வெள்ளி, 17 ஏப்ரல், 2026

10 நாட்கள் இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம்;

 

10 நாட்கள் இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம்;   16 4 2026

லெபனான்-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 10 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் அமுலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் (Joseph Aoun), இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோருடன் நடத்திய உரையாடல்களுக்கு பிறகு இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் இதுகுறித்து பதிவிட்ட டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், 10 நாள் போர் நிறுத்தத்தை இன்று மாலை 5 மணி (EST) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நிலையான அமைதியை உருவாக்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டாலும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் நேரடியாக பேச லெபனான் அதிபர் ஜோசப் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் நடத்திய ஆலோசனையின் போது, லெபனானில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களும் அழிவுகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், போர்நிறுத்தம் முழுமையாக அமுலுக்கு வருவதற்கு முன் நெதன்யாகுவுடன் நேரடியாகப் பேசுவது முறையாக இருக்காது என்று ஜோசப் அவ்ன் விளக்கியுள்ளார். லெபனானின் இந்த நிலைப்பாட்டை வாஷிங்டன் புரிந்துகொள்வதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லெபனான் அரசுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்க லெபனான் அரசு முயன்று வரும் சூழலில், கடந்த மார்ச் 2-ம் தேதி ஹிஸ்புல்லாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு பெய்ரூட் தடை விதித்தது. இஸ்ரேல்-லெபனான் தூதர்கள் சமீபத்தில் வாஷிங்டனில் சந்தித்துப் பேசினர். 1948-ல் இஸ்ரேல் உருவானது முதல் இரு நாடுகளும் போரில்தான் உள்ளன. இந்நிலையில், இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாகப் பேசுவது முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும். ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன்னதாகப் போர்நிறுத்தம் அவசியம் என்பதில் லெபனான் உறுதியாக உள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், தெற்கு லெபனானில் போர் தீவிரமாக உள்ளது. குறிப்பாக ஹிஸ்புல்லாவின் கோட்டையான பிண்ட் ஜபெய்ல் பகுதியை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. லிட்டானி ஆற்றின் குறுக்கே இருந்த கடைசி பாலத்தையும் இஸ்ரேல் தகர்த்து உள்ளதால், தெற்கு லெபனான் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 2,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; 12 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளது. ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேலில் 2 பொதுமக்கள் மற்றும் 13 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

லிட்டானி ஆற்றுக்கு தெற்கே உள்ள பகுதியிலிருந்து ஹிஸ்புல்லாக்களை வெளியேற்றி, அங்கு ஒரு "தடை செய்யப்பட்ட மண்டலத்தை" (No-go zone) உருவாக்க இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்த 10 நாள் போர்நிறுத்தம் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/international/trump-announces-10-day-lebanon-israel-ceasefire-after-talks-with-aoun-netanyahu-11734599