பாக். ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு: 09 05 2025
/indian-express-tamil/media/media_files/2025/05/09/LbsHPrswzCNzXun4nXOb.jpg)
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு: இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு!
பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் தொடர்ந்து அதிகரித்ததால், அதனை அடக்க இந்திய ராணுவமும் களத்தில் இறங்கியது. பாகிஸ்தானின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை ”ஆபரேஷன் சிந்தூர்” என்ற நடவடிக்கை மூலம் இந்தியா தாக்கியது. எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்களை அழித்தது. பாகிஸ்தான் விடிய விடிய நடத்திய தொடர் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்து தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் 50 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தாக்குதலை நடத்த ஏவப்பட்ட பாகிஸ்தானின் 8 ஏவுகணைகளை இந்தியா நடுவானில் அழித்தது. இந்நிலையில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது குறித்து, இந்திய ராணுவம் வீடியோ வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
நள்ளிரவில் பாகிஸ்தான் ஆயுதப்படைகள் தாக்குதல் நடத்தின. ட்ரோன்கள், வெடிமருந்துகளை பயன்படுத்தி மேற்கு எல்லையில் தாக்குதல் நடந்தது. பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டன. இந்திய ராணுவம் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. அனைத்து தீய நோக்கங்களுக்கும் பலத்தால் பதில் அளிக்கப்படும். இவ்வாறு இந்திய ராணுவம் கூறியுள்ளது.
அதேபோல், பாகிஸ்தானின் எஃப்-16 உள்பட இரண்டு போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் பகுதிகளில் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில், ரஜௌரி மற்றும் பூஞ்ச் போன்ற ஜம்முவின் பல எல்லை மாவட்டங்களில் இருந்து பாகிஸ்தான் தரப்பில் இருந்து பீரங்கித் தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வந்தன.