கேலோ இந்தியா: 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.29.5 கோடி மட்டுமே ஒதுக்கீடு! முக்கிய திட்டங்கள் புறக்கணிப்பு!
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.29.5 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. குஜராத்திற்கு ரூ.605 கோடியும் உத்தரபிரதேசத்திற்கு ரூ.509 கோடியும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானாவிற்கு தலா ரூ.180 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் கால்பந்து மைதானம் மற்றும் தடங்களுடன் 15 உள்ளரங்க அரங்குகளை கட்டி முடித்துள்ளது. அருணாச்சல பிரதேசம் 18 உள்ளரங்க பல்நோக்கு அரங்குகள் உட்பட 21 திட்டங்களை நிறைவு செய்துள்ளது. குஜராத் ஒரேயொரு மைதானத்திற்காக ரூ.580 கோடியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
குறைந்த நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதன் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் வண்டலூர், தஞ்சாவூர், ஈரோடு மற்றும் சேலத்தில் ஓடுதளங்கள் மற்றும் மேலகோட்டையூரில் உள்ள மாநில விளையாட்டு பல்கலைக் கழகத்தில் ஒரே ஒரு நீச்சல் குளம் மட்டுமே கட்டிமுடிக்க முடிந்தது.
கடந்த ஆண்டு கடலூர், திருவாரூர் மற்றும் தூத்துக்குடியில் பல்நோக்கு விளையாட்டு அரங்குகள் மற்றும் தூத்துக்குடியில் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக 12 புதிய முன்மொழிவுகளை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்தது. மேலும் பல திட்டங்கள் தடகளப் பாதைகள் தொடர்பானவை. இந்த திட்டங்கள் எதுவும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.