ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

போலியாக ஆன்லைனில் கேரள லாட்டரி: 3 வெப்சைட்களை தொடங்கி நடத்திய வாலிபர் கைது

 

SK 6 lottery

கேரள மாநில லாட்டரி பெயரில் போலி இணையதளங்களை உருவாக்கி, ஆன்லைனில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றியதாக தமிழகத்தை சேர்ந்த ஒருவரை கேரளா தலைநகர் திருவனந்தபும் நகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தினேஷ் ஏ. (25) என போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையில், கேரள அரசின் அதிகாரப்பூர்வ லாட்டரி இணையதளத்தைப் போல தோற்றமளிக்கும் வகையில், கேரள மாநில லாட்டரியின் பெயர், அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் அரசு முகவரியை பயன்படுத்தி போலி இணையதளங்களை உருவாக்கி, மக்களை நம்ப வைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்த இணையதளங்களில் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைனில் வாங்கலாம் என விளம்பரப்படுத்தப்பட்டதுடன், சமூக வலைதளங்களிலும் இதற்கான விளம்பரங்கள் பரவலாக வெளியிடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், லாட்டரி சீட்டுகளை வாங்க விரும்புவோருக்கு வாட்ஸ்அப் மூலம் க்யூஆர் (QR) குறியீடுகள், யுபிஐ (UPI) கட்டண விவரங்கள் மற்றும் பிற டிஜிட்டல் கட்டண வசதிகள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பணம் செலுத்தியவர்களுக்கு லாட்டரி சீட்டுகள் பார்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து நடந்த விசாரணையில், keralalotteryonlinebuy.com, keralalotteryonlinepurchase.com, keralalotteryonlinebooking.com ஆகிய மூன்று இணையதளங்கள் மூலம் பலரை ஏமாற்றியிருப்பது கண்டறியப்பட்டது. பணம் செலுத்தியும் லாட்டரி சீட்டுகள் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் கேரள மாநில லாட்டரி துறையை அணுகினர். இதையடுத்து, லாட்டரி துறை திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தது. வாட்ஸ்அப்பில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்கள், இணையதளங்களின் டொமைன் பதிவு விவரங்கள் மற்றும் யுபிஐ பரிவர்த்தனை தகவல்களை ஆய்வு செய்த போலீசார், தினேஷை அடையாளம் கண்டு கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநில லாட்டரி சீட்டுகள் எந்த இணையதளம் அல்லது சமூக வலைதளங்களிலும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதில்லை என்று திருவனந்தபுரம் நகர மாவட்ட போலீஸ் கமிஷனர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இதுபோன்ற மோசடி சலுகைகளை நம்ப வேண்டாம் என்றும், ஆன்லைன் நிதி மோசடி அல்லது சைபர் குற்றங்களுக்கு ஆளானவர்கள் தேசிய சைபர் குற்ற புகார் இணையதளம் (NCRP) அல்லது 1930 என்ற உதவி எண்ணை தொடர்புகொண்டு உடனடியாக புகார் அளிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-person-arrested-in-kerala-for-fake-lottery-website-update-in-tamil-12220062

சென்னையில் அனிதா சகோதரர்கள் உண்ணாவிரத போராட்டம்

 

Neet Anitha Protest

மருத்துவக் கல்வி கனவுடன் வாழ்ந்த மாணவி அனிதா மரணமடைந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நீட் (NEET) தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் நீண்டகால போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. 

அனிதாவின் சகோதரர் மணிரதினம், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் மற்றும் கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நேற்று (ஆகஸ்ட் 1) சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். சென்னை கோயம்பேடு சின்மயா நகரில் அமைந்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமையகமான திருவள்ளுவர் இல்லத்தில், நீட் எதிர்ப்பு கூட்டு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதுடன், சமீபத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யும் வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் காலவரையற்ற முறையில் தொடரும் என்று போராட்ட அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து டி.டி.நெக்ஸ்ட்க்கு மணிரதினம் அளித்த பேட்டியில், பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் திறந்தவெளி இடத்தில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியதாகவும், ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் கட்சி அலுவலகத்திலேயே காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறினார். நீட் தேர்வை ரத்து செய்யும் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை இந்தப் போராட்டம் அமைதியான முறையில் தொடரும், என்று அவர் தெரிவித்தார்.

மேலும், கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்றும், அதன்மூலம் மாநில அரசுகள் தங்களுக்கான சேர்க்கைக் கொள்கைகளை சுயமாக வகுத்து, நீட் போன்ற மத்தியத் தேர்வுகளை நீக்கும் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்றும் மணிரதினம் வலியுறுத்தினார். அத்துடன், நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது அநீதியானது என்றும், அந்த வழக்குகள் அனைத்தையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/anitha-brother-started-begins-hunger-strike-in-chennai-for-ban-neet-12220205

மேகதாது விவகாரம்; முதல்வர் இதனை உடனே செய்ய வேண்டும்:

 

மேகதாது விவகாரம்; முதல்வர் இதனை உடனே செய்ய வேண்டும்: 

CPI R Mutharasan urge TN CM Vijay mekedatu dam issue Tamil News

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சி மற்றும் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் வலியுறுத்தினார்.

திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சிவா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் செல்வகுமார், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் அயிலை சிவசூரியன், திராவிட மணி, மாவட்டக் குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய முத்தரசன், கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும், காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை கர்நாடக அரசு முழுமையாக மதித்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒன்றிய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், "மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு, கேரளா அல்லது புதுச்சேரியிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை. ஆனால், அவ்வாறு மத்திய இணை அமைச்சர் தெரிவித்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. நடுநிலையுடன் செயல்பட வேண்டிய ஒன்றிய அரசு, கர்நாடக அரசுக்கு ஆதரவாகவும் தமிழகத்திற்கு எதிராகவும் செயல்படுகிறது" என்றார்.

மேலும், "உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு மாதந்தோறும் 177 டி.எம்.சி. காவிரி நீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் 4 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிடுமாறு கேட்டுக்கொண்டதைக் கூட கர்நாடக அரசு ஏற்க மறுத்து வருகிறது. தேசியக் கட்சியான காங்கிரஸ் ஆளும் கர்நாடக அரசின் இந்த பொறுப்பற்ற அணுகுமுறை கவலை அளிக்கிறது" என்று குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட வேண்டிய குருவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பா சாகுபடி குறித்தும் பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார். மும்முனை மின்சாரம் போதுமான அளவில் கிடைக்காததும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருப்பதும் விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தை ஒரு அரசியல் கட்சியின் பிரச்சினையாக அல்லாமல், தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினையாக மாநில அரசு அணுக வேண்டும் என்று வலியுறுத்திய அவர், "கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் பேசுவது போல, தமிழகத்திலும் ஒருமித்த கருத்தை உருவாக்க முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சி மற்றும் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும். மேலும், குருவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்" என்றார்.

தி.மு.க. சார்பில் தஞ்சாவூரில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "அழைப்பு வந்துள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை" என்று முத்தரசன் பதிலளித்தார்.

செய்தி: க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/cpi-r-mutharasan-urge-tn-cm-vijay-mekedatu-dam-issue-tamil-news-12219815

சனி, 1 ஆகஸ்ட், 2026

TNEA 2026: இன்ஜினியரிங் கவுன்சலிங் ரவுண்ட் 2; சென்னையில் இந்த கல்லூரிகளை மிஸ் பண்ணாதீங்க

 

engineering admission

பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கவுன்சலிங் முடிவடைந்து இரண்டாம் சுற்று தொடங்க உள்ள நிலையில், சென்னை மண்டலத்தில் எந்த கல்லூரிகளில் இன்னும் சீட் இருக்கும்? ரவுண்ட் 2-ல் எந்த கல்லூரிகளை சாய்ஸ் லிஸ்டில் வைக்கலாம்? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 400க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியுள்ளது. அதில் முதல் சுற்றுக்கான சாய்ஸ் ஃபில்லிங் நிறைவடைந்து, தற்போது தற்காலிக ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி இரண்டாம் சுற்று தொடங்குகிறது. 171 – 135.75 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள சுமார் 93000 மாணவர்கள் ரவுண்ட் 2 கலந்தாய்வில் பங்கேற்பர்.

இந்தநிலையில், சென்னை மண்டலத்தில் எந்த கல்லூரிகளில் இன்னும் சீட் இருக்கும்? ரவுண்ட் 2-ல் எந்த கல்லூரிகளை சாய்ஸ் லிஸ்டில் வைக்கலாம்? என்பது குறித்து கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.

1). அண்ணா பல்கலைக்கழக சி.இ.ஜி கேம்பஸ், சென்னை

2). அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி கேம்பஸ், சென்னை

3). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை

4). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

இந்தக் கல்லூரிகளில் 80% - 90% இடங்கள் நிரம்பியிருக்கும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் கோர்ஸ்களில் சீட் முடிந்திருக்கும். கோர் படிப்புகளில் எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி மாணவர்களுக்கு இடங்கள் காலியாக இருக்கலாம். சில குறிப்பிட்ட படிப்புகளில் பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கும் சீட் இருக்கலாம்.

1). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை 

2). ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

3). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை 

4). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம் 

5). லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை 

இந்தக் கல்லூரிகளில் 70 - 80% இடங்கள் நிரம்பியிருக்கும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் கோர்ஸ்களில் பெரும்பாலான இடங்கள் முடிந்திருக்கும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், கோர் படிப்புகளில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு இடங்கள் காலியாக இருக்கலாம். கோர் படிப்புகளில் பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு சீட் இருக்கலாம்.

1). பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை 

2). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

3). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

4). செயின்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை

5). ஆர்.எம்.டி இன்ஜினியரிங் காலேஜ், திருவள்ளூர்

6). பனிமலர் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

7). பிரின்ஸ் டாக்டர் வாசுதேவன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை

8). ஜே.என்.என் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங், திருவள்ளூர்

9). டானிஷ் சென்னை காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை

10). ஆர்.எம்.கே காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை

11). மீனாட்சி சுந்தர்ராஜன் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

12). எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

13). கே.சி.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சென்னை

14). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சென்னை

15). வேலம்மாள் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

16). மகாலட்சுமி டெக் கேம்பஸ், செங்கல்பட்டு

17). வேல் டெக் மல்டி டெக், சென்னை

18). வேல் டெக் ஹை டெக், சென்னை

19). ஜேப்பியர் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி, காஞ்சிபுரம்

20). எஸ்.ஏ இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

21). ஜெருசலேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை


source https://tamil.indianexpress.com/education-jobs/tnea-2026-top-30-engineering-colleges-list-anna-university-in-tamil-nadu-chennai-round-2-counselling-12215849

தமிழகத்தில் 5 தொகுதி இடைத் தேர்தலுக்கு தடை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

 tamil indian express - 2026-07-31T191926.244

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்.எல்.ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள போது, இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்துவது அரசு பணம் செலவிடப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சாசன பிரச்சினை எழும் என குறிப்பிட்டு, ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து, இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.-க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் விசாரணைக்கு வராததால், மனுதாரர் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதையடுத்து, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நீட்டித்த நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.




source https://tamil.indianexpress.com/tamilnadu/madras-high-court-ordered-stay-on-announcing-by-elections-for-5-constituencies-aug-24-tamil-news-12216487

வெள்ளி, 31 ஜூலை, 2026

முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கு: தி.மு.க. எம்.எல்.ஏ ஜாமீன் மனு தள்ளுபடி

 markandeyan 2

முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவில்பட்டியில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திக்குளம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், பேசும்போது இவ்வளவு கேவலமான ஒரு முதலமைச்சரை தமிழகம் மட்டும் அல்ல இந்திய வரலாறே கண்டது கிடையாது. தேர்தல் வெற்றி பெற்று தான் தி.மு.க மீண்டும் வெற்றி பெற வேண்டுமா என்றால் உறுதியாக இல்லை. அடுத்த தேர்தல்களில் 5 சதவீத வாக்குகள் கூட பெற முடியாமல் நடிகர் விஜய் தோற்று அவன் கட்சியும் தோற்றுப்போகும். மக்கள் மத்தயில் ஓட்டு வாங்க முடியாது. 

சட்டமன்றத்தில் உங்க அப்பாவை தேடுகிறேன் என்று சொல்கிறானே மானம்கெட்ட தமிழ்நாட்டில் முதலமைச்சர், என்னை சட்டமன்றத்திற்கு நுழைந்து பாத்துக்கிறோம் டா, சட்டமன்றத்தை பூட்டுவோம் என்று சொல்கிறான், பூட்டினால் எலும்பு இருக்காது. உடைத்து தான் உன்னை அனுப்பிவிடுவார்கள். கரூரில் இருந்து நீ ஓடினாய், நாங்கள் ஒன்றும் பயந்து ஓடவில்லை. தமிழ்நாட்டின் முதல்வர் பேய் அடித்தது போன்று சட்டமன்றத்தில் உட்கார்ந்திருந்தார் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். 

இதனிடையே முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே ஜாமீன் கோரி மார்க்கண்டேயன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் போடப்பட்ட வழக்கு, சட்ட விதிகளுக்கு முரணாது என்றும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி மார்க்கண்டேயன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (ஜூலை 30) நடைபெற்ற நிலையில், மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-dmk-mla-markendaiyan-bail-petition-rejected-in-district-court-12213660

கர்நாடகாவில் ஷாக்;

 


30 07 2026

Medical tests for women after 30 guide | Preventive health checkup for women over 30 | 30 வயதிற்குப் பிறகு பெண்களுக்கு அவசியமான மருத்துவ பரிசோதனைகள் | பெண்கள் சுகாதார பரிசோதனை வழிகாட்டி

கர்நாடக மாநிலத்தில் இளைஞர்களிடையே எச்ஐவி (HIV) தொற்று அதிகரித்து வருவதாக எழுந்துள்ள கவலைக்கிடமான சூழ்நிலையை தொடர்ந்து, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் மற்றும் fகலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒருங்கிணைந்த சுகாதார முகாம்கள் (Integrated Health Camps - IHC) நடத்துமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முகாம்களில் எச்ஐவி பரிசோதனை, ஆரம்பகட்ட பரிசோதனை (Screening) மற்றும் ஆலோசனை சேவைகள் வழங்கப்படும்.

கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக விஸ்வேஸ்வரயா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிக் கல்வித் துறையும் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட சுமார் 7,000 இளைஞர்களுக்கு சமீபத்தில் எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் என்ற தகவல்கள் சில ஊடகங்களில் வெளியாகின.

இதை மறுத்துள்ள திட்டவட்டமாக கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் "கர்நாடகாவில் 7,000 மாணவர்கள் எச்ஐவி பாதிப்புடன் வாழ்கின்றனர்" என்ற தகவலும், "கல்லூரிகளில் எச்ஐவி பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது" என்ற செய்தியும் தவறானவை மற்றும் மக்களை தவறாக வழிநடத்துபவை என்று கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் திட்ட இயக்குநர் பத்மா பசவந்தப்பா கூறுகையில், மாணவர்கள், இல்லத்தரசிகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் என தனித்தனி பிரிவுகளின் அடிப்படையில் எச்ஐவி தொடர்பான தரவுகளை தாங்கள் பராமரிப்பதில்லை. எனவே, மாணவர்கள் மட்டுமே எத்தனை பேர் எச்ஐவி பாதிப்புடன் உள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் எதுவும் இல்லை என்றும் விளக்கினார்.

மேலும், 2004 முதல் இதுவரை 18 முதல் 35 வயதுக்குட்பட்ட சுமார் 39,000 பேருக்கு மொத்தமாக எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் 7,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் கூறினார். இதற்கிடையில், கல்லூரிகளில் விழிப்புணர்வு, ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம்கள் நடத்துவது கட்டாயமாக இருந்தாலும், மாணவர்களின் முழுமையான ஒப்புதல் இல்லாமல் யாருக்கும் எச்ஐவி பரிசோதனை மேற்கொள்ளப்படாது என்று கர்நாடக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டில் எச்ஐவி பாதிப்புடன் வாழும் மக்களின் எண்ணிக்கையில் கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த அறிக்கையின்படி, கர்நாடகாவில் சுமார் 2.60 லட்சம் பேர் எச்ஐவி பாதிப்புடன் வாழ்கின்றனர். இதில் 2.05 லட்சம் பேர் ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், சுமார் 54,000 பேருக்கு தங்களுக்கு எச்ஐவி தொற்று இருப்பதே இன்னும் தெரியாமல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்ஐவி பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இந்த வயதுப் பிரிவில் எச்ஐவி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2023-24ஆம் ஆண்டில் 44,500 ஆக இருந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் 66,600 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, மொபிலிசேஷன் ஃபார் எய்ட்ஸ் சுரக்ஷா ("Mobilisation for AIDS Suraksha (MAS)") என்ற விழிப்புணர்வு இயக்கத்தை செயல்படுத்த கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் "95-95-99" இலக்குகளை எட்டுவதாகும்.

அதில் முதல் இலக்காக, எச்ஐவி பாதிப்புடன் வாழும் 95 சதவீத மக்களுக்கு தங்களின் உடல்நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியமானதாகும். இரண்டாவது இலக்காக, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக சிகிச்சையுடன் இணைப்பதும், மூன்றாவது இலக்காக வைரஸ் பரவலை 99 சதவீதம் கட்டுப்படுத்துவதும் நோக்கமாக உள்ளது.

இந்த முயற்சிக்கு ஆதரவாக, மாணவர்கள் தங்களின் நடத்தை மற்றும் ஆபத்து தொடர்பான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, ரகசியமாக தங்களின் எச்ஐவி பாதிப்பு அபாயத்தை மதிப்பிடும் QR குறியீடு (QR Code) அடிப்படையிலான எச்.ஐ.வி செல்ப் ரிஸ்க் அசைன்மெண்ட் டூல் (HIV Self-Risk Assessment Tool) கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த டிஜிட்டல் வசதி மூலம், தனியுரிமை பாதுகாக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தங்களின் எச்ஐவி அபாயத்தை தாங்களே மதிப்பீடு செய்து, தேவையான நேரத்தில் பரிசோதனை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள் என்று கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நாடு முழுவதும் பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் எச்ஐவி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் மத்திய கல்வி அமைச்சகமும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

source https://tamil.indianexpress.com/india/karnataka-state-hiv-test-for-college-students-update-in-tamil-12213339

ஜென் ஸி எழுச்சி: சவாலா? நல்வாய்ப்பா?

 

எழுதியவர்: நிர்ஜா சவுத்ரி

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தனது தூதர்களை — அல்லது டெல்லி அரசு உறுப்பினர்களைக்கூட — ஆரம்பத்திலேயே அனுப்பியிருந்தால், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான இந்த விவகாரம் இந்த அளவுக்குப் பூதாகரமாக வெடித்திருக்காது என்று பலரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஜென் ஸி தலைமுறையின் போராட்டத்தை பாஜக அரசு சரியாகப் புரிந்துகொள்ளத் தவறியதுடன், இந்தச் சூழ்நிலைக்கு அளித்த எதிர்வினையிலும் தவறான கணக்கு போட்டு, இப்போது சிக்கலில் மாட்டியுள்ளது.

ஏப்ரலில் நரேந்திர மோடி அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போன தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) தொடர்பான அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை மீண்டும் முன்னெடுப்பதே நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டியது. ஆனால் இப்போது, சி.ஜே.பி. தலைமையிலான மாணவர் போராட்டங்கள் தர்மேந்திர பிரதானைக் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகக் கட்டாயப்படுத்தியதால், இது மேலும் சிக்கலாகக் கூடும்.

இந்த விவகாரத்தில் அனைத்து வாய்ப்புகளையும் திறந்து வைத்திருந்த திமுக (DMK) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) போன்ற ‘இந்தியா’ (INDIA) கூட்டணி எதிர்க்கட்சிகள்கூட, திடீரென இதில் தயக்க நிலையை அடைந்துள்ளன.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தொகுதிகள் குறைந்து பின்னடைவைச் சந்தித்ததை விட, இம்முறை கட்சிக்கு ஏற்பட்டுள்ள சவால் முற்றிலும் வித்தியாசமானது.

டெல்லி எல்லைகளில் ஓராண்டு காலம் நடந்த விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்ற போதிலும், பொதுவாக அழுத்தத்திற்குப் பணியாதவராகக் கருதப்படும் மோடி போன்ற ஒரு சக்திவாய்ந்த பிரதமர், பிரதானை பதவியிலிருந்து நீக்க நிர்பந்திக்கப்பட்டது பாஜக தொண்டர்களின் ஒரு பிரிவினரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

பிரதான் ஆரம்பத்திலேயே ராஜினாமா செய்து, தர்மத்தின் வழியில் நின்றிருந்தால் கதையே வேறாக இருந்திருக்கும்.

ஆங்கிலத்தில் வாசிக்க

தவறான கணிப்பா?

வினாத்தாள் கசிவு விவகாரம் மாணவர்களின் மனதில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அரசு தவறாகக் கணித்துவிட்டது போலத் தெரிகிறது. இது வெறும் நீட் தேர்வெழுதும் மாணவர்களுடன் மட்டும் நிற்கவில்லை. சில அமைச்சர்கள் இதை ஒரு "பொருட்டல்லாத" விவகாரமாகப் பார்த்ததோடு, இது மாணவர்களுக்கு "தயாராக கூடுதல் நேரத்தைக் கொடுத்துள்ளது" என்றும் கூறினர்.

இதனால் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஏற்பட்ட செலவு, அநிச்சய நிலை மற்றும் "மன உளைச்சல்" ஆகியவற்றை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.

மற்ற பாஜக தலைவர்கள், ஜென் ஸி அமைப்பினரை பெருநகரங்களில் வாழும், பெற்றோரை விட்டு விலகி, தங்கள் பண்பாட்டில் இருந்து விடுபட்ட ஒரு சிறிய "மேற்கத்தியமயமாக்கப்பட்ட" இளைஞர் குழுவாகப் பார்த்தனர். ஒடிசா அல்லது உத்தரப் பிரதேசத்தில் உள்ள சில கட்சிப் நிர்வாகிகளின் பிள்ளைகளே பாஜக மற்றும் பிரதமருக்கு எதிராக இணையத்தில் பதிவிட்ட காட்டமான விமர்சனங்கள், இந்த இளைஞர்களை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதைக் காட்டுகின்றன.

ஜூன் மாதத் தொடக்கத்தில் சி.ஜே.பி. நிறுவனர் அபிஜீத் திப்கே நாட்டிற்கு வந்த பிறகு பல்வேறு நகரங்களில் நடத்திய மிதமான பேரணிகளும், வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டத்தின் தொடக்க நாட்களில் ஜந்தர் மந்தரில் கூடிய சில நூறு நபர்களும், சி.ஜே.பி-க்கு இளைஞர்களின் ஆதரவு அதிகம் இல்லை என்று அரசை நம்ப வைத்திருக்கக் கூடும்.

போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை வலுக்கட்டாயமாகப் பலத்தைப் பயன்படுத்தியது ஆளும் தரப்பின் மிகப்பெரிய தவறான கணக்கீடாக இருக்கலாம்; இது பெரும்பாலும் எதிர்மறையான விளைவையே தந்தது.

மேற்கு வங்கத்தில் பாஜக பெற்ற அமோக வெற்றி மற்றும் அதைத் தொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸ் (TMC) மற்றும் சிவசேனா (UBT) போன்ற பிராந்திய எதிர்க்கட்சிகள் எளிதில் பிளவுபட்டதன் மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கைக்கெட்டும் தூரத்திற்கு வந்ததன் மிதப்பில், அரசு போராட்டக்காரர்களை இரும்புக்கரம் கொண்டு நடத்தத் தேர்ந்தெடுத்தது. 

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தின் வீட்டிற்கும் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்று, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஒரு விஷயம் என்றால், அது மழைக்காலக் கூட்டத்தொடரின் தொடக்க நாளான ஜூலை 20 அன்று காவல்துறை நடத்திய தடியடி (lathi-charge) மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சுகளின் காட்சிகளே ஆகும். இது பாஜகவால் அலட்சியப்படுத்தக்கூடிய குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு (Anti-CAA) போராட்டத்தைப் போன்றது அல்ல. நடுத்தர வர்க்கத்தினரே மோடியின் முதன்மை ஆதரவுத் தளமாக இருந்து வருகின்றனர்; அவர்களைப் பகைத்துக் கொள்வதை அவரால் தாங்க முடியாது.

எதிர்க் கட்சிகள் நல்வாய்ப்பை நழுவவிட்டு விட்டனவா?

இந்தப் போராட்டங்களை மாணவர்கள் முன்னெடுத்த போதிலும், அவை சோர்ந்துபோயிருந்த எதிர்க்கட்சிகளுக்குப் புதிய தெம்பைக் கொடுத்துள்ளன. அரசுக்கு எதிராக அதிகரித்து வரும் எந்தவொரு அதிருப்தியும், சமீபகாலமாக பலவீனமடைந்துள்ள பிராந்தியக் கட்சிகளை விட, மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கே அதிக பயனளிக்கும் வாய்ப்புள்ளது.

பிரதமரின் இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி மூக்கில் ரத்தம் சொட்டச் சொட்ட காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்ட காட்சிகளும், அகிலேஷ் யாதவ் அதேபோன்று அகற்றப்பட்ட காட்சிகளும் உத்தரப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் எதிரொலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஒரு நாட்டின் வரலாற்றில் இதுபோன்ற தருணங்கள் அரிதாகவே வருகின்றன.  இருப்பினும், கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த ஆரோக்கியமான விவாதமாக மாறியிருக்க வேண்டிய நாடாளுமன்ற விவாதம், வழக்கம் போல "ராகுல் vs மோடி" என்ற அரசியல் மோதலாக மட்டுமே சுருங்கிப்போனது துரதிர்ஷ்டவசமானது.

சி.ஜே.பி. அடுத்து என்ன செய்யும்?

அரசியல் கட்சிகள் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவும், மாற்றத்தை உந்தித் தள்ளும் ஒரு புதிய கருத்தாக்கத்தை உருவாக்கவும் மாணவர்களின் குறிப்பிட்ட பிரச்சினைகளில் CJP கவனம் செலுத்தினால், அது பெருமளவிலான இளைஞர்கள் மீதான தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளக்கூடும். ஆனால் 2029 மக்களவைத் தேர்தலில் மாற்றத்தை விரும்புபவர்கள், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸையே நோக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இருப்பினும், எந்தவொரு முடிவிற்கும் வர இது மிக ஆரம்ப கட்டமாகும். பாஜக உடனடியாக நிலைமையைச் சரிசெய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக திருத்தப்பட்ட வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதாவை ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது. தேசிய தேர்வு முகமையின் (NTA) 47 அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்துள்ளதுடன், நந்தன் நீலேகனி தலைமையில் தேர்வுச் சீர்திருத்தங்களுக்கான உயர்மட்ட பணிக்குழுவையும் பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் போதுமானவையா என்பது அவற்றை அமல்படுத்துவதில் அரசின் உறுதிப்பாட்டைப் பொறுத்தே அமையும். கல்வியின் பரவலான தனியார்மயமாக்கல் மற்றும் இத்துறையில் ஆர்.எஸ்.எஸ்-ன் (RSS) அதிக பங்களிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இது எளிதான காரியமாக இருக்கப் போவதில்லை.

இருப்பினும், மோடி அரசு வெறும் சடங்குகளைத் தாண்டி, கல்வி முறையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள, மிகவும் தேவையான சீர்திருத்தங்கள் தொடர்பான பிரச்சினையைக் கையிலெடுத்தால், அது ஜென் ஸி இளைஞர்களுக்கு உண்மையான நம்பிக்கையைத் தருவதோடு, மோடிக்கான ஒரு சிறந்த தருணமாகவும் மாறக்கூடும்.

வேறு எதுவுமே இல்லையென்றாலும், ஜென் ஸி என்பது தங்கள் பிரச்சினைகளில் அக்கறையுள்ள, ஒரு கூட்டமைப்பாகச் செயல்படும் திறன்கொண்ட, வீரியமிக்க மற்றும் மீண்டு எழும் திறன் கொண்ட ஒரு தலைமுறை என்பதை இந்தப் போராட்டங்கள் நிரூபித்துள்ளன. பிரதானின் பதவி விலகல் கோரிக்கையில் அவர்கள் உறுதியாக நின்ற அதே வேளையில், அரசுடன் ஓர் உடன்பாட்டிற்கு வரும் நெகிழ்வுத் தன்மையையும் வெளிப்படுத்தினர்.

ஜனநாயக ரீதியிலும் அமைதியான வழியிலும் போராடித் தங்கள் கோரிக்கையை வென்றெடுக்க முடியும் என்பதை இதிலிருந்து பெறப்பட்ட ஒரு முக்கியமான பாடமாகும். 

(‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் பங்களிப்பு ஆசிரியரான நீர்ஜா சவுத்ரி, கடந்த 11 மக்களவைத் தேர்தல்களைப் பற்றி எழுதியுள்ளார். இவர் ‘ஹவ் பிரைம் மினிஸ்டர்ஸ் டிசைட்’ [How Prime Ministers Decide] என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.)

source https://tamil.indianexpress.com/india/gen-z-protests-india-dharmendra-pradhan-resignation-sonam-wangchuk-jantar-mantar-cockroach-janta-party-cjp-12214265

வியாழன், 30 ஜூலை, 2026

நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்த ‘ஜென் ஸி’ மொழி

 


parliament monsoon session

புதுடெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது நடைபெறும் மக்களவை நடவடிக்கைகள். Photograph: (Source: PTI)

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் மழைக்காலக் கூட்டத்தொடர் இந்த வாரம் சற்று வித்தியாசமாக உள்ளது. மக்களவையில் அல்லாமல், பொதுவாக இன்ஸ்டாகிராமில் நீங்கள் எதிர்பார்க்கும் வார்த்தைகளை அரசியல்வாதிகளிடமிருந்து கேட்க முடிந்தது. "டெலூலு" (Delulu), "ஃபோமோ" (FOMO) மற்றும் "கிளாக்ட் இட்" (clocked it) போன்ற வார்த்தைகள் தாராளமாகப் பறந்தன. ஆனால் நாடாளுமன்றத்தின் மொழி “நம்மிடம் எவ்வளவு பிரகாசமான ஆட்கள் இருக்கிறார்கள்” என்பதிலிருந்து “ஃபோமோ வந்த பிறகு டெலூலு ஆகிவிட்டது” என எப்படி மாறியது?

மொழியில் ஏற்பட்ட இந்த மாற்றம் தற்செயலானது அல்ல; இது அரசாங்கத்தை உலுக்கி, இறுதியில் கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வழிவகுத்த வாரக் கணக்கிலான ஜென் ஸி (Gen-Z) தலைமையிலான போராட்டங்களுக்கான நேரடிப் பதிலடியாகும்.

அரசியல்வாதிகள் திடீரென ஜென் ஸி மொழியில் சரளமாகப் பேசுவது ஏன்?

மே 2026-ல் ஒரு நையாண்டி சமூக ஊடகப் பக்கமாகத் தொடங்கிய இளைஞர் இயக்கமான காக்ரோச் ஜனதா கட்சி (சி.ஜே.பி) தலைமையிலான நாடு தழுவிய போராட்டங்களே இதற்குத் தூண்டுகோலாக அமைந்தன. நீட் வினாத்தாள் கசிவு மற்றும் அரசுத் தேர்வுகளில் நடந்த பிற முறைகேடுகள் குறித்த கோபம் இளைஞர்கள் மத்தியில் வெளிப்படையாகத் தெரிந்தது.

இது மில்லினியல்கள் (millennials) உட்பட ஆயிரக்கணக்கானோரை டெல்லியின் ஜந்தர் மந்தருக்கு ஈர்த்தது, இது அரசாங்கத்தைக் கவனிக்கத் தூண்டியது.

அடுத்த கல்விச் சீர்திருத்தம் குடிமக்களால் எழுதப்பட வேண்டும்

முதலில், பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமிற்குச் சென்று, இளைஞர்களை வழக்கமான "சகோதர சகோதரிகளே" என்பதற்குப் பதிலாக "நண்பர்களே" என்று நேரடியாக விளித்தார். பின்னர் அவர் இளைஞர்களுடன் அதிகம் தொடர்புகொள்ள சமூக ஊடக தளத்தில் அதிக சுறுசுறுப்பாக இயங்குமாறு தனது கட்சித் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இப்போது, நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழியில் ஒரு மாற்றம் காணப்படுகிறது. 2026-ம் ஆண்டின் பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த மசோதா மீதான மக்களவை விவாதத்தின் போது, பா.ஜ.க எம்.பி பன்சூரி ஸ்வராஜ், நாடாளுமன்ற அவையில் தனது விரல்களைச் சொடுக்கியபடியே, பிரதமர் நரேந்திர மோடி "கிளாக்ட் இட்" (clocked it) - ஒரு விஷயத்தைச் சரியாகக் கணிப்பதைக் குறிக்கும் ஜென் ஸி வார்த்தை - செய்ததாகப் பாராட்டினார்.

சக பா.ஜ.க எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே ஒரு படி மேலே சென்று, ஜென் ஸி தங்களை ஆதரிக்கிறார்கள் என்று நினைப்பது எதிர்க்கட்சிகளின் "டெலூலு" (delulu - மாயை) என்று குற்றம் சாட்டினார், மேலும் மாணவர் போராட்டங்களைத் தவிர்த்ததால் ராகுல் காந்திக்கு "ஃபோமோ" (FOMO - ஒன்றைத் தவறவிட்டு விடுவோமோ என்ற பயம்) இருப்பதாகவும் கூறினார்.

இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சி எம்.பி சுப்ரியா சுலே, யாருக்கு எவ்வளவு ஜென் ஸி வார்த்தைகள் தெரியும் என்பது பற்றியதல்ல இந்த விவாதம் என்றார். "நாங்கள் ஒரு தீவிரமான பிரச்னைக்காக இங்கே இருக்கிறோம்," என்று அவர் கூறினார். "நீங்கள் இந்தப் பிரச்னையை லேசாக எடுத்துக்கொள்கிறீர்கள்... அடுத்த தலைமுறை உங்களுடன் இல்லை; அந்த 'டெலூலு'வில் (delulu) இருக்க வேண்டாம்," என்று அவர் கூறினார்.

அடுத்த தலைமுறை வாக்காளர்களிடமிருந்து இனி ஒதுங்கியிருக்க முடியாது என்பதை அரசியல் கட்சிகள் உணர்ந்துள்ளதால் இந்தத் திடீர் மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. ஜென் ஸி (Gen-Z) மற்றும் ஜென் ஆல்பா (Gen Alpha) தலைமுறையினருடன் அவர்கள் கூடிய விரைவில் இணைய வேண்டும், ஏனெனில் சி.ஜே.பி போராட்டங்கள் மாற்றங்களைக் கொண்டுவரும் திறனை அவர்கள் நன்கு பெற்றுள்ளார்கள் என்பதைக் காட்டியுள்ளன.

source https://tamil.indianexpress.com/india/gen-z-slang-in-parliament-delulu-fomo-cjp-protests-neet-issue-12209835

தேர்வுச் சீர்திருத்தக் குழுவில் இடம்பெற்ற சென்னை ஐ.ஐ.டி இயக்குநர்

 30 07 2026

Prof V Kamakoti director IIT Madras

பேராசிரியர் வி. காமகோடி 2022-ம் ஆண்டில் சென்னை ஐ.ஐ.டி-யின் இயக்குநராகப் பொறுப்பேற்றார். Photograph: (Image via IIT Madras video screengrab/Enhanced with AI)

இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐ.ஐ.டி-யின் இயக்குநர், நிரூபிக்கப்படாத பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆதரித்துப் பேசிய கருத்துகள் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், அது தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியால் அமைக்கப்பட்ட தேர்வுச் சீர்திருத்தக் குழுவில் "கோமிய நிபுணர்" ஒருவர் இடம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வத்ரா பேசிய கருத்து, இந்த வாரம் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியது. வயநாடு எம்.பி-யான அவர் அந்த 'நிபுணரின்' பெயரை நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும், அவர் சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடியையே சுட்டிக்காட்டினார் எனப் பலராலும் நம்பப்படுகிறது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வு முகமையை (என்.டி.ஏ) சீரமைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள நபர்களின் தகுதியை கேள்விக்குள்ளாக்குவதே பிரியங்கா காந்தியின் நோக்கமாகும். இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலகேணி தலைமையிலான 6 பேர் கொண்ட இந்த உயர்மட்டக் குழுவில் காமகோடியும் ஒருவராவார்.

மாட்டு கோமியம் சர்ச்சையில் காமகோடியின் பெயர் அடிபடுவது இது முதல் முறையல்ல. 2025 ஜனவரி மாதம், அவரது சொந்த ஊரான சென்னையில் உள்ள ஒரு கோசாலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசுகையில், பசுவின் கோமியம், சாணம், பால், தயிர் மற்றும் நெய் ஆகியவை கலந்த 'பஞ்சகவ்யத்தின்' நன்மைகளை அவர் பாராட்டிப் பேசினார். "நான் தனிப்பட்ட முறையில் பஞ்சகவ்யத்தை உட்கொள்கிறேன்" என்று அவர் கூறியிருந்தார். அதன்பின் ஆறு மாதங்கள் கழித்து, மாட்டு கோமியத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக மீண்டும் வலியுறுத்திய அவர், அது செரிமானக் கோளாறுகளுக்கு மிக முக்கிய மருந்து என்றும் வாதிட்டார்.

ஒருமுறை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு துறவி, மருத்துவருக்குப் பதிலாக மாட்டு கோமியத்தைக் குடித்த 15 நிமிடங்களில் காய்ச்சல் குணமாகிவிட்டதாக அவர் ஒரு கதையைக் கூறினார். எனவே பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் செரிமானச் சிக்கல்களுக்கு கோமியம் ஒரு முக்கியமான மருந்து என்றும், அதை நாம் உரிய முக்கியத்துவத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்தியாவின் மிக உயரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் ஒருவர் நிரூபிக்கப்படாத மருத்துவ முறைகளுக்கு ஆதரவாகப் பேசியது அப்போது பலத்த விமர்சனத்தை எதிர்கொண்டது.

தற்போது ஓராண்டுக்குப் பிறகு, இந்தியத் தேர்வு முறையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் குழுவில் உள்ள நபர்களின் 'தகுதி' குறித்தான காங்கிரஸ் கட்சியின் கேள்விகளால் இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளது.

காமகோடியின் ஆரம்பகால வாழ்க்கை

காமகோடி இந்த நிலையை எவ்வாறு அடைந்தார் என்பதைப் புரிந்துகொள்ள, 1968-ம் ஆண்டின் சென்னைக்கே செல்ல வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்த ஒருவருக்கு மகனாக வீழிநாதன் காமகோடி பிறந்தார். இவரது தந்தையின் குடும்பம் கல்வியாளர்களைக் கொண்டிருந்தாலும், தாத்தா-பாட்டி கிராமத்தில் வசதித்து வந்தனர். இந்தியப் பண்பாட்டின் சாராம்சம் நகரங்களில் இல்லை, கிராமங்களில்தான் உள்ளது என்று தந்தை நம்பியதால் காமகோடி கிராமப்புற சூழலிலேயே வளர்ந்தார்.

10-ம் வகுப்பு படிக்கும் போது அவரது தாத்தா அவர் கல்வியில் சிறந்து விளங்குவார் என்று கணித்ததால், அவர் நகரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆரம்பத்தில் கணிதத் தேர்வில் வெறும் 25% மதிப்பெண் பெற்று தோல்வியடைந்த அவர், பின்னர் தாத்தாவின் கணிப்பால் தீவிரமாகப் படித்து 50%, அதன் பின்னர் 100% மதிப்பெண்களைப் பெற்றார்.

இருப்பினும், காமகோடி தனது முதல் ஜே.இ.இ (JEE) நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் நகரின் எல்லையில் இருந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். பி.டெக் முடித்த பிறகு, ஜே.இ.இ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை ஐ.ஐ.டி-யில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை நிறைவு செய்தார்.

2009-ம் ஆண்டில் சென்னை ஐ.ஐ.டி-யில் முழு நேரப் பேராசிரியராகப் பொறுப்பேற்ற அவர், பல ஆண்டுகளுக்கு முன்பு தான் தோல்வியடைந்த அதே ஜே.இ.இ (JEE) தேர்வுக்குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றி ஒரு சுழற்சியை நிறைவு செய்தார். தொடர்ந்து 2022-ல் மத்தியக் கல்வி அமைச்சகம் அவரை சென்னை ஐ.ஐ.டி-யின் இயக்குநராக நியமித்தது.

source https://tamil.indianexpress.com/education-jobs/chennai-iit-director-v-kamakoti-jee-failure-cow-urine-controversy-nta-panel-12210301

இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரி

 30 07 2026

Indian rupee depreciation

ரூபாய் இனி 'ஓவர்வேல்யூ' இல்லை... இந்திய பொருளாதாரத்திற்கு நல்ல காலமா?

எழுதியவர்: ஹரிஷ் தாமோதரன்

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக கணிசமாக சரிந்துள்ளது. இதன் விளைவாக, முன்பு "அதிக மதிப்பிடப்பட்ட" (Overvalued) நாணயமாக இருந்த ரூபாய், தற்போது "குறைவாக மதிப்பிடப்பட்ட" (Undervalued) நாணயமாக மாறியுள்ளது. இது இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தித் துறைக்கு சாதகமான மாற்றமாக இருக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, ஜூலை 14-ஆம் தேதி ரூபாய் மீண்டும் ஒரு டாலருக்கு ரூ.96-ஐ கடந்தது. பின்னர் பதற்றம் ஓரளவு குறைந்ததும், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 85 டாலருக்கும் கீழ் சரிந்ததால், ரூபாய் மதிப்பு மீண்டு ஒரு டாலருக்கு சுமார் ரூ.95.9 என்ற அளவில் நிலைத்துள்ளது.

2026 மே 20-ஆம் தேதி ரூபாய் வரலாறு காணாத வகையில் ஒரு டாலருக்கு ரூ.96.96 என்ற குறைந்த மதிப்பை எட்டியது. அதேபோல், ஏப்ரல் 30-ஆம் தேதி பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126.4 டாலரைத் தொட்டது. இருப்பினும், இந்த மாற்றங்களுக்கிடையில் ஒரு முக்கியமான விஷயம் தெளிவாகியுள்ளது. அதாவது, ரூபாய் இனி 'அதிக மதிப்பீடு' (Overvalued) கொண்ட நாணயம் அல்ல.

ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, "ரூபாய் தற்போது குறைவாக மதிப்பிடப்பட்ட நாணயமாக மாறியிருக்கலாம். மேற்கு ஆசியாவில் நிலைமை சீரான பிறகு, வெளிப்புற அதிர்ச்சிகள் குறைந்தால் ரூபாய் மீண்டும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

நீயர், ரீயர் (NEER, REER) என்றால் என்ன?

ஒரு நாட்டின் நாணயம் உண்மையில் அதிக மதிப்பில் உள்ளதா அல்லது குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை அறிய நியர் (NEER -Nominal Effective Exchange Rate) மற்றும் ரியர் (REER -Real Effective Exchange Rate) என்ற குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

நியர் (NEER) என்பது பணவீக்கத்தை கணக்கில் கொள்ளாமல், இந்தியாவின் முக்கிய வர்த்தக நாடுகளின் 40 நாணயங்களுடன் ரூபாயின் மதிப்பை ஒப்பிடும் குறியீடு.

ரியர் (REER) என்பது பணவீக்கத்தையும் சேர்த்து கணக்கிடப்படும் குறியீடு. ஒரு நாணயத்தின் உண்மையான போட்டித்திறனை இதுவே காட்டுகிறது.

இந்த இரண்டு குறியீடுகளுக்கும் 2015-16 = 100 என்பது அடிப்படை மதிப்பாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த 40 நாடுகள், இந்தியாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தகத்தில் சுமார் 88 சதவீத பங்கைக் கொண்டுள்ளன.

அதிக மதிப்பிலிருந்து குறைவான மதிப்புக்கு

2024 நவம்பரில், ஒரு டாலருக்கு ரூ.84.4 என்ற சராசரி மாற்று விகிதம் இருந்தபோது:

NEER - 91.68
REER - 108.03

ரீர் (REER) 100-ஐ விட அதிகமாக இருந்ததால், அப்போது ரூபாய் உண்மையான மதிப்பைவிட சுமார் 8 சதவீதம் அதிகமாக இருந்தது. இதனால் இந்திய பொருட்கள் உலக சந்தையில் விலை உயர்ந்ததாக மாறி, ஏற்றுமதி போட்டித்திறன் குறைந்தது.

ஆனால் 2026 மே மாதத்தில் டாலருக்கு எதிரான ரூபாயின் சராசரி மதிப்பு 95.5 ஆகக் குறைந்த போது, REER குறியீடு வரலாறு காணாத அளவாக 89.08 ஆகச் சரிந்தது.

2026 ஜூனில் ரியர் சிறிது உயர்ந்து 91.26 ஆகியிருந்தாலும், அது இன்னும் 100-க்கும் குறைவாகவே உள்ளது. அதாவது, ரூபாய் தற்போது உண்மையான மதிப்பைவிட சுமார் 8.7 சதவீதம் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 2025 ஜூலை வரை 100-க்கும் மேல் இருந்த ரியர் தற்போது 100-க்கும் கீழ் வந்திருப்பதால், ரூபாய் "ஓவர்வேல்யூ" நிலையிலிருந்து "அண்டர் வேல்யூ" நிலைக்கு மாறியுள்ளது.

இதன் நன்மை என்ன?

ஒரு நாட்டின் நாணயம் குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கும்போது:

*இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிநாடுகளில் ஒப்பீட்டளவில் மலிவாக கிடைக்கும்.

*இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும்.

*வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுடன் இந்திய உற்பத்தியாளர்கள் எளிதாக போட்டியிட முடியும்.

*உள்நாட்டு உற்பத்தித் துறைக்கு ஊக்கம் கிடைக்கலாம்.

சீன யுவானை விடவும் குறைந்த மதிப்பீடு!

அமெரிக்காவின் 'சென்ட் லூயிஸ் ஃபெடரல் ரிசர்வ் வங்கி' வெளியிட்ட (RBEER- Real Broad Effective Exchange Rate) தரவுகளின்படி:

நவம்பர் 2024-ல் சீன யுவானின் RBEER குறியீடு 92.16 ஆக இருந்தது. அது இந்திய ரூபாயை விடக் குறைந்த மதிப்பீட்டில் இருந்ததால், உலக வர்த்தகத்தில் இந்தியாவை விட அதிகப் போட்டித்தன்மையுடன் இருந்தது.

ஆனால், ஜூன் 2026 நிலவரப்படி யுவானின் குறியீடு 92.24 ஆகவும், இந்திய ரூபாயின் குறியீடு 90.15 ஆகவும் உள்ளது. இதன் மூலம், இன்று இந்திய ரூபாய் சீன யுவானை விட அதிகச் சந்தைப் போட்டித்தன்மை கொண்ட (More Undervalued) நாணயமாக மாறியுள்ளது.

இனி என்ன நடக்கும்?

ரூபாய் மீண்டும் வலுப்பெற்று தனது "நியாயமான மதிப்பு" (REER 100) நிலையை அடையுமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அது மேற்கு ஆசியாவில் பதற்றம் குறைவது, கச்சா எண்ணெய் விலை நிலைபெறுவது, சர்வதேச கப்பல் போக்குவரத்து சீராக இயங்குவது மற்றும் புதிய சர்வதேச வர்த்தக பதற்றங்கள் உருவாகாதது போன்ற காரணிகளைப் பொறுத்தே அமையும்.

எனினும், தற்போது ரூபாய் உலக சந்தையில் அதிக போட்டித்திறன் பெற்ற நாணயமாக மாறியிருப்பது இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதனால் இந்தியாவின் ஏற்றுமதி உண்மையில் அதிகரிக்குமா, உள்நாட்டு உற்பத்தி இறக்குமதிக்கு எதிராக மேலும் வலுப்பெறுமா என்பது வரும் மாதங்களில் தான் தெளிவாக தெரியவரும்.

source https://tamil.indianexpress.com/explained/indian-rupee-depreciation-rupee-vs-dollar-exchange-rate-indian-rupee-value-rupee-vs-yuan-comparison-12208337

டாஸ்மாக் முறைகேடு: வழக்கு; வெளியான எஃப்.ஐ.ஆர்

 

30 07 2026

TASMAC malpractice allegations DVAC case against 7 including senthil balaji Visakan IAS Tamil News

டாஸ்மாக் நிறுவன முறைகேடு வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீதான எஃப்.ஐ.ஆர் வெளியாகி இருக்கிறது.

தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக (Disproportionate Assets) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மேலும் நான்கு நபர்கள் மற்றும் சில மதுபான ஆலை நிறுவனங்களும் (Distillery Companies) சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

கரூர்,சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொடர்புடைய இடங்கள் மற்றும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சோதனை நடைபெறுகிறது. கரூரில் செந்தில் பாலாஜி வீடு, நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை கல்லாக்கோட்டையில் கால்ஸ் தனியார் மதுபான ஆலை, சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவனம் தொடர்புடைய இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோல், கோவை மாவட்டத்தின் பீளமேடு, பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன்பாளையம், நவகரை ஆகிய 4 டாஸ்மாக் கிடங்குகள் மற்றும் மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புச் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், மன்னார்குடியில் அமைந்துள்ள தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்குப் பதிவு - வெளியான எஃப்.ஐ.ஆர்

இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகவும், மதுபான ஆலைகளிடம் பார்ட்டி பண்ட் என்ற பெயரில் பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட 7 பேர் மீது தனியாக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், டாஸ்மாக் நிறுவன முறைகேடு வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீதான எஃப்.ஐ.ஆர் வெளியாகி இருக்கிறது. இதில் முதல் குற்றவாளியாக செந்தில் பாலாஜியும், 2-வது குற்றவாளியாக ஐ.ஏ.எஸ் விசாகனும் சேர்க்கப்பட்டுள்ளனர்.  டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகள் ராமதுரை, பன்னீர் செல்வம் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

2020 முதல் 2025 ஆம் ஆண்டு வரை குற்றம் நடந்ததாகவும், விதிமுறைகளைப் பின்பற்றாமல் அதிகாரிகளுடன் சேர்ந்து ரூ.17.27 கோடி முறைகேடு செய்ததாகவும், ஊழல் தடுப்பு சட்டம் உள்பட 9 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், எப்.ஐ.ஆரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்கள் வருமாறு:- 

1) முன்னாள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, 

2)  டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன், ஐ.ஏ.எஸ். 

3) டாஸ்மாக் முன்னாள் மூத்த மண்டல மேலாளர் டி. ராமதுரை முருகன் 

4) டாஸ்மாக் முன்னாள் மூத்த மண்டல மேலாளர் ஆர். பன்னீர் செல்வம்

5) முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தனிப்பட்ட உதவியாளர் பாஸ்கர் 

6)  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி ரதேஷ் ராஜ்

7) மூலனூர் கார்த்திக் என்ற எஸ். கார்த்திக், மற்றும் மதுபான ஆலை/பீர் தயாரிப்பு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், பாட்டிலிடும் நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் அடையாளம் தெரியாத பிற அரசு ஊழியர்கள் மற்றும் பிறர்.


spurce https://tamil.indianexpress.com/tamilnadu/tasmac-malpractice-allegations-dvac-case-against-7-including-senthil-balaji-visakan-ias-tamil-news-12209592

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கு: ‘மன்மோகன் சிங் குற்றமற்றவர்’: ‘க்ளீன் சிட்’ சான்றளித்தது சுப்ரீம் கோர்ட்

 Manmohan Singh

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

எழுதியவர்: அனந்தகிருஷ்ணன் ஜி

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில் மன்மோகன் சிங்கிற்கு விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பி பத்தாண்டுகளுக்கு மேலான நிலையில், மறைந்த முன்னாள் பிரதமருக்கு இந்த விவகாரத்தில் விலக்கு அளித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) தாக்கல் செய்த வழக்கை முடித்து தாக்கல் செய்த அறிக்கைகளை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ஏற்றுக்கொண்டது.

இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்பி ஏப்ரல் 1, 2015-ல் விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்தது. சி.பி.ஐ-யின் வழக்கை முடிக்கும் அறிக்கையை நிராகரிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு எந்த நியாயமும் இல்லை என்று கூறிய நீதிமன்றம், வழக்கு விசாரணையை முடித்து வைத்தது. மன்மோகன் சிங் டிசம்பர் 26, 2024-ல் காலமானார்.

"எதிர்க்கப்பட்ட உத்தரவின் மூலம், கற்றறிந்த சிறப்பு நீதிபதி, மேல்முறையீட்டாளர் டாக்டர் மன்மோகன் சிங் உட்பட 6 பேருக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். சி.பி.ஐ விசாரணைக்குப் பிறகு வழக்கை முடிக்க அறிக்கைகளைத் தாக்கல் செய்து, மேல்முறையீட்டாளருக்கு குற்றமற்றவர் என 'க்ளீன் சிட்' சான்றளித்தது. இருப்பினும், கற்றறிந்த நீதிபதி இந்த வழக்கு முடிப்பு அறிக்கைகளை நிராகரித்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்" என்று நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

மன்மோகன் சிங்கிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கண்டறிந்த சி.பி.ஐ, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் 2014-ல் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு முடிப்பு அறிக்கைகளைத் தாக்கல் செய்தது. இருப்பினும், சிறப்பு நீதிபதி அந்த அறிக்கைகளை நிராகரித்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, மார்ச் 2015-ல் மன்மோகன் சிங் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார்.

மன்மோகன் சிங்கின் வழக்கறிஞர்கள் கூறியது:

நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் உள்ளடக்கிய இந்த அமர்வு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்குகள் தொடர்பான மனுக்களை விசாரித்துக் கொண்டிருந்தபோது, மன்மோகன் சிங் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மறைந்த முன்னாள் பிரதமர் மீதான வழக்கைக் குறிப்பிட்டார்.

மன்மோகன் சிங்கின் மறைவுக்குப் பிறகு இந்த விவகாரம் பயனற்றதாகிவிட்ட போதிலும், அவருக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் நீக்கப்பட வேண்டும் என்று கபில் சிபல் கூறினார்.

மன்மோகன் சிங் சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞரான ஏ.எம்.சிங்வியும், அந்தக் கருத்துக்களை நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

"மேல்முறையீட்டாளரின் துரதிர்ஷ்டவசமான மறைவு காரணமாக, இந்த மேல்முறையீடு பயனற்றதாக தள்ளுபடி செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், கற்றறிந்த சிறப்பு நீதிபதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது மற்றும் மேல்முறையீட்டாளருக்கு சம்மன் அனுப்பிய அம்சத்தைக் கருத்தில் கொள்ளும் நோக்கில், சி.பி.ஐ தாக்கல் செய்த இரண்டு வழக்கு முடிப்பு அறிக்கைகளையும் நாங்கள் பரிசீலித்தோம்" என்று நீதிமன்றம் கூறியது.

மேலும், "விசாரணை அமைப்பின் அறிக்கைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக இந்த நீதிமன்றம் தொடர்ந்து வகுத்துள்ள தொடர்புடைய அளவுகோல்களைக் கருத்தில் கொண்டு, சி.பி.ஐ-யின் முடிப்பு அறிக்கைகளை கற்றறிந்த நீதிபதி நிராகரிப்பதற்கும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கும் எந்தக் காரணமும் இல்லை என்பதில் நாங்கள் திருப்தியடைகிறோம்" என்றும் தெரிவித்தனர்.



source https://tamil.indianexpress.com/india/sc-gives-clean-chit-to-manmohan-singh-coal-block-allocation-case-12208800

புதன், 29 ஜூலை, 2026

மனித குல விரோதிகள்

 


போராடாதவர் மீது FIR

 


















Credit Sun News