/indian-express-tamil/media/media_files/2026/08/24/indian-railways-3-2026-08-24-11-42-26.jpg)
லோகோ பைலட்டுகளுக்கு குட் நியூஸ்: அதிதிறன் கொண்ட ரயில் என்ஜின்களில் வருகிறது ‘நீர் இல்லா கழிப்பறை’ வசதி
இந்திய ரயில்வேயில் லோகோ பைலட்டுகள் (ரயில் ஓட்டுநர்கள்) எதிர்கொள்ளும் மிகப்பெரிய பணிசார் சவால்களில் ஒன்று என்ஜின்களில் கழிப்பறை வசதி இல்லாததாகும். குறிப்பாக, பெண் லோகோ பைலட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், இந்த வசதிக்கான தேவை மிகவும் இன்றியமையாததாக மாறியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் அதிநவீன மற்றும் அதிக திறன் கொண்ட 12,000 குதிரைத்திறன் (HP) மின்சார என்ஜின்களில் இந்த குறைபாடு சரிசெய்யப்பட உள்ளது. இந்த என்ஜின்களில் ‘நீர் இல்லா சிறுநீர் கழிப்பறை’ (Waterless Urinal) வசதியை இணைப்பதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை ரயில்வே நிர்வாகத்துடன் நடந்து வருவதாக ‘மதேபுரா எலக்ட்ரிக் லோகோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட்’ (MELPL) உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய ரயில்வே மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஆல்ஸ்டாம் (Alstom) நிறுவனத்தின் கூட்டு முயற்சியான MELPL, பீகாரின் மதேபுராவில் பிரத்யேக சரக்கு வழித்தடங்களுக்காக இந்த அதிதிறன் கொண்ட மின்சார என்ஜின்களை உற்பத்தி செய்து வருகிறது.
நீர் இல்லா சிறுநீர் கழிப்பறை பொருத்தப்பட்ட ஒரு மாதிரி என்ஜின் உருவாக்கப்பட்டு, கடந்த 4 மாதங்களாக வெற்றிகரமாக பயன்பாட்டில் இயங்கி வருகிறது. இனி தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புதிய என்ஜின்களில் இந்த கழிப்பறை வசதி உள்ளமைக்கப்பட்டிருக்கும் (inbuilt). ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள என்ஜின்களிலும் இவ்வசதி பின்னர் கூடுதலாகப் பொருத்தப்படும் (retrofit). மணிக்கு 120 கி.மீ வேகத்தில், 6,000 டன் எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட முதல் என்ஜின் மே 18, 2020 அன்று பயன்பாட்டுக்கு வந்தது. கடந்த ஆக.15 அன்று இந்நிறுவனம் தனது 650-வது என்ஜினை ரயில்வேயிடம் ஒப்படைத்தது. மார்ச் 2028-க்குள் 800 என்ஜின்களைத் தயாரித்து வழங்க ₹33,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 12,000 HP திறன் கொண்ட என்ஜின்களை உற்பத்தி செய்யும் உலகின் 6-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இதுவரை இந்த வசதி ஏற்படுத்தப்படாததற்கான காரணம் குறித்து மதேபுரா எலக்ட்ரிக் லோகோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் விவேக் கர்க் கூறுகையில், ரயில் இயங்கும்போது ஓட்டுநர் தனது இருக்கையை விட்டுவிட்டு கழிப்பறையைப் பயன்படுத்த முடியாது; பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில் நிற்கும் போது மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். 2014-15 காலகட்டத்தில் இந்த என்ஜின்களுக்கான வடிவமைப்பு உருவாக்கப்பட்டபோது இத்தகைய தொழில்நுட்பங்கள் பரவலாக பயன்பாட்டில் இல்லை. தற்போது இந்தியத் தொழில் துறை நவீனமடைந்துள்ளதால், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப நாங்களும் என்ஜின்களை மேம்படுத்தி வருகிறோம் என்றார்.
ரயில்வேயின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சாத்தியக்கூறுகளுக்கு ஏற்ப அனைத்து மின்சார என்ஜின்களிலும் படிப்படியாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பிப்.2026 நிலவரப்படி, 2,800-க்கும் மேற்பட்ட ரயில் என்ஜின்களில் ஏற்கனவே கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
source https://tamil.indianexpress.com/india/indian-railways-rolls-out-waterless-urinals-for-pilots-of-indias-most-powerful-locomotives-12425656





