/indian-express-tamil/media/media_files/2026/08/21/rahul-gandhi-dharna-cjp-march-pellet-injury-delhi-police-fir-refusal-2026-08-21-13-37-06.jpg)
ஆசாத் ரெஹ்மான்
நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த ஜூலை 20-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பெல்லட் குண்டு பாய்ந்து காயமடைந்த மாணவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை காவல் நிலையத்துக்குச் சென்றார். ஆனால், புகார் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய போலீசார் மறுத்ததாக கூறி, பின்னர் டெல்லி துணை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டார்.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரி, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தலைமையில் ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியின்போது பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவத்தில் டெல்லியின் நஜஃப்கர் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவர் சாஹில் லோச்சவ் வலது கண்ணில் பெல்லட் குண்டு பாய்ந்து காயமடைந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், இன்னும் ஒரு பெல்லட் துண்டு அவரது கண்ணுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/08/21/rahul-dharna-2026-08-21-13-43-40.jpg)
இந்த நிலையில், சாஹில் லோச்சவுடன் ராகுல் காந்தி முதலில் மந்திர் மார்க் காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்கு புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இருவரும் நாடாளுமன்ற வீதியில் உள்ள மத்திய டெல்லி துணை காவல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு வழக்குப் பதிவு செய்யப்படும் வரை திரும்பப் போவதில்லை என்று கூறி ராகுல் காந்தி தர்ணாவில் அமர்ந்தார்.
“ராகுல் காந்தி முதலில் மந்திர் மார்க் காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்கு வழக்குப் பதிவு செய்யப்படாததால் மத்திய டெல்லி டிசிபியைச் சந்திக்கச் சென்றார். வழக்குப் பதிவு செய்யப்படும் வரை அவர் திரும்ப மாட்டார்” என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
சாஹில் லோச்சவ் ஆகஸ்ட் 14-ம் தேதி டெல்லி போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததாகவும், ஆனால் விசாரணை அதிகாரி யார் என்ற தகவல் அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.
“ஆகஸ்ட் 17-ம் தேதி மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் அவர் மீண்டும் தொடர்பு கொண்டபோதும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும், புகார் பெற்றதற்கான ஒப்புதலும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இது சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய குற்றம் என்பதால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் டெல்லி போலீஸ் அதைச் செய்யவில்லை” என்று காங்கிரஸ் தரப்பு குற்றம்சாட்டியது.
இதற்கிடையே, ஜூலை 20-ம் தேதி நடந்த பேரணியில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் ஏற்கெனவே கவனம் பெற்றுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) நடத்திய விசாரணையில், ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் வீரர் ஒருவர் பெல்லட் துப்பாக்கியால் 7 முறை சுட்டதாகவும், அதில் 5 குண்டுகள் போராட்டக்காரர்கள் மீது பட்டதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு செய்தி வெளியிட்டிருந்தது.
வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்வைத்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது போலீஸ் நடவடிக்கை அதிகமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். டெல்லி போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகள் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அமித் ஷாவை எதிர்க்கட்சிகள் நேரடியாக குறிவைத்து வருகின்றன.
இந்த விவகாரம் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் தொடர்ந்து அமளி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-dharna-cjp-march-pellet-injury-delhi-police-fir-refusal-12402003





