ஞாயிறு, 12 ஜூலை, 2026

ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்

 

ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல் 11 7 2026 

hor

மத்திய கிழக்குப்பகுதியில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. அமெரிக்காவுடன் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடியோடு அசைத்துப் பார்க்கும் வகையில், சர்வதேச வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளது. அனுமதிக்கப்படாத பாதையில் சென்ற கப்பல் மீது ஈரான் ராணுவம்  துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்கா தனது மூன்றாவது சுற்று வான்வழித் தாக்குதலை ஈரான் மீது தொடங்கியுள்ளது.

ஈரான் ஜலசந்தியில் நடந்தது என்ன?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடக்கிறது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் எச்சரிக்கைகளையும் வழிகாட்டுதல்களையும் மீறி மாற்றுப் பாதையில் சென்ற சைப்ரஸ் நாட்டுச் சரக்குக் கப்பல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அந்தக் கப்பலின் எஞ்சின் அறை பலத்த சேதமடைந்ததுடன், ஒரு மாலுமியும் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஈபோர் தொடங்கியதிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தி தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்றும், அதன் வழியே செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிப்போம் என்றும் ஈரான் பிடிவாதம் காட்டி வருகிறது. இப்போது மறு உத்தரவு வரும் வரை இந்த ஜலசந்தி முழுமையாக மூடப்படும் என அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் உக்கிரமான பதிலடி

ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், "ஈரான் தவறான முடிவை எடுத்துவிட்டது, அதற்கான விலையை இப்போது அவர்கள் செலுத்துகிறார்கள்" என எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் உத்தரவின் பேரில், ஈரானின் கடற்கரை நகரங்களான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) மற்றும் சிரிக் (Sirik) ஆகிய இடங்களில் அமெரிக்கா குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "1000 ஏவுகணைகள் தயார் நிலையில்  ஈரானை நோக்கி குறிவைக்கப்பட்டுள்ளன" என சமூக வலைத்தளத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த மாதம் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக அறிவித்தாலும், பேச்சுவார்த்தைகளைத் தொடரத் தயார் எனக் கூறியுள்ளது.

 பழிவாங்கத் துடிக்கும் புதிய சுப்ரீம் லீடர்

ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது இறுதிச்சடங்கிற்குப் பிறகு, ஈரானின் புதிய உச்சத் தலைவராக பொறுப்பேற்றுள்ள அவரது மகன் மொஜ்தபா கமேனி தனது முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தனது தந்தையைக் கொன்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை நிச்சயமாகப் பழிவாங்குவோம் என்றும், அதுவே ஈரான் மக்களின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

source https://tamil.indianexpress.com/international/iran-shuts-hormuz-after-attack-on-unauthorised-ship-read-full-story-12156075