வெள்ளி, 29 மே, 2026

"பணி வரன்முறை என்பது உரிமை அல்ல" - கௌரவ விரிவுரையாளர்கள் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

 Chennai High Court 3

தேர்வு நடக்கும் வரை அவர்களைப் பணியில் இருந்து நீக்கக் கூடாது என்றும், பணி அனுபவத்திற்கு 15 மதிப்பெண்கள் வரை வெயிட்டேஜ் வழங்கலாம் என்றும் நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களை, உதவிப் பேராசிரியர்களாகத் தேர்வு ஏதுமின்றி நேரடியாகப் பணி வரன்முறை செய்ய சட்டத்தில் இடமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாகக் கடந்த 2024-ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, போட்டித் தேர்வு மூலம் மட்டுமே காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டில், 14 அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றிய 1,146 கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் சிறப்புத் தேர்வு நடத்திப் பணி வரன்முறை செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பின்னர் 2022-ல் இந்த அரசாணையை ரத்து செய்த தமிழக அரசு, காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டது. அரசின் இந்த புதிய அறிவிப்பை எதிர்த்து, 2020 அரசாணையின்படி தங்களைப் பணி வரன்முறை செய்யக் கோரி கௌரவ விரிவுரையாளர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2020 அரசாணையின் அடிப்படையில் தேர்வு நடைமுறைகளை முடிக்க 2024 ஏப்ரலில் உத்தரவிட்டார். இதனை எதிர்த்துத் தமிழக அரசின் உயர்கல்வித் துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உயர் நீதிமன்ற அமர்வின் அதிரடித் தீர்ப்பு:

மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், "கௌரவ விரிவுரையாளர்கள் அந்தந்தக் கல்லூரிகளின் உள்ளூர் குழுக்களால் மட்டுமே தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களை நேரடியாகப் பணி வரன்முறை செய்வது உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள முறையான தேர்வு கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்துவிடும். 'பணி வரன்முறை' என்பதும் 'தேர்வு நடைமுறை' என்பதும் முற்றிலும் வெவ்வேறானவை; பணி வரன்முறையை யாரும் உரிமையாகக் கோர முடியாது" எனக் கூறி தனி நீதிபதியின் உத்தரவை அதிரடியாக ரத்து செய்தனர்.

விரிவுரையாளர்களுக்கான சலுகைகள் மற்றும் வழிகாட்டுதல்:

இருப்பினும், நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீதிபதிகள் சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர்:

காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தற்போது 42,064 பேர் விண்ணப்பித்துள்ளதால், அனைவருக்கும் சமமான போட்டித் தேர்வை நடத்த வேண்டும்.

இந்தத் தேர்வில், கௌரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்தைக் கணக்கில் கொண்டு அவர்களுக்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை 'வெயிட்டேஜ்' (Weightage) வழங்கலாம்.

நீண்ட காலப் பணி அனுபவம் கொண்ட இவர்களுக்குத் தேவையான வயது வரம்பு தளர்வுகளையும் அரசு அளிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகளையும் 6 மாத காலத்திற்குள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்குத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

மிக முக்கியமாக, தேர்வு முறையானது முடிவடைந்து புதிய நியமன ஆணைகள் வழங்கப்படும் வரை, தற்போது பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணியில் இருந்து எக்காரணம் கொண்டும் நீக்கக் கூடாது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-verdict-on-guest-lecturers-regularisation-trb-assistant-professor-exam-11885100