/indian-express-tamil/media/media_files/2026/03/28/india-russia-defence-deal-indian-air-force-modernization-rajnath-singh-indian-army-new-weapons-2026-s-400-missile-system-india-2026-03-28-08-21-10.jpg)
India Russia Defence |Deal | Indian Air Force Modernization | S 400 Missile System India
எழுதியவர்: அமிர்தா நாயக் தத்தா
இந்தியாவின் வான்வழிப் பாதுகாப்பு மற்றும் ராணுவக் கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC), சுமார் ரூ.2.38 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை வாங்க வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மிக முக்கிய அம்சமாக, ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக ஐந்து எஸ்-400 நீண்ட தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன. ஏற்கனவே 'ஆபரேஷன் சிந்து' நிகழ்வின் போது எஸ்-400 ஏவுகணைகள் தங்களின் அபாரமான திறமையை நிரூபித்ததைத் தொடர்ந்து, மேலும் ஐந்து அமைப்புகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
தொலைதூரத்திலிருந்து வரும் எதிரி நாட்டு ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை முன்கூட்டியே கண்டறிந்து அழிக்கும் திறன் இந்த S-400 அமைப்பிற்கு உண்டு.
2018-ல் போடப்பட்ட ஒப்பந்தப்படி, ஏற்கனவே 3 ஏவுகணை தொகுப்புகள் இந்தியாவிடம் உள்ளன. அவை பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகுப்புகள் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப்படையை நவீனப்படுத்தும் புதிய விமானங்கள்
இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக விளங்கும் பழைய ஏஎன்-32 மற்றும் ஐஎல்-76 ரகப் போக்குவரத்து விமானங்களுக்குப் பதிலாக, புதிய இடைநிலை ரகப் போக்குவரத்து விமானங்களை (Medium Transport Aircraft) வாங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இது ராணுவ வீரர்களையும் தளவாடங்களையும் விரைவாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்ல உதவும்.
மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) உருவாக்கப்படும் ஆளில்லாத் தாக்குதல் போர் விமானங்களை (Remotely Piloted Strike Aircraft) வாங்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த அதிநவீன விமானங்கள் எதிரி நாடுகளின் எல்லைக்குள் ரகசியமாகக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், துல்லியமான தாக்குதல்களை நடத்தவும் உதவும். இது செயல்பாட்டிற்கு வர சுமார் 7 முதல் 8 ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சுகோய்-30 போர் விமானங்களின் எஞ்சின்களைப் புதுப்பிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது அந்த விமானங்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்.
தரைப்படை மற்றும் கடலோரக் காவல் படைக்கான புதிய வரவுகள்
தரைப்படையைப் பொறுத்தவரை, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனுஷ் பீரங்கி அமைப்புகள் மற்றும் டாங்கிகளைத் துளைக்கும் அதிநவீன வெடிமருந்துகள் வாங்கப்பட உள்ளன. இவை கரடுமுரடான நிலப்பரப்புகளிலும் நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை.
கடலோரப் பாதுகாப்பை உறுதி செய்ய, கடலோரக் காவல் படைக்கு அதிக எடை கொண்ட 'ஏர் குஷன்' (Air Cushion) வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. இவை அதிவேக ரோந்துப் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்த கவுன்சில், பெரிய அளவிலான பாதுகாப்பு கொள்முதல்களுக்கு முதற்கட்ட ஒப்புதல் அளிக்கும் முக்கிய அமைப்பாகும். 2025-26 நிதியாண்டில் மட்டும் இதுவரை ரூபாய் 6.73 லட்சம் கோடி மதிப்பிலான 55 முன்மொழிவுகளுக்கு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய பாதுகாப்பு வரலாற்றில் ஒரே நிதியாண்டில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
கூடுதலாக, தரைப்படைக்காக 'துங்குஸ்கா' வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ரஷ்யாவின் ரோசோபோரோன் எக்ஸ்போர்ட் நிறுவனத்திடமிருந்து ரூபாய் 445 கோடியில் வாங்கவும், கடற்படையின் பி8ஐ ரக விமானங்களைப் உள்நாட்டிலேயே பராமரிக்க ரூபாய் 413 கோடியில் போயிங் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது
இது 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, இந்தியாவின் இறையாண்மையை வலுப்படுத்தும் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/india/india-russia-defence-deal-indian-air-force-modernization-rajnath-singh-indian-army-new-weapons-2026-s-400-missile-system-india-11428534





