திங்கள், 9 பிப்ரவரி, 2026

இந்திய நலனை விட கார்ப்பரேட் மீதே அக்கறை

 Thiruma about VCK

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் ஜி.என். பாளையம் பேட் பகுதியில் அமைந்துள்ள குழந்தை முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆன்மீக விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மத்திய அரசின் வர்த்தக கொள்கைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

மத்திய மந்திரி பியூஸ் கோயல் பதவி விலக வேண்டும் என்று விவசாயிகள் எழுப்பியுள்ள கோரிக்கைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்தார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசிய அவர், "அமெரிக்காவின் இந்த வர்த்தக ஒப்பந்தம் முற்றிலும் இந்தியாவுக்கு எதிரானது. அமெரிக்க அதிபர் டிரம்பின் விரித்த சதி வலையில் பிரதமர் மோடி பலியாகிவிட்டார்" என்று குற்றம் சாட்டினார்.

மேலும், இந்திய நாட்டின் நலனை விடவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை விடவும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தின் மீதே பிரதமர் அதிக அக்கறை காட்டுகிறார் என்றும், இந்த ஒப்பந்தத்தை இந்திய மக்கள் கடுமையாக எதிர்ப்பதால், பிரதமர் மோடி இதனை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திருமாவளவன், வரவிருக்கும் தேர்தல்களில் பாமக கூட்டணியில் இணைந்தால் விசிக ஏற்புமா என்பது குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். "இது ஒரு தனிப்பட்ட சமூகத்தின் மீதான காழ்ப்புணர்ச்சி கிடையாது. பாமக ஏற்கனவே எடுத்த 'சோசியல் என்ஜினியரிங்' (சமூகப் பொறியியல்) நிலைப்பாட்டின் காரணமாகவே விசிக தனது வெளிப்படையான முடிவை முன்பே அறிவித்துவிட்டது. அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை, இதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேச விரும்பவில்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

WhatsApp Image 2026-02-08 at 18.01.48

கூட்டணியில் விசிகவுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுமா என்ற கேள்விக்கு, அது குறித்து முறையான பேச்சுவார்த்தையின் போதுதான் தெரியவரும் எனப் பதிலளித்தார். அதேபோல், புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பது குறித்தும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுகமாக முடிவு செய்யப்படும் என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.

செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி



source https://tamil.indianexpress.com/india/pm-modi-cares-more-about-corporates-than-national-interest-thirumavalavan-charges-in-puducherry-11087692