நேபாளத்தில் பெருவெள்ளம்: பனிப்பாறை சரிவு காரணமா? விஞ்ஞானிகள் ஆய்வு
/indian-express-tamil/media/media_files/2026/08/27/nepal-flash-flood-2026-08-27-07-36-19.jpg)
நேபாளம் - திபெத் எல்லையில் புதன்கிழமை ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் சேற்றுப் பெருக்குக்கு, உயரமான பகுதியில் இருந்து ஏற்பட்ட பனி மற்றும் பாறைச் சரிவு காரணமாக இருக்கலாமா என்பது குறித்து ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையம் விஞ்ஞானிகள், நேபாளம்-சீனா நாட்டு அமைப்புகளுடன் இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேபாளத்தை தலைமையிடமாக கொண்ட அரசுகளுக்கிடையேயான இந்த ICIMOD அமைப்பு, இந்து குஷ் இமயமலைப் பிராந்தியத்தை பாதுகாக்கும் சர்வதேச நடவடிக்கைகளில் முன்னணியில் செயல்பட்டு வருகிறது.
புதன்கிழமை காலை, திபெத்தின் கீழ்நிலை பகுதியான நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் திடீரெனப் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் 'போதே கோசி' மற்றும் 'திரிசூலி' ஆறுகளில் பெருமளவிலான தண்ணீருடன் சேறு, சகதி மற்றும் பெரும் பாறைகள் அடித்து வரப்பட்டன. காணொளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், போதே கோசி ஆற்றின் துணை ஆறான லெண்டே கோலாவில் (Lende Khola) பெருமளவிலான பனி மற்றும் பாறைக் கழிவுகள் சரிந்து விழுந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இதுவே கீழ்நோக்கி பெரும் வெள்ளத்தையும் பாறைகளையும் உந்தித் தள்ளியிருக்கக்கூடும் என்று ICIMOD புதன்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், பேரிடர் நிகழ்ந்த நேரத்தில் வழக்கத்திற்கு மாறான நில அதிர்வுப் பதிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன; எனினும், வெள்ளத்திற்கும் இந்த அதிர்வுகளுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளதா என்பது உடனடியாக உறுதி செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு ரசுவாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அதே பகுதி மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று ICIMOD-ன் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அபாயப் பிரிவின் தலைவர் கியாங்கோங் ஜாங் எச்சரித்துள்ளார். லெண்டே கோலாவில் ஏற்பட்ட பனிச்சரிவே முதன்மைக் காரணமாக சந்தேகிக்கப்பட்டாலும், முழுமையான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நேபாள-சீன எல்லையின் மேல் பகுதியில் இன்னமும் அடைப்பு நீடிப்பதால், மற்றொரு பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஜிலாங் (Jilong) துறைமுகப் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ளம் அசாதாரண வேகத்துடனும் தீவிரத்துடனும் பாய்ந்ததாகக் குறிப்பிட்ட ICIMOD, காத்மாண்டுவில் இருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ள தாதிங் மாவட்டத்தின் கல்ச்சி பகுதியில் திரிசூலி ஆற்றின் நீர்மட்டம் வெறும் 30 நிமிடங்களில் 9 மீட்டரும், மாலேகு பகுதியில் 7 மீட்டரும் உயர்ந்ததாகத் தெரிவித்துள்ளது. ஆற்றின் குறுகலான பகுதியில் பாறை மற்றும் மண் கழிவுகள் தற்காலிகமாக அடைப்பை ஏற்படுத்தி, இயற்கையான 'நிலச்சரிவு அணைக்கட்டு' போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளதா என்பதை நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர். அங்கு தேங்கி நிற்கும் நீர் திடீரென உடைந்தால், அது இரண்டாம் கட்டப் பேரிடரை உருவாக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
26 08 2026





