/indian-express-tamil/media/media_files/2026/08/14/parliament-capital-context-2026-08-14-09-19-11.webp)
எழுதியவர்: லிஸ் மேத்யூ
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்றுடன் (ஆகஸ்ட் 13) நிறைவடைந்த நிலையில், பா.ஜ.க.வை தற்காப்பு நிலைக்குத் தள்ளிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. அதற்குக் காரணம், தொகுதிகள் மறுவரையறை, பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA) திருத்தங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் முக்கியமான சட்ட நடவடிக்கைகளை, குறைந்தபட்சம் தற்போதைக்கு, தடுத்து நிறுத்தியதுதான்.
அதேவேளையில், மாணவர்களின் போராட்டங்கள் தொடர்பாகவும் மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. மேற்கு வங்கம், அசாம் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகள், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கட்சிப் பிளவுகள் மற்றும் கட்சி மாறுதல்கள் ஆகியவற்றின் பின்னணியில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பிருந்த அரசியல் சூழல் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை இந்தியா கூட்டணித் தலைவர்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒப்புக்கொண்டனர்.
எதிர்க்கட்சிகள் மனச்சோர்வில் இருப்பதாகவும், அரசியல் களம் “முழுமையாக அரசுக்கு சாதகமாக” இருப்பதாகவும் அப்போது நிலவிய கருத்து இருந்தது. பெண்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியலமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதாவை மீண்டும் கொண்டுவரவும், தொகுதிகள் மறுவரையறை மசோதாவை நிறைவேற்றவும் தேவையான ஆதரவைத் தீவிரமாகத் திரட்ட மத்திய அரசு முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
தி.மு.க இனி இந்தியா கூட்டணியுடன் இணைந்து செல்லத் தயாராக இல்லாத நிலை, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு, தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் சந்திர பவார்) அளித்த தெளிவற்ற சமிக்ஞைகள் ஆகியவற்றால், மேலும் சில தலைவர்கள் கட்சி மாறினால் எதிர்க்கட்சிகள் மேலும் பலவீனமடையக்கூடும் என்ற ஊகங்கள் பரவலாக நிலவின. ஆனால், மழைக்காலக் கூட்டத்தொடர் பெரிதாக எந்த முக்கிய அலுவல்களையும் மேற்கொள்ளாமல் முடிவடைந்த நிலையில், மத்திய அரசு 12 மசோதாக்களை நிறைவேற்றியது. அவற்றில் மக்களவையில் முறையான விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது ஒரு மசோதா மட்டுமே.
இருந்தபோதிலும், சில முக்கியத் தலைவர்களைத் தவிர, நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி மத்திய அரசைச் சிக்கலில் மாட்டவோ, தங்களது பிரச்சினைகள் மற்றும் கருத்துகளைத் தெளிவாக முன்வைக்கவோ முடியவில்லை என்பதற்காக எதிர்க்கட்சிகள் வருத்தப்படுவதாகத் தெரியவில்லை. மாறாக, குறைந்தபட்சம் தற்போதைக்கு அரசியல் விவாதத்தின் போக்கையே தங்களுக்குச் சாதகமாக மாற்றியதாக எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. அதே நேரத்தில், தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் வெளிப்படாமல் பார்த்துக்கொண்டதாகவும் கருதுகின்றன.
எதிர்க்கட்சிகளுக்கு எதிரான தாக்குதல்களை அடிக்கடி முன்னெடுக்கும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நாடாளுமன்றத்தில் இல்லாதது தங்களுக்கு “எதிர்பாராத சாதகமாக” அமைந்ததாகவும் எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. இது பா.ஜ.க.வின் அரிதான தவறு. சக்திவாய்ந்த அமித் ஷா நாடாளுமன்றத்தைத் தவிர்த்தார். இதன் மூலம் அவர்கள் (மத்திய அரசு) பயப்படுகிறார்கள் என்ற அரசியல் செய்தியை எங்களால் உருவாக்க முடிந்தது” என்று எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
மற்றொரு தலைவர் கிரிக்கெட் உவமையைப் பயன்படுத்தி விளக்கினார். “தொடக்க ஆட்டக்காரர்கள் பேட்டிங் செய்ய களத்திற்கு வரவில்லை. அவர்கள் பெவிலியனில் அமர்ந்திருந்தனர். திரும்பும் தன்மை கொண்ட ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய அவர்கள் பயந்துவிட்டனர்” என்றார். இதற்கு பதிலளிக்கும் வகையில், “விவாதங்களையும் கலந்துரையாடல்களையும் எதிர்க்கட்சிகள் தவிர்த்து ஓடுகின்றன” என்று மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
அடுத்து காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது?
ஜென்-ஸி போராட்டங்களுக்கு தலைமை தாங்கி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுக்கு வழிவகுத்த காக்ரோச் ஜனதா கட்சி (CJP), தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் கட்சியை நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், அரசுக்கு எதிரான தாக்குதலைத் தொடர்ந்து முன்னெடுத்தது. ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையையும், அமித் ஷாவையும் காங்கிரஸ் தொடர்ந்து கடுமையாக விமர்சித்தது.
வேலையின்மை மற்றும் போதுமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாதது ஆகியவை பா.ஜ.க அரசின் மிகப்பெரிய பலவீனமாக மாறக்கூடும் என்றும் காங்கிரஸ் கருதுகிறது. தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கியிருந்தாலும், அவை நாட்டின் இளைஞர்கள் மத்தியில் நிலவும் பரந்த அளவிலான அதிருப்தியைப் பிரதிபலிப்பதாக காங்கிரஸ் மதிப்பிடுகிறது. இதனுடன், அயோத்தி ராமர் கோயிலுக்கான நன்கொடை விவகாரம் “நன்கொடை திருட்டு” என்ற குற்றச்சாட்டும் இணைந்துள்ளது. இந்த விவகாரம் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமாஜ்வாதி கட்சி (SP) கருதுகிறது.
எனவே, வரும் நாட்களில் எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரசாரத்திலும், அவர்களின் முக்கிய அரசியல் செய்தியிலும் இந்த விவகாரங்கள் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், ஜார்க்கண்டில் முக்தி மோர்ச்சா (JMM)-காங்கிரஸ் கூட்டணி அரசு போராட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட போலீஸ் நடவடிக்கை அந்த அரசியல் நிலைப்பாட்டுக்கு ஓரளவு பின்னடைவை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, போலீஸ் நடவடிக்கை தவறானது என்றும், தான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நிற்பதாகவும் தெளிவான செய்தியை வெளியிட்டதாக அக்கட்சி நம்புகிறது.
காங்கிரஸின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் செயற்குழு (CWC), இந்த இரு விவகாரங்கள் தொடர்பான பிரசாரத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான செயல்திட்டத்தை வகுக்க அடுத்த வாரம் கூடவுள்ளது. ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற போலீஸ் நடவடிக்கையையும், அமித் ஷா நாடாளுமன்றத்தில் இல்லாததையும் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதால் கிடைக்கும் அரசியல் பலன் நீண்ட காலம் நீடிக்காது. வேலைவாய்ப்புகள் தொடர்பாக இளைஞர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தி என நாங்கள் கருதுவதை முன்னிலைப்படுத்துவதற்கு புதிய அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும். அதை எவ்வாறு செயல்படுத்தப் போகிறோம் என்பதுதான் எங்களுக்குள்ள சவால்” என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/india/upper-hand-to-back-foot-how-bjp-narrative-took-a-hit-in-monsoon-session-12258937





