சனி, 29 ஆகஸ்ட், 2026

நேபாள வெள்ளப் பேரிடர்: 600-ஐ நெருங்கியது பலி எண்ணிக்கை; 320 இந்தியர்களைக் காணவில்லை - வெளியுறவு அமைச்சகம்

 

Written by: Shubhajit Roy, Divya A, Yubaraj Ghimire

Express in Nepal

நேபாளத்தின் பல மாவட்டங்களை உலுக்கிய கொடூரமான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 நாட்களான நிலையில், வியாழக்கிழமை 290 ஆக இருந்த காணாமல் போன இந்தியர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நிலவரப்படி குறைந்தது 320 ஆக உயர்ந்துள்ளது என்றும், மேலும் 100-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரைக் காணவில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.

போட்டேகோஷி நதிப்பகுதியில் நீர்மட்டம் உயர்ந்து மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் நிலவும் சூழலில், மீட்புப் பணிகள் 3-வது நாளாகத் தொடர்கின்றன. மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டதால், மொத்த பலி எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 579 ஆக உயர்ந்தது. 517 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உட்பட குறைந்தது 1,924 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா–நேபாள எல்லைப் பகுதியான சீனாவின் எல்லைக்குள் சிக்கித் தவித்த சுமார் 400 இந்தியக் குடிமக்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இவர்கள் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றவர்கள் ஆவர். மேலும், சீனப் பகுதியில் சிக்கியிருந்த 149 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாள எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை பிற்பகுதியில், இந்தியா 10 டன் நிவாரணப் பொருட்களுடன் கூடிய 3-வது தவணை உதவியை அனுப்பியது. அத்துடன் 11 மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழுவும், சுரங்கப் பாதை மீட்புப் பணிகளை ஆய்வு செய்வதற்கான ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவும் (recce team) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 'X' தளப் பதிவில், 10 டன் மனிதாபிமான உதவிகளுடன் 3-வது விமானம் காத்மாண்டுவிற்குப் புறப்பட்டுள்ளது. இந்த உதவிகளில் போர்ட்டபிள் ஜெனரேட்டர் செட்டுகள், சுயப் பாதுகாப்புப் பொருட்கள் (dignity kits), உணவுப் பொட்டலங்கள் மற்றும் குடிநீரைச் சுத்திகரிக்கும் மாத்திரைகள் ஆகியவை அடங்கும். மேலும், 11 பேர் கொண்ட மருத்துவர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுரங்கப் பாதை மீட்புப் பணிக்கான ஆய்வுக் குழுவும் இதில் சென்றுள்ளனர். நேபாளத்தின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாகப் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், நேபாளப் பேரிடரைத் தொடர்ந்து இந்தியா இதுவரை வழங்கிய மனிதாபிமான உதவிகளை நீங்க அறிவீர்கள். மேலும் பல உதவிகள் தயாராக உள்ளன. 2 விமானங்கள் ஏற்கனவே புறப்பட்டுவிட்டன, 3-வது விமானம் இன்று மாலை புறப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நேபாளத்தின் கோரிக்கையை ஏற்று சுரங்கப் பாதை மீட்புக் குழுவை அனுப்பத் தயாராகி வருகிறோம். அதற்காக, தேவையான உபகரணங்களை ஆய்வு செய்ய முதற்கட்ட ஆய்வுக் குழு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மருத்துவக் குழுவும் செல்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாகப் போக்குவரத்தை மீட்டெடுக்க பெய்லி பாலங்களையும் (Bailey bridges) அதற்கான தொழில்நுட்பக் குழுக்களையும் வழங்க முன்வந்துள்ளோம். ஏற்கனவே ஒரு பெய்லி பாலம் நேபாளத்தில் உள்ளது, அதனை உடனடியாகப் பயன்படுத்த முடியும்.


மீட்புப் பணிகளுக்கு உதவ தேசிய பேரிடர் மீட்புப் படையை (NDRF) அவற்றின் உபகரணங்களுடன் அனுப்ப நேபாள அதிகாரிகளுக்குத் திட்டவட்டமான பரிந்துரையை வழங்கியுள்ளோம். இதுதொடர்பாக நேபாள அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். நேபாள அதிகாரிகளுக்குத் தேவைப்படும் பிற உதவிகளை வழங்கவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். இதுவரை மீட்கப்பட்டவர்களைத் தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை மதியம், மீட்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் புது டெல்லி வந்தடைந்தனர். அவர்களை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் வரவேற்றார். இதுதொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில், நேபாள வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 யாத்ரீகர்களை வரவேற்றேன். அவர்களின் அனுபவங்களை நேரடியாகக் கேட்டறிந்து நெகிழ்ந்தேன். இந்த மீட்பு நடவடிக்கைக்காக நேபாள ராணுவத்திற்கும் அந்நாட்டு அரசிற்கும் எனது நன்றிகள். இவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப உதவிய இந்திய தூதரகத்திற்குப் பாராட்டுகள் எனக் குறிப்பிட்டுள்ளார். நேபாள அதிகாரிகளின் தகவல்படி, வெள்ளிக்கிழமை மதியம் வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 85 இந்தியர்கள், 16 சீனர்கள், 9 தென் கொரியர்கள், அமெரிக்கா, இத்தாலியைச் சேர்ந்த தலா இருவர் உட்பட மொத்தம் 171 வெளிநாட்டினர் மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த இடங்களில் நீர்மட்டம் மீண்டும் உயர்வதால், அப்பகுதியில் மற்றொரு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்து உள்ளதாக நேபாளத்தின் தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRMA) தெரிவித்துள்ளது. புதன்கிழமை திடீர் வெள்ளம் ஏற்பட்ட அதே இடத்தில் சேற்றுடன் கூடிய நீரின் அளவு அதிகரித்துள்ளது; இதனால் மேலும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று NDRRMA எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், நேபாளத்தில் உள்ள சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ நதிகள் இணையும் பகுதிக்கு அருகே பெரிய தடுப்பு ஏரி (barrier lake) உருவாகியுள்ளதாகத் தெரிவித்து, சீனா வியாழக்கிழமை இரவு ‘நிலை-IV’ (Level-IV) எச்சரிக்கையை விடுத்தது. (சீனாவின் இயற்கை பேரிடர் அவசரகால அமைப்பில் நிலை-I மிக உயர்ந்தது, நிலை-IV மிகக் குறைந்தது ஆகும்).

புதிதாக உருவாகியுள்ள தடுப்பு ஏரியால் எல்லைப் பகுதியான போட்டேகோஷி நதியின் கீழ்நிலைப் பகுதிகளில் புதிய வெள்ள அபாயம் உள்ளதாக நேபாளத்தின் நீரியல் மற்றும் வானிலை ஆய்வுத் துறையும் வியாழக்கிழமை எச்சரித்திருந்தது. இந்த ஏரியில் சுமார் 20 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கியுள்ளதாகவும், அடுத்த மூன்று நாட்களில் மேலும் 30 லட்சம் கன மீட்டர் நீர் வர வாய்ப்புள்ளதால் ஏரி உடையும் அபாயம் உள்ளதாகவும் சீன அதிகாரிகள் நேபாளத்திற்குத் தெரிவித்தனர்.

திபெத்தில் உற்பத்தியாகி நேபாளத்தின் போட்டேகோஷி நதி அமைப்பின் ஒரு பகுதியாகப் பாயும் சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த ஏரி உருவானது. எனினும், ஏரி நிரம்பி வழிவதால் ஏற்படும் ஆபத்து கட்டுக்குள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மீட்புப் பணிகளை நேபாளமும் சீனாவும் வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கின. நேபாளத்தில் இதுவரை சுமார் 1,500 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட எல்லை மாவட்டமான ரசுவாவில் உள்ள நீர்மின் திட்டப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சுமார் 360 பேரும் அடங்குவர்.

இதுகுறித்து நேபாள ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தெற்கு நோக்கி நேபாளத்தை (ரசுவா) நோக்கி தண்ணீர் பெருக்கெடுத்து வருவது குறித்து எங்களுக்கு எச்சரிக்கப்பட்டது. ஆனால், விரிவடைந்துள்ள ஆற்றுப்படுகைகள் உயிர் மற்றும் உடைமைச் சேதம் இன்றி கூடுதல் நீரோட்டத்தைத் தாங்கிக் கொள்ளும் எனக் கருதியதால், நாங்கள் எங்களது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து நடத்தினோம் என்றார்.


source https://tamil.indianexpress.com/international/express-in-nepal-toll-nears-600-mea-says-320-indians-100-of-indian-origin-missing-12449438\