பெயர், சின்னம் தற்காலிக முடக்கம்; புதிய பெயர் தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
/indian-express-tamil/media/media_files/2026/09/18/trinamool-congress-2026-09-18-00-09-22.jpeg)
மம்தா பானர்ஜி மற்றும் ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான பிரிவினர் புதிய பெயர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். Photograph: (Express photo by Partha Paul)
அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் பூசலை முறைப்படி அங்கீகரித்துள்ள தேர்தல் ஆணையம், வியாழக்கிழமை இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதில் கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னத்தை முடக்கியுள்ள தேர்தல் ஆணையம், இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும் வரை மம்தா பானர்ஜி மற்றும் அரூப் ராய் தலைமையிலான இரு போட்டிப் பிரிவினரையும் புதிய பெயர்கள் மற்றும் சின்னங்களைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கு அக்டோபர் 9-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு வந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் இரு அணிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
"கைவசம் உள்ள தகவல்கள் அனைத்தையும் பரிசீலித்த பிறகு... அகில இந்திய திரிணமூல் காங்கிரஸில் இரு போட்டி அமைப்புகள் உள்ளன என்றும், ஒன்றிற்கு மம்தா பானர்ஜியும், மற்றொன்றிற்கு அரூப் ராயும் தலைமை தாங்குகின்றனர் என்றும், ஒவ்வொரு குழுவும் தங்களையே உண்மையான கட்சி என்று உரிமை கோருவதால், 1968-ம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) உத்தரவின் பத்தி 15-ன் கீழ் ஆணையம் இதில் விரிவான விசாரணை நடத்தி தீர்மானிக்க வேண்டியுள்ளது" என்று தேர்தல் ஆணைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்குள் ஏற்படும் பூசல்களை தேர்தல் ஆணையம் சின்னங்கள் உத்தரவின் பத்தி 15-ன் கீழ் தான் தீர்மானிக்கிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், இடைத்தேர்தலுக்கு முன்பாக இந்தப் பிரச்னை தொடர்பான முழுமையான விசாரணையை முடிப்பதற்கு போதிய அவகாசம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், "இரு போட்டி அணிகளையும் சமநிலையில் வைக்கவும், அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கவும், கடந்த கால நடைமுறைகளைப் பின்பற்றி", எந்தவொரு குழுவும் அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற பெயரையோ அல்லது கட்சியின் "பூக்கள் மற்றும் புல்" (Flowers and Grass) சின்னத்தையோ பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இரு குழுக்களும் தங்களின் சொந்த அமைப்புகளுக்குத் தேவையான பெயர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்; விருப்பப்பட்டால் தாய் கட்சியான 'அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்' என்பதன் தொடர்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தற்போதைய இடைத்தேர்த நோக்கங்களுக்காகத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட இலவசச் சின்னங்களின் பட்டியலிலிருந்து இரு குழுக்களுக்கும் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்படும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் தங்கள் விருப்பமான பெயர்கள் மற்றும் சின்னங்களை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கட்சியின் அமைப்பு ரீதியான கட்டுப்பாடு, பெயர் மற்றும் சின்னத்திற்கான உரிமைப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆணையம் திரிணமூல் காங்கிரஸின் இரு பிரிவினரையும் சந்தித்து, அதிருப்தித் தலைவரான ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான அணியிடம் கூடுதல் ஆவணங்களைக் கோரியது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன் நடைபெற்ற இந்த விசாரணையில், மம்தா பானர்ஜி தலைமையிலான பிரிவு சார்பில் மாநிலங்களவை எம்.பி டெரெக் ஓ பிரையன் மற்றும் நான்கு பேரும், ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான பிரிவு சார்பில் அவரே நேரில் ஆஜராகியும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.





