செவ்வாய், 1 செப்டம்பர், 2026

மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்? எங்கும் நிற்காமல் 47 கி.மீ ஓடிய பேருந்து: டெல்லியில் பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

 source https://tamil.indianexpress.com/india/delhi-girl-gang-raped-on-bus-that-travelled-47-km-without-being-stopped-12460121


delsaks

மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்? எங்கும் நிற்காமல் 47 கி.மீ ஓடிய பேருந்து: டெல்லியில் பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Written by: Sakshi Chand

கிரேட்டர் நொய்டாவில் இருந்து டெல்லியின் காஷ்மீரி கேட் வரை சுமார் 43 கி.மீ தூரம் ஓடும் பேருந்தில் 17 வயது பள்ளிச் சிறுமி ஒருவர், ஓட்டுநர் மற்றும் நடத்துநரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் பேருந்திலிருந்து கீழே வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பேருந்தில் இருந்து கீழே தள்ளப்பட்ட சிறுமி, டெல்லி காஷ்மீரி கேட் காவல் நிலையத்தை அடைந்து தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கூறியுள்ளார். இதுகுறித்து வடக்கு டெல்லி காவல் துணை ஆணையர் (DCP) நிஹாரிகா பட் தெரிவிக்கையில், விவகாரத்தின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, புதிய குற்றவியல் சட்டங்களின்படி எல்லை வரம்புகளைப் பார்க்காமல் காவல் துறையினர் உடனடியாகச் சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை ஏற்பாடு செய்து வழக்குப் பதிவு செய்தனர் என்றார்.

மருத்துவப் பரிசோதனையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தடயவியல் நிபுணர்கள் அந்தப் பேருந்தை ஆய்வு செய்ததில், சிறுமியின் தலைமுடி இழைகள் பேருந்திற்குள் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளான குல்தீப் மற்றும் சந்தீப் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடந்தது என்ன?

ஆக.4 அன்று நடந்த இந்தச் சம்பவம், 2012-ல் உலகையே உலுக்கிய 'நிர்பயா' கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. 11-ம் வகுப்பு படிக்கும் அச்சிறுமி, தாயார் திட்டியதால் அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறி நொய்டாவின் செக்டார் 63-ல் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் செல்ல முயன்றுள்ளார். அப்போது பலத்த மழை பெய்துகொண்டிருந்த நிலையில், கிரேட்டர் நொய்டாவின் பாரி சவுக் (Pari Chowk) பகுதியில் அவர் இறங்கியுள்ளார். அங்கிருந்து உறவினர் வீடு சுமார் 25 கி.மீ தொலைவில் இருந்ததால், மாற்று வாகனத்தை தேடி காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நீல நிற ஸ்லீப்பர் பேருந்தின் நடத்துநர் சந்தீப், சிறுமியை செக்டார் 63-ல் இறக்கிவிடுவதாக ஆசைகாட்டி ஏற்றியுள்ளார். ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் பேச்சை நம்பி சிறுமியும் பேருந்தில் ஏறியுள்ளார்.

பழுதுபார்ப்புப் பணிகளுக்காக கிரேட்டர் நொய்டா பட்டறைக்கு (Workshop) கொண்டு செல்லப்பட்டிருந்த அந்தப் பேருந்தில் வேறு பயணிகள் யாரும் இல்ல. மாலை 5 மணிக்கு மேல் பட்டறையிலிருந்து பேருந்தை எடுத்துக்கொண்டு வடக்கு டெல்லி நோக்கி இருவரும் ஓட்டிச் சென்று உள்ளனர். பாரி சவுக் பகுதியில் இருந்து காஷ்மீரி கேட் வரை பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, சிறுமியை இருவரும் மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். எதிர்த்தால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இரவில் ஜன்னல்களில் அடர்ந்த திரைச்சீலைகள் மூடப்பட்டிருந்த அந்தப் பேருந்து, காவல்துறையின் எவ்வித சோதனையுமின்றி சுமார் 43 கி.மீ தூரம் வரை பயணித்துள்ளது.

காஷ்மீரி கேட் அருகே சிறுமியைத் தூக்கி வீசிவிட்டுச் சென்ற குற்றவாளிகள், பேருந்தை வடக்கு டெல்லியின் திமார்பூர் பகுதியில் நிறுத்தி இருந்தபோது கைது செய்யப்பட்டனர். சிறுமி ஆட்டோ மூலம் காவல் நிலையத்தை அடைந்து புகார் அளித்த பின்னரே இந்த அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.