/indian-express-tamil/media/media_files/2026/08/17/independence-day-1-2026-08-17-10-31-24.webp)
எழுதியவர்: ஹம்சா கான்
டெல்லியில் நேற்று (ஆகஸ்ட் 16) நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சுதந்திர தின நிகழ்ச்சியை விமர்சித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சி ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்துள்ளதாகவும், இதுபோன்ற பாவத்தை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கடுமையாகச் சாடினார். ஆனால், அதற்கு ஒருநாள் முன்னதாகவே, அமித் ஷா சார்ந்துள்ள பாஜகவின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர், இதேபோன்ற சர்ச்சையில் சிக்கினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் திரைப்படப் பதிப்பு ஒலிபரப்பப்பட்டது. சனிக்கிழமை காலை வரலாற்றுச் சிறப்புமிக்க பாடி சௌபாட் பகுதியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் மதன் ரத்தோர், பல கட்சித் தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் இணைந்து தேசியக் கொடியை ஏற்றினார். ஆனால், வழக்கமாக ஒலிக்கப்படும் ‘வந்தே மாதரம்’ பாடலுக்குப் பதிலாக, 1952ஆம் ஆண்டு வெளியான ‘ஆனந்த் மத்’ திரைப்படத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய வந்தே மாதரம் ஒலிபெருக்கிகளில் ஒலித்தது.
‘ஆனந்த் மத்’ திரைப்படத்திற்கு, ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜியின் அதே பெயரிலான நாவல் அடிப்படையாக அமைந்துள்ளது. இந்த தவறுக்குப் பின்னர் மதன் ரத்தோர் மன்னிப்பு கேட்டார். இதற்கிடையில், நிகழ்ச்சியின்போது பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்த கட்சித் தொண்டர் காலித் பந்தூக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார்.
காங்கிரஸ் நிகழ்ச்சியிலும் குழப்பம்
இதற்கிடையில், பாடி சௌபாட் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற தனி தேசியக் கொடியேற்ற நிகழ்ச்சியும் சுமுகமாக நடைபெறவில்லை. ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்குப் பதிலாக முதலில் தேசிய கீதம் ஒலிக்கத் தொடங்கியது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ரா உள்ளிட்டோர் பார்த்துக்கொண்டிருக்க, சில வரிகள் ஒலித்த பின்னர் தேசிய கீதம் நிறுத்தப்பட்டது. அதன்பின் தலைவர்கள் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடத் தொடங்கினர்.
பாஜக நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சை குறித்து மதன் ரத்தோர் கூறுகையில், “இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு. நமது தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ வழக்கமான இசை வடிவில் ஒலிக்காமல், வேறுபட்ட இசை வடிவில் ஒலிக்கப்பட்டது. பாடல் வரிகள் அதேபோல இருந்தாலும், சேர்க்கப்பட்ட இசை பொருத்தமானதாக இல்லை. இந்த தொழில்நுட்பத் தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
ஒலி அமைப்பு நிறுவனத்திற்கு அபராதம்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஒலி அமைப்பு நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய தொகையை நிறுத்தி வைத்து ஜெய்ப்பூர் மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. ஜெய்ப்பூர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் நரேந்திர குமார் பன்சால், ஜெய்ப்பூரைச் சேர்ந்த அந்த நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதத்தில், 2026 ஆகஸ்ட் 15ஆம் தேதி பாடி சௌபாட் பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், அந்த நிறுவனத்தின் ஒலி அமைப்பில் ஒலிக்கப்பட்ட தேசியப் பாடலில் தவறு ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “சுதந்திர தினம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாளில் ஏற்பட்ட இந்தக் கடுமையான அலட்சியம், தேசிய விழாவின் கண்ணியத்தை களங்கப்படுத்தியுள்ளது” என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அலட்சியம் அல்லது தவறு எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறக்கூடாது என எச்சரித்துள்ள மாநகராட்சி, பாடி சௌபாட் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட மைக் மற்றும் ஒலி அமைப்புக்கான கட்டணத்தை வழங்காமல் இருப்பதாகவும், எதிர்காலத்தில் ஒப்பந்த விதிமுறைகளின்படி இதுபோன்ற அலட்சியங்களுக்கு கடுமையான தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
‘தேசப்பற்றுக்கான சான்றிதழ் வழங்குபவர்கள்’
ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில், ராஷ்டிரிய லோக்தாந்திரிக் கட்சி (RLP) தலைவரும் நாகௌர் மக்களவைத் தொகுதி எம்.பியுமான ஹனுமான் பெனிவால் கூறுகையில், “முதலில், பாஜக மாநிலத் தலைவர் நடத்திய நிகழ்ச்சியில் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ தவறான இசையில் ஒலிக்கப்பட்டது. அதன்பிறகு, நவல்கரில் பாஜக எம்எல்ஏவும் பொறுப்பு துணைக் கோட்டாட்சியரும் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றினர். பின்னர், பரத்பூரில் அமைச்சர் சுரேஷ் ராவத் தேசியக் கொடியை ஏற்றிய பிறகும் அதற்கு மரியாதை செலுத்தவில்லை.”
நாள் முழுவதும் தேசப்பற்றுக்கான சான்றிதழ்களை வழங்குபவர்களுக்கு, தேசியப் பாடலின் கண்ணியம், தேசியக் கொடியை ஏற்றுவதற்கான விதிமுறைகள் மற்றும் அதற்கு அளிக்க வேண்டிய அடிப்படை மரியாதை கூட தெரியாதா? தேசப்பற்று என்பது வெறும் பேச்சுகள், முழக்கங்கள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படக் கூடாது. தேசியக் கொடிக்கு அளிக்கும் மரியாதை ஒருவரின் செயல்பாடுகளிலும் வெளிப்பட வேண்டும்” என்றார்.
மேலும், “தேசப்பற்றை வெளிப்படுத்துவதற்கு முன், பாஜக தலைவர்கள் தேசியக் கொடி மற்றும் தேசியப் பாடலுக்கு மரியாதை செலுத்துவதற்கான விதிமுறைகளை குறைந்தபட்சம் கற்றுக்கொள்ள வேண்டும். தேசியக் கொடி எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானது அல்ல. அது கோடிக்கணக்கான இந்தியர்களின் பெருமை மற்றும் தியாகத்தின் அடையாளம். அதை அவமதிப்பது அல்லது மரியாதைக் குறைவாக நடத்துவது எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று ஹனுமான் பெனிவால் தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/india/amit-shah-jaipur-rajasthan-congress-bjp-vande-mataram-rajasthan-12266748





