/indian-express-tamil/media/media_files/2026/05/31/building-plan-approval-chennai-gcc-building-approval-27-days-2026-05-31-09-20-10.jpg)
பில்டிங் அப்ரூவலில் இனி லஞ்சம், லேட் எல்லாம் கிடையாது! களமிறங்கும் AI டெக்னாலஜி
தமிழகத்தில், குறிப்பாக நகர்ப் புறங்களில் கட்டிடத் திட்ட (Building Plan) அனுமதிகளை விரைவாக வழங்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய மென்பொருளை அரசு உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது;
அரசின் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு, எவ்வித தாமதமும் இன்றி அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதிய மென்பொருள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த புதிய அமைப்பு செயல்பாட்டுக்கு வந்த பிறகு, கட்டிட அனுமதி விண்ணப்பங்களை தானியங்கி முறையில் விரைவாக பரிசீலித்து, குறைந்த காலத்திலேயே அனுமதி வழங்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நகர்ப்புறங்களில் கட்டிட அனுமதி பெற பொதுமக்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 நகரங்களுக்கு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையங்கள்
இதனுடன், ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையங்களை (Urban Development Authorities) விரைவாக அமைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நகரங்களுக்கு 2021-ஆம் ஆண்டிலேயே நகர்ப்புற மேம்பாட்டு ஆணையங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) போன்று அவை இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது அவற்றை விரைவில் அமைத்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டிய பழைய குடியிருப்புகள் பல இடங்களில் சேதமடைந்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் சேதமடைந்த சுமார் 28,000 வீடுகளை புதுப்பித்தல் மற்றும் தேவையான இடங்களில் மறுகட்டுமானம் செய்வதற்கான பணிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலம் பழைய குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான வீட்டு வசதி ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/ai-building-plan-approval-tamil-nadu-cmda-fast-track-building-approval-12200809





