வெள்ளி, 16 மே, 2025

ஜனாதிபதி, கவர்னருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா?: உச்ச நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி

 

Droupadi Murmu

'ஜனாதிபதி, ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா' - திரௌபதி முர்மு கேள்வி

மசோதாக்கள் விவகாரத்தில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் கால வரம்பு நிர்ணயித்த தீர்ப்பில், உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் அமர்வு கடந்த மாதம் 8-ம் தேதி தீர்ப்பளித்தது. மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாகளை ஆளுநர் நிறுத்தி த்தது சட்டவிரோதம் எனக் கூறிய நீதிபதிகள், ஜனாதிபதிக்கு மசோதாக்கள் அனுப்பியதை ரத்து செய்தும், சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தியும் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தனர். ஆளுநர் மட்டுமின்றி 3 மாதத்திற்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்கவும் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டது.  "இந்த காலக்கெடுவுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால், அதற்கான சரியான காரணங்கள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட மாநில அரசிற்கு தெரிவிக்க வேண்டும்" என்று உச்சநீதிமன்றம் கூறியது. அரசியலமைப்பின் 201-வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

இந்நிலையில், சட்டம் தொடர்பான சந்தேகங்கள் எழும்போது, உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143-ன் கீழ், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை முன்வைத்துள்ளார். அதில், மசோதாக்கள் மீது முடிவெடுக்க, ஜனாதிபதி மற்றும் ஆளுநருக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அனைத்து வாய்ப்புகளுக்கும் ஒரே அளவிலான காலக்கெடுவை நிர்ணயிக்க முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட பரபரப்பான 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் முர்மு எழுப்பி உள்ளார்.

உச்ச நீதிமன்றத்துக்கு திரௌபதி முர்மு 14 கேள்விகள்:

1. பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது, ​​அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு விருப்பங்கள் என்னென்ன?

2. ஒரு மசோதா ஆளுநர் முன் சமர்ப்பிக்கப்படும்போது, ​​அவருக்கு இருக்கும் அனைத்து அரசியலமைப்பு விருப்பங்களையும் செயல்படுத்தும்போது, ​​அமைச்சரவையால் வழங்கப்படும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா?

3. பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் அரசியலமைப்பு விருப்புரிமை நியாயப்படுத்தத்தக்கதா?

4. பிரிவு 200-ன் கீழ் ஒரு ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறுஆய்வுக்கு, பிரிவு 361 ஒரு முழுமையான தடையா?

5. அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் ஆளுநரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், சட்டப்பிரிவு 200-ன் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் ஆளுநரால் பயன்படுத்துவதற்காக, நீதித்துறை உத்தரவுகள் மூலம் காலக்கெடு விதிக்கப்பட்டு, செயல்படுத்தும் முறையை பரிந்துரைக்க முடியுமா?

6. பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயப்படுத்தத்தக்கதா?

7. அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா? செயல்படுத்தும் முறை பரிந்துரைக்கப்படுமா?

8. ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒதுக்கும்போது, பிரிவு 143-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறவும், உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெறவும் குடியரசுத் தலைவர் கடமைப்பட்டுள்ளாரா?

9. ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, நீதிமன்றங்கள் எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது தீர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறதா?

10. மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாகுமா?

11. பிரிவு 145(3) இன் படி, எந்தவொரு உச்ச நீதிமன்ற அமர்வும், அரசியலமைப்பின் விளக்கம் குறித்த கணிசமான சட்ட கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை அனுப்புவது கட்டாயமில்லையா?

12. பிரிவு 131-ன் கீழ் வழக்குத் தொடருவதைத் தவிர, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்புச் சட்டம் தடைசெய்கிறதா?

13. அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் குடியரசுத் தலைவரின்/ஆளுநரின் உத்தரவுகளையும் பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியுமா?

14. முரணான உத்தரவுகளை பிறப்பித்தல்/ஆணைகளை பிறப்பித்தல் வரை பிரிவு 142 நீட்டிக்கப்படுகிறதா?

இந்த விளக்கத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/india/president-murmu-supreme-court-assent-to-bills-timelines-judicial-orders-9070251