ஞாயிறு, 12 ஜூலை, 2026

ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்

 

ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல் 11 7 2026 

hor

மத்திய கிழக்குப்பகுதியில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. அமெரிக்காவுடன் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடியோடு அசைத்துப் பார்க்கும் வகையில், சர்வதேச வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளது. அனுமதிக்கப்படாத பாதையில் சென்ற கப்பல் மீது ஈரான் ராணுவம்  துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்கா தனது மூன்றாவது சுற்று வான்வழித் தாக்குதலை ஈரான் மீது தொடங்கியுள்ளது.

ஈரான் ஜலசந்தியில் நடந்தது என்ன?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடக்கிறது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் எச்சரிக்கைகளையும் வழிகாட்டுதல்களையும் மீறி மாற்றுப் பாதையில் சென்ற சைப்ரஸ் நாட்டுச் சரக்குக் கப்பல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அந்தக் கப்பலின் எஞ்சின் அறை பலத்த சேதமடைந்ததுடன், ஒரு மாலுமியும் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஈபோர் தொடங்கியதிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தி தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்றும், அதன் வழியே செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிப்போம் என்றும் ஈரான் பிடிவாதம் காட்டி வருகிறது. இப்போது மறு உத்தரவு வரும் வரை இந்த ஜலசந்தி முழுமையாக மூடப்படும் என அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் உக்கிரமான பதிலடி

ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், "ஈரான் தவறான முடிவை எடுத்துவிட்டது, அதற்கான விலையை இப்போது அவர்கள் செலுத்துகிறார்கள்" என எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் உத்தரவின் பேரில், ஈரானின் கடற்கரை நகரங்களான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) மற்றும் சிரிக் (Sirik) ஆகிய இடங்களில் அமெரிக்கா குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "1000 ஏவுகணைகள் தயார் நிலையில்  ஈரானை நோக்கி குறிவைக்கப்பட்டுள்ளன" என சமூக வலைத்தளத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த மாதம் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக அறிவித்தாலும், பேச்சுவார்த்தைகளைத் தொடரத் தயார் எனக் கூறியுள்ளது.

 பழிவாங்கத் துடிக்கும் புதிய சுப்ரீம் லீடர்

ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது இறுதிச்சடங்கிற்குப் பிறகு, ஈரானின் புதிய உச்சத் தலைவராக பொறுப்பேற்றுள்ள அவரது மகன் மொஜ்தபா கமேனி தனது முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தனது தந்தையைக் கொன்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை நிச்சயமாகப் பழிவாங்குவோம் என்றும், அதுவே ஈரான் மக்களின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

source https://tamil.indianexpress.com/international/iran-shuts-hormuz-after-attack-on-unauthorised-ship-read-full-story-12156075

பூ குவாக் (Phu Quoc) தீவு அருகே, இந்திய சுற்றுலாப் பயணிகள்,சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

 வியட்நாம் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான பூ குவாக் (Phu Quoc) தீவு அருகே, 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 3 ஊழியர்களுடன் சென்ற படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோரச் சம்பவத்தில் தமிழர்கள் உட்பட 18 இந்திய பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்களில் 12 பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த இருவர், எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என திருச்சியைச் சேர்ந்த 3 பேர் அடங்குவர். மேலும், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஒருவரும் இதில் பலியாகியுள்ளார். காணாமல் போன மற்ற பயணிகளைத் தேடும் பணி கடற்படையினரால் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படகில் பயணித்த 32 இந்தியர்களின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அதில் தமிழர்களின் பெயர்களே அதிகமாக இடம்பெற்றுள்ளன. விபத்துக்குள்ளான படகில் மொத்தம் 10 தமிழர்கள் இருந்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் முழுமையான விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' (X) சமூகவலைதளப் பதிவில், இந்திய சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்த சம்பவம் துயரமளிக்கிறது. மீட்புப் பணிகள் தொடர்வதால், சம்பவம் குறித்த துல்லியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் உதவிகளை வழங்க அவசரக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்; தூதரகக் கட்டுப்பாட்டு அறை +84 36 281 7930, +84 91 552 37 14, +84 33 452 0414

ஹனோய் கட்டுப்பாட்டு அறை: +84 91 308 9165 பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக இந்தியத் தூதரகம் உறுதியளித்துள்ளது. ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்குச் சென்றபோது நிகழ்ந்த இந்த விபத்தில், உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 8 பேரும் திண்டுக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tragedy-in-vietnam-18-indian-tourists-including-3-from-trichy-die-as-boat-capsizes-near-phu-quoc-island-12155277

நேரலை விவகாரம்: பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்

 10 07 2026

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணிக்கான பணி ஆணைகளை வழங்குவதற்காகக் கரூர் சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய், அங்கு நடைபெற்ற நிகழ்வில் ஆளும்கட்சியான தி.மு.கவைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். இந்நிலையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசுப் பள்ளி ஒன்றில், ஜோசப் விஜய்யின் அரசியல் பேச்சை மாணவர்களுக்கு வகுப்பறையில் நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்வுகளுக்கோ அல்லது கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கோ இடமில்லை; இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எச்சரித்திருந்தார். தற்போது இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள அமைச்சர் ராஜ்மோகன், அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, எந்தவொரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களுக்குள் மாணவர்களுக்குக் காட்டக் கூடாது. தன்னிச்சையாக முடிவெடுத்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நிகழ்வை நேரலை செய்து மாணவர்களுக்குத் திரையிட்டது முற்றிலும் தவறான செயலாகும்.

இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் விஜய்யின் அரசு சாரா அரசியல் பேச்சை நேரலை செய்த தலைமை ஆசிரியர் மல்லிகா இடைநீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார். தவெக கட்சி நிகழ்ச்சியை வகுப்பறையில் ஒளிபரப்பிய விவகாரத்தில், கரூர் மதனந்தபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசுப் பள்ளிகளில் விதிமுறைகளை மீறி அரசியல் நிகழ்வுகளை நேரலை செய்யும் ஆசிரியர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனத் துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/strict-action-in-karur-tvk-live-broadcast-in-classrooms-two-govt-school-headmistresses-suspended-in-karur-12155679 

சனி, 11 ஜூலை, 2026

1950-க்குப் பிறகு மிக மோசமான 'எல் நினோ':

 

10 07 2026

El Nino 2026 Impact on Indian Monsoon

1950-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த எல் நினோ? இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? மழை ஏன் குறையலாம்?

எழுதியவர்: Anjali Marar

பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு வேகமாக வலுப்பெற்று வருகிறது. இது 1950-க்குப் பிறகு பதிவான மிக வலுவான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக மாறும் வாய்ப்பு 81% உள்ளது என்று அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வியாழன் இரவு வெளியிடப்பட்ட மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கை இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், எல் நினோ உருவாகும் ஆண்டுகளில் இந்திய தென்மேற்கு பருவமழை பலவீனமடைவது வழக்கம். இந்த ஆண்டும் அதே நிலை உருவாகலாம் என்ற கவலை வானிலை ஆய்வாளர்களிடையே அதிகரித்துள்ளது.


எல் நினோ என்றால் என்ன?

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் நடுப்பகுதி மற்றும் கிழக்குப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் இயற்கை காலநிலை நிகழ்வு. இது என் சோ (ENSO: El Niño Southern Oscillation) எனப்படும் கடல்-வளிமண்டல சுழற்சியின் ஒரு கட்டமாகும்.

இதற்கு எதிர்மறையான கட்டமே லா நினா (La Niña). இந்த இரண்டு நிகழ்வுகளும் உலகம் முழுவதும் மழை, வெப்பநிலை, வறட்சி, வெள்ளம், வெப்ப அலை போன்ற காலநிலை மாற்றங்களை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.

எல் நினோ உலகளவில் வெப்பநிலையை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இந்தியாவில் இதன் முக்கிய தாக்கம் மழைப்பொழிவை குறைப்பது.

இந்தியாவுக்கு ஏன் இது கவலை?

இந்த ஆண்டு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஏற்கனவே எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். அதற்கான முக்கிய காரணமாக உருவாகி வரும் எல் நினோ குறிப்பிடப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஜூலை 9 வெளியிட்ட வாராந்திர கணிப்பில், ஜூலை 22 வரை நாட்டில் சராசரியை விட சற்றுக் குறைவான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான், தெலங்கானாவின் சில பகுதிகள், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் வடக்கு உள்கர்நாடகத்தின் சில இடங்களில் இயல்பான மழை பெய்யலாம் என்றாலும், நாட்டின் பல பகுதிகளில் மழை குறையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவின் ஆண்டு மழைப்பொழிவில் மிகப்பெரிய பங்கை வழங்கும் ஜூலை மாதத்தில் மழை குறைவது, எல் நினோவின் முதல் வெளிப்படையான தாக்கமாக இருக்கலாம் என்று வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த மாத மழை, நீண்டகால சராசரியின் 94 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று IMD கணித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் நிலைமை உதவுமா?

பொதுவாக, இந்தியப் பெருங்கடல் டைபோல் (Indian Ocean Dipole - IOD) நேர்மறை நிலையில் இருந்தால், எல் நினோவின் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும்.

ஆனால் இந்த பருவத்தில் டைபோல் நடுநிலை (Neutral) நிலையில் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், எல் நினோவின் தாக்கத்தை சமநிலைப்படுத்தும் வாய்ப்பு தற்போது மிகவும் குறைவாகவே இருப்பதாக கருதப்படுகிறது.

எல் நினோ எவ்வளவு வலுவாக உள்ளது?

பசிபிக் பெருங்கடலில் உள்ள Niño 3.4 என்ற குறிப்பிட்ட பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலையை வைத்து எல் நினோவின் வலிமை கணிக்கப்படுகிறது.

0.5 டிகிரி செல்சியஸை கடந்தால் எல் நினோ அறிவிக்கப்படும்.
1.5 டிகிரி செல்சியஸை கடந்தால் வலுவான (Strong) எல் நினோ.
2 டிகிரி செல்சியஸை கடந்தால் மிகவும் வலுவான (Very Strong) எல் நினோ என வகைப்படுத்தப்படுகிறது.

தற்போது Niño 3.4 குறியீடு 1.2 டிகிரி செல்சியஸை ஆக உள்ளது. இது இன்னும் மிதமான நிலையில் இருந்தாலும், வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA)  கணித்துள்ளது.

அதன் சமீபத்திய அறிக்கையின்படி, 2026 இறுதிக்குள் இது மிகவும் வலுவான எல் நினோவாக மாறும் வாய்ப்பு 81 சதவீதம் உள்ளது. மேலும், 2027-ஆம் ஆண்டு வசந்த காலத்தின் தொடக்கப் பகுதி வரை இது நீடிக்கும் வாய்ப்பு 97 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-16 'காட்ஸில்லா' எல் நினோ மீண்டும் வருகிறதா?

சமீப காலங்களில் உலகம் கண்ட மிக வலுவான எல் நினோ 2015-16 காலகட்டத்தில் ஏற்பட்டது. அதற்கு "காட்ஸில்லா" (Godzilla) என்று பெயரிடப்பட்டது.

2014 முதல் 2016 வரை நீடித்த இந்த நிகழ்வு உலகளவில் பல வெப்பநிலை சாதனைகளை முறியடித்தது. அப்போது Niño 3.4 வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ்க்கும் மேல் நான்கு மாதங்களுக்கு மேலாக நீடித்தது.

இந்தியாவிலும் அதன் தாக்கம் கடுமையாக இருந்தது. 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகள், இந்த நூற்றாண்டில் மிகவும் வறண்ட நான்கு ஆண்டுகளில் இரண்டாக பதிவாகின. அந்த ஆண்டுகளில் பருவமழை, இயல்பான அளவின் 90 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது.

இதற்கு முன்பு 1982-83, 1991-92, 1997-98 ஆகிய ஆண்டுகளிலும் மிகவும் வலுவான எல் நினோ நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

source https://tamil.indianexpress.com/india/el-ni%C3%B1o-2026-impact-of-el-ni%C3%B1o-on-indian-monsoon-12152076

புதுச்சேரி ஏனாம் கோதாவரி ஆற்றில் இறந்து மிதந்த மீன்கள்; காரணம்?

 

godavari fish

புதுச்சேரி ஏனாம் பகுதி கோதாவரி ஆற்றில் லட்சக்கணக்கான கானகார்த்தி மீன்கள் இறந்து மிதக்கின்றன. ஜே.சி.பி மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இறந்த மீன்களை உரத்திற்கு பயன்படுத்த பொதுமக்கள் அள்ளிச் செல்கின்றனர்.

இன்று புதுச்சேரி ஏனாம் (Yanam) பகுதியிலுள்ள கௌதமி கோதாவரி ஆற்றில், உப்பு நீரில் வாழும் 'கனகார்த்தி' (Kanagarthi) வகை மீன்கள் லட்சக்கணக்கில் உயிரிழந்தன. வங்காள விரிகுடாவிலிருந்து கோதாவரி ஆற்றுக்கு இந்த வகை மீன்கள் வருகின்றன. கோதாவரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படவுள்ளது.

ஏனாம் பகுதியிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள டவ்லேஸ்வரம் (Dowleswaram) அணையிலிருந்து, வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் ஒரு லட்சம் கியூசெக்குகளுக்கும் அதிகமான நீர் வங்காள விரிகுடாவில் திறந்துவிடப்பட்டது. தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், வெள்ளிக்கிழமை இன்று காலை முதல் ஏனாம் பகுதியில் நீரின் உப்புத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டது.

இதன் விளைவாக ஆற்றங்கரையில் கனகார்த்தி மீன்கள் உயிரிழக்கத் தொடங்கின. உயிரிழந்த மீன்கள் ஆற்றங்கரையோரம் மிதந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் ஐந்து கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் துர்நாற்றம் வீசுகிறது. சில மீனவர்கள், மற்ற வகை மீன் வளர்ப்பிற்கான உணவாகப் பயன்படுத்துவதற்காக இந்த இறந்த மீன்களைச் சேகரிக்கின்றனர். ஜே.சி.பி மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இறந்த மீன்களை உரத்திற்கு பயன்படுத்த பொதுமக்கள் அள்ளிச் செல்கின்றனர்.

கடல் மீன்கள் ஆற்றுக்கு வரும்போது, நீரின் தன்மையில் ஏற்படும் மாற்றங்களால் அவை உயிரிழக்க நேரிடும் என்று ஏனாம் மீன்வளத் துறை உதவி இயக்குநர் டடலா கோண்டய்யா (Dadala Gonteyya) தெரிவித்தார். 

இதற்கு நீரின் உப்புத்தன்மை மாற்றமே முக்கிய காரணமாகும். கடந்த ஆண்டும் வெள்ளப்பெருக்குக் காலத்திற்கு முன்னதாக இதே போன்றதொரு நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

source https://tamil.indianexpress.com/india/puducherry-yanam-godavari-river-lakhs-of-fishes-died-photos-12152431

ஆந்திராவுக்குப் போகிறதா ரூ.38,000 கோடி ஹூண்டாய் முதலீடு?” – அரசுக்கு கடும் கண்டனம்

 தமிழகத்தில் 1990-களில் இருந்து தொழில் செய்து வரும் ஹூண்டாய் நிறுவனம், தற்போதைய தவெக அரசின் மீதான நம்பிக்கையின்மையால் தனது ரூ. 38,000 கோடி புதிய முதலீடு தொடர்பாக ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தைச் சரியாக நிர்வகிக்காமல் சீரழித்து வரும் தற்போதைய 'அனுபவமில்லாத' அமைச்சரவையே இதற்கு முதன்மைக் காரணம் என்றும் அவர் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பான பேச்சுவார்தை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. 

ஏற்கனவே இந்நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 38,000 கோடி மதிப்பிலான முதலீடு செய்யவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்நிறுவன முதலீடு நம் மாநிலத்தின் கைவிட்டு போகக்கூடிய ஒரு அச்சமான சூழல் உள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் 1990-களில் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்துள்ள நிறுவனம். அது இன்னொரு மாநிலத்தை தற்போது நாடுவது என்பதே, இன்றைய தவெக அரசு எப்படிப்பட்ட நம்பிக்கைக்கு பாத்திரமற்ற அரசாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

இதற்கு மூலக் காரணம், மாண்புமிகு அம்மா அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசு துவங்கிய தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை நிறுவனத்தை முறையாக நிர்வகிக்காமல், அதன் செயல்பாடுகளை மழுங்கடிக்கும் நோக்கில் இன்றைய தவெக அரசு செயல்படுவது தான்! 

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை நிறுவனத்தில் இருந்து 10 அதிகாரிகள் பதவி விலகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் முதலீடுகளை பாதிக்கும் என்பதை இந்த அரசு கொஞ்சமாவது உணர்கிறதா?

Amateur (அனுபவமில்லாத) அமைச்சரவையின் Immature (முதிர்ச்சியற்ற) அமைச்சராக உள்ள இன்றைய தொழில்துறை அமைச்சர், இன்னொரு ரீல் வெளியிட்டால் இந்த நிறுவனம் வந்துவிடும் என நினைத்தால், அப்படிப்பட்ட எண்ணத்தின் முட்டாள்தனத்தை விவரிக்க வார்த்தையே இல்லை.

உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்தோடு பேச்சுவார்தையை FastTrack (விரைவாக) செய்து அவர்களின் முதலீடை உறுதி செய்யவேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/eps-slams-tvk-govt-over-hyundai-38000-crore-investment-issue-12153440

முக்தார், திருச்சி சூர்யா மீது குண்டர் சட்டம் ஏன்? தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

 

Trichy Surya and Mukhtar detained under Goondas Act Tamil News

பா.ஜ.க நிர்வாகிக்கு எதிராக அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கைது செய்யப்பட்ட யூடியூபர் முக்தார் அகமது மற்றும் அரசியல் விமர்சகர் திருச்சி சூர்யா ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனுக்கள் குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களை நேற்று (ஜூலை 10) விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது குறித்து சென்னை காவல்துறை தங்கள் பதில் மனுக்களைத் (counters) தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

திருச்சி சூர்யா மற்றும் முக்தார் ஆகியோர் தனக்கு எதிராக அவதூறான, பாலியல் ரீதியான மற்றும் அவமதிக்கும் வகையிலான கருத்துகளைத் தெரிவித்ததாக பா.ஜ.க.வின் முன்னாள் பெண் நிர்வாகி ஒருவர், மாநகர காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகார் அளித்த மறுநாளான ஜூன் 4 அன்று திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டார். பின்னர், ஜூன் 9 அன்று மைசூரில் முக்தாரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முக்தார் அகமது மற்றும் திருச்சி சூர்யா சிவா ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவர் மீதும் சென்னை காவல்துறை ஜூன் 16 அன்று குண்டர் சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்து, அவர்களை முன்னெச்சரிக்கை காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்தத் தடுப்புக் காவல் உத்தரவுகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், நடைமுறை குறைபாடுகள் அல்லது இந்த உத்தரவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று வாதிடப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-notice-to-police-for-preventive-detention-of-youtuber-12153611

கனிமவளத்துறை துணை இயக்குநர் - இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  கனிமவளத் துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர்  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்குவாரிகள் மற்றும் கனிமவளப் பிரிவுகளில் தொடர்ச்சியாகத் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

அமைச்சர்  நடத்திய இந்த அதிரடி சோதனைகளின் போது, பல குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாகக் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதும், கல்குவாரிகளில் விதிகளுக்குப் புறம்பாக அதிக அளவில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தவறிழைத்தவர்கள் மீது உடனுக்குடன் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான அடுத்தகட்ட முக்கிய நடவடிக்கையாகத் தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களின் கனிம வளம் மற்றும் இயற்கை வளங்கள் துறை சார்ந்த 27 மாவட்ட அதிகாரிகளை ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்து அமைச்சர்  தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவின்படி: சிவகங்கை மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குநர் பன்னீர்செல்வம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவரைப் போன்றே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், அரியலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 27 மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவள அதிகாரிகள் அனைவரும் உடனடியாக வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டு, அதற்கான புதிய பணி ஒதுக்கீட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதற்குத் துணை போகும் அதிகாரிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

10 07 2026

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-transfers-27-district-mineral-resource-officers-cm-vijay-action-12153032

31 பேருக்கு அரசுப் பணி - கரூர்

 

10 7 2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தார்கள். இது தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்காக முதலமைச்சர்  இன்று கரூர் வந்தார். இதற்கிடையே, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக்கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையும் இன்று நடைபெற்றது. அவர்களுக்கு தற்காலிக பணி வழங்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-vijay-karur-visit-live-update-in-tamil-12150331

ரூ. 25000 கோடி மதிப்பிலான கோவில் நிலங்களை தாரை வார்ப்பதா? தமிழக அரசுக்கு கண்டனம்

 

கரூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 3084 ஏக்கர் கோவில் நிலத்தை, மாவட்ட அலுவலகப் பரிந்துரையுடன் அவசர அவசரமாக பட்டா போட்டுத் கொடுத்துள்ளனர். முதல்வர் ஜோசப் விஜய் இந்து கோவில்களின் நிலங்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதைச் செய்துள்ளார். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் உறுதுணையாக இருந்துள்ளார். இந்து கோவில் நிலங்களை முறைகேடாக பட்டா போட்டுக்கொடுத்த தமிழக அரசின் இந்தச் செயலை  வன்மையாகக் கண்டிக்கிறது. 

10 07 2026

பி.ரஹ்மான், கோவை 

source https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-leader-nainar-nagendran-condemns-vijay-tvk-govt-hrce-for-temple-land-issue-12152849

வெள்ளி, 10 ஜூலை, 2026

தமிழ்நாட்டின் 11, 12-ஆம் நூற்றாண்டு சிலைகள்: இந்தியாவிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலியா சம்மதம்

 


antiquities

ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்த, 11 மற்றும் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்நாட்டின் மூன்று தொல்பொருட்கள் இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்படத் தயாராக உள்ளன.

Divya A

பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய ஆஸ்திரேலியப் பயணத்தின் போது நடைபெற்ற இந்திய-ஆஸ்திரேலிய உச்சிமாநாட்டின் முடிவுகளில் இந்தத் தொல்பொருட்கள் மீட்பும் ஒன்றாகும். தனது பங்கிற்கு, சென்னை அரசு அருங்காட்சியகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய பூர்வகுடி மூதாதையர் ஒருவரின் எச்சங்களைத் திருப்பி அனுப்ப இந்தியா உறுதியளித்துள்ளது.

இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, விரைவில் இந்தியாவுக்குத் திரும்பவிருக்கும் தொல்பொருட்களில் சிவபெருமானின் வாகனமான நந்தியின் கற்சிலை (11 முதல் 12-ம் நூற்றாண்டு); பத்ரகாளி உருவம் கொண்ட உலோகத்திலான திரிசூலம் (11-ம் நூற்றாண்டு); மற்றும் கல்லைச் செதுக்கி செய்யப்பட்ட ஆறு முகங்களைக் கொண்ட கார்த்திகேயர் சிலை (12-ம் நூற்றாண்டு) ஆகியவை அடங்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பொருள்கள் ஆஸ்திரேலிய தேசிய கலைக்கூடம் (National Gallery of Australia) மற்றும் நியூ சவுத் வேல்ஸ் கலைக்கூடம் (Art Gallery of NSW) ஆகியவற்றின் சேகரிப்புகளின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டிருந்தன. அதிகாரிகளின் கூற்றுப்படி, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சி.ஐ.டி மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, அவற்றின் தோற்றம் மற்றும் பின்னணி சரிபார்க்கப்பட்ட பின்னரே இந்தத் தொல்பொருட்கள் தாயகம் திருப்பப்படுகின்றன.

அவை தமிழ்நாட்டின் கோயில்களில் இருந்து அகற்றப்பட்டு, வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டது காலப்போக்கில் உறுதி செய்யப்பட்டது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நாட்டிற்கு கொண்டுவரப்படும்.

வியாழக்கிழமை நடைபெற்ற பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆற்றிய கூட்டு உரையின் போது, இரு நாட்டுப் பிரதமர்களும் இந்த கலாச்சார கலைப்பொருட்களை இந்தியாவுக்குத் தன்னார்வத்துடன் திருப்பித் தருவதை வரவேற்றனர்.

தனியான ஒரு அறிக்கையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸின் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது: "இந்தத் தன்னார்வத் திருப்பங்கள், கலாச்சாரப் பொருட்களை நெறிமுறைப்படி சேகரிப்பதிலும் மற்றும் சிறந்த சேகரிப்பு மேலாண்மையிலும் சர்வதேச அளவில் முன்னணியில் இருப்பதற்கான ஆஸ்திரேலியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன."

இந்தியா-ஆஸ்திரேலியா ஆண்டு உச்சிமாநாட்டிற்குப் பிறகு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இரு பிரதமர்களும் "பரஸ்பர புரிதலைத் தொடர்ந்து ஆழமாக்கும் வளர்ந்து வரும் கலாச்சார பரிமாற்றங்களைக் குறிப்பிட்டனர் மற்றும் ஆஸ்திரேலிய நிறுவனங்களால் வைக்கப்பட்டிருந்த பல கலாச்சார கலைப்பொருட்களை இந்தியாவுக்குத் தன்னார்வத்துடன் திருப்பித் தருவதை வரவேற்றனர்" என்று கூறியுள்ளது.

அல்பானிஸ், "சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய பூர்வகுடி மூதாதையரின் (எச்சங்களை) திருப்பி அனுப்புவதற்கான முன்னேற்றத்தையும் வரவேற்றார். இந்த மூதாதையரின் எச்சங்கள் இந்தியாவால் அவர்களின் பாரம்பரிய பாதுகாவலர்களிடம் தன்னார்வத்துடனும் நிபந்தனையின்றியும் திருப்பி ஒப்படைக்கப்படும்," என்று அவரது அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.

ஒரு மானுடவியல் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, 1935-ம் ஆண்டில் எப்போதோ ஒரு நேரத்தில் சென்னை அரசு அருங்காட்சியகம் இந்த பூர்வகுடி மூதாதையரின் மண்டையோட்டைப் பெற்றதாக நம்பப்படுகிறது. பூர்வகுடி மக்களின் தாயகமான ஆஸ்திரேலியா, சமீபத்திய ஆண்டுகளில் மூதாதையர்களின் எச்சங்கள் மற்றும் அவர்களின் புனிதப் பொருட்களைத் தாயகம் திருப்புவதில் கவனம் செலுத்தி வருகிறது.

"பூர்வகுடி மூதாதையர்களைத் திருப்பி அனுப்புவது என்பது குணப்படுத்துதல், நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது," என்று கூறிய அல்பானிஸ், "ஆஸ்திரேலிய பூர்வகுடி மூதாதையர்களை அவர்களின் பாரம்பரிய பாதுகாவலர்களிடம் திருப்பி அனுப்ப முடிவு செய்ததற்காகப் பிரதமர் மோடியைப் பாராட்டுகிறேன்" என்றும் மேலும் கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/tamil-nadu-antiquities-repatriation-australia-museum-pm-modi-visit-12149960

விடியல் வார்த்தை நீக்கம், - மாற்றம் இதுதானா?

 

விடியல் வார்த்தை நீக்கம்; வைகோவின் விமர்சனம்: அமைச்சர் வன்னி அரசு அதிரடி பதில்

கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னியரசு, மகளிர் இலவச பயண திட்ட பேருந்துகளில் விடியல் என்ற வார்த்தையை நீக்கியது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “எந்த அறிவிப்பும் இல்லாமல், அதைப் பற்றி அரைகுறையாக நான் பதில் சொல்லக்கூடாது” என்று கூறினார்.

திருமாவளவன் மீதான வைகோவின் விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் வன்னி அரசு, “ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மீது எப்போதுமே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மதிப்பு உண்டு, மரியாதை உண்டு. எங்களுடைய தலைவர் திருமாவளவன் கூறிய கருத்து என்பது வைகோ வருவதற்கு முன்பாகவே தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைப்பதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து இந்த ஐந்து ஆண்டுகளும் ஆட்சி எந்த விதமான தடையும் இல்லாமல் தொடர வேண்டும் என்ற அடிப்படையில் தான் நாங்கள் ஆதரவளித்திருக்கிறோம் என்று எங்களுடைய தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். அதனால். வைகோ இந்த மாதிரி பேசுவது ஏற்புடையது அல்ல, மிக முக்கியமாக அவரைப் போன்ற மூத்த தலைவரிடம் இருந்து இப்படியான கருத்துகள் வருவது என்பது வருத்தம் அளிக்கிறது” என்று கூறினார். 

9 7 26


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-politics-weather-and-chennai-news-karur-incident-case-live-updates-in-tamil-12147171

மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு; நெற்பயிர் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க விவசாயி கண்ணீர் மல்க கோரிக்கை

 

farmer ariyalur

அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே மும்முனை மின்சாரம் தட்டு பாட்டால் குறுவை நெற்பயிற்களைக் காப்பாற்ற கடைசி முயற்சியாக ட்ராக்டர் மூலம் விவசாயி தண்ணீர் பாய்ச்சும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே மும்முனை மின்சாரம் தட்டு பாட்டால் குறுவை நெற்பயிற்களைக் காப்பாற்ற கடைசி முயற்சியாக ட்ராக்டர் மூலம் விவசாயி தண்ணீர் பாய்ச்சும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயி தமிழக அரசு மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும் அதே போன்று காய்ந்த நெற் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயி சசிகுமார் கண்ணீர் மல்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குழவடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார்.‌ குறு விவசாயியான இவர் தற்போது 3 ஏக்கர் பரப்பளவில் குழவடையான் சித்தேரி அருகில் குறுவை நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார். இவரைப் போன்று 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்தப் பகுதியில் பயிரிட்டு உள்ளனர்.

மோட்டார் பாசனத்தை முழுமையாக நம்பி குறுவை பயிரிட்டு நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் சரியாக கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நெற்பயிருக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் காய்ந்து கருகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து பலமுறை விவசாயி சசிகுமார் அரசுக்கு கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

தொடர்ந்து மும்முனை மின்சாரம் தட்டுப்பாட்டால் அவரது விவசாய நிலங்கள் தண்ணீர் இன்றி நெற்பயிர்களானது முழுவதும் பாதிப்புக்குள்ளானது. 

ariyalur farmer 2

இந்த நிலையில் வாடிய நற்பெயர்களை கண்டு மனம் நொந்து போன விவசாயி சசிகுமார் தனது சொந்த செலவில் வாடகைக்கு பணம் கொடுத்து அதன் மூலம் ட்ராக்டர் வண்டியில் தண்ணீரை வரவழைத்து குழாய் மூலம்  தண்ணீரை ஊற்றி பயிர்களை காப்பாற்றுவதற்கு கடைசி முயற்சியில் விவசாயி சசிகுமார் ஈடுபட்டுள்ளார்.  அவரது முயற்சியை பார்த்த சக விவசாயிகள் மத்தியில் வேதனையை கிளப்பியுள்ளது.

அதேபோல் மும்முனை மின்சாரம் தட்டுப்பாட்டால் இவரைப் போன்று 50க்கும் மேற்பட்ட  சிறுகுறு விவசாயிகள் குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற முடியுமா? காய்ந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? என்றும், வாங்கிய விவசாய கடனை எப்படி அடைக்கப் போகிறோம் என்று பல்வேறு வேதனைக்கு உள்ளாகிய விவசாயிகள் பலரும்  என்ன செய்வதென்றே தெரியாமல் உள்ளனர். 

எனவே தமிழக அரசு உடனடியாக தட்டுப்பாடு இன்றி மும்மனை மின்சாரம் வழங்க வேண்டும் பாதிப்புக்கு உள்ளான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்துள்ளனர். 

பின்னர் இதுகுறித்து விவசாயி சசிகுமார் தெரிவிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டத்தில் குருவை சாகுபடி பயிரிட்டு வருகிறோம்.‌ எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு மும்முனை மின்சாரம் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறைந்த மின்னழுத்தம் மற்றும் மின்சார தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பதால் பழுது ஏற்பட்டும், அதேபோன்று குறிப்பிட்ட காலத்தில் நெற் பயிற்களுக்கு தண்ணீரை பாய்ச்ச முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறோம். இதை கருத்தில் கொண்டு தான் வாடகைக்கு டிராக்டர் மூலம் தண்ணீரை பாய்ச்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் இதில் கூடுதல் செலவு பல மடங்கு ஏற்பட்டுள்ளது.  

தற்போது பயிர்களை காப்பாற்ற முடியாது. அடுத்த சில நாட்களில் மின்சாரம் கொடுத்தால் ஏதோ ஓரளவாவது பயிர்களை காப்பாற்றலாம் என்ற நிலை இருக்கிறது. எனவே தமிழக அரசு மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும் அதே போன்று காய்ந்த நெற் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாய சசிகுமார் கண்ணீர் மல்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி


source https://tamil.indianexpress.com/tamilnadu/ariyalur-jayankondam-three-phase-electricity-shortage-paddy-crops-damaged-farmer-compensation-request-12150210

வியாழன், 9 ஜூலை, 2026

பாலைவனமாக மாறும் முக்கிய நகரங்கள்; அதிர வைக்கும் செயற்கைக்கோள் அறிக்கை

 us

இன்று அமெரிக்காவில் பிறந்து தவழும் குழந்தைகள் தங்களின் ஓய்வூதிய வயதை எட்டும்போது, அந்நாட்டின் முக்கிய நகரங்கள் இப்போது இருப்பது போல் இருக்காது என்று கூறப்படுகிறது. 'பியர் ஜே' (PeerJ) என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ள புதிய ஆய்வின்படி, உலகளாவிய பருவநிலை மாற்றம் அமெரிக்காவின் இயற்கை புவி அமைப்பையே தலைகீழாக மாற்றி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஓபன் எர்த் மானிட்டர் சைபர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்' (Open Earth Monitor Cyber infrastructure) திட்டத்தின் கீழ் செயல்படும் ஆராய்ச்சியாளர்கள், செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் மெஷின் லேர்னிங் (Machine - learning) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, 2080 -ஆம் ஆண்டிற்குள் அமெரிக்காவின் இயற்கை தாவர மண்டலங்கள் எப்படி மாறப்போகின்றன என்பதை வரைபடமாக்கியுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள், அமெரிக்காவின் மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகள் அதிவேகமாகப் பாலைவனமாக மாறி வருவதைக் காட்டுகின்றன.

1.82 லட்சம் சதுர மைல் பரப்பளவிற்குப் பரவும் பாலைவனம்

அமெரிக்காவின் மத்தியப் பகுதி வரும் ஆண்டுகளில் கடுமையான வெப்பத்துடனும், வறட்சியுடனும் காணப்படும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இங்குள்ள பசுமையான புல்வெளிகள் அழிந்து, காட்டுப் பூக்களுக்குப் பதிலாகப் பாலைவனப் புதர்கள் மட்டுமே முளைக்கும். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள அடர்ந்த ஈரப்பதமான காடுகள், கடுமையான வெப்பத்தைத் தாங்கக்கூடிய வறண்ட தாவரங்களாக மாறும். இதற்கிடையில் அரிசோனா, நியூ மெக்சிகோ மற்றும் தெற்கு கலிபோர்னியாவின் பாலைவனங்கள் டெக்சாஸ் மற்றும் கொலராடோ மாநிலங்களை நோக்கி வேகமாக விரிவடையும்.

இந்த ஆய்வின்படி, குளிர்ந்த கலப்பு காடுகள் மற்றும் ஊசியிலைக் காடுகள் மிக வேகமாக அழியும் அபாயத்தில் உள்ளன. அதே நேரத்தில், வறண்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் விஸ்வரூபம் எடுக்கும். அமெரிக்காவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் தற்போது 6 சதவீதமாக இருக்கும் பாலைவனப் பகுதி, இன்னும் அரை நூற்றாண்டில் கிட்டத்தட்ட 12 சதவீதமாக, அதாவது சுமார் 1,82,000 சதுர மைல் பரப்பளவிற்குப் பிரமாண்டமாக விரிவடையப் போகிறது. இது அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களைப் பாதிக்கப்போகிறது.

பாலைவனமாக மாறப்போகும் டாப் 10 அமெரிக்க நகரங்கள்

பேக்கர்ஸ்ஃபீல்டு, கலிபோர்னியா (Bakersfield, CA)

தற்போதைய மக்கள் தொகை 4 லட்சத்திற்கும் மேல் உள்ள இந்த நகரம், பசுமையான ஊசியிலைக் காடுகள் உள்ள இடத்திலிருந்து முற்றிலும் பாலைவனமாக மாறப்போகும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ரெனோ, நெவாடா (Reno, NV)

தற்போதைய மக்கள் தொகை 2.65 லட்சத்திற்கும் மேல் கொண்ட இந்த அழகிய காடுகள் நிறைந்த நகரம் பாலைவனமாக மாறவுள்ளது.

லான்காஸ்டர், கலிபோர்னியா (Lancaster, CA)

தற்போது புல்வெளிகளாக உள்ள 1.71 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரம் 50 ஆண்டுகளில் பாலைவனமாக மாற உள்ளது.

புவெப்லோ, கொலராடோ (Pueblo, CO)

1.11 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த பசுமைப் பகுதி வறண்ட நிலமாக மாறப்போகிறது.

ஸ்பார்க்ஸ், நெவாடா (Sparks, NV)

1.08 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரின் காடுகள் முற்றிலும் அழியும் அபாயத்தில் உள்ளன.

ரியோ ரான்ச்சோ, நியூ மெக்சிகோ (Rio Rancho, NM)

1.04 லட்சம் மக்கள் வாழும் இந்த நகரம் அடுத்த 50 ஆண்டுகளில் பாலைவன மண்டலமாக மாறும்.

கென்னவிக், வாஷிங்டன் (Kennewick, WA)

83 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் இந்த பசுமை நகரம் வறட்சியின் பிடியில் சிக்கவுள்ளது.

பாஸ்கோ, வாஷிங்டன் (Pasco, WA)

77 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்த நகரின் புவியமைப்பு முற்றிலும் மாறப்போகிறது.

கிராண்ட் ஜங்ஷன், கொலராடோ (Grand Junction, CO)

65 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் இந்த ஊசியிலைக் காடுகள் நிறைந்த பகுதி பாலைவனமாகும்.

ரிச்லாண்ட், வாஷிங்டன் (Richland, WA)

60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் இந்த புல்வெளிப் பிரதேசம், எதிர்கால சந்ததியினர் வாழ முடியாத பாலைவனமாக மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/international/shocking-news-these-10-us-cities-could-become-deserts-by-2080-read-full-story-12145031

துணை வேந்தர்கள் நியமனம்; ஆளுநரின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய ஏற்பாடுகளை முன் வைக்கும் விஜய் அரசு

 



தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் புதிய நடைமுறையைத் தமிழக அரசு முன்வைத்துள்ளதாகவும்   ஆளுநரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு, அவரின் விருப்பத்திற்கு ஏதுவாக இந்த புதிய ஏற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் தமிழச்சி தங்கப்பாண்டியன் சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது, " மரியாதைக்குரிய கழகத் தலைவர் அண்ணன் ஸ்டாலின் தலைமையிலான, திராவிட மாடல் ஆட்சியின் போது, நெடிய சட்டப்போராட்டம் நடத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சர் தான் இருக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பைப் பெற்றோம். அந்தச் சட்டத்தின் செல்லுபடியாக்கம் தொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், துணைவேந்தர்கள் தேடல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC -University Grants Commission) பிரதிநிதியை சேர்க்கும் நோக்கில், உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3-இல் இருந்து 5 ஆக உயர்த்துவது குறித்து பேசுவதும், அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு - உயர்கல்வித்துறை முன்னெடுப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.


உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்காமல், ஆளுநரின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய ஏற்பாடுகளை முன்வைப்பது - தமிழ்நாடு அரசின் சட்டநிலையையும், உயர்நீதிமன்றத்தில் அரசு முன்வைத்துள்ள வாதங்களையும் பலவீனப்படுத்தும். துணைவேந்தர்கள் தேடல் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தும் முயற்சியை உடனடியாக கைவிட்டு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கைத் திறம்பட நடத்தி, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில், திராவிட மாடல் ஆட்சியில், உச்சநீதிமன்றத்தில் நாம் பெற்ற வெற்றியை,  தமிழ்நாடு அரசின் - மாநில அரசுகளின் உரிமையை  நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கின்றேன். " என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 


8 7 2926

source https://tamil.indianexpress.com/tamilnadu/thamizhachi-thangapandian-opposes-tn-govt-move-on-vice-chancellor-search-committee-12146701

முதல் மழையிலேயே சேதமடைந்த ரூ. 7,000 கோடி மும்பை-புனே விரைவுச்சாலை திட்டம்: பின்னணி என்ன?

 


New Project (4)

எழுதியவர்: சபா விரானி 

மகாராஷ்டிர அரசோ இந்தச் சம்பவத்திற்குக் காரணம் மிகக் கடுமையான மழைப்பொழிவுதான் என்று கூறியுள்ள நிலையில், சாலையில் பாறைகளும் இடிபாடுகளும் விழுவதைத் தடுப்பதில் அங்கு ஏற்கனவே இருந்த பாதுகாப்பு வழிமுறைகள் தோல்வியடைந்துவிட்டன என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை - புனே விரைவுச்சாலையின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் பகுதியைச் சரிசெய்வதற்காக, தேவேந்திர ஃபட்நாவிஸ் அரசாங்கத்தின் லட்சியத் திட்டமாக ரூ. 6,695 கோடி செலவில் உருவாக்கப்பட்ட 'மிஸ்ஸிங் லிங்க்' திட்டம், செயல்பாட்டிற்கு வந்த இரண்டே நாட்களில் நிலச்சரிவால் பெரிய பாதிப்பைச் சந்தித்தது. இந்தத் துயரத்தைத் தடுத்திருக்க முடியாதா என்ற பரவலான கேள்வி தற்போது எழுப்பப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிராவில் பெய்த இடைவிடாத பருவமழையின் காரணமாகச் சாலைகள் அனைத்தும் காட்டாறுகளாக மாறிய நிலையில், கடந்த ஜூலை 6, திங்கட்கிழமை அன்று மும்பை - புனே விரைவுச்சாலையின் 2-வது சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த வழித்தடம் சுமார் 18 மணி நேரம் மூடப்பட்டது. இதன் விளைவாகப் போக்குவரத்து அனைத்தும் பழைய மும்பை - புனே நெடுஞ்சாலைக்குத் திருப்பி விடப்பட்டு, ஆயிரக்கணக்கான பயணிகளின் வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போனது.

அசாதாரணமான மிக பலத்த மழையே இதற்குக் காரணம் என்று மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் (MSRDC) கூறினாலும், மழைப்பொழிவு வழக்கத்திற்கு மாறானது என்றாலும் பொறியியல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இதன் தாக்கத்தைக் குறைத்திருக்கலாம் என்று சுரங்கப்பாதை மற்றும் புவித்தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுகின்றனர்.

அளவுக்கு அதிகமான மழையினால் சுரங்கப்பாதையைச் சுற்றியுள்ள சரிவுகள் முற்றிலும் தண்ணீரில் ஊறிப்போய், ஒரு பெரிய சரிவை ஏற்படுத்தின. இது பாறைகள், சேறு மற்றும் பெரிய கற்களை 2-வது சுரங்கப்பாதையின் நுழைவாயிலை நோக்கிச் சரித்துத் தள்ளியது. இது குறித்து மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டுக் கழக துணைத் தலைவர் அனில்குமார் கெய்க்வாட் முன்னதாகக் கூறும்போது, பலத்த மழையின் காரணமாக மலையின் உச்சியிலிருந்து பாறைகள் 2-வது சுரங்கப்பாதையின் வாயிலில் விழுந்ததாகவும், சுரங்கப்பாதையின் கட்டமைப்பு பாதிக்கப்படவில்லை என்றாலும், அதன் ஓரங்களில் கட்டப்பட்டிருந்த 'ஃபால்ஸ் பிரேம்' எனப்படும் வெளிப்புறக் கட்டமைப்பு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

சுரங்கப்பாதைக்கு மேலே உள்ள சரிவானது ராக் போல்ட்டுகள் (Rock bolts), இரும்பு வலைகள் மற்றும் பிற பாறை வீழ்ச்சி பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் பலப்படுத்தப்பட்டிருந்தாலும், திங்கள்கிழமை காலையில் விழுந்த பாறைகள் பாதுகாப்பு அளிக்கப்பட்ட பகுதிக்கும் மேலே சுமார் 150 மீட்டர் உயரத்திலிருந்து உருண்டு வந்துள்ளன. சுரங்கப்பாதை நுழைவாயிலுக்கு மேலே சுமார் 15 மீட்டர் உயரம் வரை மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததாகவும், அவை சேதமடையாமல் அப்படியே இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாறைகள் மலையின் மிக உயரமான பகுதியிலிருந்து விழுந்ததால், மழை இவ்வளவு தீவிரமாக இருக்கும்போது பொறியியலால் செய்யக்கூடியதற்கு ஒரு எல்லை உண்டு என்றும் ஒரு அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், மலையிடுக்கில் தேங்கியிருந்த தண்ணீர் ஒரு புதிய வழியைக் கண்டறிந்து சுரங்கப்பாதையின் நுழைவாயில் வழியாகக் கீழ்நோக்கிப் பாயத் தொடங்கியது.

சுரங்கப்பாதை நுழைவாயிலின் அலங்காரக் கட்டமைப்பின் ஒரு பகுதியான கான்கிரீட் பீம் (Concrete beam) சாலையில் சரிந்து விழுந்ததால், சுரங்கப்பாதையின் வாயிலில் இடிபாடுகள் குவிந்தன. சுரங்கப்பாதை பாதுகாப்பாக இருந்தாலும், இடிபாடுகள் அகற்றப்படும் வரை போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டியதாயிற்று.

சுரங்கப்பாதை நுழைவாயில் என்றால் என்ன?

ஒரு நிலத்தடி சுரங்கப்பாதை திறந்தவெளி மலைச்சரிவைச் சந்திக்கும் புள்ளியே நுழைவாயில் (Portal) என்று அழைக்கப்படுகிறது. மழைப்பொழிவு, மேற்பரப்பு நீர் ஓட்டம் மற்றும் விழும் பாறைகள் ஆகியவற்றால் நேரடியாகப் பாதிக்கப்படக்கூடிய சுரங்கப்பாதையின் மிக ஆபத்தான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். நிலச்சரிவு அபாயத்தைக் குறைக்கப் பொறியாளர்கள் இந்தச் பகுதியை கான்கிரீட் மற்றும் எஃகு மூலம் பலப்படுத்தி, சுற்றியுள்ள சரிவை நிலைப்படுத்துகிறார்கள்.

சுரங்கப்பாதை நுழைவாயில்களின் பாதிப்பு குறித்துப் பேசிய சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி விண்வெளி சங்கத்தின் முன்னாள் தலைவர் அர்னால்ட் டிக்ஸ், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கடினமான பLocationசால்ட் பாறைகளின் வெளிப்புற அடுக்கு வானிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்டு ஒப்பிட்டளவில் மென்மையாக மாறுகிறது என்று விளக்கினார். இந்த அடுக்கில் மழைநீர் ஊடுருவி அதை வழுவழுப்பாக மாற்றுவதால், காலப்போக்கில் மென்மையான பாறை அதன் அடியில் உள்ள கடினமான பாறையின் மீது நழுவிச் சரிந்து விடுகிறது என்றார்.

மும்பை ஐஐடியின் சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் ஆஷிஷ் ஜுனேஜா கூறுகையில், சுரங்கப்பாதை தோண்டுவதற்காக மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மலையின் இயற்கையான சரிவை மாற்றுவதால், சுரங்கப்பாதை நுழைவாயிலைச் சுற்றியுள்ள பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

பாதிப்பைக் குறைத்திருக்க முடியுமா? நிபுணர்களின் கருத்து

மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் கூற்றுப்படி, மும்பை - புனே விரைவுச்சாலையின் சுரங்கப்பாதையைச் சுற்றி சுமார் 15 மீட்டர் உயரம் வரை இரும்பு வலை ராக் போல்ட்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த ராக் போல்ட்டுகள் மென்மையான மேற்பரப்பை வலுவான பாறையுடன் பிணைத்து அதன் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துகின்றன என்று ஆஷிஷ் ஜுனேஜா கூறினார். இது தவிர, சரிவுகளில் விழும் பாறைகள் சாலைகள் அல்லது இரயில் தண்டவாளங்களை அடைவதற்கு முன்பு அவற்றைத் தடுப்பதற்காக நெகிழ்வான பாறை வீழ்ச்சி தடுப்பான்கள் எனப்படும் இரும்பு வலை வேலிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கொங்கன் பிராந்தியத்தில் இந்தத் தடுப்பான்கள் பெருகி வருவதாகவும், இவை மிகப் பெரிய பாறைகளைக் கூட நிறுத்த வல்லவை என்றும் ஜுனேஜா தெரிவித்தார்.

இருப்பினும், இந்தத் தடுப்பான்கள் இருந்தபோதிலும் இடிபாடுகள் சுரங்கப்பாதையின் வாயிலில் வந்து விழுந்திருப்பது, திங்கட்கிழமை நிலவிய சூழ்நிலைக்கு அங்குள்ள பாதுகாப்பு வழிமுறைகள் போதுமானதாக இல்லை என்பதைக் காட்டுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

சுரங்கப்பாதைக்கு மேலே இருந்த நீர் ஓடைகள் நுழைவாயிலைத் தாக்காதவாறு வேறு பக்கமாகத் திருப்பி விடப்பட்டிருந்தன. ஆனால், பெய்த தீவிர மழைக்கு அந்த வடிகால் அமைப்பும் பற்றாக்குறையாகி, ஒரு புதிய நீர் ஓடை உருவாகி சுரங்கப்பாதையின் நுழைவாயில் வழியாகத் தண்ணீர் பாய்ந்தது.

அர்னால்ட் டிக்ஸ் எழுப்பும் கேள்வி என்னவென்றால், இந்த அளவிலான தீவிர மழையைத் தாங்கும் வகையில் சுரங்கப்பாதைகளை வடிவமைக்க முடியும் என்பதாகும். ஒருவேளை இந்தச் சுரங்கப்பாதை 600 மிமீ-க்கும் அதிகமான மழைப்பொழிவைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, அப்படியும் அது தோல்வியடைந்திருந்தால், அது ஒரு பொறியியல் தோல்வியாகும் என்று அவர் கூறினார்.

ஆனால் ஜுனேஜா சற்று எச்சரிக்கையான பார்வையைக் கொண்டுள்ளார். இந்த அளவிலான மழைப்பொழிவு மிகவும் அரிதானது என்றும், மிக மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் வடிவமைப்புக்கும் பொருளாதார ரீதியாகச் சாத்தியமான வடிவமைப்புக்கும் இடையே எப்போதும் ஒரு சமநிலை தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், தீவிர மழைப்பொழிவு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன என்பதில் இரு நிபுணர்களும் உடன்படுகிறார்கள். வெப்பநிலை உயர்வால் வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்வதால், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிகக் குறுகிய காலத்தில் கடுமையான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த புயல் மழை பொறியியல் கட்டமைப்பை மீறிவிட்டது என்று கூறிய டிக்ஸ், பொறியியல் என்பது தொடர்ந்து பரிணாம வளர்ச்சியடைந்து வருவதால், அடுத்த முறை இத்தகைய கடுமையான மழை பெய்யும்போது இதே போன்ற விளைவு ஏற்படாதவாறு சுரங்கப்பாதையைச் சுற்றியுள்ள வடிவமைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என்று முடித்தார்.

source https://tamil.indianexpress.com/india/engineering-overwhelmed-rs-7000-crore-mumbai-pune-expressway-link-fails-first-monsoon-test-12146823

புதன், 8 ஜூலை, 2026

சமாதியின் மீது போர்வைகள் ஷரீஅத் கூறும் கண்டனங்கள்

சமாதியின் மீது போர்வைகள் ஷரீஅத் கூறும் கண்டனங்கள் எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி மேலாண்மைக்குழுத் தலைவர்,TNTJ TNTJ தலைமையக ஜுமுஆ - 03.06.2026

ஈமானின் சுவை !

ஈமானின் சுவை ! இ.பாரூக் (தணிக்கை குழு உறுப்பினர்,TNTJ) அமைந்தகரை ஜுமுஆ- 26.06.2026

அறியாமையின் உச்சம்!

அல்லாஹ் தான் சைத்தானா...? அறியாமையின் உச்சம்! செ.அ.முஹம்மது ஒலிM.I.Sc (மாநிலச் செயலாளர், TNTJ) மீஸான் அகீதா தொடர் 1

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்.அப்துல் கரீம் MISc மாநிலத் தலைவர், TNTJ கிரைம் பிரான்ச் - 29.06.2026 மதுரை மாவட்டம்

பெண்ணுரிமைப் போற்றிய பெருமானார் !

பெண்ணுரிமைப் போற்றிய பெருமானார் ! ஆர்.அப்துல் கரீம் MISc (மாநிலத் தலைவர், TNTJ) குடும்பவியல் இஜ்திமா அம்பத்தூர் - 28.06.2026

அத்தியாயம் அல் ஃபாத்திர் - பாகம் -07

அத்தியாயம் அல் ஃபாத்திர் - பாகம் -07 ஆர்.அப்துல் கரீம் M.I.S.c மாநிலத் தலைவர்,TNTJ திருக்குர் ஆன் விளக்கவுரை தொடர் - 10 வசனம்- 11 TNTJ, தலைமையகம் -18.06.2026

நிர்வாகம்- ஆணாதிக்கமா? பெண் சுதந்திரமா? கருத்தரங்கம் - 06.07.2026

நிர்வாகம்- ஆணாதிக்கமா? பெண் சுதந்திரமா? கருத்தரங்கம் - 06.07.2026 பெண்கள் கருத்தரங்கம் - 06.07.2026 அல் பய்யினா பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் - திருச்சி ஆசிரியர்கள் தௌலத் பாத்திமா ஆயிஷா சித்திக்கா ஷா. அப்ஸானா பேகம் பெண்ணுரிமை போற்றிய பெருமானார் ஜூலை மாத செயல்திட்டம் திருச்சி மாவட்டம்

தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்

தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.அப்துல் கரீம் M.I.Sc மாநிலத்தலைவர்,TNTJ பொதுக்கூட்டம் - 05.07.2026 நெல்லிக்குப்பம் - கடலூர் வடக்கு மாவட்டம்

பெண்களில் ஏன் நபிமார்கள் இல்லை?

பெண்களில் ஏன் நபிமார்கள் இல்லை? தக்வா இஸ்லாமிய பெண்கள் கல்லூரி நாகப்பட்டினம் பெண்ணுரிமை போற்றிய பெருமானார் ஜூலை மாத செயல்திட்டம் நாகப்பட்டினம்

பெண் குழந்தைகள் ஒரு நற்செய்தி - பாகம் 3

பெண் குழந்தைகள் ஒரு நற்செய்தி - பாகம் 3 பெண்கள் கருத்தரங்கு - 01.07.2026 பெண்ணுரிமை போற்றிய பெருமானார் - ஜூலை மாத செயல் திட்டம்

ஹிஜாப் பெண்களை அடிமைப்படுத்துகிறதா?

ஹிஜாப் பெண்களை அடிமைப்படுத்துகிறதா? முஸ்லிம் பெண்கள் பள்ளி, கல்லூரி செல்லலாமா? பெண்கள் கருத்தரங்கு - 01.07.2026 பெண்ணுரிமை போற்றிய பெருமானார் - ஜூலை மாத செயல் திட்டம்

பாலியல் குற்றங்களுக்கு தீர்வு என்ன? part -1

பாலியல் குற்றங்களுக்கு தீர்வு என்ன? part -1 பெண்கள் கருத்தரங்கு - 01.07.2026 பெண்ணுரிமை போற்றிய பெருமானார் - ஜூலை மாத செயல் திட்டம்

பாலியல் குற்றங்கள் நடப்பதற்கான முக்கிய காரணங்கள் ? 1 7 2026

பாலியல் குற்றங்கள் நடப்பதற்கான முக்கிய காரணங்கள் ? 1 7 2026