source https://tamil.indianexpress.com/tamilnadu/tvk-mla-kanimozhi-responds-to-criticism-over-officials-seated-on-plastic-chairs-11852303
/indian-express-tamil/media/media_files/2026/05/19/kanimozhi-2026-05-19-19-32-18.jpg)
கோவை கவுண்டம் பாளையம் த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்ட், அரசு அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்திருந்த நிலையில் அவை சமூக வலைதளத்தில் வைரலானது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் முதலில், அரசு அதிகாரிகளை வரவழைத்து எம்.எல்.ஏ ஆலோசனை நடத்தியது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், அரசு அதிகாரிகள் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருக்க எம்.எல்.ஏ கனிமொழி ஒய்யாரமான சோஃபாவில் அமர்ந்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்தனர். அதுமட்டுமல்லாமல், அப்புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில், எம்.எல்.ஏ கனிமொழி இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
அதில், "நான் அதிகாரிகளை சந்தித்தது எனது வீடு அல்ல, எனது ஜோதிட அலுவலகம். பல ஆண்டுகளாக நான் ஜோதிடராக மக்களை சந்தித்து வந்த எனது பழைய ஜோதிட அலுவலகம். தற்போது, எனது புதிய எம்.எல்.ஏ அலுவலகத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அலுவலகத்தின் பெயிண்டிங் மற்றும் பிற பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, வழக்கம்போல நான் எனது பழைய ஜோதிட அலுவலகத்திலேயே மக்கள், அதிகாரிகள் மற்றும் என்னைச் சந்திக்க விரும்பும் அனைவரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து வருகிறேன். எனக்கு மக்கள் சேவையே முதன்மை. அலுவலகம் எந்த இடத்தில் இருந்தாலும், மக்களின் நலனுக்காக என் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும். புதிய எம்.எல்.ஏ அலுவலகம் முழுமையாக தயார் ஆனவுடன், மேலும் சிறப்பான சூழலில் அனைத்து மக்களையும் அங்கு சந்தித்து, உங்கள் தேவைகள் மற்றும் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க உறுதியாக உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.





