃபு சொத்து பதிவு கட்டாயமானது தானே.

கபில் சிபல்:-

ஆனால் பத்திர பதிவு செய்யப்படவில்லை என்றாலும் எந்த பாதகமான விளைவுகளும் இல்லை. தற்போதைய சட்டத்தின்படி, தனியார் சொத்தை எடுத்துக்கொள்வார்கள், ஆனால் அந்த சொத்தின் மீதான உரிமைகளை நிரூபிக்க எந்த நடைமுறையும் இல்லை. வக்ஃபு வாரியத்தை பார்த்தோம் என்றால் முன்னதாக அந்த வாரியத்தில் உறுப்பினராக இருந்தவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள். ஆனால் புதிய சட்டத்தின்படி பெரும்பாலான உறுப்பினர்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள்.

குறிப்பாக இரண்டு நீதிபதிகள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவர்களும் இஸ்லாமியர் அல்லாதவர்களாகத்தான் இருக்க அதிக வாய்ப்பு. ஏனெனில் இஸ்லாமியர்கள் தான் இருக்க வேண்டும் என்று எங்கும் தெரிவிக்கப்படவில்லை.

வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் இந்து கோயில்களை நிர்வகிக்கக்கூடிய வாரியங்களில் இந்துக்கள் அல்லாதோர் உறுப்பினராக இருக்க முடியுமா ?.

நீதிபதிகள் :-

அப்படியெனில் “புத்த கயாவில்” நிர்வாகத்தில் இருப்பவர்கள் அனைவரும் இந்துக்கள் தானே.

கபில் சிபல் :-

“புத்த கயாவை” இதனுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அந்த வழிபாட்டு தளம் புத்த மதத்தை சார்ந்தவர்களுக்கும், இந்துக்களுக்கும் பொதுவானதாகும். அதனை “புத்த கயா சட்டம்” தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்து கோயில்கள், கிருத்தவ ஆலயங்கள், சீக்கிய குருத்துவாராக்கள் உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட சமயத்தை சேர்ந்தவர்கள் நிர்வகிக்கும் போது, இஸ்லாமியர்களின் சமய சொத்துக்களை நிர்வகிக்கும் வாரியத்தில் பிற சமயத்தை சார்ந்தவர்களை அனுமதிப்பது எவ்வாறான நடைமுறை? இது அரசியல் சாசனத்திற்கு முரணானது.

வக்ஃபு இஸ்லாம் சமயத்தின் மசூதியோடு தொடர்புடையது, இது மதச்சார்பற்றது அல்ல. வக்ஃபு உருவாக்குவது மதச்சார்பற்றது அல்ல மாறாக வக்ஃபு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இஸ்லாமிய சொத்து.

மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான்:

ஆங்கிலேயருடைய கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் கூட வக்ஃபு தொடர்பான விஷயத்தில் நடைமுறைகளை மாற்றவில்லை. அதேபோல் 1923,1994 , 1995 சட்ட திருத்தங்களில் கூட வக்ஃபு விவகாரத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரவில்லை, குறிப்பாக இதற்கு முன் எந்த சட்டத் திருத்தம் மூலமாகவும் வக்ஃபு எனும் கருத்து சிதைக்கப்பட்டதில்லை.

ஆனால் தற்போது புதிய சட்டத்தில் இஸ்லாமிய சமயத்திற்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?. முதல்முறையாக ஒரு மதம் என்றால் என்ன? என்ற ஒரு புதிய விளக்கத்தை கொடுத்து மதசட்டம் மறுவரையறை செய்யப்படுகிறது. எனவே இந்த பெரிய அளவிலான மாற்றத்திற்கான தேவை என்ன?.

நமது நாடு மதசார்பற்ற நாடு, சீக்கியர் ஒருவர் விரும்பினால் வக்ஃபு நன்கொடை கொடுக்க முடியும். அந்த மதச்சார்பற்ற நிலைக்கு எதிராக இந்த சட்டம் உள்ளது அதிலும் குறிப்பாக அரசியல் சாசனத்தின் முகவுரையில் உள்ள “மதச்சார்பின்மை” என்ற வேருக்கு எதிராக இந்த புதிய வக்ஃபு சட்டம் உள்ளது.

மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி :-

ஒவ்வொரு மதத்திலும் அறக்கட்டளைகள் உள்ளன. அதில் எந்த மத அறக்கட்டளை கடந்த 5 ஆண்டுகளாக நீங்கள் இந்த சமயத்தை பின்பற்றுகிறீர்களா? அதை சரியாக பின்பற்றுகிறீர்களா என்பதை நிரூபிக்கச் கூறுகிறது?. யார் அவர்களிடம் மதத்தை பின்பற்றுவதற்கான ஆதாரத்தை, சான்றை கேட்கிறார்கள்?.

மேலும் வக்ஃபு சொத்துகள் கடந்த 2013க்கு பின்னர் கணக்கில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் முதலில் வாதம் வைக்கப்பட்டது. ஆனால் அது தவறானது, ஏனெனில் வக்ஃபு சொத்துக்கள் விவரம் தொடர்பாக ஒரு போர்ட்டல் 2013ல் துவங்கப்பட்டது.

அந்த போர்டல் பதிவேற்ற செயல்முறையை புதிய சொத்தாகவும், வக்ஃபு சொத்து அதிகரித்துள்ளதாகவும் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு பதிவேற்ற நடைமுறை ஆகும். அதேபோல , நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையில் 28 மாநிலங்களில் 5 மாநிலங்களில் மட்டுமே வக்ஃபு சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதை மத்திய அரசின் பதில் மனுவிலும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் முழுமையாக எதையும் ஆராயாமல் வக்ஃபு பதிவு செய்யப்படவில்லை, வக்ஃபு சொத்துக்கள் அதிகரித்துள்ளன என கூறி வருகின்றனர்.

மூத்த வழக்கறிஞர் ஹசீபா அகமதி:

1904, 1954 சட்டங்களில் பழங்கால மசூதிகள் உள்பட பல சொத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இந்த சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுகிறது. எனவே சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இஸ்லாமை பின்பற்றுபவர் ஐந்து முறை தொழ வேண்டும் என்பது இஸ்லாமின் அடிப்படையாகும். அவ்வாறு இருக்கையில் ஐந்து முறை தொழாமல் இருப்பவர் இஸ்லாமியர் இல்லையா?. அவ்வாறு ஐந்து முறை தொழுதால் தான் வக்ஃபுவுக்கு தானம் கொடுக்க முடியும் என்று கூறுவது எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?.

எனவே வக்ஃபு-வுக்கு சொத்து தானம் வழங்கும்போது அதற்கு ஒரு குறிப்பிட்ட கால வரையில் வரையறை நிர்ணயித்து இஸ்லாமை பின்பற்ற வேண்டும் என்று கூறுவது, எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கக்கூடிய அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.

இது போன்ற நடவடிக்கை மூலம் தான் வக்ஃபுவுக்கு தானம் வழங்க முடியும் என்று தீர்மானிக்க முடியுமா?. எனவே இவை அனைத்தும் சூழ்ச்சியானவை.

வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.



source https://news7tamil.live/why-are-there-so-many-restrictions-only-for-muslims-in-a-secular-country-senior-lawyers-who-presented-a-series-of-questions-and-arguments-in-the-waqf-case-what-will-the-central-governments.html