/indian-express-tamil/media/media_files/2026/06/13/iran-2026-06-13-08-43-23.jpg)
அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தத்தின் வரைவு வடிவம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் தீவிர முயற்சியால் இன்னும் சில தினங்களில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மாறி மாறி ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்திக் கொண்டதால், மத்திய கிழக்கில் மிகப்பெரிய உலகப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இந்தச் சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவும் ஈரானும் போரை நிறுத்த ஒரு இறுதியான, ஒருமனதான வரைவு உரையை எட்டியுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.
கையெழுத்தாகும் வரலாற்று ஒப்பந்தம்
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சியும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். "அநேகமாக அடுத்த சில நாட்களில், எங்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்" என்று அவர் ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
மேலும், அல் அரேபியா ஊடகத்திற்கு கிடைத்த தகவலின்படி, இந்த ஒப்பந்தம் ஜெனிவாவில் வைத்து கையெழுத்தாகாது என்றும், இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்திக்காமல் 'டிஜிட்டல் அல்லது ரிமோட்' முறையிலேயே கையெழுத்திட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அணுசக்தி விவகாரம் தற்போதைக்கு இல்லை
இந்த ஒப்பந்தத்தில் ஈரானின் அணுசக்தி தொடர்பான விவாதங்கள் தற்போதைக்குச் சேர்க்கப்படவில்லை என்பதை ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. தற்போதைய முதல் கட்ட ஒப்பந்தம் முழுக்க முழுக்க போரை நிறுத்துவது மற்றும் பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வருவது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அணுசக்தி விவகாரங்கள் அனைத்தும் இரண்டாம் கட்டமாக, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பேசித் தீர்க்கப்படும் என்று அரகச்சி கூறியுள்ளார்.
ஒப்பந்தத்தில் இருக்கும் நிபந்தனைகள் மற்றும் குழப்பங்கள்
தங்களின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என்றும், முடக்கப்பட்டுள்ள தங்களின் சொத்துக்கள் விடுவிக்கப்படும் என்றும் ஈரான் கூறுகிறது. ஆனால், அமெரிக்க அதிகாரிகள் ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகளில் கட்டுப்பாடு விதித்த பிறகே தடைகள் நீக்கப்படும் என்று கூறி வருகின்றனர். இதனால் நிலவும் குழப்பங்கள் குறித்து அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறுகையில், "இந்த ஒப்பந்த விதிகளில் பல தவறான தகவல்கள் உலா வருகின்றன" என்று எச்சரித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி திறப்பும்.. இந்தியாவின் நிலையும்
இந்த அமைதி ஒப்பந்தத்தின் முக்கியப் பகுதியாக, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் முழுமையாகத் திறக்கப்பட உள்ளது. இது இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய நிம்மதி அளிக்கும் செய்தியாகும். ஏனெனில், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை இப்பகுதியிலிருந்தே இறக்குமதி செய்கிறது. இங்கு நிலவும் பதற்றம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் விலை உயரும் அபாயம் இருந்தது. தற்போது இந்த ஒப்பந்தம் மூலம் எண்ணெய் விநியோகம் சீராகி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் கட்டுக்குள் வர வழிவகுக்கும்.
இஸ்ரேலின் பிடிவாதம் மற்றும் ஈரானின் உள்நாட்டு எதிர்ப்பு
மறுபுறம், இந்த பேச்சுவார்த்தையில் தங்களைச் சேர்க்காததால் இஸ்ரேல் கடும் அதிருப்தியில் உள்ளது. தங்களின் ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்றும், தேவைப்பட்டால் அமெரிக்காவை எதிர்பார்க்காமல் தனித்துத் தாக்குவோம் என்றும் இஸ்ரேல் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். அதேபோல, ஈரானுக்கு உள் இருக்கும் தீவிரவாத அமைப்புகள், "அமெரிக்காவிற்கு ஈரான் அடிபணிந்துவிட்டது" என்று இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது..
source https://tamil.indianexpress.com/international/us-iran-likely-to-finalise-draft-agreement-to-end-war-deal-never-closer-12032938





