source https://tamil.indianexpress.com/tamilnadu/ep-chinthan-questions-vck-thirumavalavan-over-ayyangali-award-to-vd-satheesan-12500672
/indian-express-tamil/media/media_files/2026/09/07/ep-chinthan-thiruma-vd-satheesan-2026-09-07-02-23-07.jpg)
மார்க்சிய எழுத்தாளர் இ.பி. சிந்தன் வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு சில கேள்விகள் என்று “முக்கால் சங்கி” என்று விமர்சித்து கேரள முதல்வர் வி.டி.சதீசனுக்கு ஏன் அய்யன்காளி விருது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரள மாநில வி.சி.க சார்பில் அம்மாநில முதல்வர் வி.டி. சதீசனுக்கு 'மகாத்மா அய்யன்காளி' விருது வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மார்க்சிய எழுத்தாளர் இ.பி. சிந்தன், சதீசனின் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டி அவருக்கு விருது வழங்கியதற்கான காரணத்தைப் பொதுவெளியில் விளக்குமாறு வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனுக்குக் பகிரங்கக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரள மாநில வி.சி.க சார்பில் கடந்த செப்டம்பர் 2, 2026 அன்று திருவனந்தபுரத்தில் சிறப்பு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், சமூகத்தில் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில் கேரள முதல்வர் வி.டி. சதீசனுக்கு 'மகாத்மா அய்யன்காளி' விருதையும், சி.பி.ஐ மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி. திவாகரனுக்கு 'ஸ்ரீ நாராயண குரு' விருதையும் வழங்கிச் சிறப்பித்து பேசினார்.
இந்நிலையில், மார்க்சிய எழுத்தாளர் இ.பி. சிந்தன் வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு சில கேள்விகள் என்று “முக்கால் சங்கி” என்று விமர்சித்து கேரள முதல்வர் வி.டி.சதீசனுக்கு ஏன் அய்யன்காளி விருது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மார்க்சிய எழுத்தாளர் இ.பி. சிந்தன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “கேரள முதல்வர் வி.டி.சதீசனுக்கு அய்யன்காளி விருதினை வி.சி.க தலைவர் திருமாவளவன் கேரளாவுக்குச் சென்று வழங்கியிருக்கிறார். அதிகாரத்தில் இருப்பதாலேயே ஒருவர் நல்லவராகத்தான் இருக்கவேண்டும் என்பதும், விருதுக்குத் தகுதியானவர் என்பதும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமுடியாதது. அய்யன்காளியின் பெயரால் வழங்கப்படும் விருதினைப் பெறுவதற்கு அவர் தகுதியானவர்தானா என்று யாராக இருந்தாலும் யோசித்துப் பார்ப்பது அவசியம் என்று கருதுகிறேன். இது ஒரு கட்சியின் தனிப்பட்ட முடிவு என்றும், அதில் விமர்சனத்திற்கு எதுவும் இல்லையென்றும் சொல்லியெல்லாம் தப்பிக்க முடியாது. ஏனெனில், பொதுவில் விருது குறித்து தகவல்கள் பகிரப்பட்ட பிறகு, விமர்சனத்தை எதிர்கொள்வதுதான் முறையான ஜனநாயக வழிமுறை என்பதாலும், அப்படியான எந்த விமர்சனத்தையும் ஏற்கும் தன்மை கொண்ட ஒரு கட்சியாக நான் விசிகவைப் பார்ப்பதாலும், என் தரப்பு நியாயங்களை முன்வைக்கிறேன்.
1. இன்றைய கேரள முதல்வரான வி.டி.சதீசன், 1996 ஆம் ஆண்டு பரவூர் சட்டமன்றத் தொகுதியில் முதன்முதலாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதன்பிறகு அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை நேரடியாக அணுகி, அடுத்த தேர்தலில் அவருக்கு ஆர்எஸ்எஸ் உதவிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அதற்கு, ஆர்எஸ்எஸ்-இன் கிளை அமைப்பான இந்து ஐக்கிய வேதியின் மாநிலத் தலைவர் ஆர்.வி.பாபு உறுதி செய்திருக்கிறார்
2. 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போதும், ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தொடர்புகொண்டு உதவி கேட்டதாகவும் ஆர்.வி.பாபு கூறியிருக்கிறார். ஆர்எஸ்எஸ் உதவியதா இல்லையா என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆனால், அந்தத் தேர்தலில் வி.டி.சதீசன் வெற்றி பெற்றிருக்கிறார்
3. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலேயே மிக நீண்ட காலம் தலைவராக இருந்த கோல்வால்கரின் நூற்றாண்டு விழாவில் வி.டி.சதீசன் கலந்துகொண்டு, நிகழ்வில் விளக்கேற்றியிருக்கிறார். ஜெர்மனியில் யூதர்களை ஹிட்லர் கொடூரமாக நடத்தியது மிகச்சரியானது என்றும், அந்தக் கருத்தையொட்டியே இந்தியாவிலும் சிறுபான்மையினரை அடிபணிந்து நடக்கச்சொல்ல என்றும் வாழ்நாள் முழுவதும் பேசியும் செயல்பட்டும் வந்த இந்திய ஹிட்லர் என்றுகூட அழைக்கத்தகுந்த கோல்வால்கரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும் அளவுக்கு சங்கித்தனம் நிரம்பியவர் வி.டி.சதீசன்
4. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற அடுத்த சட்டமன்றத் தேர்தலின்போதும் ஆர்எஸ்எஸ்-ஐ தொடர்புகொண்டு உதவிகேட்டதாக பின்னாளில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் உண்மையை போட்டு உடைத்திருக்கின்றனர். அதற்கு முந்தைய தேர்தல்களில் பெற்ற வாக்குகளை விடவும், அந்தத் தேர்தலில் மிகக்குறைவாக பா.ஜ.க வாக்குகள் பெற்றதும், வி.டி.சதீசன் அத்தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றதும் கவனிக்கத்தக்கது.
5. பாரதிய விசார கேந்திரியா என்கிற ஆர்எஸ்எஸ்-இன் மற்றொரு மிகமுக்கியமான அமைப்பின் நிகழ்வில் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டு வி.டி.சதீசன் கலந்துகொண்டார். அந்த அமைப்பு மிகச்சாதாரண அமைப்பல்ல. அடுத்து வரப்போகிற தேர்தல், இன்றைய அன்றாடப் பிரச்சனைகள் குறித்தெல்லாம் கவலைப்படாமல், அடுத்த ஐம்பது ஆண்டுகள் இந்துத்துவக் கொள்கை எப்படியெல்லாம் திட்டமிட்டு பரப்பப்பட வேண்டும் என்று ஆழமாக ஆய்வு செய்து, அதன் முடிவுகளை வைத்து மற்ற சங்கப்பரிவார அமைப்புகளுக்கு வழிகாட்டும் மிக ஆபத்தான் அமைப்பாகும்.
6. பாரதிய விசாச கேந்திரியா அமைப்பின் அதே கூட்டத்தில், இந்துத்துவ ஆதரவுக் கருத்துகளையும், மதச்சார்பற்ற மனிதர்களை எல்லாம் கேலியும் கிண்டலும் செய்தும் வி.டி.சதீசன் பேசியதாக சொல்லப்படுகிறது
7. சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றமும், இடது முன்னணி அரசும் நேரடியாக ஒளிவுமறைவின்றி கருத்து கூறிய நிலையில், மக்களின் மத நம்பிக்கையில் யாரும் தலையிடக்கூடாது என்றும், சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கூடாது என்றும் ஆர்எஸ்எஸ் எடுத்த அதே நிலைப்பாட்டை எடுத்து, அதில் இறுதிவரை மாறாமல் இருந்தார் வி.டி.சதீசன்
8. சமீபத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போதும், சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கும் நிலைப்பாட்டை எடுத்து இடது முன்னணி அரசை வி.டி.சதீசன் கண்டித்துப் பேசினார்
9. தேசிய கல்விக் கொள்கையின் மாதிரி அஜண்டாவாக உருவாக்கப்பட்ட பிஎம் ஶ்ரீ திட்டத்தில் இணையாவிட்டால், கல்வி நிதி எதுவும் கிடையாது என்று அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய பா.ஜ.க அரசு மிரட்டி வருகிறது. முந்தைய கேரள அரசு, அந்த பிஎம் ஶ்ரீ திட்டத்தில் இணையாமல் தவிர்த்துவந்தது. வி.டி.சதீசன் அரசு ஆட்சிக்கு வந்தது சில நாட்களிலேயே, ஒன்றிய அரசின் ஆர்எஸ்எஸ் அஜண்டா திட்டமான பிஎம் ஶ்ரீ திட்டத்தில் வி.டி.சதீசன் தலைமையிலான புதிய கேரள அரசு இணைந்திருக்கிறது
10. பா.ஜ.கவின் கட்சிப் பிரச்சார திட்டமாக, பிரதமர் படம் உள்ளிட்ட பலதையும் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லும் பிராதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கூறுகளை முந்தைய இடது முன்னணி கடுமையாக எதிர்த்து வந்த சூழலில், அனைத்து விதிகளையும் ஏற்றுகொண்டிருக்கிறது வி.டி.சதீசனின் கேரள அரசு
11. வக்ஃபு வாரியத்தில் இரண்டு முஸ்லிமல்லாதவர்களையும் நியமிக்க வேண்டுமென்று ஒன்றிய பா.ஜ.க அரசு சட்டம் கொண்டுவந்தது. அதனை ஏற்கமுடியாது என்று கூறி முந்தைய இடது முன்னணி அரசு வழக்கு தொடுத்தது. அதே வேளையில், வஃபு வாரியத்தின் பதவிக்காலமும் முடிவடைந்துவிட்டதால், புதிய சட்டத்தின்படி உறுப்பினர்களை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கேரள அரசு தள்ளப்பட்டது. இருப்பினும், சாதுர்யமாக ஒன்பது முஸ்லிம்களை மட்டுமே வக்ஃபு வாரிய உறுப்பினர்களாக நியமித்துவிட்டு, மீதமுள்ள இரண்டு இடங்களில் யாரையும் நியமிக்காமல் தவிர்த்தது முந்தைய இடது முன்னணி அரசு. அதேபோல, நீதிமன்றத்தில் அந்த சட்டத்தை எதிர்த்து வழக்கையும் நடத்தையும். ஆனால், வி.டி.சதீசன் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின்னர், முஸ்லிமல்லாதவர்களை வக்ஃபு வாரிய உறுப்பினர்களாக நியமிக்க வலியுறுத்தும் அச்சட்டத்தின் பிரிவு 14 ஐ ஏற்பதாக, நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறது
இதையெல்லாம் வாசிக்கிற எவருக்கும், வி.டி.சதீசன் என்பவர் ஒரு முக்கால் சங்கி என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். வந்தே மாதிரத்தின் முழு இந்துத்துவ வரிகளை முழுமையாக பல இடங்களில் பாடுவது உள்ளிட்ட வி.டி.சதீசன் அரசின் பல்வேறு இந்துத்துவ ஆதரவு காவிமயமாக்கலைக் கண்டித்து, கேரளாவில் காத்திரமாக இடதுசாரி மாணவர் அமைப்புகள் தற்போது போராட்டங்கள் நடத்திவருகின்றனர். அந்தப் போராட்டங்களில், மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள் நடத்திவருகிறது வி.டி.சதீசனின் காவல்துறை. இருப்பினும் இரத்தம் சொட்டச்சொட்ட போராடி வருகிறார்கள் மாணவர்கள். இடதுசாரி மாணவர்களை வி.டி.சதீசனின் காவல்துறையினர் அடித்து நொறுக்கும் அதே நாளில், அதே வேளையில், தமிழ்நாட்டிலிருந்து கிளம்பி கேரளா சென்று, வி.டி.சதீசனுக்கு போராளி அய்யன்காளியின் பெயரால் விருது கொடுத்திருக்கிறார் திருமாவளவன் அவர்கள். எந்த காரணத்திற்காக அவருக்கு அய்யன்காளி விருதினை வழங்கும் முடிவினை விருதுக்குழுவினர் எடுத்தார்கள் என்பதைப் பொதுவெளியில் வெளிப்படையாகத் தெரிவிப்பதும், வி.டி.சதீசனின் சங்கித்தனத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்படிப் பார்க்கிறது என்பதையும் நேரடியாக விளக்குவதே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
`திரும்பவும் கேட்கிறேன். முக்கால் சங்கி வி.டி.சதீசன் அவர்களுக்கு ஏன் அய்யன்காளி விருது?” என்று இ.பி. சிந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.





