திங்கள், 23 மார்ச், 2026

தலைமைச் செயலகத்தை நோக்கிப் பேரணி நடத்த முயற்சி; சாம்சங் தொழிலாளர்கள், குடும்பத்தினர் 500 பேர் கைது

 

protest samsung

500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுங்குவார்சத்திரத்தில் உள்ள காந்தி சிலையிலிருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி நடைப்பயணத்தைத் தொடங்கினர்.

ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலுள்ள தலைமைச் செயலகத்திற்குப் பேரணியாகச் செல்ல முயன்ற சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களும், அவர்களது குடும்பத்தினரும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில், 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு, 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, போனஸ் மற்றும் தொழிற்சங்க அங்கீகாரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டடால் இந்தத் தகராறு தொடங்கியது. அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, போராட்டத்தை முன்னெடுத்ததாகக் கூறி 27 தொழிலாளர்களை நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசனின் தலையீட்டிற்குப் பிறகு, இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று உறுதி அளிக்கப்பட்ட போதிலும், நிறுவனம் இடை நீக்கம் செய்த தொழிலாளர்களை இதுவரை பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. இந்தப் பிரச்சனை தீர்க்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் திட்டமிடப்பட்டிருந்த பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 

ஆனால், இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்க முடிவெடுத்தனர்.

கடந்த ஆண்டு முதல் சாம்சங் நிறுவனத்தின் காஞ்சிபுரம் ஆலையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 27 ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை, 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுங்குவார்சத்திரத்தில் உள்ள காந்தி சிலையிலிருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி நடைப்பயணத்தைத் தொடங்கினர். இந்தப் பேரணிக்குக் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்ததோடு, போராட்டக்காரர்களைத் தொடக்கத்திலேயே தடுப்பதற்காகப் பெருமளவில் போலீசாரைக் குவித்தது.

தொழிலாளர்கள் தடையையும் மீறி பேரணி செல்ல முயன்றபோது, போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். இதனால், தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, போலீசார் போராட்டக்காரர்களைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மாலையே விடுவிக்கப்பட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட 27 ஊழியர்களை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்பதில் தொழிலாளர்கள் உறுதியாக உள்ளனர். இந்த விவகாரம் அமைச்சர் ஏற்கனவே அளித்த உறுதிமொழிகள் குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/samsung-india-workers-protest-march-to-secretariat-detained-27-employees-reinstatement-demand-kancheepuram-police-action-11254055