சளி, காய்ச்சலுக்கான 67 மாத்திரைகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்தது. ஆய்வின்போது போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் சளி, காய்ச்சல், வலி, செரிமான பாதிப்பு, கிருமி தொற்று, வைட்டமின் பாதிப்பு உள்ளிட்ட குறைபாடுகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மாத்திரைகள் தரமற்றவை என்பது தெரிய வந்துள்ளது.
அதில் பெரும்பாலானவை மேற்குவங்கம், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தயாரிக்கப்படும் மாத்திரைகள் ஆகும். அந்த மருந்துகளின் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தனது இணையதளத்தில் (https://cdsco.gov.in) வெளியிட்டுள்ளது. தரமற்ற மருந்துகள் தயாரித்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வாரியம் முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாடு முழுவதுமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து நேற்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் ஒட்டுமொத்தமாக சுமார் 60.96 சதவிகிதம் அளவிற்கு வாக்குகள் பதிவாகியுள்ளன.
கேரளாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது. மறுபுறம் பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று, பொதுமக்கள் நிர்பந்திக்கப்பட்டதால் மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு நடத்த காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. இதனிடையே, இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தனது வாக்குப்பதிவு செயலியில் வெளியிட்ட தோராயமான புள்ளிவிவரங்களின்படி, மாநில வாரியான வாக்குப்பதிவின் அடிப்படையில், திரிபுரா அதிகபட்ச வாக்குப்பதிவை பெற்றுள்ளது. மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மிகக் குறைந்த வாக்குகளே பதிவாகியுள்ளன.
ராஜஸ்தானில் 13 மக்களவைத் தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஜம்மு தொகுதி, உத்தரப் பிரதேசத்தில் எட்டு இடங்கள், திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதி, அவுட்டர் மணிப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதி, அசாமில் 5 இடங்கள், மேற்கு வங்கத்தில் 3 இடங்கள் மற்றும் பீகாரில் ஐந்து தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
ராகுல் காந்தி, சசி தரூர், கஜேந்திர சிங் ஷெகாவத், கைலாஷ் சவுத்ரி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 88 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். தேர்தல் ஆணையத்தின் தோராயமான புள்ளிவிவரங்களின்படி, கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிட்ட தொகுதியான வயநாடு 69.51% வாக்குகளைப் பதிவு செய்தது. சசி தரூர் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிட்ட திருவனந்தபுரத்தில் 63.86% வாக்குகள் பதிவாகியுள்ளன.
சாம்ராஜ்நகர் தொகுதியில் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாக்குப்பதிவு மையத்தை சூறையாடினர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட இண்டிகநட்டா கிராமத்தில் மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இண்டிகநாட்டா, மெண்டரே, துலசிகரே, தெக்கானே, படசலனதா ஆகிய கிராமங்களுக்கு குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்து தராததால் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வரை வாக்கு பதிவு செய்ய யாரும் வராததால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அங்குள்ள மலை கிராம மக்கள் சிலரை சமாதானம் செய்து வாக்குப்பதிவு செய்ய வைத்தனர். ஒன்பது பேர் வாக்களித்த நிலையில் இதனை கண்டித்து கிராம மக்கள் பலரும் வாக்குப்பதிவு மையத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தியும் அங்கிருந்து கலைந்து செல்லாததால் போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாக்குச்சாவடி மையத்தின் மீது கற்களை வீசி தாக்கியும், வாக்குப்பதிவு மையத்திற்குள் சென்று அங்கு இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கியும், வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு காயமடைந்த அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
அமெரிக்காவில் படிக்கும் கோயம்புத்தூர் மாணவியான அச்சந்தியா ஃபாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளதால் பல்கலைகழக்த்தில் நுழையவும் தடை விதித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் இதுவரை 34,356 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 77,368க்கும் மேற்பட்டோட் காயமடைந்துள்ளனர். இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தியது.
சமீபத்தில் காஸா பகுதியின் 2வது மிகப்பெரிய நகரமான கான் யூனிஸை விட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியதாக தகவல் வெளியானது. ஆனாலும் போரால் புலம் பெயர்ந்த பாலஸ்தீனர்களின் கடைசி புகலிடமாகத் திகழும் ராஃபாவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாகத்தான் கான் யூனிஸ் நகரிலிருந்து படையினர் வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஃபாலஸ்தீனத்தில் மக்கள் பாதிக்கப்படுவதை உடனே நிறுத்தவும் பாதுகாப்பு மற்றும் மறுகட்டமைப்பு வசதிகளை துரிதப்படுத்தவும் வலியுறுத்தி உலகம் முழுவதும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி மாணவி அச்சிந்தியா சிவலிங்கன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவி அச்சிந்தியா சிவலிங்கன் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர் என்பதும் அவரது சொந்த ஊர் கோயம்புத்தூர் என்பதும் பல்கலைக்கழக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் பிரஸ்டன் பல்கலைகழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சந்தியா கோவையில் பிறந்திருந்தாலும் அமெரிக்காவின் கொலம்பஸ் நகரின் ஓகியோவில் வளர்ந்தவர். ஓகியோ பல்கலைகழகத்தில் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற அவர் தற்போது பிரஸ்டன் பல்கலைகழக்த்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பல்கலைகழத்தில் நுழையவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நான் வெறுப்புக்கு எதிராக வாக்களித்துள்ளேன், என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
கர்நாடகாவில் முதல்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் 247 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2.88 கோடி வாக்களர்கள் வாக்களித்துள்ளனர்.
முதல்கட்டத் தேர்தலில் உடுப்பி, ஹாசன், தென்கன்னடம், சித்ரதுர்கா, தும்கூரு, மண்டியா, மைசுரு, சாமராஜ் நகர், பெங்களூரு ஊரகம், பெங்களூரு வடக்கு, மத்திய பெங்களூரு தெற்கு, சிக்பளாப்பூர், கோலார் ஆகிய 14தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். இந்நிலையில் வாக்கு செலுத்திய பிறகு அவர் பேசியதாவது “ எனது வாக்கு என்பது எனது உரிமை. எனது குரலை பாராளுமன்றத்தில் பிரதிபலிக்கும் வேட்பாளரை நான் தேர்வு செய்வேன். நான் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வாக, சட்டங்களை உருவாக்கும் நபரை நாம் தேர்வு செய்ய வேண்டும். நான் நம்பும் வேட்பாளருக்குத்தான் இன்று வாக்களித்துள்ளேன். அவர்கள் கொண்டு வந்திருக்கும் தேர்தல் அறிக்கை மாற்றத்தை கொண்டு வரும். கடந்த 10 ஆண்டு காலமாக வெறுப்பு பிரச்சாரம், பிரித்து ஆழும் அரசியல் நடைபெற்று வருகிறது. மாற்றத்தை வேண்டி நான் வாக்களித்துள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்களித்த பின்பு அவர் காரில் அமர்ந்து பேசியதில் “ ஹாய், மக்களே நான் வாக்களித்துவிட்டேன். நான் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளேன். நான் வெறுப்பு எதிராக வாக்களித்துள்ளேன். நாடாளுமன்றத்தில் எனது குரலை பிரதிபளிக்கும் , நான் நம்பிக்கை வைத்துள்ள வேட்பாளருக்கு வாக்களித்துள்ளேன். தயவு செய்து அனைவரும் மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல்களில் 'விவிபாட்' (VVPAT) எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களில் ஏதேனும் சில எந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ணி, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் (EVM) பதிவான ஓட்டுகளுடன் சரிபார்க்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் 3 அமைப்புகள் மனுக்கள் தாக்கல் செய்தன.
இந்த மனுக்களை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களாக பரபரப்பு வாதங்கள் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தது. அதன்படி, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆணையத்தை கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பதும் சந்தேகத்திற்கு வழிவகுக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"மூன்று கோரிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாங்கள் ஒப்புகை சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும், விவிபாட் இயந்திரத்தில் அச்சிடப்பட்ட சீட்டுகளை வாக்காளர்களுக்குச் சரிபார்த்து வாக்குப் பெட்டியில் வைக்க வேண்டும், மேலும் விவிபாட் 100% எண்ணப்பட வேண்டும். மின்னணு எண்ணுடன் கூடுதலாக சீட்டுகள்… நடைமுறையில் உள்ள நெறிமுறைகள், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பதிவில் உள்ள தரவு ஆகியவற்றைக் குறிப்பிட்டு அவை அனைத்தையும் நாங்கள் நிராகரிக்கிறோம், ”என்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.
மேலும், அதில் குறிப்பிட்ட சில மாற்றங்களைச் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படி என்ன மாறிவிட்டது? எவை மாறவில்லை என்பதை இங்கு பார்க்கலாம்.
எது மாறவில்லை?
வாக்காளர்களுக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. 100% இயந்திரங்கள் விவிபாட் யூனிட் உடன் இணைக்கப்பட்டு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களைப் பயன்படுத்தி வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறும். மேலும், தற்போதுள்ள விதிகளின்படி, தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகள் அல்லது தொகுதிகளின் விவிபாட் சீட்டுகள் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கையுடன் சரிபார்க்க கணக்கிடப்படும்.
இந்த வழக்கின் மனுதாரரான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், விவிபாட் சீட்டுகளை 100% எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கோரியது.
என்ன மாறிவிட்டது?
தேர்தல் ஆணையம் (EC) வாக்குப்பதிவை எவ்வாறு ஒழுங்கமைக்கிறது என்பதில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும், தேர்தலுக்குப் பிந்தைய சில புதிய நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
முதன்முதலில், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு 45 நாட்களுக்கு குறியீட்டு ஏற்றுதல் அலகுகளை (எஸ்.எல்.யூ - SLUs) சீல் வைக்கவும், சேமிக்கவும் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு வழிகாட்டுதல்களை வழங்கியது. எஸ்.எல்.யூ-கள் நினைவக அலகுகள் ஆகும். அவை முதலில் ஒரு கணினியில் தேர்தல் சின்னங்களை ஏற்றுவதற்கு இணைக்கப்பட்டு, பின்னர் விவிபாட் இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்களை உள்ளிட பயன்படுகிறது. இந்த எஸ்.எல்.யூ-கள் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களைப் போலவே திறக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, கையாளப்பட வேண்டும்.
ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு விவிபாட்களில் சின்னங்களை ஏற்றுவதற்கு ஒன்று முதல் இரண்டு எஸ்.எல்.யூ-கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தொடர்பாக ஏதேனும் தேர்தல் மனுக்கள் இருந்தால், 45 நாட்களுக்கு இவை சேமிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், தேர்தல் ஆணையம் விண்ணப்பதாரர்கள் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களின் சரிபார்ப்பைப் பெற மீண்டும் முதல் முறையாக அனுமதித்துள்ளது. இரண்டாவது அல்லது மூன்றாவதாக வரும் வேட்பாளர்கள், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியின் சட்டமன்றப் பகுதியிலும் 5% மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் எரிந்த நினைவக செமிகண்ட்ரோலர்களை சரிபார்க்கும்படி கேட்கலாம். வேட்பாளரின் எழுத்துப்பூர்வ கோரிக்கைக்கு பிறகு இந்த சரிபார்ப்பு செய்யப்படும் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திர உற்பத்தியாளர்களின் பொறியாளர்கள் குழுவால் மேற்கொள்ளப்படும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வேட்பாளர்கள் அல்லது பிரதிநிதிகள் வாக்குச்சாவடி அல்லது வரிசை எண் மூலம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை அடையாளம் காண முடியும். முடிவுகள் அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் சரிபார்ப்புக்கான கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், வேட்பாளர்கள் செலவுகளை ஏற்க வேண்டும், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் முறைகேடு கண்டறியப்பட்டால் அது திரும்பப் பெறப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
உச்சநீதிமன்றம் வழங்கிய பிற பரிந்துரைகள் என்ன?
இந்த இரண்டைத் தவிர, விவிபாட் சீட்டுகளை மனிதர்களைக் காட்டிலும் எண்ணும் இயந்திரத்தைப் பயன்படுத்தி எண்ணலாம் என்ற ஆலோசனையை தேர்தல் ஆணையம் "ஆய்வு" செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. விவிபிஏடி சீட்டுகளில் பார்கோடு அச்சிடப்பட்டிருக்கலாம், இது இயந்திரத்தை எண்ணுவதை எளிதாக்கும் என்று விசாரணையின் போது பரிந்துரைக்கப்பட்டது. இது தொழில்நுட்ப அம்சம் என்பதால் மதிப்பீடு தேவைப்படுவதால், எந்த வகையிலும் கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்துவிட்டதாகவும் உச்சநீதிமன்றம் கூறியது.
தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்! – இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவு!
25 4 24
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகம் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேலாக பதிவாகி வருகின்றது. அனல் காற்று வீசுவதினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக பதிவாகியுள்ளது. குறிப்பாக ஈரோட்டில் வடக்கு பகுதிகளில் வெப்ப அலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும், வேலூரில் 41.6 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 41.4 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 41.1 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தி பகுதியில் 41 டிகிரி செல்சியஸ், தர்மபுரி பகுதியில் 40.7 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 40. 6 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 40.5 டிகிரி செல்சியஸ், நாமக்கலில் 40.5° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவிலும், மலைப்பகுதிகளில் 21 முதல் 31 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்டமாக, இன்று, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வேட்பாளர்களாக உள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில், முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 70 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகின. இந்நிலையில், இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசத்தைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது . அதன்படி, அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அதேநேரம் உள்ளூர் சூழலை சார்ந்து வாக்குப்பதிவு முடிவடையும் நேரம் மாறுபடுகிறது.
மாநிலம் / யூனியன் பிரதேசம்
தொகுதிகள்
அசாம்
5
பீகார்
5
சத்தீஸ்கர்
3
ஜம்மு & காஷ்மீர்
1
கர்நாடகா
14
கேரளா
20
மத்தியபிரதேசம்
6
மகாராஷ்டிரா
8
மணிப்பூர்
1
ராஜஸ்தான்
13
திரிபுரா
1
உத்தரபிரதேசம்
8
மேற்குவங்கம்
3
முன்னதாக இரண்டாம் கட்டத்தில் மொத்தமாக 89 தொகுதிகளில் வாக்குப்பத்வு நடைபெறுகிறது. ஆனால், கடைசி நேரத்தில் மத்திய பிரதேச மாநிலம் பேடுல் தொகுதியில், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் திடீரென உயிரிழந்தார். இதன் காரணமாக அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி அன்று அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
சத்தீஸ்கர், அசாம், மணிப்பூர் மற்றும் ஜம்மு & காஷ்மிர் போன்ற பதற்றமான பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். மிகவும் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஆயுதம் ஏந்திய துணை ராணுவப்படையினர் உடன் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை கொண்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு முன்பு, ஏப்ரல் 16, 2023 அன்று, கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கோலாரில் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் பற்றி ராகுல் காந்தி முதலில் பேசினார். கர்நாடகாவில் வெற்றி பெற்ற பிறகும், கடந்த ஆண்டு அக்டோபரில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி, விகிதாசாரப் பிரதிநிதித்துவம் பற்றி எதுவும் பேசவில்லை. காங்கிரஸ் காரிய கமிட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, “தேசம் தழுவிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையைப் பற்றிய துல்லியமான படத்தை வெளிப்படுத்தும் மற்றும் சமூக நீதியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும், உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் கொள்கைகளுக்கு உறுதியான, தரவு சார்ந்த அடிப்படையை வழங்கும்.”
ஜாதி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒரு வழிமுறையாக மட்டும் இல்லாமல், முடிவாகவும் வடிவமைத்து, சமத்துவமின்மை, செல்வச் செறிவு மற்றும் ஜாதிக் கணக்கெடுப்பு ஆகிய மூன்று முக்கியமான பிரச்சினைகளை ஒருங்கிணைத்து, அவரது சகாக்களில் ஒரு பிரிவினரை அதிருப்தி அடையச் செய்யும் வகையில், ராகுல் தொடர்ந்து கருத்துக்களை கூறி வருவதால், கவனமாகச் சொல்லப்பட்ட இந்த அறிக்கை இப்போது சாளரத்திற்கு வெளியே உள்ளது.
ஆண்டு முழுவதும், ராகுல் காந்தி அனைத்தையும் தெளிவாக்கும் ஒரு நிதி ஆய்வு என்று "எக்ஸ்-ரே" பற்றி பேசினார், இது யாருக்கு என்ன சொந்தம், எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், சமூக நீதி மற்றும் பொருளாதார நலனை அடைவதற்கான நலத்திட்ட கொள்கைகள் உட்பட அனைத்தையும் தெளிவாக்கும். மேலும், சாம் பிட்ரோடா செல்வத்தை மறுபங்கீடு செய்வதற்கான வாரிசு வரி யோசனையை வழங்கியபோது, ராகுல் காந்தி அதற்கான அடித்தளத்தை தயார் செய்துவிட்டதாகத் தெரிகிறது.
காங்கிரஸின் "திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் பொருளாதாரம்" என்று ஏற்கனவே விமர்சித்து வரும் பா.ஜ.க., வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் இத்தகைய கொள்கை பரிந்துரைகளால் அவர்களின் செல்வமும் அரசாங்கத்தால் "அபகரிக்கப்படும்" என்று அச்சுறுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
ராகுல் காந்தியின் அரசியல் மொழி, தீயை அணைக்கும் ஒரு தீராத பயிற்சிக்கு தங்களை கொண்டு சென்றுவிட்டதா என்று காங்கிரஸில் உள்ள சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், சாம் பிட்ரோடாவின் கருத்துக்களில் இருந்து விலகி, “வாரிசு வரி பற்றி தேர்தல் அறிக்கை பேசுகிறதா? உண்மையில், எங்கள் தேர்தல் அறிக்கை வருமான வரி அதிகரிப்பு இருக்காது என்று உறுதியளிக்கிறது,” என்று கூறினார்.
"அந்த அறிக்கையை உள் மற்றும் வெளியாட்களிடமிருந்து பாதுகாப்பதில் நான் சோர்வடைகிறேன்," என்று பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் கூறினார்.
ராகுல் காந்தியின் மொழியை விளக்கிய இந்த தலைவர், "தெளிவாக, அவர் மக்கள் மத்தியில் கோபத்தைத் தூண்ட முயற்சிக்கிறார், அவர்களில் பெரும்பாலோர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று அவர் நம்புகிறார்," என்று கூறினார்.
உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகளிலும், இந்தியாவிலும் கூட, செல்வத்தின் மறுபகிர்வு அனைத்து அரசாங்கங்களின் மூலக்கல்லாகும் என்று அந்த தலைவர் கூறினார். "பி.எம் கிசான் (PM KISAN) அல்லது தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (NREGA) பற்றி நீங்கள் வேறு எப்படி விளக்குகிறீர்கள்... வரி செலுத்தும் சிலரே ஏழைகளுக்கான இந்தத் திட்டங்களுக்கு நிதியளிக்கிறார்கள்" என்று அந்த தலைவர் கூறினார்.
ஆனால், சாம் பிட்ரோடாவின் வாரிசு வரி யோசனையானது, தேர்தல் அறிக்கை நன்றாக மக்களிடம் சென்று சேர்ந்த நேரத்தில் வந்தது, தேர்தல் அறிக்கை ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஒரு வருட ஊதியம் பெற்ற தொழிற்பயிற்சி மற்றும் ரூ. 1 லட்சம் வருமான ஆதரவு போன்ற சில சுவாரஸ்யமான யோசனைகளைக் கொண்டிருந்தது.
“சாம் பிட்ரோடாவின் கருத்துக்களை கட்சி ஏன் நிராகரிக்கவில்லை,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார குழுவின் மற்றொரு முக்கிய உறுப்பினர் கூறினார். காங்கிரஸ் பதிலைக் குறிப்பிட்டு அவர் கூறினார்: “இது மிகவும் பலவீனமான மறுப்பு. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் புதிய வரிகள் இல்லை என்று வெளிப்படையாகக் கூறுவதால், அவருடைய கருத்து கட்சியின் பார்வைக்கு முரணானது என்று அவர்கள் கூற வேண்டும். நிச்சயமாக, அவர் தனது கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு. காங்கிரஸ் என்ன செய்தியை ஏற்றுக்கொள்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை,” என்றார்.
ராகுலின் அமெரிக்க சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்ய உதவிய மறைந்த ராஜீவ் காந்தியின் சக ஊழியர் சாம் பிட்ரோடா, செய்தி நிறுவனமான ANI-க்கு அளித்த பேட்டியில், “செல்வத்தை மறுபங்கீடு செய்வது பற்றி பேசும்போது, நாங்கள் புதிய கொள்கைகள் மற்றும் புதிய திட்டங்களைப் பற்றி பேசுகிறோம். மக்கள் மற்றும் பெரும் பணக்காரர்களின் நலன்களுக்காக அல்ல," என்றார். அமெரிக்காவில் உள்ள வாரிசு வரியைப் பற்றிக் குறிப்பிடுகையில், இது ஒரு சுவாரஸ்யமான சட்டம் மற்றும் "இது போன்ற கொள்கைகளை மக்கள் விவாதிக்க மற்றும் ஆலோசிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
மறுபுறம், ராகுல் காந்தி மறுப்பு தெரிவிக்காமல், கடந்துவிட்டார். சாதிவாரிக் கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று வாதிட்ட ராகுல் காந்தி, புதன்கிழமை ஒரு சமாஜிக் நியாய சம்மேளனத்தில் கூறினார், “நாங்கள் அரசாங்கத்தை அமைத்தவுடன்… முதல் வேலையாக இருப்பது, ஜாதிவாரி கணக்கெடுப்பு... அப்போது தெளிவு கிடைக்கும். ஜாதிவாரி கணக்கெடுப்பை வெறும் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்று நினைக்க வேண்டாம். நாங்கள் பொருளாதார மற்றும் நிறுவன ஆய்வுகளைச் சேர்ப்போம், ஜாட் சமூகம், தலித், பழங்குடிகள் என அனைத்து தரப்பு மக்களின் சமூக பொருளாதார நிலையை கணக்கெடுப்போம்.”
"எனவே ஒரு வகையில் இது ஒரு தேசிய எக்ஸ்ரே மற்றும் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இது மிகவும் அவசியமான நடவடிக்கை என்று நான் உணர்கிறேன்… சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய நிலைமை என்ன என்பதை நாங்கள் மதிப்பிடுகிறோம். இது தர்க்கரீதியானது, இதை யாரும் எதிர்க்க முடியாது,'' என்று ராகுல் காந்தி கூறினார்.
இருப்பினும், சாம் பிட்ரோடாவின் கருத்துகள் குறித்து ராகுல் காந்தி அமைதியாக இருந்தார். கட்சித் தலைவர்களில் ஒரு பிரிவினர் கூறுகையில், "தவறான" கருத்துக்கள் மற்றும் ராகுலின் ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு சுருதியை "மார்க்சிஸ்ட்" தொனியில் வடிவமைத்திருப்பது காங்கிரஸ் காலப்போக்கில் பின்னோக்கி நகர்வதையும், இளைஞர்களின் அபிலாஷைகளுடன் ஒத்திசைவில்லாமல் இருப்பதையும் சித்தரிக்கிறது, என்றனர்.
உண்மையில், ராகுல் காந்தி கடந்த ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு யோசனையை முதன்முதலில் குறிப்பிட்டபோது, எஸ்.சி மற்றும் எஸ்.டி.,களுக்கான இடஒதுக்கீடு அவர்களின் மக்கள்தொகை விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததோடு, இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் விதித்த 50 சதவீத வரம்பை நீக்கக் கோரினார்.
அதுவே காங்கிரசுக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மக்கள்தொகை விகிதாச்சாரத்தில் பிரதிநிதித்துவம் என்பது ராஷ்டீரிய ஜனதா தளம் (RJD), ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) மற்றும் சமாஜ்வாதி (SP) போன்ற சோசலிஸ்ட் கட்சிகளின் பலமாக இருந்தது, அவை சாதி அடிப்படையிலான வாக்கு வங்கிகளைக் கொண்டுள்ளன; காங்கிரஸ் அல்ல.
ஆனால், கர்நாடகாவில் கிடைத்த வெற்றி ராகுலை மேலும் முன்னேறத் தூண்டியது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக சாதிவாரிக் கணக்கெடுப்பை இந்தியாவின் "எக்ஸ்-ரே" ஆக வடிவமைத்தார்.
இந்த மாநிலங்களில் தோல்வியடைந்தாலும், ஜனவரி 14 அன்று தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது ராகுல் காந்தி தனது வாதத்தின் வரம்பை விரிவுபடுத்துமாறு அழுத்தம் கொடுத்தார். பிப்ரவரியில், யாத்திரை பீகாரைக் கடந்து சென்றபோது, ராகுல் காந்தி அவுரங்காபாத்தில், 2024 ஆம் ஆண்டில் அதிகாரம், நிலத்தின் நிலைமை மற்றும் நிலையை அறிய நிதிக் கணக்கெடுப்புடன் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை இந்தியா கூட்டணி நடத்தும் என்று கூறினார்.
மார்ச் 9 அன்று, சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில், பீகாரில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பில் 88 சதவீத ஏழைகள் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. "பீகாரில் இருந்து வந்துள்ள புள்ளிவிவரங்கள் நாட்டின் உண்மையான படத்தின் ஒரு சிறிய பார்வை. நாட்டின் ஏழை மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது பற்றி நம்மிடம் ஒரு யோசனை கூட இல்லை. அதனால்தான், ஜாதி எண்ணிக்கை, பொருளாதார வரைபடம் என இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுக்கப் போகிறோம், அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் 50 சதவீத வரம்பை அகற்றுவோம்,” என்று ராகுல் காந்தி கூறினார்.
"ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார மற்றும் நிதி ஆய்வு... இவை புரட்சிகரமான படிகள்... இவைகளை காங்கிரஸ் எங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கும்... இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்" என்று மகாராஷ்டிராவின் பழங்குடியினர் அதிகம் உள்ள நந்துர்பார் மாவட்டத்தில் மார்ச் 12 அன்று பேரணியில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
ஏப்ரல் 6 ஆம் தேதி ஹைதராபாத்தில் காங்கிரஸ் அறிக்கையை வெளியிட்ட ராகுல் காந்தி, ஜாதிவாரி கணக்கெடுப்பு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பொது சாதிகளில் உள்ள ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கு "இந்த நாட்டில் அவர்களின் பங்கு என்ன என்பதை அறிய அனுமதிக்கும்" என்றார்.
“அதன் பிறகு நிதி மற்றும் நிறுவன ஆய்வு நடத்துவோம். நாட்டின் செல்வத்தை யார் வைத்திருக்கிறார்கள், எந்த வகுப்பினர் அதிகம் வைத்திருக்கின்றனர் என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம். இந்த வரலாற்று நடவடிக்கைக்குப் பிறகு, நாங்கள் புரட்சிகர நடவடிக்கைகளை எடுப்போ... உங்களின் உரிமை என்ன, நாங்கள் அதை உங்களுக்காகப் பெற்றுதருவதை உறுதி செய்வோம்,” என்று ராகுல் காந்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை விவரித்தார்.
இது தேர்தல் அறிக்கைக்கு அப்பாற்பட்டது மற்றும் சாம் பிட்ரோடா வாரிசு வரியுடன் தனது பங்கைச் சேர்த்து, காங்கிரஸின் பழைய பொருளாதார பேய்களை மீண்டும் கொண்டு வந்தார், மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் நடுவில், மறுபங்கீடு மற்றும் வாரிசுரிமையைப் பற்றி பேசுவதற்கு கட்சியின் விமர்சகர்களைத் தூண்டினார்.