/indian-express-tamil/media/media_files/2025/12/15/tamil-nadu-schools-public-holidays-list-2026-tn-government-holidays-calendar-2026-school-half-yearly-holidays-2025-tn-2025-12-15-16-26-08.jpg)
1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் சோதனை: தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய முயற்சி
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் தொடக்க நிலை மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்துவதையும், அதை வெளிப்படையாக மதிப்பீடு செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, பள்ளிக் கல்வித் துறை புதிய ஆய்வு நடவடிக்கையை அறிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வாசிப்பு மற்றும் கணித அடிப்படைத் திறன்கள் இந்த ஆய்வின் மூலம் மதிப்பிடப்பட உள்ளன. பிப்ரவரி 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இந்த ஆய்வு நடைபெறும். 1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாளும், 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தனி நாளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் முக்கிய அம்சமாக, இது பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் ஐந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்புத் திறன் மற்றும் கணித அடிப்படைத் திறன்கள் சோதிக்கப்படும். இந்த நிகழ்வில் மாவட்டக் கல்வி அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொள்வார்கள்.
கடந்த 2024–2025 கல்வியாண்டில் தொடங்கப்பட்ட 100 நாள் சவால் திட்டத்தின் தொடர்ச்சியாகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்களின் வாசிப்பு மற்றும் கணிதக் கற்றல் அடைவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி விரிவுபடுத்தப்பட்டு உள்ளதாகத் தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/education-jobs/public-assessment-of-govt-school-students-tamil-nadu-education-depts-new-initiative-for-classes-1-5-11109513





