செவ்வாய், 21 ஜூலை, 2026

மீடியாவை நோக்கி நாக்கை துருத்திய ஏ.டி.எஸ்.பி

 source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-vijay-threat-case-dmk-mla-markandeyan-arrested-remanded-to-judicial-custody-till-august-3-cop-threatens-reporters-as-dmk-mla-12182584


dmk mla 2

தி.மு.க மறியல்; மீடியாவை நோக்கி நாக்கை துருத்திய ஏ.டி.எஸ்.பி... மார்க்கண்டேயன் வீடு முதல் சிறை வரை ரணகளமான தூத்துக்குடி

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை அச்சுறுத்தும் வகையிலும் சர்ச்சைக்குரிய வகையிலும் பேசிய புகாரில், விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை (15 நாட்கள்) நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

20 07 2026

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் சனிக்கிழமை இரவு தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, முன்னாள் அமைச்சர் பி. கீதா ஜீவன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வரை அச்சுறுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) வடக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்ரமணியன் அளித்த புகாரின்பேரில், தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீசார் மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இன்று காலை விளாத்திகுளம் அம்பாள் நகரில் அவரது இல்லத்தில் வைத்து மார்க்கண்டேயனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். தகவலறிந்து அங்கு திரண்ட திமுக தொண்டர்கள், காவல்துறையின் வாகனங்களை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர் அவர்களை அப்புறப்படுத்திய காவல்துறையினர், மார்க்கண்டேயனை தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 10 முதல் 11 மணி நேரத்திற்கு மேலாகத் தீவிர விசாரணை நடத்தினர்.

கைது நடவடிக்கையைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பி. கீதா ஜீவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனிடையே, எஸ்.பி அலுவலகத்திற்கு வந்து மார்க்கண்டேயனைச் சந்திக்க முயன்ற முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், முன் அறிவிப்பின்றி அதிகாலை 6 மணிக்கு எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் 4 மாதங்களுக்கு மட்டுமே இந்த அரசு நீடிக்கும் எனக் குற்றம்சாட்டினார்.

விசாரணைக்குப் பின் மருத்துவப் பரிசோதனைக்காக மார்க்கண்டேயன் அழைத்துச் செல்லப்பட்டப்போது, அவரை பேட்டி எடுக்க முயன்ற செய்தியாளர்களைப் பார்த்து தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி திபு, "வாங்கடே.. வாங்க.. பார்த்துக் கொள்வோம்" என நாக்கைத் துருத்தி மிரட்டிய சம்பவம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவப் பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி அவர்கள் முன்பாக மார்க்கண்டேயன் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை (15 நாட்கள்) நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-vijay-threat-case-dmk-mla-markandeyan-arrested-remanded-to-judicial-custody-till-august-3-cop-threatens-reporters-as-dmk-mla-12182584