கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தது குறித்து, கனடா பிரதமர் மார்க் கார்னி விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவின் ஐந்தாவது பொருளாதார அந்தஸ்தே இந்த அழைப்பிற்கான காரணம் என்று அவர் நேற்று தெரிவித்தார். இந்த நடவடிக்கை, முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட உறவு சிக்கல்களுக்கு பிறகு, உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக கருதப்படுகிறது.
"ஜி7 தலைவராக, எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, முக்கியமான தாதுக்கள் போன்ற பிரச்சனைகளைப் பற்றிப் பேச மிக முக்கியமான நாடுகளை அழைப்பது அவசியம். உலகளாவிய விநியோக சங்கிலிகளின் மையமாக இந்தியா உள்ளது" என்று செய்தியாளர் சந்திப்பில் கார்னி கூறியதாக 'தி குளோப் அண்ட் மெயில்' தெரிவித்துள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகவும் இந்தியா இருப்பதால், இந்த ஆண்டு ஜி7 மாநாட்டில் இந்தியா பங்கேற்பது முக்கியம் என்றும் கார்னி குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டில், அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசு முகவர்களின் "சாத்தியமான" தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியபோது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் சீர்குலைந்தன. இந்தியாவோ இந்தக் குற்றச்சாட்டுகளை "அபத்தமானவை" மற்றும் "நோக்கமுள்ளவை" என்று நிராகரித்தது.
நிஜ்ஜாரின் மரணத்தில் இந்தியாவுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கருத்து தெரிவிக்க கார்னி மறுத்துவிட்டார். "கனடாவில் ஒரு சட்ட செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது. அது மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது. அத்தகைய சட்ட செயல்முறைகள் குறித்து கருத்து தெரிவிப்பது ஒருபோதும் பொருத்தமானதல்ல" என்று கார்னி கூறினார். இருப்பினும், கனடாவும் இந்தியாவும் "தொடர்ச்சியான சட்ட அமலாக்க உரையாடலுக்கு" ஒப்புக்கொண்டதாக கார்னி கூறினார். ஆனால், இது நிஜ்ஜார் விசாரணையில் ஒத்துழைப்பை உள்ளடக்கியதா என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.
இந்த மாதம் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் தாம் கலந்துகொள்வதை பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் உறுதிப்படுத்தினார். கார்னியின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, "பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களால் வழிநடத்தப்பட்டு, இந்தியாவும், கனடாவும் புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் இணைந்து செயல்படும்" என்று தெரிவித்தார்.
"கனடா பிரதமர் மார்க் ஜே கார்னியிடமிருந்து அழைப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அவரது சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துகள் மற்றும் இந்த மாத இறுதியில் கானனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிற்கு நன்றி. ஆழ்ந்த மக்கள் பிணைப்புகளால் பிணைக்கப்பட்ட துடிப்பான ஜனநாயக நாடுகளாக இந்தியாவும், கனடாவும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களால் வழிநடத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் இணைந்து செயல்படும். உச்சி மாநாட்டில் எங்கள் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று பிரதமர் மோடி எல்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
வழக்கமாக, ஜி7 மாநாட்டை நடத்தும் நாடுகள் சில நாடுகளை விருந்தினர் நாடுகளாக அழைக்கும். கனடா இதுவரை உக்ரைன் மற்றும் ஆஸ்திரேலியாவை அழைத்துள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஜி7 உச்சி மாநாட்டிற்கும் இந்தியா அழைக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவால் ஜி7 கூட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தவிர, ஆகஸ்ட் 2019 முதல் ஒவ்வொரு உச்சி மாநாட்டிலும் மோடி பங்கேற்றுள்ளார்.
source https://tamil.indianexpress.com/international/canadian-pm-reveals-why-he-invited-pm-modi-to-g7-meet-9344007