புதன், 2 ஜூலை, 2014

நோய் நிவாரணம் தருவது நபிகள் நாயகமா?





நோய் நிவாரணம் தருவது நபிகள் நாயகமா?

اَلسَّلاَمُ عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ

'நோய் நீக்குபவரே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்'
وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا
لَدَيْهِ بُرْءُ السَّقَامِ

'நீ நோயாளியாக இருந்தால் அதற்கான நிவாரணம் அவரிடமே (நபியிடமே உள்ளது'

وَمَرِيْضًا اَنْتَ عَائِدُهُ
قَدْ اَتَاهُ اللّهُ بِالْفَرَجِ

'(நபியே நீங்கள் எந்த நோயாளியை விசாரிக்கச் சென்றாலும் அல்லாஹ் அவருக்கு நிவாரணம் வழங்கி விடுவான்!' என்றெல்லாம் ஸுப்ஹான மவ்லிதில் கூறப்பட்டுள்ளது.

மனிதனுக்கு நோய்களை ஏற்படுத்துபவனும், அதை நீக்குபவனும் அல்லாஹ் தான். இதில் நபிமார்கள் உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இதற்கான சான்றுகளை ஏராளமாக நாம் காணலாம்.

இப்ராஹீம் (அலை அவர்கள் மிகச் சிறந்த இறைத்தூதராவார்கள். திருக்குர்ஆனில் அவர்களைப் பல இடங்களில் இறைவன் புகழ்ந்து பேசுகிறான். அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுவதிலிருந்து அவர்களின் மதிப்பு எத்தகையது என்று நாம் உணர முடியும்.

இப்ராஹீம் (அலை அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த போது இறைவனின் இலக்கணத்தைப் பின்வருமாறு விளக்கினார்கள்.
நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.
(அல்குர்ஆன் 26 :80)

நோய்களை நீக்கும் அதிகாரம் இறைவனுக்குரியது என இப்ராஹீம் (அலை அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.

அய்யூப் நபியவர்கள் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்ட போது தமது நோயை தாமே நீக்கிக் கொள்ளவில்லை. மாறாக இறைவனிடம் தான் அவர்கள் முறையிட்டனர். இறைவன் விரும்பிய போது அவர்களின் நோயைக் குணமாக்கினான்.

எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.
(அல்குர்ஆன் 21:83)

துன்பங்களையும், நோய்களையும் நீக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கும் இல்லை. அது இறைவனின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் குறிப்பிடுகிறது.

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 6:17)

அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்
(அல்குர்ஆன் 10:49)

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 10:107)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்! என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 39:38)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல போர்களைச் சந்தித்தார்கள். எதிரிகளைச் சந்திக்க வேண்டிய இந்த இக்கட்டான நேரத்தில் பல நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டுப் போரில் பங்கெடுக்க முடியாத நிலையில் இருந்தார்கள். நபியவர்களுக்கு நோய் தீர்க்கும் ஆற்றல் இருந்திருந்தால் இந்த நெருக்கடியான நேரத்தில் நோயுற்ற நபித்தோழர்களுக்கு நிவாரணம் அளித்திருப்பார்கள். அவர்களையும் போரில் பங்கெடுக்கச் செய்திருப்பார்கள். படை வீரர்கள் பற்றாக்குறையாக இருந்த இந்தக் கட்டத்தில் கூட அவ்வாறு செய்யவில்லை என்பதைப் பல ஹதீஸ்களிலிருந்து நாம் அறியலாம்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் பங்கெடுத்தோம். அப்போது அவர்கள், 'நிச்சயமாக மதீனாவில் சில மக்கள் உள்ளனர். நீங்கள் சம தரையையோ, பள்ளத்தாக்கையோ கடந்து சென்றால் அவர்களும் (கூலி பெறுவதில் உங்களுடன் உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களைத் தடுத்து விட்டது' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி நூல்: புகாரி 2839, 4423

சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நோய்களுக்கு ஆளானதுண்டு. நோயிலிருந்து தாமே அவர்கள் நிவாரணம் பெற்றதில்லை. நோய் நீக்கும் ஆற்றலை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்தால் அவர்களே நோய்க்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருந்த போது அவர்களிடம் சென்றேன். 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளீர்களா' என்று கூறினேன். அதற்கவர்கள் 'ஆம் உங்களில் இருவருக்கு ஏற்படும் காய்ச்சல் அளவுக்கு எனக்கு ஏற்பட்டுள்ளது' என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி நூல்: புகாரி 5648, 5660, 5667

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரும் நோய் வாய்ப்பட்டனர். அவர்களில் யாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நோய் நிவாரணம் தேடவில்லை. நான் குணப்படுத்துகிறேன் என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை. இறைவன் மட்டுமே நோய் தீர்க்கும் அதிகாரம் படைத்தவன் என்பதை அவர்கள் அப்போது கூறிய வார்த்தை ஐயமற விளக்குகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்றனர். தமது வலது கரத்தால் தடவிவிட்டு (அல்லாஹும்ம ரப்பன்னாஸ் அத்ஹிபில் பஃஸ இஷ்ஃபி அன்தஷ்ஷாஃபி, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக ஷிஃபா அன் லா யுகாதிரு ஸகமன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி நூல்: புகாரி 5675, 5742, 5743, 5750

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் பொருள்:
'இறைவா! மனிதர்களின் இரட்சகனே! இந்நோயை நீக்குவாயாக! நீ நிவாரணம் அளிப்பாயாக! நீயே நிவாரணம் அளிப்பவன்! உனது நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் ஏதுமில்லை. நோயை விட்டு வைக்காத வகையில் நிவாரணம் வழங்கு!'

நோய் தீர்ப்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுத்தம் திருத்தமாக இதன் மூலம் அறிவித்து விட்டனர்.

ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி அவர்களை நோய் விசாரிக்கச் சென்ற போது 'இறைவா! ஸஃதுக்கு நோய் நிவாரணம் வழங்கு' என்றே மும்முறை பிரார்த்தனை செய்தார்கள். இதை ஸஃது அவர்களே தெரிவிக்கிறார்கள். நூல்: புகாரி 5659

அல்லாஹ் ஒருவன் மட்டுமே நோய்களை நீக்கக் கூடியவன் என்பதையே அவர்கள் மக்களுக்குப் போதனை செய்தார்கள். அல்லாஹ் அனுமதிக்கும் போது மிக மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் அற்புதம் என்ற அடிப்படையில் அல்லாஹ்விடமே கோரி நிவாரணம் பெற்றுத் தந்துள்ளனர்.

அல்லாஹ் அனுமதிக்காத பல நூறு சந்தர்ப்பங்களில் அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். தாமே நோய் தீர்க்க வல்லவர் என்று சொன்னதே இல்லை.

அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை நேரில் சந்தித்து நோய் விலகிட இறைவனிடம் துஆச் செய்யுமாறு பல நபித்தோழர்கள் கேட்டதுண்டு. ஆனால் நீங்களே குணப்படுத்துங்கள் என்று கேட்டதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு மகள், தமது மகன் மரணத்தை நெருங்கிவிட்டதாகவும் உடனே வரவேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சொல்லியனுப்பினார்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அக்குழந்தை கொடுக்கப்பட்டது. அக்குழந்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மடியில் கிடத்தினார்கள். அதன் உயிர் மூச்சு தடுமாறியது. இதைக் கண்டு அவர்களின் கண்கள் கண்ணீர் சொரிந்தன. நூல்: புகாரி 1248

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவருக்கு நோய் ஏற்பட்ட போது கண்ணீர் தான் விட முடிந்தது. நோயைத் நீக்க முடியவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரணாக அமைந்த இந்த மவ்லிதைப் பாடுவது நன்மை தருமா? பாவத்தில் தள்ளுமா? என்று சிந்தித்துப் பாருங்கள்!

உணவளிக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு உண்டா?.

بَسَطْتُّ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ
اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ
مُسْتَشْفِعًا نَزِيْلَ هَذَالْحَرَمِ
فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ
فَاَنْجِدُوالْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ
وَاَطْفِئُوْا بِالْبَسْطِ وَهْجَ الْحُرَقِ
وَاَبْرِدُوْا بِاللُّطْفِ حَرَّ الْكَبِدِ

எனது வறுமை, கவலை காரணமாகக் கையேந்துகிறேன்.
உங்களின் அளப்பரிய அருளையும், வள்ளல் தன்மையையும் நான் நம்பியுள்ளேன்.

இந்த ஹரமில் (மதீனாவில் தங்கியிருக்கும் உங்களின் பரிந்துரையை வேண்டுகிறேன்.

என்னை நிரந்தரமான உதவி கொண்டு கவனித்து விடுங்கள்!
மூழ்குவதற்கு முன் இந்த ஏழையைக் காப்பாற்றி விடுங்கள்!

உங்கள் தாராளத் தன்மையால் எரியும் வெப்பத்தை அணைத்து விடுங்கள்!
உங்கள் இரக்கத்தால் ஈரலின் வெப்பத்தைக் குளிரச்செய்யுங்கள்!
اِنَّا بِهِ نَسْتَجِيْر
فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ

எல்லாத் துன்பங்களையும் நீக்கிட அவரிடம் நாம் அடைக்கலம் தேடுகிறோம்.
இவை யாவும் ஸுப்ஹான மவ்லிதில் காணப்படும் நச்சுக் கருத்துக்கள்!
மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் அல்லாஹ் தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. திருக்குர்ஆன் நெடுகிலும் இந்தக் கொள்கை பரவலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். (அல்குர்ஆன் 6:151)

மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களை அரவணைத்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்திட தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான். (அல்குர்ஆன் 8:26)

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது. (அல்குர்ஆன் 11:6)

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். (அல்குர்ஆன் 13:26)

அல்லாஹ் தான், வானங்களையும், பூமியையும் படைத்தான். வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் உங்களுக்கு உணவாகக் கனிகளை வெளிப் படுத்தினான். அவனது கட்டளைப்படி கடலில் செல்வதற்காக கப்பலையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். ஆறுகளையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான்.(அல்குர்ஆன் 14:32)

உங்களுக்கும், நீங்கள் யாருக்கு உணவளிப்போராக இல்லையோ அவர்களுக்கும் அதில் வாழ்வதற்குத் தேவையானவற்றை அமைத்தோம்.
(அல்குர்ஆன் 15:20)

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால் சிறப்பிக்கப் பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா நிராகரிக்கிறார்கள்? (அல்குர்ஆன் 16:71)

தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.(அல்குர்ஆன் 17:30, 31)

(முஹம்மதே! உமது குடும்பத்தினரைத் தொழுமாறு ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்கு செல்வத்தை அளிக்கிறோம். (இறைஅச்சத்திற்கே (நல்ல முடிவு உண்டு. (அல்குர்ஆன் 20:132)

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!என்று கேட்பீராக! (அல்குர்ஆன் 27:64)

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (அல்குர்ஆன் 29:17)

எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 29:60)

அல்லாஹ் தனது அடியார்களில், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அளவுடனும் வழங்குகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் (அல்குர்ஆன் 29:62)

தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:37)

வானங்களிலும், பூமியிலும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? என்று (முஹம்மதே! கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக! நாமோ அல்லது நீங்களோ நேர் வழியிலோ பகிரங்கமான வழி கேட்டிலோ இருக்கிறோம்.(அல்குர்ஆன் 34:24)

என் இறைவன், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராள மாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். எனினும் மனிதர் களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள் என்று கூறுவீராக!(அல்குர்ஆன் 39:36)

எனது இறைவன் தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதை குறைத்தும் கொடுக்கிறான். நீங்கள் எப்பொருளை (நல் வழியில் செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதி பலனை அளிப்பான். அவன் வழங்குவோரில் சிறந்தவன் என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 39:39)

மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கிறான். அல்லாஹ்வைத் தவிர படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?. (அல்குர்ஆன் 35:3)

தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாகவும், குறைத்தும் அல்லாஹ் வழங்குகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 39:52)

வானங்கள் மற்றும் பூமியின் திறவு கோல்கள் அவனுக்கே உரியன. தான் நாடியோருக்குச் செல்வத்தை அவன் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.(அல்குர்ஆன் 42:12)

அவன் தனது உணவை நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவன் உண்டா? மாறாக வரம்பு மீறுவதிலும் வெறுப்பிலுமே அவர்கள் மூழ்கி விட்டனர். (அல்குர்ஆன் 67:21)

மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே அவனது உணவு மற்றும் வசதிகள் இறைவனால் முடிவு செய்யப்பட்டு விடுகின்றன என்று கூறும் நபிமொழிகள் ஏராளமாக உள்ளன. நூல்: புகாரி 318, 3333, 6595

உணவளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள தனிப்பட்ட அதிகாரம். அதில் நபிமார்கள் உள்ளிட்ட எவருக்கும் எந்தப் பங்கும் இல்லை என்று இந்த வசனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அறிவிக்கின்றன. அல்லாஹ்வின் இந்தப் பிரகடனத்துக்கு எதிராக ஸுப்ஹான மவ்லிதின் இந்த வரிகள் அமைந்துள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்தை எதிர்த்து வந்த காபிர்கள், பல தெய்வங்களை வழிபட்டு வந்த முஷ்ரிக்குகள் கூட உணவளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்று நம்பி வந்ததாகத் திருக்குர்ஆன் கூறுகின்றது.

வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்? என்று கேட்பீராக! அல்லாஹ் என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா? என்று நீர் கேட்பீராக! (அல்குர்ஆன் 10:31)

மக்கத்துக் காபிர்கள் கூட உணவளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான தனியுரிமை என்று நம்பியிருந்தார்கள் என்பதற்கு இவ்வசனம் சான்றாக உள்ளது. உணவளிக்கும் அதிகாரம் தனக்கு மட்டுமே உரியது என்பதை அல்லாஹ் பல இடங்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன். (அல்குர்ஆன் 30:40)

படைத்தல், மரணிக்கச் செய்தல், மீண்டும் உயிர்ப்பித்தல் ஆகியவை எப்படி இறைவனின் தனிப்பட்ட உரிமையோ அது போன்று உணவளிப்பதும் அவனது தனிப்பட்ட உரிமையாகும். இந்த நான்கில் எந்த ஒன்றையும் எவரும் செய்ய முடியாது என்று தெளிவான பிரகடனம் இது.

இந்த உரிமை இறைவனுக்கு மாத்திரம் சொந்தமானது என்பதால் தான் எத்தனையோ நபிமார்களை இறைவன் வறுமையில் வைத்திருந்தான். நபித்தோழர்கள் பசியால் துடித்திருக்கின்றனர்.

நபியவர்களுக்கு வறுமையை விரட்டும் அதிகாரம் இருந்திருந்தால் அவர்களே வறுமையில் வாடியிருக்க மாட்டார்கள்.

பல நாட்கள் பட்டினி கிடந்த நபித்தோழர்கள்,
வயிற்றில் கற்களைக் கட்டிக் கொண்டவர்கள்,
ஒரேயொரு பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டு உயிரைத் தக்க வைத்துக் கொண்டவர்கள்,
தங்குவதற்குக் கூட சொந்த இடமில்லாமல் பள்ளிவாசலில் தங்கியவர்கள்,
இறந்த பின் போர்த்துவதற்குக் கூடப் போதிய ஆடையில்லாமல் புல் பூண்டுகளால் மறைக்கப்பட்டவர்கள்,
ஒட்டுப்போட்ட ஆடைகளை அணிந்தவர்கள்,
வீட்டில் விளக்கெரிக்கக் கூட வழியில்லாதவர்கள்,
வெறும் தண்ணீரைக் கொடுத்து குழந்தைகளை உறங்க வைத்தவர்கள்
என்று பல்வேறு வகைகளில் வறுமை அவர்களை ஆட்டிப் படைத்தது.

அவர்களில் எவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தங்கள் வறுமையை நீக்குமாறு வேண்டவில்லை. அல்லாஹ்விடமே வேண்டினார்கள். அவனிடமே வேண்டுமாறு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் போதித்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தும் அவர்களை நேரில் கண்டிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வறுமையை நீக்குமாறு கோரவில்லை.

ஆனால் ஸுப்ஹான மவ்லூதில் வறுமையை நீக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பிரார்த்திக்கப்படுகின்றது. அவர்கள் தான் வறுமையை நீக்க முடியும் என்று கூறப்படுகின்றது.

ஸுப்ஹான மவ்லூது திருக்குர்ஆன் வசனங்களுடன் நேரடியாக மோதுகின்றதா? இல்லையா? சிந்தியுங்கள்!.

++++++++_
வானவர்கள் மீது அவதூறு

இந்த மவ்லூதின் கடைசிப் பாடலாக 'யாஸையதீ...' என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலின் தலைப்பில் 'இது ஜிப்ரீல் (அலை அவர்களால் பாடப்பட்டது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்க அறிவு சிறிதும் இல்லாதவர்களால் தான் மவ்லூது இயற்றப்பட்டது என்பதற்கு இந்தத் தலைப்பு ஒன்றே போதிய சான்றாக அமைந்திருக்கிறது. ஜிப்ரீல் (அலை பாடிய(? பாடலைக் கேளுங்கள்!

اِنِّيْ اِذَا مَسَّنِيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ
اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ
كُنْ لِيْ شَفِيْعًا اِلَى
الرَّحْمَانِ مِنْ زَلَلِيْ
وَامْنُنْ عَلَيَّ بِمَا
لاكَانَ فِيْ خَلَدِيْ
وَانْظُرْ بِعَيْنِ الرِّضَا
لِيْ دَائِمًا اَبَدًا
وَسْتُرْ بِطَوْلِكَ
تَقْصِيْرِيْ مَدَى الاَمَدِ

என்னை அச்சுறுத்தும் அளவு எனக்கு அநீதி இழைக்கப்பட்டால்
தலைவர்களுக்கெல்லாம் தலைவா! என் ஊன்றுகோலே! என்று உங்களை நான் அழைப்பேன்.

என் குற்றங்களுக்காக ரஹ்மானிடம் பரிந்துரைப்பவராக நீங்கள் ஆகி விடுங்கள்!

என் கற்பனையிலும் தோன்றாத உதவிகளை எனக்குச் செய்யுங்கள்!
என்றென்றும் நிரந்தரமாக திருப்தியான பார்வையுடன் என்னைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் அருளால் எனது குறைகளைக் காலாகாலம் மறைத்து விடுங்கள்!
ஜிப்ரீல் (அலை அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்து இவ்வாறு பிரார்த்தனை செய்தததாகக் கூறப்படுவது சரிதானா?

ஜிப்ரீல் (அலை அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இவ்வாறு பாடியிருந்தால் இது திருக்குர்ஆனில் இடம்பெற்றிருக்க வேண்டும் அல்லது நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். இரண்டிலுமே இவ்வாறு கூறப்படவில்லை.

திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் காணப்படாத இந்த விபரத்தை இன்றைக்கு முன்நூறு ஆண்டுகளுக்கு முந்தையவர்கள் எப்படி அறிந்து கொள்ள முடிந்தது? இந்தப் பாடல் வரிகளின் பொருளைக் கவனித்தால் கூட இது எவ்வளவு அபத்தம் என்பதை உணர முடியும்.

ஜிப்ரீல் (அலை அவர்களுக்கு அச்சுறுத்தும் அளவு அநீதி இழைக்கப்படும் என்றும் அவர்கள் தவறுகள் செய்ய முடியும் என்றும், அவர்களிடம் மறைக்கத் தக்க குறைபாடுகள் பல உள்ளன என்றும் இப்பாடல் வரிகள் கூறுகின்றன. ஆனால் மலக்குகளைப் பற்றி பொதுவாகவும் ஜிப்ரீல் (அலை அவர்களைப் பற்றிக் குறிப்பாகவும் அல்லாஹ் கூறுவது இந்தப் பாடல் வரிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.

(அல்குர்ஆன் 66:6 அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள் மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.

(அல்குர்ஆன் 21:27, 28 என்று மலக்குகளின் இயல்புகளைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்ய முடியாத இயல்பில் படைக்கப்பட்ட மலக்குகள், இந்தப் பாடலில் கூறப்படும் தவறுகளை எப்படிச் செய்திருக்க முடியும்?

பரிசுத்தமான உயிர் (அல்குர்ஆன் 2:87,2:253,5:110,16:102 என்றும், நம்பிக்கைக்குரிய உயிர் (26:193 என்றும், வல்லமை மிக்கவர் (53:5 என்றும் ஜிப்ரீல் (அலை அவர்கள் சிறப்பித்துக் கூறப்படுகின்றனர்.

இத்தகைய சிறப்பு கொண்ட ஜிப்ரீல் (அலை அவர்கள் தவறு செய்வார்கள் என்றும், அவர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவார்கள் என்றும் கூறும் இந்த மவ்லூதுப் பாடலை எப்படி நம்ப முடியும்?

ஜிப்ரீல் (அலை அவர்கள் தவறு செய்வார்கள் என்று நம்பினால், அவர்கள் கொண்டு வந்த வஹியிலும் அவர்கள் தவறு செய்யக் கூடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாதா? இது குர்ஆனிலும் சந்தேகத்தை ஏற்படுத்தாதா? ஜிப்ரீல் (அலை அவர்கள் இத்தகைய தவறுகளைச் செய்ய மாட்டார்கள் என்பது ஒரு புறமிருக்கட்டும். அப்படியே இந்தத் தவறுகளைச் செய்தால் கூட அதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஏன் அவர்கள் உதவி தேட வேண்டும்? அல்லாஹ்வின் தூதருடைய கோரிக்கைகளைக் கூட அல்லாஹ்விடம் எடுத்துச் சொல்லக் கூடிய ஜிப்ரீல் (அலை அவர்கள் நேரடியாகவே அல்லாஹ்விடம் தமது கோரிக்கைகளை எடுத்து வைக்க முடியாதா? என்பதை மவ்லூது அபிமானிகள் சிந்தித்தால் மவ்லூதுகளை நியாயப்படுத்த மாட்டார்கள்.

ஏனெனில் துன்பம் ஏற்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்து உதவி தேடுமாறு அல்லாஹ் நமக்குப் போதிக்கவில்லை. மாறாகத் தன்னிடம் உதவி தேடுமாறு தான் கட்டளையிடுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவ்வாறே நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளனர்.
அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:49)

நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன் என (முஹம்மதே! கூறு வீராக! நான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ் விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன் என்றும் கூறுவீராக!
(அல்குர்ஆன் 72:20, 21, 22)

(முஹம்மதே! அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
(அல்குர்ஆன் 3:128)

தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 46:9)

அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக! இரவைப் பகலில் நுழைக்கிறாய்! பகலை இரவில் நுழைக்கிறாய்! உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறாய். நீ நாடியோருக்குக் கணக்கின்றி வழங்குகிறாய் (என்றும் கூறுவீராக!)
(அல்குர்ஆன் 3:26)

என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கூறச் செய்து எல்லா அதிகாரமும் தனக்குரியதே எனத் திட்டவட்டமாக இறைவன் அறிவிக்கின்றான்.

இந்த அறிவிப்புக்கு முரணாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொடுக்கும் வகையில் இந்தக் கவிதை வரிகள் அமைந்துள்ளன.