/indian-express-tamil/media/media_files/2026/06/09/tho-2026-06-09-09-12-00.jpg)
பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான நாடாளுமன்றச் சட்டத்திருத்த மசோதா கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் தோல்வியடைந்தது. இதையடுத்து, இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சில முக்கிய மாற்றங்களுடன் இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. புதிய மாற்றத்தின்படி, மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்பட்டாலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போது இருக்கும் இடங்களின் விகிதாச்சாரம் மாறாமல் அதே அளவில் நீடிக்கும் என்பது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் புதிய வியூகம் என்ன?
- மாநிலங்களுக்கான இடங்களை அதிகரிக்கும்போது, தற்போதைய விகிதாச்சாரத்தைப் பராமரிக்க 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பே அடிப்படையாகத் தொடர்ந்து தக்கவைக்கப்படும்.
- மாநிலங்களுக்குள் இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்ய, தற்போதைய 2001 கணக்கெடுப்பிற்குப் பதிலாக, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படலாம்.
- இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு தனி அமைப்பாக 'தொகுதி மறுவரையறை ஆணையம்' அமைக்கப்பட்டு, தொகுதிகள் மாற்றி அமைக்கப்படும்.
எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
முன்னதாக இந்த மசோதாவை நிராகரித்த மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தமிழகத்தின் தி.மு.க ஆகிய கட்சிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. தற்போது தி.மு.க தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துள்ள நிலையிலும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-க்கள் ராஜினாமா செய்துள்ள சூழலிலும், இந்த மசோதாவிற்கு நிபந்தனை அடிப்படையிலான ஆதரவு கிடைக்கலாம் என அரசுத் தரப்பில் நம்பப்படுகிறது.
தென் மாநிலங்களுக்கு இருக்கும் ஆபத்து என்ன?
தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் சாசன விதி 81 (3)-ன் படி, 2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியாகும் வரை மட்டுமே தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியானவுடன் தானாகவே தொகுதி மறுவரையறைச் சட்டம் அமலுக்கு வந்துவிடும்.
இடங்கள் குறையும் அபாயம்
வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தென் மாநிலங்கள் மக்கள் தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளன. எனவே, புதிய மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தால் தென் மாநிலங்களின் எம்.பி இடங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து, வட மாநிலங்களின் கை ஓங்க கூடும். ஆனால், தற்போது அரசு கொண்டு வரும் 850 இடங்கள் திட்டத்தை ஏற்றுக் கொண்டால், தென் மாநிலங்களின் எம்.பி-க்கள் எண்ணிக்கை 50% உயருமே தவிர, அவர்களின் தற்போதைய அரசியல் செல்வாக்கு மற்றும் இடங்களின் விகிதாச்சாரம் குறையாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.
மக்களவையில் மத்திய அரசு கொடுத்த தரவுகளின்படி, புதிய முறை அமலுக்கு வந்தால் தமிழ்நாடின் தற்போதைய இடங்கள் 39-ல் இருந்து 59 ஆக அதிகரிக்கும். கர்நாடகாவின் தற்போதைய இடங்கள் 28-லிருந்து 42 ஆக அதிகரிக்கும். ஆந்திரப்பிரதேசத்தின் தற்போதைய இடங்கள் 25-லிருந்து 38 ஆக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அடுத்த கட்டம் என்ன?
அரசியல் சாசன திருத்த மசோதா தோல்வியடைந்ததால், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 'தொகுதி மறுவரையறை மசோதா 2026' மற்றும் 'யூனியன் பிரதேசங்கள் சட்ட மசோதா 2026' ஆகியவற்றை நாடாளுமன்ற விவாதத்திலிருந்து அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் அமைச்சரவையின் ஒப்புதலுடன் சில திருத்தங்களை மேற்கொண்டு இந்த மசோதாவை மீண்டும் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசியலமைப்புத் திருத்த மசோதா நிறைவேறாவிட்டாலும், தொகுதி மறுவரையறை மசோதாவை எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று கூறப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/india/to-hike-lok-sabha-strength-government-works-on-more-clarity-read-full-story-12016514





