/indian-express-tamil/media/media_files/2026/02/17/congress-2026-02-17-17-11-25.jpg)
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி அரசை கண்டித்து, மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த மாதம் 31-ஆம் தேதி முதல் தொடர் பாதயாத்திரை நடைபெற்றது. தொகுதி வாரியாக நடைபெற்ற இந்தப் பாதயாத்திரையில், காங்கிரஸ் கட்சியினர் திரளாகப் பங்கேற்று அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சனம் செய்ததோடு, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர்.
இந்த பாதயாத்திரையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் வருகை தரவில்லை. கடந்த 2-ஆம் தேதியுடன் முதற்கட்ட பாதயாத்திரை நிறைவடைந்த நிலையில், அதன் நிறைவு நாள் ஊர்வலம் இன்று காமராஜர் சாலை மற்றும் நேரு வீதி சந்திப்பு வரை எழுச்சியுடன் நடைபெற்றது.
இன்று காலை தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர். அங்கிருந்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் எம்.பி. தலைமையில் பாதயாத்திரை தொடங்கியது. வழியில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், தொண்டர்களுடன் நடைபயணத்தைத் தொடர்ந்தார். இந்த ஊர்வலத்தில் இளைஞர் காங்கிரஸ், சேவா தளம் மற்றும் மகளிர் காங்கிரசார் சீருடை அணிந்து கட்சி கொடிகளை ஏந்தி அணிவகுத்து வந்தனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/02/17/kc-venugopal-2026-02-17-17-12-46.jpg)
மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்தியநாதன், சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்றனர். மேலும், முன்னாள் எம்.எல்.ஏக்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிப் பிரிவின் தலைவர்களும் தொண்டர்களும் பிரம்மாண்டமான பேனர்களுடன் கலந்துகொண்டனர். மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மேளதாள முழக்கங்களுடன் உற்சாகமாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தின்போது, ஆளும் அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நேரு வீதி - மிஷன் வீதி சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பாதயாத்திரையை நிறைவு செய்து கே.சி. வேணுகோபால் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "புதுவையைச் சிறந்த மாநிலமாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார், ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் எதையும் செய்யவில்லை. புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை; வேலைவாய்ப்பு இல்லாததால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரட்டை எஞ்சின் அரசு என்று கூறிக்கொண்டு மக்களுக்கு அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை" என்று குற்றம் சாட்டினார்.
மேலும், புதுவையில் கடந்த நான்கு ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்த போலி மருந்து தொழிற்சாலைக்கு அரசு உடந்தையாக இருந்ததாகவும், இந்தியாவிலேயே ஊழலின் மையமாகப் புதுவையை இந்த அரசு மாற்றிவிட்டதாகவும் அவர் சாடினார். வரும் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும், காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
source https://tamil.indianexpress.com/india/congress-mega-padyatra-in-puducherry-against-nr-congress-bjp-govt-led-by-kc-venugopal-mp-11122765





