ஆபரேஷன் சிந்தூர்: ஐசி-814, புல்வாமா குற்றவாளிகள் உட்பட 100 பயங்கரவாதிகள் பலி
/indian-express-tamil/media/media_files/2025/05/12/Fk3v6fvkaDDGcLguuWLh.jpg)
ஆபரேஷன் சிந்தூர்: ஐசி-814, புல்வாமா குற்றவாளிகள் உட்பட 100 பயங்கரவாதிகள் பலி
மே 7-ம் தேதி "ஆபரேஷன் சிந்து" நடவடிக்கையின் முதல்நாளில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் லஷ்கர்-இ-தொய்பா (LeT), ஜெய்ஷ்-இ-முகமது (JeM) ஆகிய அமைப்புகளின் முக்கிய தளபதிகள் 5 பேர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஞாயிற்றுக் கிழமை இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த முடாஸர் காடியன்காஸ் மற்றும் காலித் என்ற அபு அகாஷா; ஜெய்ஷ்-இ-முகமதுவைச் சேர்ந்த முகமது யூசுப் அசார், ஹபீஸ் முகமது ஜலீல் மற்றும் முகமது ஹசன் கான் ஆகியோர் கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முகமது யூசுப் அசார்:
உஸ்தாத் ஜி, முகமது சலீம் மற்றும் கோசி சாஹப் போன்ற பல்வேறு பெயர்களாலும் அறியப்படுகிறான். ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் மிகவும் முக்கியமானவன். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூத்த தளபதியான இவர், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரின் மைத்துனர் ஆவான். மேலும், 1999-ம் ஆண்டு IC-814 விமானக் கடத்தல் வழக்கிலும் தேடப்பட்டுவந்த குற்றவாளி ஆவான். விமானக் கடத்தலுக்குப் பிறகு, யூசுப் அசார் ஜெய்ஷ்-இ-முகமதுவின் நடவடிக்கைகளில் முக்கிய நபராக உருவெடுத்த முகமது யூசுப் அசார், இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி பட்டியலிலும் இடம்பெற்றிருந்தான். 2000-ம் ஆண்டு முதல், சர்வதேச போலீசாரின் சிவப்பு அறிவிப்புப் பட்டியலிலும் அவனது பெயர் இருந்தது.
2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமதுவின் பயிற்சி முகாம் மீது வான்வழித்தாக்குதல் நடத்தியபோது, அந்த முகாமுக்கு தலைமை தாங்கியவன் யூசுப் அசார்தான். அந்த முகாமில் தற்கொலைப் படை தாக்குதல்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814 கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டதிலும், இதன் விளைவாக மசூத் அசார் இந்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதிலும் யூசுப்அசாருக்கு முக்கிய பங்கு இருந்தது. அவன் விமானத்தில் நேரடியாக இல்லாவிட்டாலும், கடத்தல் நடவடிக்கையின் முக்கிய மூளையாகவும் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டவர்களில் யூசுப் அசாரும் ஒருவன். விமானம் காந்தஹாரில் தரையிறங்கியதும் கடத்தல்காரர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தப்பிச் செல்லும் திட்டம் ஆகியவற்றை உறுதிசெய்து, தளவாட மற்றும் செயல்பாட்டு ஆதரவையும் யூசுப் அசார் வழங்கினான்.
முதாஸ்ஸர் காடியன் காஸ்:
பாகிஸ்தானின் முரிட்கேவில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகமாகக் கருதப்படும் "மர்கஸ் தைபா" நிர்வாகத்தை முதாஸ்ஸர் கவனித்துவந்தான். இங்குதான் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவர் ஹபீஸ் முகமது சயீத் தனது முக்கிய சொற்பொழிவுகளை நிகழ்த்துவார் மற்றும் பெரிய பயங்கரவாத தாக்குதல்களின் திட்டமிடல்களை மேற்பார்வையிடுவார். 26/11 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் கோல்மன் ஹெட்லி ஆகியோரும் இதில்தான் பயிற்சி பெற்றனர்.
முதாஸ்ஸர் அபு ஜுண்டால் என்ற பெயர்களாலும் அறியப்படும் காஸ், லஷ்கர்-இ-தொய்பாவின் துணைத் தலைவர் சைஃபுல்லாஹ் காலித் கசூரியால் சேர்க்கப்பட்டான். முன்னதாக, அல் கித்மத் கமிட்டியின் தலைவரான ஹபீஸ் அப்துல் ரவூஃப் உடன் முதாஸ்ஸர் பாதுகாப்புப் பொறுப்பாளராக பணியாற்றினார். லாகூரில் உள்ள பி.எம்.எம்.எல் அரசியல் கட்சியின் பொதுச் செயலாளரான ஹபீஸ் சயீத்தின் மருமகன் ஹபீஸ் காலித் வலீதுடனும் அவர் பணியாற்றியுள்ளார்.
முதாஸ்ஸர் நிர்வகித்த இந்த வசதி, 1980-களின் முற்பகுதியில் ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகளால், மர்கஸ் தாவா வல் இர்ஷாதின் பிரிவாக லஷ்கர்-இ-தொய்பா உருவாக்கப்பட்ட பின்னர் நிறுவப்பட்டது. 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இது, விரிவான பயிற்சி மைதானங்கள், ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கான தங்குமிடங்கள் மற்றும் தளவாட மையங்களைக் கொண்டுள்ளது. சித்தாந்த மற்றும் ஆட்சேர்ப்பு மையமாக செயல்பட்டு, கட்டம் கட்டமாக ராணுவப் பயிற்சியை வழங்குகிறது.
முதாஸ்ஸரின் இறுதிச் சடங்கு வீடியோக்களில், பாகிஸ்தான் ராணுவத்தால் மரியாதை அணிவகுப்பு நடத்தப்படுவதும், பாக்., ராணுவத் தளபதி மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் சார்பில் மலர் வளையங்கள் வைக்கப்படுவதும் பதிவாகியுள்ளது. பாக்., ராணுவத்தின் தற்போதைய லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் பஞ்சாப் காவல்துறையின் ஐஜி ஆகியோர் அவரது இறுதி அஞ்சலில் நிகழ்வில் கலந்துகொண்டனர். அவரது இறுதி மரியாதை அரசுப் பள்ளியில் நடைபெற்றது. இதில் ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதியான ஜூடியின் ஹபீஸ் அப்துல் ரவூஃப் தலைமை தாங்கினார்.
ஹபீஸ் முகமது ஜமீல்:
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூத்த தளபதியான ஹபீஸ் முகமது பயங்கரவாதக் குழுவின் நிறுவனர் மசூத் அசாரின் மூத்த மைத்துனர் ஆவான். பாகிஸ்தான் பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகமான "மர்கஸ் சுப்ஹான் அல்லாஹ்"வின் பொறுப்பாளராக இருந்தான் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராணுவத்தின் கூற்றுப்படி, ஜமீல் ஜெய்ஷ்-இ-முகமதுவின் ஷூரா (முடிவெடுக்கும் அமைப்பு) உறுப்பினராகவும், மசூத் அசாரின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த ஹபீஸ் முகமது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்று ஜெய்ஷ்-இ-முகமதுவுக்கு ஆட்களைச் சேர்ப்பதுடன், குழுவுக்கான நிதி திரட்டலிலும் ஈடுபட்டான் என்று ராணுவம் கூறியது. வான்வழித் தாக்குதலில் ஹபீஸ் குடும்ப உறுப்பினர்களும் இறந்திருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1999-ல் மசூத் அசாரால் நிறுவப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது, 2009-ல் பஹாவல்பூர் வசதியை உருவாக்கியது. 6.5 ஏக்கர் பரப்பளவில் சுவர் எழுப்பப்பட்ட இந்த வளாகம் பயங்கரவாத பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டது. "ஜாமியா மஸ்ஜித் சுப்ஹான்அல்லாஹ்" என்று அழைக்கப்படும் இந்த வளாகம், பாகிஸ்தான் ராணுவத்தின் 31-வது படைப்பிரிவின் தலைமையகத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 2016-ம் ஆண்டு பதான்கோட் விமானப்படைத் தள தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தற்கொலை குண்டுவெடிப்பு (40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்) ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முகமது ஹசன் கான்:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான ஜெய்ஷ்-இ-முகமதுவின் செயல்பாட்டுத் தளபதி முஃப்தி அஸ்கர் கான் காஷ்மீரியின் மகன் ஆவான். 2019 புல்வாமா தாக்குதலில் தேடப்படும் இந்தியாவை சேர்ந்த தலைமறைவு குற்றவாளி ஆஷிக் நெங்க்ரூவுடனும் இவனுக்குத் தொடர்பு இருந்தது. "ஷாகர்கரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதுவின் செயல்பாட்டாளர்களான முகமது அட்னான் அலி என்ற முசாடிக், அலி காஷிஃப் ஜான் என்ற உஸ்மான் ஹைதர் மற்றும் முகமது யாசிர் ஆகியோருடனும் அவர் ஒருங்கிணைந்து செயல்பட்டான்" என்று ராணுவ அறிக்கை தெரிவித்தது.
ஷூரா கூட்டங்களில் தனது தந்தையுடன் முகமது ஹசன் தவறாமல் கலந்து கொள்வான் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. காஷ்மீரி, ஜெய்ஷ்-இ-முகமதுவின் முக்கியமான பயிற்சி முகாம்களை மேற்பார்வையிடுகிறார். இதில் முசாஃப் நகரில் உள்ள "மர்கஸ் சையத்னா பிலால்" முகாமும் அடங்கும். இந்த முகாம், பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கு முன்பு அவர்கள் தங்கி பயிற்சி பெறும் மையமாக செயல்படுகிறது.
காலித் என்ற அபு அகாஷா:
ஜம்மு-காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவன். லஷ்கர்-இ-தொய்பாவுக்காக ஆப்கானிஸ்தானிலிருந்து ஆயுதங்களை கடத்துவதில் முக்கிய பங்கு வகித்தான். பாகிஸ்தானில் அரசு ஆதரவுடன் செயல்படும் இந்திய எதிர்ப்பு பயங்கரவாத அமைப்பில் அவனது முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, பைசலாபாத்தில் நடந்த அவனது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பைசலாபாத்தின் துணை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை இந்திய ராணுவம் கூறுகையில், காலித் பயிற்சி பெற்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி. ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு பின்னர் பாகிஸ்தானுக்குள் சென்று பெஷாவரிலிருந்து செயல்பட்டான். சமீபத்தில் முரிட்கேவில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா தலைமையகத்திற்கு மாற்றப்பட்டு அந்த அமைப்பின் மத்திய குழு உறுப்பினராக இருந்தான். "லஷ்கர்-இ-தொய்பா ஜமாத்-உத்-தவா அமைப்பின் முக்கியஸ்தர்களான யாஹ்யா முஜாஹித், காரி யாகூப் ஷேக், அப்துல் ரெஹ்மான், காலித் வலீத், இன்ஜினியர் ஹாரிஸ் தார் மற்றும் அப்துல் ரெஹ்மான் அபித் ஆகியோருடன் நெருக்கமாகப் பணியாற்றினான்" என்று ராணுவ அறிக்கை தெரிவித்தது.