இஸ்ரேல் ஏவுகணை தடுக்கப்பட்டது: ஏ ஜி எம்-58 பி -ஐ சுட்டு வீழ்த்திய ஈரான் 6 4 2026
/indian-express-tamil/media/media_files/2026/04/06/screenshot-2026-04-06-162126-2026-04-06-16-21-58.jpg)
மேற்கு ஆசியாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான காலக்கெடு நெருங்குவதால் அமெரிக்காவும் ஈரானும் மிகக் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்து வருகின்றன. இந்த மோதல் போக்கு உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாளைக்குள் அமைதி உடன்படிக்கை எட்டப்படாவிட்டால், ஈரானில் உள்ள அனைத்தையும் தகர்த்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாகத் திறந்து விட வேண்டும் என்பதே டிரம்ப்பின் பிரதான நிபந்தனையாகும். தமது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் செவ்வாய்க்கிழமை என்பது மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் தகர்க்கப்படும் நாளாக இருக்கும் என பகீர் கிளப்பியுள்ளார்.
டிரம்ப்பின் மிரட்டலுக்கு ஈரான் அரசு ஊடகம் வாயிலாகப் பதிலடி கொடுத்துள்ளது. ஈரானின் உயர்மட்ட ராணுவக் கட்டளை அமைப்பான 'காதம் அல்-அன்பியா' (Khatam al-Anbiya) விடுத்துள்ள அறிக்கையில், பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், எங்களது அடுத்தகட்டத் தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிகவும் அழிவுகரமானதாகவும் (Devastating), பரவலானதாகவும் இருக்கும் என்று எச்சரித்துள்ளது.
ஒருபுறம் போர்ப் பதற்றம் நீடித்தாலும், மறுபுறம் ரகசியமாக அமைதிப் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாக 'ஆக்சியோஸ்' (Axios) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. டிரம்ப்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப், ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகிய இருவரும் குறுஞ்செய்திகள் (Text Messages) வாயிலாக நேரடியாகத் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக 45 நாட்கள் போர்நிறுத்தம் செய்து, அதன் மூலம் நிரந்தர அமைதிக்கு வழிவகுப்பதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும்.
உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் விநியோகத்தில் 'ஹார்முஸ் ஜலசந்தி' ஒரு முக்கிய நுழைவாயிலாகத் திகழ்கிறது. இதன் மீதான கட்டுப்பாடு, நிலவி வரும் போர் அச்சுறுத்தல்கள் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.





