வெள்ளி, 16 மே, 2025

காவல் நிலைய கழிவறைகளில் கைதிகள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? - ஐகோர்ட் கேள்வி

 

காவல் நிலைய கழிவறைகளில் கைதிகள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? - ஐகோர்ட் கேள்வி

Prisioners issue

தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் இருக்கும் கழிவறைகளில் கைதிகள் மட்டும் ஏன் தொடர்ச்சியாக வழுக்கி விழுகின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கல், கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் அவரது தந்தை இப்ராஹிம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ஜாகிர் உசேனின் இடது கால் மற்றும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க சிறைத்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (மே 15) சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஜி.ஆர் .சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கைதான நபருக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு அரசு வழக்கறிஞர், கழிவறையில் வழுக்கு விழுந்து காயம் ஏற்பட்டதாகவும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், "காவல் நிலையங்களில் உள்ள கழிவறைகளில் கைதிகள் மட்டும் வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் வகையில் இருக்கிறதா? அந்த கழிவறைகளை ஆய்வாளர்கள் பயன்படுத்துவதில்லையா? அவர்களுக்கு ஏன் எதுவும் ஆவதில்லை?" என்று கேள்வி எழுப்பினர். மேலும், இது போன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, மனு தாக்கல் செய்த நபரின் மகனுக்கு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சிறைத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-questions-why-do-only-prisoners-slip-and-fall-in-police-station-toilets-9073231