10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாடாளுமன்றத்தில் புயல்: சட்ட மசோதா கிழிப்பு, எம்.பி.க்கள் இடையே தள்ளுமுள்ளு! 20 08 2025
/indian-express-tamil/media/media_files/2025/08/20/constitution-130th-amendment-bill-2025-2025-08-20-15-36-05.jpg)
Papers torn, MPs come close to scuffle as Lok Sabha sees pandemonium over Bill to remove ministers detained on graft charges
டெல்லி: கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு, லோக்சபா புதன்கிழமை அன்று கடும் அமளியைச் சந்தித்தது. ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, குறைந்தது 30 நாட்களுக்குச் சிறை வைக்கப்பட்ட மத்திய அல்லது மாநில அமைச்சர்களைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான ‘அரசியலமைப்பு (130-வது திருத்தம்) மசோதா, 2025’ அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்த அமளி வெடித்தது.
மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்த எழுந்தவுடன், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். உடனடியாக, பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுந்து மசோதாவை எதிர்த்துப் பேசினர்.
அப்போது காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால், சோராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கில் அமித் ஷா கைது செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்பினார். உடனடியாக அமித் ஷா எழுந்து, குஜராத் உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகே தான் கைது செய்யப்பட்டதாக விளக்கமளித்தார். இந்தச் சொல்லாடல் முற்றி, வேணுகோபால் மசோதாவின் நகலைக் கிழித்து அவையின் மையப்பகுதியில் வீசினார். இதைத் தொடர்ந்து, மற்ற காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் உட்பட அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் மசோதாவின் நகல்களை கிழித்தெறிந்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்த அமளிக்கிடையே, திரிணாமுல் காங்கிரஸின் கல்யாண் பானர்ஜி, அமித் ஷா பேசிக்கொண்டிருந்தபோது, அவரது மைக்குக்கு அருகே வந்து கோஷமிட்டார். இதைப் பார்த்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, கோபத்துடன் பானர்ஜியை பின் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். இதனால், ஆளும் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களை நோக்கிச் சென்றனர். இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமையின் தீவிரத்தைக் கண்ட அமித் ஷா, தானே தலையிட்டு அமைதி காக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.