/indian-express-tamil/media/media_files/2025/06/02/R5B0sMog1e5BzP6WNCkd.jpg)
தெலங்கானா மாநிலத்தில், குருகுலப் பள்ளி மாணவர்களை கழிவறைகளை சுத்தம் செய்யுமாறு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் கூறிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர் வி.எஸ். அழகு வர்ஷினி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய பாரத் ராஷ்டிர சமிதி (BRS) தலைவர் டாக்டர் ஆர்.எஸ். பிரவீன் குமார், அவரை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பட்டியலின மக்கள் ஆணையம் (National Commission for Scheduled Castes) நேற்று (ஜூன் 1), தெலங்கானா தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர் வி.எஸ். அழகு வர்ஷினி, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குருகுல மாணவர்களைப் பற்றி இழிவான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா சமூக நலன் மற்றும் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் (TGSWREIS) செயலாளராக உள்ள டாக்டர் அழகு வர்ஷினி, அண்மையில் வைரலான ஆடியோ கிளிப்பில் குருகுலப் பள்ளி மாணவர்களைப் பற்றித் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை கிளப்பின. ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த இந்தச் சம்பவத்தில், சமூக நலன் விடுதிகள், வகுப்பறைகளில் உள்ள கழிப்பறைகள் மற்றும் விடுதி அறைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை மாணவர்களின் அன்றாட வழக்கத்தில் சேர்க்குமாறு பள்ளி முதல்வர்களுக்கு அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
குருகுலப் பள்ளிகளில் மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்வதும், தங்கள் அறைகளை ஒழுங்காக வைத்திருப்பதும் தவறில்லை என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி வலியுறுத்திய அதேவேளையில், பாரத் ராஷ்டிர சமிதி (BRS) தலைவரும், TGSWREIS இன் முன்னாள் செயலாளருமான டாக்டர் ஆர்.எஸ். பிரவீன் குமார், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அழகு வர்ஷினியை பணிநீக்கம் செய்யக் கோரிய அவர், குருகுலப் பள்ளிகளில் படிக்கும் தலித் மாணவர்களிடம் அவர் பாகுபாடு காட்டுவதாகக் கூறினார். “அழகு வர்ஷினியின் உத்தரவுகள், அதிகாரத்துவத்தில் உள்ள பலரின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளன. இத்தகைய உத்தரவுகளைக் கேள்வி கேட்கும் பெற்றோர்களை அவர் அச்சுறுத்துகிறார்!” என்று தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த ஆடியோ கிளிப்பை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள BRS MLC கல்வகுண்ட்ல கவிதா, “காங்கிரஸ் அரசின் ஏழைகளுக்கு எதிரான மனப்பான்மை, சமூக நலன் குருகுல சங்கத்தில் உள்ள ஒரு அதிகாரியின் இந்த அதிர்ச்சியூட்டும் நடத்தையில் பிரதிபலிக்கிறது” என்று அவர் கூறினார். BRS ஆட்சியில் ஒவ்வொரு சமூக நலப் பள்ளிக்கும் துப்புரவுப் பணிகளுக்காக நான்கு தற்காலிகப் பணியாளர்களை நியமிக்க மாதத்திற்கு ரூ. 40,000 வழங்கப்பட்டது என்றும், இந்த ஆண்டு மே மாதம் முதல் காங்கிரஸ் அரசு இதை நிறுத்திவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், "240 பள்ளிகளிலும் உதவி காப்பாளர்கள் (assistant caretakers) நியமிக்கப்படுவது அரசால் நீக்கப்பட்டு, மாணவர்கள் வார்டன்களாகவும், சமையலறைகளை நிர்வகிக்கவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இப்போது, குழந்தைகளை பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய அதிகாரி வற்புறுத்துகிறார்!!" என்று அவர் கூறினார்.
கவிதா கருத்துப்படி, இந்த அறிக்கைகள், விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை சாதி மற்றும் வர்க்கப் பாகுபாட்டிலிருந்து பாதுகாக்க குருகுலங்கள் தொடங்கப்பட்டதன் கருத்துக்கு முரணானது என்று தெரிவிக்கப்படுகிறது. “இந்த நடத்தை பாகுபாடு காட்டுவதாகவும், குழந்தை உரிமைகள் மற்றும் கண்ணியத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாகவும் உள்ளது. இது ரேவந்த் ரெட்டி அரசின் ஏழை, தலித் விரோத மனப்பான்மையை மட்டுமே பிரதிபலிக்கிறது!! அதிகாரியை உடனடியாக பணிநீக்கம் செய்து, சமூக நலப் பள்ளிகளை முறையாக நடத்த தேவையான நிதியை வழங்குமாறு நான் அரசிடம் கோருகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரலான ஆடியோ கிளிப்பில், இந்த மாணவர்கள் மிகவும் ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்றும், வீட்டிலிருந்தே தங்களைப் பார்த்துக் கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறி அதிகாரி தனது கருத்துகளை நியாயப்படுத்தினார்.
"அவர்கள், அறைகளை சுத்தம் செய்ய வேண்டும். யார் தங்கள் அறைகளை சுத்தம் செய்வார்கள்? ஒரு முறை தூய்மை பணியாளர் செய்வார்... ஏன் அவர்களால் தங்கள் கழிவறைகளை சுத்தம் செய்ய முடியாது? அதில் என்ன தவறு... இது ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பருவம். நான் ஆடம்பரத்தை வழங்க முடியாது. பிறகு 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்குப் பிறகு, குழந்தைகள் தனியாகச் சென்று தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய நேரிடும். சமைக்க தெரியாது, படிப்பு பற்றி மட்டுமே தெரியும் என்று பயனற்ற ஒருவராக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது," என்று கவிதா பகிர்ந்துள்ள ஆடியோவில் அதிகாரி கூறியதாக தெரிகிறது.
அதிகாரி தாமே ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்ட மற்றொரு ஆடியோவில், மாணவர்களை உள்ளடக்கிய இந்த விவகாரத்தை அரசியல்மயமாக்க வேண்டாம் என்றும், தனது வார்த்தைகளை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறை குறித்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறி, குழந்தைகள் வீட்டில் பெற்றோர்களுக்கு உதவுவது "சாதாரண தினசரி செயல்பாடு" என்றும், அது அவர்களை ஒரு "விழிப்புணர்வுள்ள தனிநபராக" வளர உதவுகிறது என்றும் அவர் கூறினார். “நீங்கள் வெளிநாடு சென்றாலோ அல்லது வேறு மாநிலத்திற்குச் சென்றாலோ, உங்கள் அன்றாட வேலைகளை நீங்களே செய்ய வேண்டும். அறைகளை சுத்தம் செய்தல், குளியலறைகளை சுத்தம் செய்தல், ஆடைகளை துவைத்தல் ஆகியவற்றை படிப்பில் கவனம் செலுத்துவதோடு சேர்த்து நீங்களே செய்ய வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் தகவல்களை பெற முயற்சித்த போது, சம்பந்தப்பட்ட அதிகாரி கருத்து தெரிவிக்கவில்லை.
source https://tamil.indianexpress.com/india/ias-officer-students-clean-toilets-telangana-9329888