புதன், 1 ஜூலை, 2026

திருச்சியில் நிலுவைத் தொகை வழங்க ரூ.30,000 லஞ்சம்

 


New Project

திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர், முசிறி அருகே உள்ள தண்டலைபுத்தூர் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், திருச்சி மாவட்ட கல்வி அலுவலராகவும் (பொறுப்பு) பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக தேவி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருடைய வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றது தொடர்பான நிலுவைத் தொகை பில் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி, தேவியின் கணவரும் முன்னாள் ஆசிரியருமான இளமுருகு, மாவட்ட கல்வி அதிகாரி புகழேந்தியைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். அப்போது, வருடாந்திர ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமானால், அதற்குப் புகழேந்தி 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆசிரியர் இளமுருகு, இதுகுறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினர் இணைந்து ஒரு பொறிவைப்பு (டிராப்) நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அதன்படி, நேற்று இரவு திருச்சி பழைய கலெக்டர் அலுவலக பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில், ரசாயனம் தடவிய 30,000 ரூபாய் லஞ்சப் பணத்தை இளமுருகுவிடமிருந்து புகழேந்தி கேட்டுப் பெற்றார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புகழேந்தியை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திலும், புகழேந்தியின் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

1 7 2026 

source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-district-educational-officer-arrested-for-demanding-bribe-to-approve-teachers-arrear-bills-12122214

அமீரகத் தமிழர்கள் உஷார்

 dubai

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் தூதரகத் துணை அலுவலகம் மூலம் வழங்கப்படும் வழக்கமான பாஸ்போர்ட், விசா மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்தத் தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இந்தியத் தூதரகத் துணை அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வழக்கமான பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகள் ஜூலை 1-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் மிகவும் அவசரமான தூதரகச் சேவைகள்  மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகம் முழுவதும் இந்தியர்களுக்கான பாஸ்போர்ட், விசா மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு சேவைகளை அவுட்சோர்சிங் (Outsourced) முறையில் வழங்கி வரும் பொறுப்பை, 'அல்ஹிந்த் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்' (Alhind Tours and Travel LLC) நிறுவனம் ஜூலை 1 முதல் அதிகாரப்பூர்வமாகத் தன் வசம் எடுக்கிறது.

இந்த அதிரடி நிர்வாக மாற்றத்தின் காரணமாக, இதுவரை இந்தச் சேவைகளை வழங்கி வந்த 'பி.எல்,எஸ் இன்டர்நேஷனல்' (BLS International) மற்றும் 'எஸ்.ஜி.ஐ.வி.எஸ் குளோபல்' (SGIVS Global) ஆகிய நிறுவனங்கள், கடந்த ஜூன் 25-ஆம் தேதியோடு புதிய விண்ணப்பங்களைப் பெறுவதை நிறுத்திக் கொண்டன. முன்னதாக ஜூன் 26 முதல் ஜூன் 30 வரை 5 நாட்களுக்கு மட்டுமே இந்தச் சேவைகள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக (இந்தத் தடை ஜூலை 1-ஆம் தேதி வரை மேலும் ஒரு நாளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவசர உதவிக்கு யாரைத் தொடர்பு கொள்வது?

இந்தக் காலகட்டத்தில் பாஸ்போர்ட் அல்லது விசா தொடர்பாக ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்பட்டால், அமீரக வாழ் இந்தியர்கள் பின்வரும் வழிகளில் தூதரகத்தை உடனே தொடர்பு கொள்ளலாம்.

டோல் - ப்ரீ எண்: 800 46342 (800 INDIA)

வாட்ஸ்அப் எண்: +971 54 309 0571

மின்னஞ்சல் (Email): pbsk.dubai@mea.gov.in

டூரிஸ்டுகள் நோட் பண்ணுங்க

ஜூலை 2-ஆம் தேதி முதல் வழக்கமான சேவைகள் எப்படிச் செயல்படும் என்பது குறித்த முழு விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதுவரை வதந்திகளை நம்பாமல், தூதரகத்தின் சமூக ஊடகப் பக்கங்களை கவனிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/international/indian-embassy-in-uae-extends-passport-visa-services-suspension-till-this-date-12121374

மாவட்ட எல்லைகள் மறுவரையறை, சிந்தனைக் குழு உருவாக்கம்

 திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் உயர்மட்டக் குழு வரை கட்சியின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மறுசீரமைப்பு செய்து, கட்சிக்கு புதிய எனர்ஜியைக் கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனை முன்னெடுத்துச் செல்லும் வகையில், கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்காகப் புதிய குழு ஒன்றை அமைப்பதாக அவர் ஜூன் 30 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


இந்த உயர்நிலைக் குழுவில் முன்னாள் அமைச்சர்களான தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், ஆர். சக்கரபாணி, எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் தமிழரசி ரவிகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான இ. பரந்தாமன், டாக்டர் எழிலன் மற்றும் கட்சி நிர்வாகி எஸ்.கே.பி. கருணா ஆகியோரும் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் மாவட்ட எல்லைகளை மறுவரையறை செய்தல், சார்பு அணிகளை மறுசீரமைத்தல், தேர்தல் குழுவை மாற்றி அமைத்தல், நிரந்தரத் தேர்தல் மேலாண்மைக் குழுவை உருவாக்குதல், ஒரு சிந்தனைக் குழுவை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உட்கட்சி விவகாரங்களை ஆராய்ந்து இக்குழுவினர் தங்களது பரிந்துரைகளை வழங்க உள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்திற்குள் இக்குழு தனது விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்த பரிந்துரைகள் கிடைத்தவுடன், அவை கட்சியின் உயர்நிலைக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டு, அதன் பின்னரே இறுதி முடிவுகள் செயல்படுத்தப்படும் என்று அவர் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் உள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரில் சென்று, கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிவதற்காக இருவர் அடங்கிய 19 குழுக்களைத் தான் நியமித்திருந்ததாக ஸ்டாலின் நினைவு கூர்ந்தார். அந்தத் தணிக்கைக் குழுக்கள் தங்களது கள அறிக்கைகளை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளன. அந்த 19 குழுக்களுடனும் தான் தனித்தனியாக விரிவான ஆலோசனைகளை நடத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அந்த அறிக்கைகள் அனைத்தையும் தான் முழுமையாகப் படித்து, விரிவான குறிப்புகளை எடுத்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுதவிர, இணையவழி மூலமாக மட்டுமே கட்சி உறுப்பினர்களிடம் இருந்து சுமார் 6 லட்சம் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் பெறப்பட்டுள்ளன. கட்சியின் உட்கட்சி அமைப்பை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்பதில் கட்சித் தொண்டர்களிடையே ஏகோபித்த கருத்து நிலவுவதாகவும், கட்சியை மறுசீரமைத்து வலுப்படுத்துவது குறித்துத் தனக்கும் பல்வேறு ஆலோசனைகளும் யோசனைகளும் உள்ளதாகவும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-overhaul-stalin-formulates-high-level-committee-to-recommend-organizational-reforms-12122051