திருச்சியில் கஞ்சா வேட்டைக்காகச் சென்ற போலீசாருக்குப் பெரும் அதிர்ச்சியூட்டும் வகையில், ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 லட்ச ரூபாய் ரொக்கம், 100-க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட உயர்தர செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கே.கே. நகர் காவல் எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 10-க்கும் மேற்பட்ட வாலிபர்களைப் பிடித்து, இது பெரிய அளவிலான ஹவாலா மோசடியா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி கே.கே. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் ராஜா தெருவில் கேகே நகர் காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில், காவல் ஆய்வாளர் பெரியசாமி, காவல் உதவி ஆய்வாளர் செபாஸ்டின் உள்ளிட்ட 17 காவல் அதிகாரிகள் கஞ்சா மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சுப்ரமணியபுரம் ராஜா தெருவில் ஒரு வீட்டில் பலர் ஒன்று கூடியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
இதையடுத்து சந்தேகத்தின்பேரில் அந்த வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையின்போது ரூ.16 லட்சத்துக்கும் மேற்பட்ட ரொக்கப் பணம், 100-க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள், 50-க்கும் மேற்பட்ட உயர்தர செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
முறையான ஆவணங்கள் இன்றி, சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஓர் அறையில் சந்தித்திருந்தது மிகப் பெரிய ஹவாலா மோசடிக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபர்கள் அனைவரையும் கே.கே. நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட பணம் ஹவாலா பணமா அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கையுடன் தொடர்புடையதா என்பது குறித்தும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை நிறைவடைந்த பின்னரே சம்பவத்தின் முழுமையான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி
source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-ganja-raid-turns-into-hawala-scam-bust-cash-and-atm-cards-seized-kk-nagar-12137226





