நான்கு வீரர்கள் கொல்லப்பட்ட கராச்சி சம்பவத்தில் இந்தியாவின் தலையீடு இருப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுகளை இந்தியா வன்மையாக நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்த ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "கராச்சியில் சமீபத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பாகிஸ்தானின் அறிக்கைகளைப் பார்த்தோம். நாங்கள் அவற்றை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்" என்றார்.
மற்றவர்கள் மீது விரல் நீட்டுவதற்குப் பதிலாக, பாகிஸ்தான் தன்னை உள்நோக்கிப் பார்ப்பது நல்லது. தனது சொந்தப் பகுதியில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளுக்கு எதிராக நம்பகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் பயங்கரவாதத்தை அரசு கொள்கையின் ஒரு கருவியாகச் சார்ந்திருக்கும் அதன் போக்கிலிருந்து விடுபட வேண்டும்” என்று ஜெய்ஸ்வால் மேலும் கூறினார்.
இஸ்லாமாபாத்திலிருந்து வந்த அறிக்கைகளின்படி, சனிக்கிழமை இரவு கராச்சியில் உள்ள சிந்து ரேஞ்சர்ஸ் வளாகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய துணிச்சலான தாக்குதலை முறியடித்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர், ஆறு பயங்கரவாதிகளைக் கொன்றதுடன் மற்றொரு பயங்கரவாதியை உயிரோடு பிடித்தனர்.
இந்தத் தாக்குதலில் 4 துணை ராணுவப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இது 2024 அக்டோபருக்குப் பிறகு அந்நகரத்தின் முதல் பெரிய பயங்கரவாதத் தாக்குதலாகும். பாகிஸ்தான் அரசாங்க அமைப்பிலுள்ள சில தரப்பினர் இந்தத் தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் எனக் குற்றம் சாட்டினர். அவர்களில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியும் இந்தத் தாக்குதலில் இந்தியத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
பாதுகாப்புத் துறை சார்ந்த ஒருவரை மேற்கோள் காட்டி பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) அமைப்பிலிருந்து பிரிந்த ஜமாத்-உல்-அஹ்ரார் என்ற குழுவைச் சேர்ந்தவர்கள், கராச்சியின் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட குலிஸ்தான்-இ-ஜவ்ஹர் பகுதியில் உள்ள சிந்து ரேஞ்சர்ஸ் பிரிவின் பிட்டாய் பிரிவு தலைமையகத்திற்குள் இரவு 8.30 மணியளவில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.





