புதன், 2 ஏப்ரல், 2014

அதிகப் பிரசங்கித்தனம் மலக்குகளின் இயல்புக்கு மாற்றமானதாகும்.




அதிகப் பிரசங்கித்தனம் மலக்குகளின் இயல்புக்கு மாற்றமானதாகும்.

அடுத்து மற்றொரு வசனத்தையும் ஆதாரமாகக் காட்டி சூனியத்தால் எதையும் செய்யலாம் என்று கூறுகின்றனர்.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். அவ்விரு வானவர்களுக்கும் (சூனியக் கலை) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியக்கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். 'நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே மறுத்து விடாதே!' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. அவர்களுக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். 'இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை' என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

 (அல்குர்ஆன் 2:102)

ஹாரூத், மாரூத் என்பவர்களிடம் மக்கள் வந்து ஸிஹ்ரைக் கற்றுக் கொண்டதாக குறிப்பிடும் இறைவன், அதன் அதிகபட்ச விளைவு என்ன என்பதை நமக்கு அடையாளம் காட்டுகின்றான்.

ஸிஹ்ர் எனும் கலை மூலம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றிருந்தால் அந்த மிகப்பெரிய பாதிப்பை இறைவன் இங்கே கூறியிருப்பான். அந்த மக்களும் அதனையே கற்றிருப்பார்கள்.

கை, கால்களை முடக்க முடியும் என்றோ, ஒரு ஆளைக் கொல்ல முடியும் என்றோ இருந்திருந்தால் அதைத் தான் அம்மக்கள் கற்றிருப்பார்கள். அல்லாஹ்வும் அதைத் தான் சொல்லியிருப்பான்.

ஸிஹ்ருடைய அதிகபட்ச விளைவு என்னவென்றால் கணவன் மனைவியரிடையே பிளவையும், பிரிவையும் ஏற்படுத்துவது தான் என்பது இதிலிருந்து புலனாகிறது.

அதாவது இருவருடைய உள்ளத்திலும் சந்தேகத் தீயை மூட்டி அதனால் பிரிவை ஏற்படுத்த முடியும். இல்லாத ஒன்றை இருப்பதாகவோ, இருப்பதை இல்லாதது என்றோ மனித மனங்களில் ஐயத்தை ஏற்படுத்த முடியும். இது தான் ஸிஹ்ருடைய அதிகபட்சமான விளைவு.

ஒருவனது கை, கால்களை இந்தக் கலையின் மூலம் முடக்க முடியாது என்றாலும், தனது கைகால்கள் முடங்கி விட்டன என்ற எண்ணத்தை அவனுக்கு ஏற்படுத்த முடியும்.

 'உனக்கு இந்த நபர் இந்த மாதிரியான ஸிஹ்ர் செய்துள்ளார்' என்று தெரிவித்து விட்டால் அதுவே ஒருவனைப் படுக்கையில் தள்ளிவிடப் போதுமானதாகும். இல்லாததை எல்லாம் இருப்பதாக எண்ண ஆரம்பித்து விடுவான்.

இந்த விளைவைக் கூட திட்டவட்டமாகச் செய்து விட முடியுமா? முடியாது என்கிறான் இறைவன். இதன் மூலம் அல்லாஹ் நாடினால் அன்றி அவர்களால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்று மேற்கண்ட வசனத்தில் தெரிவிக்கின்றான்.

 2:102 வசனத்தை ஆதாரமாகக் கொண்டு சூனியம் என்பது உண்மையில் நிகழ்த்தப்படும் அதிசயமே என்று வாதிடுவது தவறு என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.

சூனியம் என்பது தந்திரமான ஏமாற்று வித்தையாக இல்லாமல் உண்மையாக நிகழ்த்தப்படும் அதிசயமாக இருந்தால் என்ன நிகழ வேண்டும்?

சூனியம் வைக்கிறேன் என்று ஏமாற்றும் பேர்வழிகள் அவர்களது பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடும் நாத்திகர்கள் மற்றும் நம்மைப் போன்றவர்களுக்கு எதிராக சூனியம் செய்து வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும். அப்படி அவர்களால் செய்ய முடிவதில்லை.

ஒரு சில தந்திரங்களைக் கற்று வைத்துக் கொண்டு அதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர். யார் அவர்களின் பித்தலாட்டத்தை உண்மை என்று நம்புகிறார்களோ, அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. இவர்கள் செய்வது பித்தலாட்டம் தான் என்பதில் யார் உறுதியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

தவறான மொழிபெயர்ப்பு

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். ஆனால், ஸுலைமான் ஒரு போதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். இன்னும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் பின்பற்றினார்கள். ஆனால் அவர்கள் இருவரும் 'நிச்சயமாக நாங்கள் சோதமையாக இருக்கிறோம். (இதைக்கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்களாகி விடாதீர்கள்' என்று சொல்லி எச்சரிக்காத வரையில் எவருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை. அப்படி இருந்தும் கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி, அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும் எந்தவித நன்மையும் தராததையுமே அவர்கள் கற்றுக் கொண்டார்கள். சூனியத்தை விலைக்கு வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளனர். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப் பெற்றுக் கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

 (அல்குர்ஆன் 2: 102)

திருக்குர்ஆனின் 2:102வது வசனத்திற்கு மேற்கண்டவாறு தான் பெரும்பாலான விளக்கவுரைகளிலும் மொழிபெயர்ப்புகளிலும் பொருள் காணப்படுகின்றது. வார்த்தைகளில் வித்தியாசம் இருந்தாலும் இந்தக் கருத்தைத் தான் பெரும்பாலான மொழி பெயர்ப்புக்கள் தருகின்றன.

அரபு இலக்கண அடிப்படையில் மேற்கண்டவாறு பொருள் கொள்ள இடமிருந்தாலும் வேறு பல காரணங்களால் இந்த மொழி பெயர்ப்பை ஏற்க முடியவில்லை. அதே அரபு இலக்கண அடிப்படையில் மற்றொரு விதமாகப் பொருள் கொள்ளவும் இடமிருக்கின்றது. அந்தப் பொருளே சரியானதாகவும் தோன்றுகின்றது.

சரியான மொழி பெயர்ப்பு

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். அவ்விரு வானவர்களுக்கும் (சூனியக் கலை) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியக்கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். 'நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே மறுத்து விடாதே!' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. அவர்களுக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். 'இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை' என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

 (அல்குர்ஆன் 2:102)

முதலில் நாம் எடுத்துக் காட்டிய மொழி பெயர்ப்பு எந்த வகையில் தவறானது என்பதை முதலில் காண்போம்.

ஹாரூத், மாரூத் எனும் பெயர் கொண்ட இரண்டு மலக்குகள் மனிதர்களிடம் வந்து ஸிஹ்ர் எனும் சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததாக முதலில் நாம் எடுத்துக் காட்டிய மொழி பெயர்ப்பு பொருள் தருகின்றது.

அதாவது இந்த சூனியத்தை இறைவன் புறத்திலிருந்து மலக்குகள் கற்றுக் கொண்டு அதை மக்களுக்கு கற்றுக் கொடுத்ததாக மேற்கண்ட பொருள் விளக்குகின்றது.

மலக்குகள் எப்படி இந்த சூனியத்தைக் கற்றுக் கொடுக்க முடியும்? என்ற நியாயமான கேள்விக்கு விளக்கமளிப்பதற்காக ஒரு கதையையும் சில விரிவுரையாளர்கள் எழுதி வைத்துள்ளனர்.

மனித சமுதாயத்தை இறைவன் அடிக்கடி புகழ்ந்து பேசுவதைக் கேட்ட வானவர்கள் பொறாமைப்பட்டு இறைவனிடம் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தார்களாம். மனிதர்கள் செய்யும் பாவங்களை எல்லாம் பட்டியல் போட்டுக் காட்டினார்களாம். அதற்கு இறைவன் 'மனிதர்களுக்கு ஆசை என்ற உணர்வை நான் வழங்கியுள்ளேன். இதனால் அவர்கள் பல சமயங்களில் தவறுகளைச் செய்து விடுகிறார்கள். உங்களில் இரண்டு பேரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களுக்கும் நான் ஆசை எனும் உணர்வை வழங்குகிறேன். அவர்கள் மண்ணுலகம் செல்லட்டும்!' என்றானாம். மலக்குகள் ஹாரூத், மாரூத் என்ற இருவரைத் தேர்வு செய்தார்களாம். அவ்விருவ ரும் பூமிக்கு வந்து மனிதர்களை விட அதிக அளவுக்குப் பாவங்கள் செய்தார்களாம். அவர்கள் தான் சூனியத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். இப்படி போகிறது கதை!

இந்தக் கதையும், இந்த கதையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட மேற்கண்ட அர்த்தமும் சரியானது தானா? என்று நாம் ஆராயும் போது திருக்குர்ஆனின் பல வசனங்களுடன் மேற்கண்ட அர்த்தம் மோதுவதைக் காணலாம்.

மனித சமுதாயத்தை இறைவன் படைக்கவிருப்பதாக அறிவித்தவுடனேயே மலக்குகள் தங்கள் ஆட்சேபணையை வெளியிட்டார்கள். அப்போது 'மனிதர்கள் குழப்பம் ஏற்படுத்துவார்கள், இரத்தம் சிந்துவார்கள்' என்றெல்லாம் குற்றங்களை அடுக்கினார்கள்.

 (பார்க்க அல்குர்ஆன் 2:30)

ஆதம் (அலை) அவர்களின் சிறப்பையும், தகுதியையும் இறைவன் நிரூபித்துக் காட்டிய பிறகு 'நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்' என்று கூறி தங்கள் தவறுக்கு மலக்குகள் வருந்தி விட்டனர்.

 (பார்க்க அல்குர்ஆன் 2:34)

அது மட்டுமின்றி மனிதனுக்காக அவர்கள் ஸஜ்தாவும் செய்து தங்கள் தவறுக்குப் பரிகாரம் தேடிக் கொண்டனர்.

 (பார்க்க அல்குர்ஆன் 2:34)

மனிதனின் தகுதியைப் பற்றி முன்பே விமர்சனம் செய்து அந்த விமர்சனம் தவறு என்று இறைவன் விளக்கிய பிறகு தவறு என்று ஒப்புக் கொண்டவர்கள் வானவர்கள்.

இத்தகைய இயல்பு படைத்த வானவர்கள், இன்னொரு முறை எப்படி இறைவனிடம் ஆட்சேபணை செய்திருப்பார்கள்? முன்பு ஆட்சேபணை செய்த போது அவர்களுடன் ஷைத்தான் இருந்தான். மேற்கண்டவாறு ஆட்சேபணை செய்யுமாறு அவர்களை அவன் தூண்டி விட்டிருக்க முடியும்.

ஷைத்தான் அவர்கனை விட்டும் வெளியேற்றப்பட்ட பிறகு முதல் ஆட்சேபணைக்காக ஏற்கனவே சூடுபட்டிருந்த மலக்குகள் எப்படி மறுபடியும் ஆட்சேபணை செய்திருப்பார்கள்?

அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.

 (அல்குர்ஆன் 66:6)

அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.

 (அல்குர்ஆன் 21 : 26, 27)

மேற்கண்ட வசனங்களில் மலக்குகளின் பண்புகளும் இயல்புகளும் தெளிவாக விளக்கப்படுகின்றன. இத்தகைய பண்புகளைக் கொண்ட வானவர்கள் இறைவன் செயல்பாட்டில் குறை கண்டு ஆட்சேபணை செய்திருப்பார்கள் என்று எப்படி நம்ப முடியும்?

மனிதனை இறைவன் படைக்க எண்ணிய போது, மலக்குகள் எப்படி ஆட்சேபணை செய்திருக்க முடியும்? என்று இந்த இடத்தில் கேள்வி எழலாம். அந்த சமயத்தில் வானவர்கள் செய்த ஆட்சேபணைக்கும், இந்தக் கதையில் கூறப்படும் ஆட்சேபணைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

மனிதனைப் படைப்பதற்கு முன் இறைவன் மலக்குகளிடம் கருத்துக் கேட்டான். இறைவன் அவர்களின் கருத்தைக் கேட்ட காரணத்தினாலேயே அவர்கள் தங்கள் கருத்தைக் கூறினார்கள். இதை ஆட்சேபணை என்றோ, அதிகப்பிரசங்கித்தனம் என்றோ கூற முடியாது.

இந்தக் கதையில், மலக்குகளிடம் இறைவன் கருத்து எதுவும் கேட்காத நிலையில், மனிதனைப் படைத்து முடித்து விட்ட நிலையில் மலக்குகள் எதிர்க் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.

இது போன்ற அதிகப் பிரசங்கித்தனம் மலக்குகளின் இயல்புக்கு மாற்றமானதாகும்.

இறைவனையும், மலக்குகளையும் குறைத்து மதிப்பிடக்கூடிய மேற்கண்ட அர்த்தத்தை ஏற்க முடியாது. ஸிஹ்ர் எனும் சூனியத்தைக் கற்பிப்பது, குப்ர் எனும் இறை மறுப்பாகும் என்று மேற்கண்ட அர்த்தமே ஒப்புக் கொள்கிறது. இத்தகைய இறை மறுப்பான காரியங்களை மலக்குகள் ஒரு போதும் செய்திருக்க முடியாது.

இறைவனின் அந்தஸ்தையும் மலக்குகளின் அந்தஸ்தையும் குறைக்காத வகையிலேயே மேற்கண்ட வசனத்திற்கு பொருள் கொள்ள வேண்டும். அப்படிப் பொருள் கொள்ள ஏற்ற வகையிலும் மேற்கண்ட வசனம் அமைந்துள்ளது. அதை விபரமாகக் காண்போம்.