அணுசக்தி விவகாரத்தில் டிரம்பின் கறார் முடிவு
/indian-express-tamil/media/media_files/2026/04/28/trump-2026-04-28-08-38-53.jpg)
ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பான புதிய முன்மொழிவை அமெரிக்காவிற்கு ஈரான் வழங்கியதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஈரான் - அமெரிக்கா இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இதன் பின்னர் எந்தவொரு நேரடி பேச்சுவார்த்தையும் நடைபெறாது என்றும் எதுவாக இருந்தாலும் ஈரான் தொலைபேசி வாயிலாக அமெரிக்காவை அழைக்கலாம் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த கவலைகளுக்குத் தீர்வு காணாததால், அந்த நாடு அளித்த முன்மொழிவால் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி அடைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். மேலும், டிரம்பிற்கு இந்த முன்மொழிவு பிடிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தகவலின் படி, தற்போது நடைபெற்று வரும் மோதல்கள் முடிவுக்கு வரும் வரையிலும், வளைகுடா பகுதியில் கப்பல் போக்குவரத்து தொடர்பான சர்ச்சைகள் தீர்க்கப்படும் வரையிலும், அணுசக்தித் திட்டம் குறித்த விவாதங்களை ஒத்திவைக்க அந்த முன்மொழிவு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அணுசக்தி விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியக உள்ளது.
எந்த பேச்சுவார்த்தை என்றாலும் அதில் ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் முக்கிய விஷயமாக உள்ளது என்றும் அவற்றை தாமதப்படுத்த முடியாது என்றும் அமெரிக்கா மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானின் முன்மொழிவு குறித்து தனது மூத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தான் அளித்த தகவலின் படி, இரு தரப்பிற்கும் இடையிலான பிரச்சனைகளை சரி செய்ய முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரின் இஸ்லாமாபாத் பயணத்தை டிரம்ப் ரத்து செய்ததை அடுத்து பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை பலவீனமடைந்துள்ளது.
இந்தப் பயணம் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது ரத்து செய்யப்பட்டது தற்போதைய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஈரான் - அமெரிக்கா மோதலால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
27 4 2026





