தமிழகத்தின் புதிய தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனா அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, முந்தைய ஆட்சிக் காலத்தில் சுமார் 10.50 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், நிதி நிர்வாகத்தில் என்ன நடந்துள்ளது என்பதைத் தாங்கள் முழுமையாக ஆராய்ந்து வருவதாகவும், போதிய கால அவகாசம் கொடுத்தால் அனைத்துப் பணிகளும் சரிசெய்யப்படும் என்றும் அவர் பேசியிருந்தார்.
அமைச்சரின் இந்த விமர்சனத்திற்குத் தற்போது முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கம் வாயிலாகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தொழில்துறை அமைச்சர், மாநிலத்தின் நிதி உள்கட்டமைப்பு குறித்த எவ்வித அடிப்படை அறிவும் இல்லாமல் போகிற போக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் உலவும் வதந்திகளை மூலதனமாகக் கொண்டு, அரசியல் உள்நோக்கத்தோடு கழக அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை உருவாக்க அவர் முயல்கிறார். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது" என்று சாடியுள்ளார்.
மேலும், "அரசு நிர்வாகத்தில் போதிய அனுபவம் இல்லாத காரணத்தால், மக்களைத் திசைதிருப்பும் நோக்கில் அமைச்சர் கீர்த்தனா இத்தகைய முதிர்ச்சியற்ற கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். நிர்வாக அனுபவம் வாய்ந்த தற்போதைய நிதி அமைச்சர் செங்கோட்டையனும், நிதித்துறைச் செயலாளரும் தலையிட்டு, தொழில்துறை அமைச்சரின் இத்தகைய கற்பனையான பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா? அல்லது இதுபோன்ற மலிவான அரசியல் பிரச்சாரங்களுக்கு அவர்களும் உடந்தையாக இருக்கப் போகிறார்களா?" என்றும் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/thangam-thennarasu-condemns-industry-minister-keerthana-over-debt-allegations-11845676





