ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

பெரியார் குறித்து அவதூறு: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஐகோர்ட்டில் கி.வீரமணி வழக்கு

 

k veeramalsi

தந்தை பெரியார் குறித்து அவதூறு: தொகுதி மறுவரையறை ஆங்கில புத்தகத்திற்கு எதிராக கி.வீரமணி வழக்கு

தொகுதி மறுவரையறை தொடர்பான ஆங்கிலப் புத்தகத்தில் தந்தை பெரியார் குறித்து அவதூறான மற்றும் தவறான கருத்துகளைப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, புத்தகத்தின் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்திற்கு எதிராக ரூ.1 கோடியே 1,000 மான நஷ்டஈடு கோரி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த கவுதம் ஆர். தேசிராஜு மற்றும் டெல்லியைச் சேர்ந்த தீக்கித் பட்டாச்சார்யா ஆகியோர் இணைந்து எழுதிய, உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 'ப்ளூஒன் இங்க்' (BlueOne Ink) நிறுவனம் வெளியிட்ட ஆங்கிலப் புத்தகம் பாரதத்தின் சிறந்த ஜனநாயகத்துக்கான தொகுதி மறுவரையறை மற்றும் மாநிலங்கள் மறுசீரமைப்பு (Delimitation & Reorganisation of States for Better Indian Democracy). புத்தகத்தில், பிராமணர்களை ஒழிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியதாக முற்றிலும் தவறான மற்றும் உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனச் செயலாளரும், திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணி தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

பெரியாரின் பேச்சுகள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து 1981-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் உள்ள வரிகளை மேற்கோள் காட்டுவது போல, தந்தை பெரியார் ஒருபோதும் கூறாத கருத்துகளை உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பும் வகையில் புத்தகத்தில் சேர்த்து உள்ளனர். தந்தை பெரியாரைப் பற்றித் தவறாகச் சித்தரிக்கும் இந்த அவதூறுக் கருத்துகளைப் புத்தகத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்; அதுவரை புத்தகத்தின் விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடைவிதிக்க வேண்டும். பெரியாரின் புகழுக்குக் களங்கம் விளைவித்ததற்காக ரூ.1 கோடியே 1,000 மான நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கி.வீரமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடனேயே தந்தை பெரியாருக்கு எதிராக இத்தகைய அவதூறுக் கருத்துக்கள் புத்தகத்தில் திட்டமிட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று வாதிட்டார். வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனு குறித்து புத்தக எழுத்தாளர்கள் கவுதம் ஆர். தேசிராஜு, தீக்கித் பட்டாச்சார்யா மற்றும் பதிப்பக நிறுவனமான 'ப்ளூஒன் இங்க்' ஆகியோர் வரும் செப்.9-ம் தேதிக்குள் விரிவான பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/defamation-suit-against-delimitation-book-k-veeramani-demands-1-crore-compensation-for-periyar-slander-12416054

மேகதாது அணைக்கு எதிராக தனிநபர் தீர்மானம்: புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. மனு

 

23 08 2026 

Mekedatu dam controversy Puducherry

மேகதாது அணைக்கு எதிராக தனிநபர் தீர்மானம்: புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. மனு

கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சட்டமன்றத்தில் தனிநபர் தீர்மானம் கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என புதுச்சேரி திமுக சட்டமன்ற உறுப்பினர் வே. கார்த்திகேயன், தற்காலிக சபாநாயகரிடம் இன்று மனு அளித்துள்ளார்.

தனது மனுவில், கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய அணை கட்டினால், காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே, மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் இந்த முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டுவர உரிய அனுமதி வழங்க வேண்டும். மேலும், இந்தத் தீர்மானத்தை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே அரசு முறைப்படி நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் தனது மனுவில் எம்.எல்.ஏ. வே. கார்த்திகேயன் வலியுறுத்தியுள்ளார்.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி


source https://tamil.indianexpress.com/india/opposition-to-mekedatu-dam-dmk-mla-moves-private-member-resolution-in-puducherry-assembly-12416650

சனி, 22 ஆகஸ்ட், 2026

துப்பாக்கிச் சூடு நடத்தியோர் மீது வழக்குப் பதிக: டெல்லி காவல் நிலையம் சென்ற ராகுல் காந்தி

 

Rahul Gandhi dharna CJP march pellet injury Delhi Police FIR refusal

ஆசாத் ரெஹ்மான்

நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த ஜூலை 20-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பெல்லட் குண்டு பாய்ந்து காயமடைந்த மாணவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை காவல் நிலையத்துக்குச் சென்றார். ஆனால், புகார் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய போலீசார் மறுத்ததாக கூறி, பின்னர் டெல்லி துணை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டார்.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரி, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தலைமையில் ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியின்போது பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆங்கிலத்தில் வாசிக்க

இந்த சம்பவத்தில் டெல்லியின் நஜஃப்கர் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவர் சாஹில் லோச்சவ் வலது கண்ணில் பெல்லட் குண்டு பாய்ந்து காயமடைந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், இன்னும் ஒரு பெல்லட் துண்டு அவரது கண்ணுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

Rahul Dharna

இந்த நிலையில், சாஹில் லோச்சவுடன் ராகுல் காந்தி முதலில் மந்திர் மார்க் காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்கு புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து இருவரும் நாடாளுமன்ற வீதியில் உள்ள மத்திய டெல்லி துணை காவல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு வழக்குப் பதிவு செய்யப்படும் வரை திரும்பப் போவதில்லை என்று கூறி ராகுல் காந்தி தர்ணாவில் அமர்ந்தார்.

“ராகுல் காந்தி முதலில் மந்திர் மார்க் காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்கு வழக்குப் பதிவு செய்யப்படாததால் மத்திய டெல்லி டிசிபியைச் சந்திக்கச் சென்றார். வழக்குப் பதிவு செய்யப்படும் வரை அவர் திரும்ப மாட்டார்” என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

சாஹில் லோச்சவ் ஆகஸ்ட் 14-ம் தேதி டெல்லி போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததாகவும், ஆனால் விசாரணை அதிகாரி யார் என்ற தகவல் அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

“ஆகஸ்ட் 17-ம் தேதி மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் அவர் மீண்டும் தொடர்பு கொண்டபோதும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும், புகார் பெற்றதற்கான ஒப்புதலும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இது சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய குற்றம் என்பதால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் டெல்லி போலீஸ் அதைச் செய்யவில்லை” என்று காங்கிரஸ் தரப்பு குற்றம்சாட்டியது.

இதற்கிடையே, ஜூலை 20-ம் தேதி நடந்த பேரணியில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் ஏற்கெனவே கவனம் பெற்றுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) நடத்திய விசாரணையில், ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் வீரர் ஒருவர் பெல்லட் துப்பாக்கியால் 7 முறை சுட்டதாகவும், அதில் 5 குண்டுகள் போராட்டக்காரர்கள் மீது பட்டதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு செய்தி வெளியிட்டிருந்தது.

வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்வைத்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது போலீஸ் நடவடிக்கை அதிகமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். டெல்லி போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகள் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அமித் ஷாவை எதிர்க்கட்சிகள் நேரடியாக குறிவைத்து வருகின்றன.

இந்த விவகாரம் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் தொடர்ந்து அமளி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


source https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-dharna-cjp-march-pellet-injury-delhi-police-fir-refusal-12402003

தென் மாநில முதல்வர்கள் மாநாடு: புதுச்சேரி முதல்வர் புறக்கணிப்பு

 

சென்னை மாமல்லபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென் மாநில முதல்வர்கள் மாநாட்டைப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணித்தது அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றும், மாநில உரிமைகளைப் பெறத் தைரியமின்றி ஓடி ஒளிவது புதுச்சேரி மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் திமுக மாநில அமைப்பாளர் இரா. சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில தி.மு.க அமைப்பாளரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சிவா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநிலங்களின் வளர்ச்சியை முன்னெடுக்க அரசியல் சாசனப்படி உருவாக்கப்பட்டதுதான் முதல்வர்கள் அடங்கிய மண்டலக் குழுக்கள் ஆகும். இந்திய நாடு ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்தின் கூட்டாட்சி, உள்கட்டமைப்பு, மாநிலங்களின் ஒருங்கிணைப்பு போன்றவை பற்றி ஆண்டுதோறும் விவாதித்து முடிவெடுக்கும் கூட்டமாக இந்த மண்டலக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் தென் மாநிலக் குழுவின் 31–வது மாநாடு நேற்றைய தினம் சென்னை கோவளத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. அதில் தென் மாநிலங்களின் அனைத்து முதல்வர்களும் பங்கேற்றுத் தங்கள் மாநிலத்தின் தேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆழமாக விவாதித்த நிலையில், நமது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழக்கம்போல் இந்த மாநாட்டையும் புறக்கணித்திருப்பது மாநிலத்திற்கு அவர் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும்.

கடந்த காலங்களில் பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் போன்ற மிக முக்கிய மாநாடுகளைப் புறக்கணித்து வந்தது போலவே, இந்த மாநாட்டையும் புறக்கணித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். இது மாநிலத்திற்கு மிகப் பெரிய பின்னடைவை உருவாக்கும் செயலாகும்; அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு செயல்படுவேன் என்று அவர் பதவிப் பிரமாணம் எடுத்ததற்கு விரோதமான செயலாகும்.

கடந்த ஐந்தாண்டு காலமாக பாஜக–என்.ஆர்.காங்கிரஸ் இரட்டை என்ஜின் ஆட்சியில் புதுச்சேரி பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்து வந்தது. மாநில அந்தஸ்து, விமான நிலைய விரிவாக்கம், கூடுதல் நிதி ஒதுக்கீடு, நீர்வளத் தேவைகள், தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு என பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சனைகளை இம்மாநாட்டில் முன்வைத்து தீர்வுகாணும் நல்ல சந்தர்ப்பத்தை முதல்வரின் புறக்கணிப்பு நழுவவிட்டுள்ளதை உணர முடிகிறது.

சமீபத்தில் புதுச்சேரி வந்த உள்துறை அமைச்சருடன் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் இவர்களுக்குள்ளான அதிகாரப் பகிர்விற்கு தீர்வுகாண முடியாத நிலையில், இன்னும் பேரவைத் தலைவர் தேர்வு இழுபறியில் உள்ள பொழுது எப்படி உள்துறை அமைச்சரைச் சந்திப்பது என்ற பயத்தில் மாநாட்டைப் புறக்கணித்தாரா? அல்லது தனக்கு போட்டியாக மாநிலத் துணைநிலை ஆளுநர் பங்கேற்பதைப் பொறுத்துக்கொள்ளாமல் புறக்கணித்தாரா? என்பதை முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும், இவர்களின் போட்டி அரசியல் புதுச்சேரி மக்களின் வாழ்வையும் வளர்ச்சியையும் பாதிப்பதாக உள்ளதை எவராலும் ஏற்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர், மாநிலப் பிரச்சனைகளை ஒன்றிய அரசிடம் நேரடியாக முன்வைத்து விவாதிக்கத் தைரியமில்லாமல் அஞ்சி ஓடி ஒளிவது ஏன்? புதுச்சேரி மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதில் முதல்வர் ரங்கசாமி தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதை அவரது புறக்கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.

ஆளுநரின் அதிகார ஆதிக்கத்திற்கு வழிவகுத்துவிட்டுத் தனது பொறுப்பிலிருந்து தப்பி ஓடிய ரங்கசாமி அவர்கள், ஆளுநர் மாநாட்டில் முன்வைத்த மாநிலப் பிரச்சனைகள் மீது இவரது கருத்து என்ன என்பதையும் வெளிப்படுத்த வேண்டும். அதில் இவருக்கு உடன்பாடு உண்டா? இல்லை ஆளுநரின் கருத்துக்கள் இரட்டை ஆட்சியில் வேறு ஒரு நிலைப்பாடா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

இந்த மாநாட்டில் பங்கேற்று இருந்தால், அதன் மூலம் தனக்கு நிகராக ஆளுநருக்கு மாநாட்டில் இடம் தந்ததைக் கேள்விக்கு உள்ளாக்கி இருக்க முடியும். சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்கள் தங்கள் ஆளுநர் மூலம் பங்கேற்கலாமே தவிர, சட்டமன்றமும் அமைச்சரவையும் உள்ள யூனியன் பிரதேச ஆளுநர்கள் பங்கேற்பதைத் தடுத்திருக்க முடியும்.

மக்கள் பிரச்சனையும் பேசாமல், ஆளுநரின் அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்காமல் ஓடி ஒளிவதும் மவுனம் காப்பதும் ஒரு முதல்வருக்கு அழகல்ல. இது மிகப் பெரிய கோழைத்தனமும், புதுச்சேரி மக்களுக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகமும் ஆகும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.” என்று 

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

source https://tamil.indianexpress.com/india/dmk-siva-condemns-rangasamy-skipping-southern-zonal-council-meeting-12410854

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

1937 வரலாறு

 

20 08 2026 

Vande Mataram controversy

அக்டோபர் 1937-இல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திற்குச் செல்லும் ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸ். (விக்கிமீடியா காமன்ஸ், செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்படுத்தப்பட்டது)

யஷி, ஆசாத் ரஹ்மான்

‘வந்தே மாதரம்’... இந்த இரண்டு வார்த்தைகளே இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய உணர்வை ஏற்படுத்தியவை. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் மக்களை ஒன்றிணைத்த இந்தப் பாடல், இன்று மீண்டும் அரசியல் விவாதத்தின் மையமாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டும் பாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் தனது முடிவுக்கு 1937-ம் ஆண்டு எடுக்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழு தீர்மானத்தை காரணமாகக் கூறுகிறது.


அப்படியானால், முதல் இரண்டு சரணங்களுக்கு மட்டும் என்ன சிறப்பு? மீதமுள்ள நான்கு சரணங்களில் அப்படி என்ன இருக்கிறது? இதன் பின்னணி என்ன?

1875-ல் உருவான பாடல்

‘வந்தே மாதரம்’ என்றால், ‘தாயே, உன்னை வணங்குகிறேன்’ என்று பொருள்.

இந்தப் பாடலை வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர் 1875-ம் ஆண்டு சமஸ்கிருதம் கலந்த வங்காள மொழியில் எழுதினார். பின்னர் 1881-ல் வெளியான அவரது ‘ஆனந்தமடம்’ நாவலில் இந்தப் பாடல் இடம்பெற்றது.

18-ம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற சன்னியாசிகள் கிளர்ச்சியை பின்னணியாகக் கொண்டது அந்த நாவல்.

1905-08 காலகட்டத்தில் நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் போது ‘வந்தே மாதரம்’ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படிப்படியாக அது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய முழக்கமாக மாறியது.

ஆனால், பாடலில் இடம்பெற்ற சில கருத்துகள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அறிஞர்களிடம் அப்போது முதலே எதிர்ப்பை ஏற்படுத்தின.

1937-ல் ஏன் முதல் இரண்டு சரணங்கள் மட்டும்?

‘வந்தே மாதரம்’ தொடர்பாக காங்கிரஸுக்குள்ளும் விவாதம் நடந்தது.

சுபாஷ் சந்திர போஸ் இந்தப் பாடலை முழுமையாக ஆதரித்தார். அதே நேரத்தில் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் ரவீந்திரநாத் தாகூரிடம் இதுகுறித்து கருத்து கேட்டனர்.

தாகூர், பாடலின் முதல் பகுதி தாய்நாட்டின் அழகு, வளம் மற்றும் அதன் மீதான அன்பை வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார். ஆனால், முழுப் பாடலையும் அதன் பின்னணியுடன் சேர்த்துப் பார்க்கும்போது, சில பகுதிகள் முஸ்லிம்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் புரிந்துகொள்ளப்படலாம் என்றும் அவர் கூறினார்.

இதன் பின்னர் 1937 அக்டோபரில் காங்கிரஸ் செயற்குழு முக்கிய முடிவை எடுத்தது.

தேசிய அளவிலான கூட்டங்களில் ‘வந்தே மாதரம்’ பாடும்போது முதல் இரண்டு சரணங்களை மட்டும் பாடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

மீதமுள்ள சரணங்கள் பொதுவாகப் பாடப்படுவதில்லை என்றும், அவற்றில் சில மதக் கருத்துகள் இருப்பதால் இந்தியாவின் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே அது சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் காங்கிரஸ் விளக்கியது.

மகாத்மா காந்தியின் நிலைப்பாடு என்ன?

மகாத்மா காந்திக்கும் ‘வந்தே மாதரம்’ மீது மிகுந்த மரியாதை இருந்தது.

அதேநேரத்தில், மத நல்லிணக்கம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார்.

1939-ம் ஆண்டு ‘ஹரிஜன்’ இதழில் எழுதிய காந்தி, கலப்பு மதத்தினர் பங்கேற்கும் கூட்டத்தில் யாராவது ‘வந்தே மாதரம்’ பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், அந்தப் பாடலைப் பாடுவதையே தவிர்க்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

அவரைப் பொறுத்தவரை, ஒரு பாடலைப் பாடுவதால் மக்களுக்குள் சண்டை ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

Congress 1937 resolution Vande Mataram
1938-இல் ஹரிபுராவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் ஆண்டு மாநாட்டில் மகாத்மா காந்தி. காங்கிரஸின் தலைவர் சுபாஷ் சந்திர போஸ் அடையாளப் பட்டையை அணிந்துள்ளார்; அவருக்குப் பின்னால் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அமர்ந்திருக்கிறார்; போஸின் வலதுபுறத்தில் சர்தார் வல்லபாய் படேல் உள்ளார். (புகைப்படம்: விக்கிமீடியா காமன்ஸ்)

அப்படியென்றால் அந்த 4 சரணங்களில் என்ன இருக்கிறது?

இதுதான் இன்றைய சர்ச்சையின் முக்கிய காரணம்.

முதல் இரண்டு சரணங்களில் தாய்நாட்டின் இயற்கை அழகு, வளம் மற்றும் தாயின் மீதான அன்பு போன்ற கருத்துகள் முக்கியமாக இடம்பெறுகின்றன.

ஆனால் அடுத்தடுத்த சரணங்களில் மொழியும் காட்சிகளும் மாறுகின்றன.

மூன்றாவது சரணத்தில், தாய்நாட்டைப் பாதுகாக்க கோடிக்கணக்கான கரங்கள் ஆயுதம் ஏந்தத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

நான்காவது சரணத்தில், தாய்நாட்டின் உருவம் வழிபாட்டுத் தலங்களில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஐந்தாவது சரணத்தில், தாய்நாடு துர்கை, லட்சுமி, சரஸ்வதி போன்ற இந்து தெய்வங்களுடன் ஒப்பிடப்படுகிறது.

இதுவே முஸ்லிம் அறிஞர்களின் முக்கிய எதிர்ப்புக்குக் காரணமாக அமைந்தது.

இஸ்லாமிய நம்பிக்கையில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்குவது ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே, ‘தாய் இந்தியா’வை ஒரு தெய்வமாக சித்தரிக்கும் வகையிலான வரிகள் மத உணர்வுகளைப் பாதிக்கக்கூடும் என்ற எதிர்ப்பு எழுந்தது.

வரலாற்றாசிரியர் தனிகா சர்க்கார் கூறியுள்ளபடி, பாடலின் பிற்பகுதி ‘போருக்கான அழைப்பாக’ மாறுகிறது என்றும், ‘ஆனந்தமடம்’ நாவலின் பின்னணியில் முஸ்லிம்கள் எதிரிகளாக சித்தரிக்கப்படுவதால் அந்தப் பகுதிகள் முஸ்லிம்களுக்கு அந்நியமாகத் தோன்றக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

சுதந்திரத்துக்குப் பிறகும் தொடர்ந்த விவாதம்

1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் ‘வந்தே மாதரம்’ தொடர்பான விவாதம் முடிவுக்கு வரவில்லை.

இந்தப் பாடலையே தேசிய கீதமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

ஆனால் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் ‘ஜன கண மன’ பாடலை தேசிய கீதமாகத் தேர்வு செய்வதில் ஆதரவாக இருந்தனர். ‘வந்தே மாதரம்’ பாடலை இசைக்குழுவுடன் அமைப்பது சிரமமாக இருக்கும் என்பதும் நேரு கூறிய காரணங்களில் ஒன்று.

இறுதியில் ‘ஜன கண மன’ தேசிய கீதமாகத் தேர்வு செய்யப்பட்டது.

ஆனால் ‘வந்தே மாதரம்’ சுதந்திரப் போராட்டத்தில் ஆற்றிய வரலாற்றுப் பங்கை அங்கீகரிக்கும் வகையில் அதற்கும் உரிய மரியாதை வழங்கப்பட்டது.

1950 ஜனவரி 24-ம் தேதி அரசியல் நிர்ணய சபையில் ராஜேந்திர பிரசாத் இதைத் தெளிவுபடுத்தினார். ‘ஜன கண மன’ தேசிய கீதமாக இருக்கும் என்றும், சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுப் பங்கு வகித்த ‘வந்தே மாதரம்’ அதற்கு சமமான மரியாதையுடன் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இப்போது மீண்டும் ஏன் சர்ச்சை?

இப்போது பாஜக ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆறு சரணங்களையும் பாட வேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறது.

அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் ஆறு சரணங்களையும் பாடுவதற்கான நடைமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் 2026-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்புக்கு இணையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேசியப் பாடல் பாடப்படுவதை திட்டமிட்டு தடுப்பது அல்லது அதை பாடும் கூட்டத்தில் இடையூறு செய்வது குற்றமாக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில்தான் காங்கிரஸ் மீண்டும் தனது பழைய நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், 1950 ஜனவரி 24-ம் தேதி ராஜேந்திர பிரசாத் அறிவித்தது முதல் இரண்டு சரணங்களைக் கொண்ட ‘வந்தே மாதரம்’தான் என்று கூறியுள்ளார்.

மேலும், 2025 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் ‘வந்தே மாதரம்’ குறித்து விவாதம் நடந்ததே தவிர, முழு ஆறு சரணங்களையும் தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், ‘வந்தே மாதரம்’ விவகாரம் இப்போது ஒரு பாடலைப் பாடுவது அல்லது பாடாமல் இருப்பது என்ற எல்லையைத் தாண்டி, வரலாறு, மத உணர்வு, தேசிய அடையாளம் மற்றும் அரசியல் ஆகிய அனைத்தும் கலந்த விவாதமாக மாறியுள்ளது.

ஒருபுறம், சுதந்திரப் போராட்டத்தின் உணர்வை பிரதிபலித்த பாடல் என்பதால் முழுமையாகப் பாட வேண்டும் என்ற வாதம் உள்ளது.

மறுபுறம், நாட்டின் அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்களை உள்ளடக்கிய தேசிய நிகழ்வுகளில் சர்ச்சைக்குரிய பகுதிகளைத் தவிர்த்து முதல் இரண்டு சரணங்களை மட்டும் பாடியதே சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் எடுத்த முடிவு என்ற வாதமும் உள்ளது.

அதனால், ‘வந்தே மாதரம்’ குறித்த இன்றைய அரசியல் சர்ச்சையைப் புரிந்துகொள்ள 1937-ம் ஆண்டின் அந்த முடிவையும், பாடலின் ஆறு சரணங்களின் உள்ளடக்கத்தையும் ஒன்றாகப் பார்ப்பது முக்கியம்.

source https://tamil.indianexpress.com/explained/vande-mataram-controversy-congress-1937-resolution-vande-mataram-rabindranath-tagore-12400446

கனிமங்கள் திருத்த சட்டம்: மாநிலத்திற்கு எதிரானது; உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு?

 congress

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் 2026' (Mines and Minerals Amendment Act, 2026) மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி, காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

கர்நாடகா, தெலங்கானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதில் ஏற்கனவே இணைந்திருக்கும் நிலையில், ஜார்க்கண்ட் மாநில அரசையும் இதர கூட்டணிக் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவையும் (JMM) இணைத்து உச்ச நீதிமன்றத்தை அணுக காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆகஸ்ட் 13 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தத் திருத்தச் சட்டம், கனிம உரிமைகள் மற்றும் கனிமங்களைக் கொண்ட நிலங்கள் மீது மாநில அரசுகள் வரி விதிப்பதற்கான அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முயல்கிறது. இருப்பினும், மாநிலங்களவையில் இது குறித்து விளக்கமளித்த சுரங்கத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, இச்சட்டம் மாநிலங்களின் தன்னாட்சியிலோ அல்லது வருவாய் உரிமைகளிலோ தலையிடாது என்றும், நாடு முழுவதும் சீரான கனிம கட்டணங்களை உறுதி செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெளிவுபடுத்தினார்.

மேலும் பேசிய ரெட்டி, நிலக்கரி, சுண்ணாம்புக்கல், இரும்புத் தாது, செம்பு மற்றும் மாங்கனீசு போன்ற முக்கிய கனிமங்களை மட்டுமே மத்திய அரசு ஒழுங்குமுறைப்படுத்த விரும்புவதாகவும், 49 சிறிய கனிமங்கள் மீதான அதிகாரங்கள் தொடர்ந்து மாநில அரசிடமே இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, கர்நாடக துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா, கட்டுப்பாடுகள் நிறைந்த இந்தத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் காங்கிரஸ் ஆட்சியமைத்த கேரளாவில், முதலமைச்சர் வி.டி. சதீசன் இச்சட்டத் திருத்தங்கள் கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும், எனவே இது கடுமையாக எதிர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/india/congress-ruled-states-to-move-supreme-court-against-mining-law-12400876

வட மாநில நிறுவனத்திற்கு ஒப்பந்தம்: திருச்சியில் ஒப்பந்த நகலைக் கிழித்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

 source https://tamil.indianexpress.com/tamilnadu/tnstc-north-indian-firm-contract-trichy-bus-workers-protest-12400486


TNSTC North Indian Firm Contract Trichy Bus Workers Protest

அரசுப் பேருந்துகளில் வட மாநில நிறுவனம்: ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி பிரம்மாண்ட போராட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்குவதற்காக வட மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டதைக் கண்டித்து, திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு ஒப்பந்த நகலைக் கிழித்து எறிந்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தமிழக அரசு பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களாக நியமிக்கும் முயற்சியாக அமையும் என்றும், இதனை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

WhatsApp Image 2026-08-20 at 5.08.05 PM (1)

இந்நிலையில், இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் திருச்சி தில்லை நகர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான போக்குவரத்து ஊழியர்களும், உள்ளூர் இளைஞர்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தனியார் நிறுவனத்துடன் அரசு போட்ட ஒப்பந்த நகலை பகிரங்கமாகக் கிழித்து எறிந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

WhatsApp Image 2026-08-20 at 5.08.05 PM

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய நிர்வாகிகள், "தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் அரசு செயல்படுகிறது. வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வழங்காமல், வட மாநிலத்தவரைப் பணியமர்த்துவது நியாயமற்றது" என்று குற்றம் சாட்டினர்.

மேலும், போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்படும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளையும், வட மாநிலத்தவர் நியமனத்தையும் முற்றிலுமாக கைவிட்டு, தமிழக இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பில் முழு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

க.சண்முகவடிவேல்

21 08 2026 

வியாழன், 20 ஆகஸ்ட், 2026

பூமி ஏன் இவ்வளவு சூடாகிறது? காற்று மாசுபாட்டை விட ஆபத்தாக மாறிய மேகங்கள்; புதிய ஆய்வில் பகீர் தகவல்

 source https://tamil.indianexpress.com/science/satellite-data-reveals-earths-energy-imbalance-the-surprising-role-of-cloud-behavior-diminishing-cloud-reflectivity-new-study-explains-rising-global-temperatures-12397004


Cloud density

பூமி ஏன் இவ்வளவு சூடாகிறது? காற்று மாசுபாட்டை விட ஆபத்தாக மாறிய மேகங்கள்; புதிய ஆய்வில் பகீர் தகவல்

பூமி ஏன் இவ்வளவு சூடாகிறது? இதற்கு நாம் இதுவரை சொல்லி வந்த ஒரே பதில் "காற்று மாசுபாடு மற்றும் தொழிற்சாலைப் புகை". ஆனால், சமீபத்திய ஆய்வுகள் புதிய அதிர்ச்சியைத் தந்துள்ளன. பூமியின் வெப்பத்தை அதிகரிப்பதில் காற்று மாசுபாட்டை விட 'மேகங்களின் மாற்றம்' (Cloud Behavior) தான் வில்லனாக உருவெடுத்துள்ளது.

பொதுவாக பூமி, சூரியனிடமிருந்து பெரும் வெப்ப ஆற்றலில் ஒரு பகுதியைத் தனக்குள்ளே வைத்துக்கொண்டு, மீதமுள்ளதை விண்வெளிக்குத் திருப்பி அனுப்பிவிடும். இது ஒரு பேலன்ஸ் ஷீட் போலச் சரியாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது பூமி வாங்கும் வெப்பம் அதிகமாகவும், திருப்பி அனுப்பும் வெப்பம் குறைவாகவும் உள்ளது. இதைத்தான் அறிவியல் மொழியில் 'எனர்ஜி இம்பேலன்ஸ்' (Energy Imbalance) என்கிறார்கள்.

சூரியனிடமிருந்து வரும் உக்கிரமான ஒளியைத் தடுத்து, அதைத் திருப்பி அனுப்பும் 'கண்ணாடி' போல மேகங்கள் செயல்படுகின்றன. ஆனால், கடந்த 20 ஆண்டு கால செயற்கைக்கோள் தரவுகளை ஆராய்ந்ததில் ஒரு பகீர் உண்மை தெரிந்துள்ளது. மேகங்களின் பிரதிபலிப்புத் திறன் (Reflectivity) குறைந்துவிட்டது. இதனால், சூரிய ஒளி மேகங்களைத் தாண்டி நேரடியாக பூமியின் மேற்பரப்பைச் சூடாக்குகிறது. இதற்குக் காரணம் காற்று மாசுபாடு அல்ல, புவி வெப்பமடைதலால் மேகங்களின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே ஆகும்.

ஏரோசால்கள் (Aerosols) எனப்படும் நுண்துகள்கள் வெப்பத்தை மாற்றும் என்று கருதப்பட்டது. ஆனால், உலக அளவில் அதன் தாக்கம் பெரிதாக இல்லை. இதற்கு ஒரு சுவாரசியமான காரணம் உள்ளது: வடக்கு நாடுகள் காற்று தூய்மையாக்கப்படுவதால் மேகங்கள் மெலிதாகி, அதிக சூரிய ஒளி உள்ளே நுழைகிறது (வெப்பம் அதிகரிக்கிறது). தெற்கு நாடுகளில் அதிகப்படியான காட்டுத்தீ, எரிமலை வெடிப்புகளால் ஏரோசால்கள் அதிகரித்து, மேகங்கள் அதிக ஒளியைத் திருப்பி அனுப்புகின்றன (குளிர்ச்சி அடைகிறது).

இந்த 2 மாற்றங்களும் ஒன்றை ஒன்று 'பேலன்ஸ்' செய்துவிடுவதால், ஒட்டுமொத்தப் புவி வெப்பமடைதலுக்குக் காற்று மாசுபாடு ஒரு முக்கியக் காரணியாக தெரியவில்லை. பசுமை இல்ல வாயுக்கள் ஒருபுறம் வெப்பத்தை அதிகரித்தாலும், மேகங்கள் செய்யும் தலைகீழ் மாற்றங்கள் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல வெப்பத்தை இன்னும் பல மடங்கு வேகப்படுத்துகின்றன. 2003 முதல் 2023 வரை, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு சதுர மீட்டருக்கு அரை வாட் (0.5W) கூடுதல் வெப்பத்தை பூமி உறிஞ்சி வருகிறது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.108 கோடி முறைகேடு: தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

 source https://tamil.indianexpress.com/tamilnadu/tncdw-audit-report-reveals-108-crore-rural-women-welfare-fund-scam-12397310


meeting rep

மாநிலம் முழுவதும் உள்ள 186 வட்டாரங்களில் இந்த நிதி முறைகேடுகள் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. Photograph: (பிரதிநிதித்துவப் படம்: TNCDW)

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.என்.சி.டி.டபிள்யூ) கீழ் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஒதுக்கப்பட்ட திட்ட நிதியில், சுமார் ரூ.107.94 கோடி அளவுக்கு முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகச் சிறப்புத் தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கிராமப்புறப் பெண்களின் வறுமையை ஒழிப்பதற்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதியை, திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகளான வட்டார இயக்க மேலாளர்கள் (பி.எம்.எம்), வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (பி.சி) மற்றும் அவர்களின் ரத்த உறவினர்கள் தங்களது சொந்த வங்கிக் கணக்குகளுக்கு முறைகேடாகப் திசைதிருப்பிப் பயன்பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள 186 வட்டாரங்களில் இந்த நிதி முறைகேடுகள் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

போலிப் பில்களை உருவாக்குதல், உரிய ஆவணங்கள் இன்றி பணப் பரிவர்த்தனை செய்தல் மற்றும் நேரடியாக வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்புதல் ஆகிய வழிகளில் இந்த நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளது. தேனியைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ராதாகிருஷ்ணன் பெற்ற தணிக்கை அறிக்கையின் மூலம் இந்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

முக்கிய முறைகேடுகள்:

மயிலாடுதுறை (செம்பனார்கோவில்): பாதுகாப்பற்ற சூழலில் உள்ள பெண்களுக்கான நிதியிலிருந்து 42 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வழங்க வேண்டிய ரூ.42 லட்சம் நிதி, வட்டார இயக்க மேலாளர் விமலா மற்றும் 5 நபர்களின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்நிதி மீட்கப்பட்டாலும், அமைப்பில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை இது உணர்த்தியுள்ளது.

குற்றாலம்: நோட்டுப் புத்தகங்கள் வாங்கியதாகக் கூறி ரூ.1.64 லட்சத்திற்கான பில் திருத்தப்பட்டதும், சுய உதவிக்குழுப் பயிற்சிக்காக வெற்றுப் பில்லைப் பயன்படுத்தி ரூ.60,000 பெறப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்புடைய அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் (வள்ளம்): ஊக்கத்தொகையாக வழங்கப்பட வேண்டிய ரூ.35 லட்சம் நிதி, பெட்ரோல் பங்க் தொடங்குவதற்காக இரு நபர்களின் பெயர்களுக்குத் திசைதிருப்பப்பட்டு, பின்னர் அதிகாரிகளால் மீட்கப்பட்டது.

வேலூர் (கே.வி.குப்பம்): 39 கூட்டமைப்புகளுக்கு கௌரவ ஊதியமாக வழங்கப்பட வேண்டிய ரூ.2.92 லட்சம் நிதி, 5 தனிநபர்களின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது.

தற்போது வரை அதிகாரிகள் நேரடியாக ரூ.1.43 கோடியை மீட்டுள்ளனர். மேலும், பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடந்த கணக்குகளிலிருந்து ரூ.3.61 கோடி மீட்கப்பட்டு மாநிலக் கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதிலும் உள்ள 388 வட்டாரங்களிலும் முழுமையான ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க, நேரடிப் பயனாளி கணக்கு மாற்ற முறையை (டி.பி.டி) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், வட்டார அளவிலான அமைப்புகளுக்குத் தெளிவான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (எஸ்.ஓ.பி) உருவாக்க வேண்டும் என்றும் தணிக்கைக் குழு பரிந்துரைத்துள்ளது.

புதன், 19 ஆகஸ்ட், 2026

சினிமாவும், சீரழிவும்

சினிமாவும், சீரழிவும் காஞ்சி ஏ.இப்ராஹீம் மாநிலப்பொருளாளர்,TNTJ பெண்கள் இஜ்திமா - 26.07.2026 திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் புங்கபேடு

உள்ளம் உயிர்ப்புடன் உள்ளதா? இறந்துவிட்டதா?

உள்ளம் உயிர்ப்புடன் உள்ளதா? இறந்துவிட்டதா? ஏ.முஹம்மது யூசுப் M.I.Sc மாநிலச் செயலாளர்,TNTJ அத்தியாயம் அல் ஃபாத்திர் வசனம்-22 - பாகம்-13 திருக்குர்ஆன் விளக்கவுரை - தொடர்-17 TNTJ, தலைமையகம் - 14.08.2026

அண்ணல் நபியே! அழகிய முன்மாதிரி!

அண்ணல் நபியே! அழகிய முன்மாதிரி! கே.எஸ்.அப்துர்ரஹ்மன் ஃபிர்தவ்ஸி பேச்சாளர்,TNTJ TNTJ, தலைமையக ஜுமுஆ - 14.08.2026

இந்திய விடுதலை யுத்தமும் சிந்திய இஸ்லாமியர் இரத்தமும்

இந்திய விடுதலை யுத்தமும் சிந்திய இஸ்லாமியர் இரத்தமும் 12.08.2022 மயிலாடுதுறை மாவட்டம் கே. தாவூத் கைசர் M.I.Sc மாநிலத் துணைத்தலைவர் TNTJ

நபிவழி நடந்தால் நரகம் இல்லை

நபிவழி நடந்தால் நரகம் இல்லை N.அல் அமீன் மாநிலச்செயலாளர், TNTJ மாவட்ட தர்பியா ஏற்காடு - 02.08.2026 திருவள்ளூர் மேற்கு மாவட்டம்

நீங்கள்தரும் உணவை நாங்கள் உண்கிறோம் நாங்கள் தரும் உணவை நீங்கள் உண்பதில்லையே ஏன் இந்த வேற்றுமை?

நீங்கள்தரும் உணவை நாங்கள் உண்கிறோம் நாங்கள் தரும் உணவை நீங்கள் உண்பதில்லையே ஏன் இந்த வேற்றுமை? எம்.எஸ்.சுலைமான் தணிக்கைக்குழுத் தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 21.12.2025 உளுந்தூர்பேட்டை - விழுப்புரம் மாவட்டம்

எங்கே செல்கிறது இளைய சமுதாயம்?

எங்கே செல்கிறது இளைய சமுதாயம்? செ.அ.முஹம்மது ஒலி M.I.Sc மாநிலச் செயலாளர்,TNTJ பொதுக்கூட்டம் - 09.08.2026 பணகுடி - நெல்லை மாவட்டம்

நபிவழி நடந்தால் நரகமில்லை

நபிவழி நடந்தால் நரகமில்லை ஜே.அப்துல் முஹ்சின் மாநிலச் செயலாளர்,TNTJ அமைந்தகரை ஜுமுஆ - 07.08.2026

இணைவைப்பை வேரறுத்த இஸ்லாம்

இணைவைப்பை வேரறுத்த இஸ்லாம் ஆர்.அப்துல் கரீம் M.I.Sc மாநிலத்தலைவர்,TNTJ பொதுக்கூட்டம் - 16.08.2026 கோரிப்பாளையம் - மதுரை மாவட்டம்

மூடநம்பிக்கையும்! முஸ்லிம்களின் அறியாமையும்!

மூடநம்பிக்கையும்! முஸ்லிம்களின் அறியாமையும்! ஏ.முஹம்மது யூசுப் M.I.Sc மாநிலச்செயலாளர், TNTJ அகீதா தொடர் - 12.08.2026

பிறருக்காக நாம் குர்ஆன் ஓதலாமா?

பிறருக்காக நாம் குர்ஆன் ஓதலாமா? எம்.ஏ.அப்துர்ரஹ்மான் M.I.Sc பேச்சாளர், TNTJ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 08.02.2025

வங்கியிலிருந்து நமக்கு வரும் வட்டியை என்ன செய்வது?

வங்கியிலிருந்து நமக்கு வரும் வட்டியை என்ன செய்வது? எம்.ஏ.அப்துர்ரஹ்மான் M.I.Sc பேச்சாளர், TNTJ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 08.02.2025

ஆதம்(அலை) வரலாறு பாகம் - 03

ஆதம்(அலை) வரலாறு பாகம் - 03 கே.சுஜா அலி M.I.Sc பேச்சாளர்,TNTJ ஜுபைர் M.I.Sc பேச்சாளர்,TNTJ

வெளிநாட்டில் PG படிக்க ₹36 லட்சம் வரை உதவி!

வெளிநாட்டில் PG படிக்க ₹36 லட்சம் வரை உதவி! கல்வி சிந்தனை - 17 -08 -2026 திருவல்லிக்கேணி ஷாகுல் M.Com பேச்சாளர் TNTJ

ஒழியாத போதை..தொடரும் கொலைகள்

ஒழியாத போதை..தொடரும் கொலைகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு - 16.08.2026 M.S நகர் கிளை - திருப்பூர் மாவட்டம் ஐ.அன்சாரி (மாநிலச் செயலாளர்,TNTJ)

சென்னையில் அரசமைப்புச்சட்ட பாதுகாப்பு மாநாடு ஏன்

சென்னையில் அரசமைப்புச்சட்ட பாதுகாப்பு மாநாடு ஏன்? செய்தியும் சிந்தனையும் - 18.08.26 #Democracy #Constitution #bjp #india #judiciary ஐ.அன்சாரி (மாநிலச் செயலாளர்,TNTJ)

எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக 4,000 வழக்குகள் நிலுவை: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஆலோசகர் அறிக்கை

 source https://tamil.indianexpress.com/india/supreme-court-amicus-curiae-report-cases-pending-against-mps-mlas-12392209


supreme court xy

மொத்தமுள்ள 4,192 வழக்குகளில், 754 வழக்குகள் 5 முதல் 10 ஆண்டுகளாகவும், 562 வழக்குகள் 3 முதல் 5 ஆண்டுகளாகவும், 1,095 வழக்குகள் 3 ஆண்டுகளுக்கும் குறைவாகவும் நிலுவையில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Photograph: (கோப்புப் படம்)

எழுதியவர்: வினீத் பல்லா

எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைவாக விசாரிக்கக் கோரும் பொதுநல மனுவில், உச்ச நீதிமன்றத்தால் அமிக்கஸ் கியூரியாக (நீதிமன்ற நண்பர்) நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தாக்கல் செய்த அறிக்கையின்படி, நாடு முழுவதும் தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக மொத்தம் 4,192 வழக்குகள் விசாரணையில் நிலுவையில் உள்ளன; இதில் 519 வழக்குகள் ஒரு தசாப்தத்திற்கும் (10 ஆண்டுகள்) மேலாக நிலுவையில் உள்ளன.

மற்றொரு 700 வழக்குகள் விசாரணையில் நிலுவையில் உள்ளன, இதில் 360 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அதே நிலையில் உள்ளன.

இந்த எண்கள் ஹன்சாரியாவின் 22-வது அமிக்கஸ் அறிக்கையின் ஒரு பகுதியாகும். 4,192 என்ற இந்த எண்ணிக்கை உயர் நீதிமன்றங்கள் மற்றும் அவற்றின் இணையதளங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்தது என்று அது குறிப்பிடுகிறது; அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை, பிப்ரவரி 2024 நிலவரப்படி அதன் இணையதளத்தில் உள்ள 1,171 வழக்குகள் என்ற கணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உயர் நீதிமன்ற இணையதளங்கள் ஒட்டுமொத்தமாக 4,442 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் காட்டுகின்றன.

28 மாநிலங்களில் 14 மாநிலங்களின் முதல்வர்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி அதிகபட்சமாக 89 வழக்குகளை எதிர்கொள்கிறார், அவருக்கு அடுத்தபடியாக மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி (29), கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு (இருவரும் 19) மற்றும் கேரள முதல்வர் வி.டி. சதீசன் (18) ஆகியோர் உள்ளனர்.

மொத்தமுள்ள 4,192 வழக்குகளில், 754 வழக்குகள் 5 முதல் 10 ஆண்டுகளாகவும், 562 வழக்குகள் 3 முதல் 5 ஆண்டுகளாகவும், 1,095 வழக்குகள் 3 ஆண்டுகளுக்கும் குறைவாகவும் நிலுவையில் உள்ளன. அதிக அளவில் வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்கள்/உயர் நீதிமன்றங்களில் உத்தரப் பிரதேசம் (1,171), கேரளா (543), பீகார் (373), மகாராஷ்டிரா (364) மற்றும் ஒடிசா (330) ஆகியவை அடங்கும். இந்த எண்களுக்கான கணக்கீட்டுத் தேதிகள் மாறுபடுகின்றன. நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மாறுபட்டு இருந்தாலும், 2018 முதல் 4,000-க்கு மேல் நிலுவையில் உள்ளதாக அறிக்கை கூறுகிறது — டிசம்பர் 2018-இல் 4,075-ஆக இருந்தது, நவம்பர் 2022-இல் 5,140-ஆக உயர்ந்து, ஜூலை 2026-இல் 4,192-ஆகக் குறைந்துள்ளது.

2017-ஆம் ஆண்டில், மக்கள் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளை விரைவாக விசாரிக்க 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. டிசம்பர் 2018-இல், முன்னுரிமை அடிப்படையில் வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அமர்வு நீதிமன்றத்தையும் (Sessions Court), ஒரு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தையும் (Magisterial Court) அடையாளம் காண உத்தரவிட்டது.

நவம்பர் 2023-இல், உச்ச நீதிமன்றம் அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கும் இத்தகைய வழக்குகளை விரைவாக முடிப்பதை கண்காணிக்க தானாக முன்வந்து (suo motu) வழக்குகளைப் பதிவு செய்ய உத்தரவிட்டது மற்றும் விரைவான விசாரணைக்கான வழிகாட்டுதல்களை வழங்க சிறப்பு அமர்வுகளுக்கு அதிகாரம் அளித்தது.

பெரும்பாலான உயர் நீதிமன்றங்களால் பயனுள்ள கண்காணிப்பு இல்லாததை முந்தைய அமிக்கஸ் அறிக்கை சுட்டிக்காட்டியதை அடுத்து, பிப்ரவரி 2025-இல் இந்த விஷயம் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இது ஆகஸ்ட் 18 அன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் இருந்தபோதிலும், நிலுவை வழக்குகள் தோராயமாக அதே மட்டத்தில் இருப்பதாக ஹன்சாரியா கூறினார். இதற்குக் காரணம் சிறப்பு நீதிமன்றங்களுக்கு வழக்கமான நீதிமன்றப் பணிகள் அதிகமாக இருப்பது, மீண்டும் மீண்டும் வழக்குகள் ஒத்திவைக்கப்படுவது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாமல் இருப்பது, சாட்சிகளைப் பாதுகாப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் போதிய கண்காணிப்பின்மை ஆகியவையே தாமதத்திற்கு காரணம் எனக் குறிப்பிட்டார்.

நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்க்கப்படும் வரை சிறப்பு நீதிமன்றங்கள் மக்கள் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை மட்டுமே பிரத்யேகமாக விசாரிக்க வேண்டும்; 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை தினமும் விசாரிக்க வேண்டும்; குற்றம் சாட்டப்பட்ட மக்கள் பிரதிநிதி தொடர்ந்து இரண்டு தேதிகளில் ஆஜராகத் தவறினால் பிணையில் வர முடியாத பிடியாணை (என்.பி.டபிள்யூ) பிறப்பிக்க வேண்டும் என்றும் அமிக்கஸ் பரிந்துரைத்துள்ளார். சாட்சிகளை உறுதி செய்ய ஒரு முதன்மை வழக்கு தொடர் அதிகாரியை நியமிக்கவும், உயர் நீதிமன்ற இணையதளங்களில் வழக்குத் தரவுகள் மற்றும் உத்தரவுத் தாள்களை உடனுக்குடன் பதிவேற்றவும் இந்த அறிக்கை முன்மொழிகிறது.

குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குள் வழக்குகளை முடிக்குமாறும், 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் மாதந்தோறும் கண்காணிக்கவும், தாமதமான தனிப்பட்ட வழக்குகளை நுணுக்கமாகக் கண்காணிக்கவும் அவர் கோரியுள்ளார்.

கூட்டுறவு கடன் தள்ளுபடி ஏமாற்றம்; வாக்குறுதியை நிறைவேற்றாத அமைச்சர்கள்; கொந்தளிக்கும்

 source https://tamil.indianexpress.com/tamilnadu/pr-pandian-criticizes-tn-govt-cooperative-farm-loan-waiver-announcement-12393707

PR Pandian Thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் தண்டலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன், தமிழக அரசின் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்குப் பயனற்றதாக உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம் தண்டலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன், தமிழக அரசின் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்குப் பயனற்றதாக உள்ளது என்று குற்றம் சாட்டினார். மேலும், எல்லைக் கடத்தல் தடுப்பு, நீர்நிலைகள் தூர்வாருதல் மற்றும் திருமழிசை நிலங்களை விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தண்டலம் நகரத்தில் மாவட்ட தலைவர் பி.சுரேஷ்பாபு
தலைமையில் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாநில தலைவர் பிஆர்.பாண்டியன் பங்கேற்று பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திருவள்ளூர் மாவட்டம் ஆந்திரா தெலுங்கானா கர்நாடக மாநில எல்லையை ஒட்டி இருப்பதால் அங்கு விளைவிக்கக்கூடிய நெல்லை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வதற்கு வருவாய் துறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட அதிகாரிகள் துணையோடு உள்ளூர் நபர்களும் துணை போகிறார்கள். இதனை தடுத்து நிறுத்த சுங்கம் சாளைகள் அமைத்து தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்.

தவறான வகையில் நெல் விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். 

கொசஸ்தலை- ஆரணி ஆறுகளை இணைத்து நிலத்தடி நீரை மேம்படுத்து வதோடு,சாகுபடி பரப்பளவை அதிகரிக்க வேண்டும்.

திருமழிசை சாட்டிலைட் சிட்டி அமைப்பதற்கு 1996ல்199 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க 2021 இல் உத்திரவிட்டது. மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றதால் விவசாயிகளுக்கு நிலத்தை ஒப்படைக்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்து விட்டது. இது நாள் வரையிலும் விவசாயிகள் வசம் நிலத்தை ஒப்படைக்காமல் அரசு காலம் கடத்தி வருகிறது. உடனடியாக விவசாயிகள் பெயரில் பட்டா மாற்றம் செய்து ஒப்படைக்க முன்வர வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் டெல்டாவிற்கு இணையான வகையில் விவசாயம் செய்யப்படுவதால் செங்காத்த குளம் அறிவுசார் நகரத்தில் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்க வேண்டும்.

எல் நினோ தாக்குதலில் இருந்து பாதுகாத்திட ஏரி குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி கரைகளை உயர்த்தி நீர் சேமிப்பு கொள்ளளவு உயர்த்திட வேண்டும். இதற்காக மத்திய அரசிடம் உரிய நிதியை கேட்டு பெற வேண்டும்.

தென் மாநிலங்களில் முதலமைச்சர்கள் மாநாடு விரைவில் சென்னையில் நடைபெறுவதை வரவேற்கிறோம்.  இம்மாநாட்டில் காவிரி முல்லைப் பெரியாறு, பாலாறு தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளின் நீர்தாவா பிரச்சனைகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட ஒத்த கருத்தை உருவாக்க மத்திய அரசு முன் வர வேண்டும்.

தமிழக முதலமைச்சரின் மூன்றாவது முறை கடன் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. 8 அமைச்சர்கள் அமர்ந்து கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி பேசி உத்திரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படையில் கடன் அறிவிப்பு வெளிவராதது விவசாயிகளுக்கு பயனற்றதாகி விட்டது. உடனடியாக மறுபரிசீலனை செய்து ஒரு லட்சம் வரையிலும் நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்ய முதலமைச்சர் முன்வர வேண்டும் என்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் விஜய் பிரசாத், சென்னை மண்டல தலைவர் மெதூர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் மோகன கிருஷ்ணா, பொருளாளர் அகஸ்தீஸ்வரன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி

ரீல்ஸ் சர்ச்சை பதிவுகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் அதிரடி

 source https://tamil.indianexpress.com/india/supreme-court-seeks-states-meta-response-over-police-posts-revealing-accused-identities-12393388


காவல்துறையினர் தங்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் முகங்கள் மற்றும் அடையாளங்களை வெளியிடுவதையும், அவர்களை மனிதத்தன்மையற்ற முறையில் நடத்துவதை காட்டும் வீடியோக்கள் பதிவிடுவதையும் தடைசெய்ய கோரியும், ஏற்கனவே உள்ள அத்தகைய பதிவுகளை உடனடியாக நீக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு (PIL) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் மற்றும் முன்னணி சமூக ஊடக நிறுவனங்களான 'எக்ஸ்' (X), 'மெட்டா' (Meta) ஆகியவற்றுக்கு செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த சமூக சேவகரும் பத்திரிகையாளருமான ஹேமேந்திர படேல் தாக்கல் செய்த இந்த மனு, இந்திய தலைமை நீதிபதி (CJI) சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி - வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், சில உயர் நீதிமன்றங்கள் ஏற்கனவே இதுதொடர்பாக உத்தரவுகளை பிறப்பித்து இருந்தாலும், இதனை முழுமையாகத் தடுக்க இன்னும் விரிவான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன; மேலும் சமூக ஊடக இடைத்தரகர் நிறுவனங்களும் இதில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்று வாதிட்டார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி சூர்யா காந்த், இதற்காக ஒரு முறையான ஒழுங்குமுறை கட்டமைப்பு (Regulatory regime) இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு நோட்டீஸ் பிறப்பித்தார்.

மனிதாபிமானமற்ற உடலளவிலான தாக்குதல்: பல்வேறு மாநிலக் காவல்துறையினர் தங்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடியோக்களைப் பதிவேற்றுகின்றனர். அவற்றில் குற்றவாளிகள் விலங்கிடப்பட்டும், கயிற்றால் கட்டப்பட்டும், லத்தியால் தாக்கப்பட்டும், முழங்காலிட வைக்கப்பட்டும், படிக்கட்டுகளில் இருந்து இழுத்துச் செல்லப்படும் காட்சிகளும் இடம்பெறுகின்றன. இது ஒரு ஜனநாயக சமூகத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அருவருப்பான செயலாகும். 

குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பொதுவெளியில் ஊர்வலமாக அழைத்துச் செல்வது மற்றும் காவல் மரபு மீறிய தாக்குதலுக்குப் பிறகு வலியால் அவர்களால் சரியாக நடக்ககூட முடியாத நிலை வீடியோ வெளியிடுகின்றனர். பெரும்பாலான வீடியோக்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் முகங்கள் மிகத் தெளிவாகக் காட்டப்படுகின்றன. காவல்துறையினர் தங்களை 'ஹீரோ' போலவும், 'மாச்சோ' இமேஜிலும் காட்டிக்கொள்ள இந்த ரீல்ஸ் மற்றும் வீடியோக்களுக்குப் பின்னணி இசையைச் சேர்க்கின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் ஊடக விசாரணைக்கு (Media trial) இணையானவை. மேலும் எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் நடைபெற வேண்டிய 'அடையாள அணிவகுப்பு' நடைமுறைகளின் நம்பகத்தன்மையை இது முற்றிலும் பாதிக்கிறது.

குஜராத், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் & ஹரியானா, மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள் காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து, வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தன. ஆனால், இதுவரை அத்தகைய நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

காவல்துறை அமைப்புகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் முகம்/அடையாளங்கள் வெளிப்படுத்துவதையோ அல்லது அவர்களைக் கொடூரமாக நடத்துவதைக் காட்டும் பதிவுகளைப் பதிவேற்றுவதைத் தடுக்கவும் அனைத்து மாநில அரசுகளும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும்.

X மற்றும் Meta நிறுவனங்களுக்கு உத்தரவு: குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தும் அல்லது மனிதாபிமானமற்ற வன்முறைக் காட்சிகளைக் கொண்ட பதிவுகள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்களில் பதிவிடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய முறையான கொள்கைகளை வகுக்க வேண்டும். மேலும் பயனர்கள் புகார் அளித்தால், அத்தகைய பதிவுகளை உடனடியாக நீக்குவதற்கான வெளிப்படையான மற்றும் முறையான கட்டமைப்பு வசதியை உருவாக்க உத்தரவிட வேண்டும்.

அமெரிக்காவில் கடுமையான வாக்காளர் விதிகள்: இந்தியாவை உதாரணமாக சுட்டிக்காட்டுவது ஏன்?

 

source https://tamil.indianexpress.com/explained/trump-cites-india-election-system-for-us-voter-id-rules-12393574

trump exp

முன்னதாக டிரம்ப் வாக்காளர் மோசடிகள் குறித்துத் தனது கவலையைத் தெரிவித்திருந்தார். Photograph: (Photo: AP)

எழுதியவர்: ரிஷிகா சிங்

அமெரிக்க வாக்காளர்களுக்கு ஏன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை தேவையில்லை என்று இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது நிர்வாகத்திடம் கேட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) தெரிவித்தார். மேலும் இதனை இந்தியாவின் தேர்தல் முறையோடு ஒப்பீடும் செய்தார்.

"இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், எங்கள் நிர்வாகத்திடம் -செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படி தேர்தல்களை நடத்த முடிகிறது? என்று கேட்டார். இந்தியாவின் கடந்த தேர்தலில் 64.6 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். அதில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் மூலம் வாக்களித்தனர், மேலும் ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணத்தைக் வைத்திருக்க வேண்டியிருந்தது. நாம் உடனடியாக 'சேவ் அமெரிக்கா சட்டத்தை' (THE SAVE AMERICA ACT) நிறைவேற்ற வேண்டும் - அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப்," என்று அவர் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

டிரம்ப் நிர்வாகம் தனது சொந்தத் தேர்தல் நடைமுறைகளை மாற்றுவதற்காக, ஆதார் இணைப்பைக் குறிப்பிடும் இந்தியாவின் முறையையும், பிரேசில் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளின் முறைகளையும் ஏற்கனவே மேற்கோள் காட்டியுள்ளது. பல ஆண்டுகளாகவே, வாக்காளர் அடையாள அட்டை என்பது அமெரிக்க அரசியலில் இரு முக்கியக் கட்சிகளிடையே பெரும் பிளவை ஏற்படுத்தும் விவகாரமாக உள்ளது. குடியரசுக் கட்சியினர் வாக்களிப்பதற்கு அடையாள அட்டையைக் கட்டாயமாக்க வேண்டும் என ஆதரிக்கும் வேளையில், ஜனநாயகக் கட்சியினர் அதை எதிர்த்து வருகின்றனர். எனவே, அமெரிக்கர்கள் தற்போது எவ்வாறு வாக்களிக்கிறார்கள் மற்றும் டிரம்ப் இப்போது இந்த விவகாரத்தை ஏன் எழுப்புகிறார்?

அமெரிக்காவில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தேவையா?

பொதுவாக, ஆம். அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தனக்கான வாக்காளர் அடையாள விவாதங்களை சுயமாக அமைத்துக் கொள்கின்றன. பெரும்பாலான மாநிலங்கள் நேரில் வந்து வாக்களிப்பதற்கு ஓட்டுநர் உரிமம் (Driver's License), மாநில அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு (Passport) போன்ற ஏதேனும் ஒரு அடையாள ஆவணத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துவதாக வாக்காளர்களுக்கான அமெரிக்க அரசின் இணையதளம் தெரிவிக்கிறது.

இருப்பினும், இத்தகைய அடையாள அட்டைகள் இல்லாதது கூட எப்போதும் வாக்காளர்களைத் தடுத்து நிறுத்துவதில்லை. "சில மாநிலங்கள் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் படிவத்தில் கையெழுத்திடக் கேட்கலாம்... மற்ற மாநிலங்கள் உங்களைத் தற்காலிக வாக்களிப்பு செய்ய அனுமதிக்கும்" என்று அந்த இணையதளம் கூறுகிறது.

இன்று நடைமுறையில் உள்ள பல நிபந்தனைகள், குறிப்பாகப் புகைப்பட அடையாள அட்டை தேவைகள், கடந்த சில தசாப்தங்களில்தான் நடைமுறைக்கு வந்தன. 2000-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜார்ஜ் டபிள்யூ புஷ், அல் கோரைத் தோற்கடித்த சம்பவத்திலிருந்து இவற்றை அறியலாம். புஷ்ஷின் வெற்றிப் பாதையில் புளோரிடா மாநிலத்தின் வாக்கு மறுஎண்ணிக்கை மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்ற வழக்கு எனப் பல சர்ச்சைகள் அடங்கியிருந்தன.

பின்னர் 2002-ல், வாக்களிப்பு முறையைச் சீரமைக்கவும், மாநிலங்கள் முழுவதும் குறைந்தபட்சத் தரநிலைகளை நிலைநிறுத்தவும் 'ஹெல்ப் அமெரிக்கா வோட் ஆக்ட்' (HAVA) நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட 'ப்ரென்னன் சென்டர் ஃபார் ஜஸ்டிஸ்' அமைப்பின் கூற்றுப்படி, இந்தச் சட்டம் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்யும்போது, பெரும்பாலான அமெரிக்கர்களிடம் இருக்கும் ஓட்டுநர் உரிம எண் அல்லது சமூக பாதுகாப்பு எண்ணின் (Social Security Number) கடைசி நான்கு இலக்கங்கள் போன்ற தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டது. அவை இல்லாத பட்சத்தில், வாக்காளர் பதிவிற்காக அவர்களுக்கு ஒரு தனித்துவமான அடையாள எண் ஒதுக்கப்படுகிறது.

குறிப்பிட்ட வாக்காளர்களுக்கு (புதிய வாக்காளர்கள் உட்பட), தற்போதைய மற்றும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை, மின்சாரம்/தண்ணீர் கட்டண ரசீதுகள், வங்கி கணக்கு விவரங்கள், அரசு காசோலை மற்றும் சம்பள ரசீது போன்ற ஆவணங்களில் ஒன்றைச் சமர்ப்பிப்பதன் அடிப்படையில் மட்டுமே வாக்களிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

இன்று, அமெரிக்காவின் 36 மாநிலங்கள் வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் ஏதேனும் ஒரு வடிவத்திலான அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக மாநில சட்டமன்றங்களின் தேசிய மாநாடு (என்.சி.எஸ்.எல்) அமைப்பு தெரிவிக்கிறது. "மீதமுள்ள 14 மாநிலங்கள் மற்றும் வாஷிங்டன் டி.சி. ஆகியவை வாக்காளர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றன. பெரும்பாலான நேரங்களில், வாக்குச்சாவடியில் வழங்கப்படும் கையொப்பம் போன்ற பிற அடையாளத் தகவல்கள், ஏற்கனவே பதிவில் உள்ள தகவல்களுடன் சரிபார்க்கப்படுகின்றன" என்றும் அது மேலும் சேர்க்கிறது.

வாக்காளர் அடையாள அட்டையில் டிரம்ப் கவனம் செலுத்துவது ஏன்?

அமெரிக்க அரசியலில் இரு முக்கிய அரசியல் கட்சிகளும் அடையாள அட்டை விவகாரத்தில் வெவ்வேறான நிலப்பாடுகளைக் கொண்டிருப்பதே இதன் முக்கியத்துவத்திற்குக் காரணம் ஆகும்.

"அடையாள அட்டை தேவைகளை அதிகரிப்பது, ஆள்மாறாட்டம் செய்து வாக்களிப்பதைத் தடுக்கும் என்றும், தேர்தல் நடைமுறையில் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். ஆனால், இத்தகைய மோசடிகள் மிகக் குறைவாகவே நடப்பதாகவும், வாக்காளர்கள் மீதான இந்த நிபந்தனைகள் அவர்களின் வாக்களிக்கும் உரிமையைத் தேவையின்றி கட்டுப்படுத்துவதாகவும், தேர்தல் அதிகாரிகளுக்குத் தேவையில்லாத செலவுகளையும் நிர்வாகச் சுமைகளையும் ஏற்படுத்துவதாகவும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்" என்று என்.சி.எஸ்.எல் குறிப்பிடுகிறது.

இந்த பிளவு மாநில அளவிலும் எதிரொலிக்கிறது. கடுமையான அடையாள அட்டை விதிகளைக் கொண்ட மாநிலங்கள் பெரும்பாலானவை அலபாமா மற்றும் டெக்சாஸ் போன்ற 'சிவப்பு மாநிலங்கள்' (வரலாற்று ரீதியாகக் குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பவை) ஆகும். தளர்வான விதிகளைக் கொண்ட மாநிலங்கள் கலிபோர்னியா மற்றும் நியூயார்க் போன்ற 'நீல மாநிலங்கள்' (வரலாற்று ரீதியாக ஜனநாயகக் கட்சி ஆதரவு மாநிலங்கள்) ஆகும்.

2017-ம் ஆண்டில் "அமெரிக்க மாநிலங்களில் வாக்காளர் அடையாளச் சட்டங்களை ஏற்றுக்கொள்வதைப் புரிந்துகொள்வது" என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், கல்வியாளர்கள் டேனியல் ஆர் பிகர்ஸ் மற்றும் மைக்கேல் ஜே ஹன்மர், "2000-ம் ஆண்டிலிருந்து முதன்முறையாக வாக்காளர் அடையாளச் சட்டங்களை இயற்றும் மாநிலங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது (14-லிருந்து 36 ஆக)" என்று குறிப்பிட்டனர். கட்டாயப் புகைப்பட அடையாள அட்டைகள் 2000-களின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டன.

"இந்தப் பிளவின் மையம், கட்சி ரீதியான ஆதாயங்கள் மற்றும் தேர்தல் வெற்றியின் கணக்கீடுகளிலிருந்தே உருவாகிறது," என்று அவர்கள் எழுதினர். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் லத்தீனோக்கள் போன்ற ஜனநாயகக் கட்சி ஆதரவுப் பிரிவினர் அடையாள அட்டைகளை வைத்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு... இது குடியரசுக் கட்சியினருக்குத் தங்களது தேர்தல் வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. எனவே, ஜனநாயகக் கட்சியினரின் வாக்கு சதவீதத்தைக் குறைக்கும் நோக்கில் தான் குடியரசுக் கட்சியினர் அடையாள அட்டை சட்டங்களை ஆதரிக்கின்றனர் (மற்றும் ஜனநாயகக் கட்சியினர் எதிர்க்கின்றனர்) எனச் சந்தேகிப்பது நியாயமானதே" என்று அவர்கள் ஆய்வுகளைச் மேற்கோள் காட்டி தெரிவித்தனர்.

டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள 'சேவ் அமெரிக்கா மசோதா' (The Save America Bill), கூட்டாட்சித் தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்வதற்கு முன் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை, குடியுரிமைக்கான சான்று மற்றும் தபால் வழி வாக்களிப்பு முறைக்குத் தடை (நோய், ஊனம், ராணுவம் அல்லது பயணம் தவிர) ஆகியவற்றைக் கட்டாயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இடைக்காலத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த மசோதாவின் நேரமும் முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், இது செனட் சபையில் தடையைச் சந்திக்கிறது, அங்கு குடியரசுக் கட்சியினர் 100 இடங்களில் 53 இடங்களை மட்டுமே வைத்துள்ளனர், ஆனால் இந்த மசோதா நிறைவேற 60 வாக்குகள் தேவைப்படுகின்றன. கடந்த காலத்தில், 2020 அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், தன்னிடம் இருந்து தேர்தல் திருடப்பட்டுவிட்டதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார், இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது