/indian-express-tamil/media/media_files/2026/08/06/ugc-rules-2026-08-06-18-43-55.jpg)
யு.ஜி.சி சாதி பாகுபாடு விதிகள்: சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடைவிதித்தும் போராட்டம் ஓயாதது ஏன்?
பல்கலைக் கழக மானியக் குழுவின் (UGC) புதிய விதிகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட நபர் ஒருவர் ஜெய்ப்பூரில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நிதி உதவியும் அரசு வேலையும் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு உறுதியளித்துள்ளதாக, போராட்டத்தை நடத்திய 'கர்ணி சேனா' அமைப்பு தெரிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே உச்சநீதிமன்றத்தால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட அந்த யுஜிசி விதிகள் என்ன? அதற்கு எழுந்த எதிர்ப்புகள் என்ன?
யுஜிசி புதிய விதிகள் என்ன சொல்கின்றன? கடந்த ஜனவரி 13 அன்று, உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகள், 2026 (UGC Regulations, 2026) என்ற புதிய விதிகளை யுஜிசி அறிவித்தது. மதம், இனம், பாலினம், பிறந்த இடம், சாதி அல்லது மாற்றுத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடுகளை ஒழிப்பது, குறிப்பாக எஸ்சி, எஸ்டி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் (EWS) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி நிறுவனங்களில் முழுமையான சமத்துவத்தையும் சேர்க்கையையும் உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
சாதிப் பாகுபாடு காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வெமுலா (2016), பாயல் தாத்வி (2019) ஆகியோரின் தாயார்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் அளித்த தலையீட்டைத் தொடர்ந்து இந்த விதிகள் உருவாக்கப்பட்டன. இதற்காகக் கல்லூரிகளில் 'சம வாய்ப்பு மையங்கள்' (Equal Opportunity Cells), 'சமத்துவக் குழுக்கள்' (Equity Squads) அமைக்கப்பட வேண்டும். இது 2012-ம் ஆண்டின் விதிகளுக்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்டது. பழைய விதிகளில் தவறு செய்யும் உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை; ஆனால் புதிய விதிகளில் தண்டனைக்கான அம்சங்கள் உள்ளன. மேலும், பழைய விதிகள் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும் வகையில் இருந்த நிலையில், புதிய விதிகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் (OBC) உள்ளடக்கியுள்ளது.
எழுந்த எதிர்ப்புகளும் விமர்சனங்களும் என்ன? பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் சில மேல்சாதி அமைப்புகள் இந்த விதிகளுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தின. பொய்ப் புகார்கள் அளிக்கப்பட்டால் அதற்கு அபராதம் அல்லது தண்டனை விதிக்கும் எந்தவொரு பிரிவும் இந்த விதிகளில் இல்லை. இது பொதுப்பிரிவு மாணவர்களைத் தேவையின்றி 'துன்புறுத்தலுக்கு' ஆளாக்கும் என்றும், வளாகங்களில் சாதி ரீதியான பிளவை உண்டாக்கும் என்றும் குற்றம் சாட்டினர்.
சமூக வலைத்தளங்களில் இத்திட்டத்திற்கு எதிராக #UGCRollBack பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இது அரசியலுக்காக ஓபிசி பிரிவினர் மத்தியில் சாதிப் பிரிவினையை உருவாக்குகிறது எனப் பதிவிட்டனர். அதேவேளையில், கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடுகள் தண்டிக்கப்படாமல் போவதையும், ஒடுக்கப்பட்ட மாணவர்களின் தற்கொலை அதிகரிப்பதையும் சுட்டிக்காட்டி பல பிற்படுத்தப்பட்ட அமைப்புகள் இந்த விதிகளுக்கு ஆதரவு தெரிவித்தன.
உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது ஏன்? ஜனவரி மாத இறுதியிலேயே இந்த விதிகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த விதிகள் சமூகத்தில் பெரும் தாக்கத்தையும், சமூகப் பிளவையும்" ஏற்படுத்தக்கூடிய பல தெளிவற்ற கேள்விகளை எழுப்புவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. முதல்பார்வை விசாரணையில், விதிமுறையில் சில தெளிவின்மைகளும், அவை தவறாக பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறிய உச்சநீதிமன்றம், பாகுபாடு எவ்வாறு வரையறுக்கப்படுகிறது என்பதிலும் தெளிவில்லை எனச் சுட்டிக்காட்டியது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி வரவேற்பு தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர்களும் இந்த விதிகள் சரியான வரையறை இன்றி அவசரகதியில் கொண்டுவரப்பட்டவை எனக் விமர்சித்தனர்.
தற்போது மீண்டும் பேசுபொருளானது ஏன்? உச்சநீதிமன்றத் தடை அமலில் இருக்கும் நிலையிலும், தற்போதைய அரசியல் சூழல்களால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டங்கள்: சமூக வலைத்தளங்களில் தீவிரமடைந்து வரும் இடஒதுக்கீடு எதிர்ப்புப் பிரசாரங்களின் தொடர்ச்சியாகவே இந்த தற்போதைய போராட்டங்களும் பார்க்கப்படுகின்றன. பா.ஜ.கவின் பாரம்பரிய வாக்காளர்களான மேல்சாதிப் பிரிவினரின் இந்த அதிருப்தி, சமீபத்தில் பீகாரில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்ததாகக் கூறப்படுகிறது. பங்கிபூர் தொகுதியை 30 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க இழந்ததற்கு, இந்த யுஜிசி விதிகள் மீதான கோபமும் ஒரு முக்கியக் காரணம் என அரசியல் பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.
source https://tamil.indianexpress.com/explained/why-opposition-to-stayed-ugc-rules-is-flaring-up-again-12236719





