சனி, 3 மே, 2025

பஹல்காம் தாக்குதலுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரித்த நேரத்தில், சாதிவாரி கணக்கெடுப்பின் அறிவிப்பு ஏன்? - காங்கிரஸ் கேள்வி

 Congress CWC meeting

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய அரசை, காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. குறிப்பாக, 26 பேர் கொல்லப்பட்டு 10 நாட்களைக் கடந்த பின்னரும், மத்திய அரசு செயலற்று இருப்பதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ், அரசாங்கத்தின் திறன் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், பஹல்காம் சம்பவத்திற்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கும் போது, சாதிவாரி கணக்கெடுப்பின் அறிவிப்பை வெளியிட்டதன் நோக்கத்தை காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

பஹல்காம் தாக்குதலின் இந்த நெருக்கடியான நேரத்தில் அரசுடன் துணை நிற்பதாக தெரிவித்துள்ள காங்கிரஸ், தற்போது வரை தாக்குதலுக்கான பதிலடி குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளது.

நேற்று (மே 2) மாலை, நடைபெற்ற காங்கிரஸ் காரிய குழு கூட்டத்தில், பஹல்காம் தாக்குதல் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது புள்ளி விவரங்களாக மட்டுமல்லாமல், சமூக - பொருளாதார நிலையை பதிவு செய்யும் ஒரு விரிவான அறிக்கையாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியது. 56 கேள்விகளை உள்ளடக்கிய தெலங்கானாவின் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் எனவும் காங்கிரஸ் அறிவுறுத்தியது.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒரு காலக்கெடு இருக்க வேண்டும் எனவும், இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தியது. 

மேலும், இந்தப் பிரச்சனைகள் ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்க கூடாது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற தொடர்ச்சியான பிரச்சாரங்கள், கட்சியின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள அரசை வலியுறுத்தும் என்று ராகுல் காந்தி கூறியதாக தெரிகிறது.

"பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கவும், பயங்கரவாதத்தை தீர்க்கமாகத் தடுக்கவும் நமது ஒற்றுமையை நிரூபிக்க வேண்டிய நேரம் இது" என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும், நமது எல்லைக்குள் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

கடந்த ஏப்ரல் 24 அன்று நடந்த அவசர காரியக் குழு கூட்டத்தின் போது, "உளவுத்துறை தோல்விகள்" மற்றும் "பாதுகாப்பு குறைபாடுகள்" குறித்து பேசி இருந்தாலும், நேற்று நடந்த கூட்டத்தின் போது "பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க" நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து தெளிவான நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்தது.

"தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்? உள்துறை அமைச்சர் அல்லது பாதுகாப்பு அமைச்சர்கள் இருவரில் யார் இதற்கு பெறுப்பேற்பது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததன் காரணம் என்ன?" என்று கூட்டத்திற்கு பின்னர் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் சிங் பாகேல் கேள்வி எழுப்பினார்.

பஹல்காம் தீர்மானத்தில் "விசாரணை" என்ற வார்த்தை குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. "அதை பாகிஸ்தான் கோரும் விசாரணையாக விளக்கக்கூடாது என்பதே அவரது கருத்து. எனவே, அந்த வார்த்தை நீக்கப்பட்டு பொறுப்புக்கூறல் என்று மாற்றப்பட்டது" என கட்சி வட்டாரம் கூறுகிறது.

"நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையில் ஏற்பட்ட கடுமையான குறைபாடுகள் குறித்து பொறுப்புக்கூற வேண்டும்" என்ற முந்தைய கோரிக்கை, நேற்று நடந்த கூட்டத்தில் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டது.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காரியக் குழு கூட்டத்தில் விளக்கம் அளித்ததாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கட்சி வட்டாரம் கூறியது. 

சாதிவாரி கணக்கெடுப்பின் அறிவிப்பு வெளியான நேரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கும் போது, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பை திடீரென இரவில் வெளியிட்டதாக அவர் கூறியுள்ளார்.



source https://tamil.indianexpress.com/india/resolutions-at-cwc-meet-congress-questions-caste-census-timing-seeks-accountability-on-pahalgam-attack-9027758