10 04 2026
தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. தபால் வாக்கு அளிக்க விண்ணப்பித்தவர்களிடம் வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரில் சென்று வாக்குகளைப் பெறுகின்றனர். பாதுகாப்புப் பணியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தச் சிறப்புத் தபால் வாக்குப்பதிவு மூன்று நாட்களுக்கு நடைபெறும். தமிழ்நாட்டில் ஏப்.11 முதல் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் (PwD) மற்றும் அத்தியாவசியப் பணிகளில் உள்ளவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. தகுதியுள்ள வாக்காளர்கள் படிவம் 12D மூலம் விண்ணப்பித்து, தேர்தல் ஆணையத்தின் மூலம் வீட்டிலிருந்தே அல்லது பிரத்யேக மையங்களில் (PVC) வாக்களிக்கலாம். ஏப்ரல் 18, 20 தேதிகளில் காவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்
தமிழகம் முழுவதும் வாக்காளர் தகவல் சீட்டுகள் (பூத் சிலிப்) வழங்கும் பணி இன்று(ஏப். 12) தொடங்கியது. வாக்காளர் தகவல் சீட்டு அச்சிடப்பட்டு, இன்று முதல் வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்க விரிவான விழிப்புணா்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சோ்த்தவர்களில் பெரும்பாலானோருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதில் வரிசை எண் மற்றும் பாகம் எண் வழக்கத்தைவிட இம்முறை பெரிதாக அச்சிடப்பட்டுள்ளது. அதனுடன் க்யூ ஆர் குறியீடும் இடம்பெற்றிருக்கும். வாக்குப் பதிவுக்கு 5 நாள்களுக்கு முன்பாக 17-ம் தேதிக்கு முன்பாக அனைத்து வாக்காளர்களுக்கும் தகவல் சீட்டுகளை விநியோகித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஏப்.18ல் மோடி பரப்புரை
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.கவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான் உள்ளிட்டோர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவையில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-assembly-election-2026-live-updates-tvk-vijay-kanyakumari-campaign-premalatha-vijayakanth-thirumavalavan-pm-modi-11717161





