புதன், 3 ஜூன், 2026

கொழுந்துவிட்டு எரிந்த' தகவலை எழுதிக் கொடுத்த அதிகாரி; கூலாக அதிலும் பிழை திருத்திய கலைஞர்: பிறந்தநாள் சிறப்பு கட்டுரை

 2007 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி அதிகாலையில், மதுரை-மேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருந்த தினகரன் தினசரி நாளிதழ் மற்றும் சன் டிவி நெட்வொர்க் அலுவலக வளாகத்திற்குள் ஒரு கும்பல் நுழைந்ததை அடுத்து வன்முறை வெடித்தது. 'கருணாநிதியின் அரசியல் வாரிசு யார்?' என்ற தலைப்பில் அந்த ஊடக நிறுவனம் வெளியிட்டிருந்த அரசியல் கருத்துக்கணிப்புக்கு எதிரான இந்த வன்முறைப் போராட்டத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் மாநில அரசியல் வட்டாரத்தை உலுக்கியது; ஏனெனில், அந்த வன்முறைக் கும்பல் கருணாநிதியின் 2-வது மனைவி தயாளு அம்மாளுக்கு பிறந்த மூத்த மகனான மு.க.அழகிரியின் ஆதரவாளர்களைக் கொண்டிருந்தது. மேலும், அந்த ஊடக நிறுவனம் கருணாநிதியின் மருமகன்களுக்குச் சொந்தமானது. அதாவது, மறைந்த முரசொலி மாறனின் பிள்ளைகளுக்குச் சொந்தமானது. முதலமைச்சர் கருணாநிதிக்கு மாறன் சீடர் மட்டுமல்ல, தமக்கையின் மகனும் ஆவார். கருணாநிதியின் வாரிசாக அழகிரியின் தம்பியான மு.க.ஸ்டாலினை முன்னிறுத்திய அந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளால் அழகிரியின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்தது.

மதுரையில் தாக்குதல் நடந்த சமயத்தில், சென்னை தலைமைச் செயலகமான புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்றக் கூட்ட அரங்கில் கருணாநிதி அமர்ந்திருந்தார். ஒரு உளவுத்துறை அதிகாரி, இச்சம்பவத்தை விளக்கி தமிழில் எழுதப்பட்ட ஒரு குறிப்புடன் அவரிடம் விரைந்து சென்றார். அவர் அந்தச் செய்தியைப் படித்தார். நான் அவரது அறிவுறுத்தல்களை எதிர்பார்த்து அருகில் நின்றபோது, அவர் அந்த குறிப்பில் இருந்த எழுத்துப் பிழைகளைத் திருத்தத் தொடங்கினார். திருத்தங்களைச் செய்துவிட்டு அதை என்னிடம் திருப்பித் தந்தார் என்று அந்த அதிகாரி நினைவு கூர்ந்தார்.

அவரது சமகாலத்தவர்களுக்கும், அவருடன் நெருக்கமாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கும், கருணாநிதி ஒரு தந்திரமான மற்றும் நகைச்சுவை உணர்வுமிக்க தலைவர் மட்டுமல்ல, பிழையற்ற புனைகதைகளையோ அல்லது அரசியல் அறிக்கைகளையோ சிரமமின்றி எழுதிக் குவிக்கும் ஒரு திறமையான எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

"அவர் இயல்பாகவே எழுதும் ஆற்றல் கொண்டவர். வீட்டில், அவர் தனது படுக்கையில் அமர்ந்து, தனது நெஞ்சுக்கு நெருக்கமாக ஒரு தலை அணையை வைத்து, அதன் மேல் ஒரு நோட்பேடை வைத்து எழுதுவார். குளிரூட்டிகள் இயங்கிக் கொண்டிருந்தாலும், அவர் எழுதும்போது உடல் வியர்த்து கொட்டுவதை நாங்க பார்த்திருக்கிறோம். அவர் எழுதிக் கொண்டிருக்கும்போது, பூர்த்தியான பக்கங்கள் நோட்பேடில் இருந்து நழுவி கீழே விழுவதைக் கூட அவர் கவனிக்க மாட்டார். அங்கு ஊசி விழும் அமைதி நிலவும், பேனாவின் முள் காகிதத்தில் நகரும் சத்தம் மட்டுமே கேட்கும். அவர் ஒரு அசல் எழுத்தாளர்" என்று பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காவலராக அவரது பாதுகாப்புப் படையில் இணைந்து, தற்போது மூத்த அதிகாரியாக இருக்கும் கருணாநிதியின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கூறினார்.

முதலமைச்சர் கருணாநிதியின் கீழ் பணியாற்றிய ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், (பெரும்பாலோர் 'கலைஞர்' என்றழைக்கிறார்கள்), தங்கள் தலைவரை அதிகாலை 7 மணிக்கே தொலைபேசியில் அழைத்து கேள்விகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கும் ஒரு கூர்மையான மற்றும் நுணுக்கமான மனிதராக நினைவு கூர்ந்தனர். அவர் மிகவும் புத்திசாலி, சமயங்களில் தந்திரமானவர், தன்னிச்சையான நகைச்சுவை உணர்வு மிக்கவர், நட்பு பாராட்டுபவர் மற்றும் குடும்பத்தில் உள்ள ஒரு பெரியவரைப் போல நெருக்கமானவர். 2ஜி ஊழல் தொடர்பான சர்ச்சை சோதனைகளும் உச்சத்தில் இருந்தபோது, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தி.மு.க மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாஷா தற்கொலை செய்து கொண்ட தகவலை அதிகாரிகள் அவரிடம் கொண்டு சென்றனர். அவர் உடனடியாக இந்த வழக்கை மாநில போலீஸார் விசாரிக்கக் கூடாது என்று எதிர்வினையாற்றினார் என்று ஓர் அதிகாரி கூறினார். பாதிக்கப்பட்டவர் ஆளும் கட்சித் தலைவரோடும், குற்றம் சாட்டப்பட்ட மத்திய அமைச்சரோடும் நெருங்கிய தொடர்புடையவர் என்பதால், தனது அரசுக்கு எதிராக மேலும் எந்தப் புகார்களும் வராமல் தடுக்க சிபிஐ விசாரணை அவசியம் என்ற தொலைநோக்குப் பார்வையிலேயே கருணாநிதியின் இந்த பதில் அமைந்தது.

அவர் பெரும்பாலும் கடினமான, கணிக்கப்பட்ட முடிவுகளை எடுக்கும் ஒரு தலைவராக நினைவு கூரப்படுகிறார், மேலும் அவரது உடனடி நகைச் சுவையான நையாண்டி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலய வளாகத்திற்குள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் அதிகாலை 4 மணிக்கு கருணாநிதியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரும், சென்னை பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பொருளாதார பேராசிரியருமான மு.நாகநாதன் இது போன்ற பல சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.

ஏப்ரல் 2016-ல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் நாகநாதன் பேசியபோது, 1991 ஜனவரி 28 அன்று, அதாவது ஆட்சி கலைக்கப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் கருணாநிதியுடன் மேற்கொண்ட காலை நடைப்பயிற்சியை நினைவு கூர்ந்தார். நாங்கள் நடக்கத் தொடங்கியதும், அடுத்த நாள் நான் ஒரு முதலமைச்சருடன் நடக்காமல் போகலாம் என்று அவர் என்னிடம் கூறினார். தனது ஆட்சியை கலைக்கும் உத்தரவில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட ஆலோசித்து வருவதை அவர் அறிந்திருந்தார். ஆட்சி கலைக்கப்பட்ட நாளில், அவர் என்னை தொலைபேசியில் அழைத்து வீட்டிற்கு வரச்சொன்னார். நான் அங்கு சென்றபோது, அவர் தனது கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து, 2வது முறையாக (ஜனவரி 1976 க்குப் பிறகு) தனது ஆட்சி கலைக்கப்பட்டது குறித்து ஜோக் அடித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், 'அரசியலமைப்பின் 356-வது பிரிவு மீண்டும் என் கழுத்தில் கத்தியை வைத்துவிட்டது' என்று கூறி, சிரித்துக் கொண்டே, 'நாளை காலை முதலமைச்சராக இல்லாத ஒரு மனிதனுடன் நடைப்பயிற்சிக்கு வருவாயா?' என்று கேட்டார்" என்று நாகநாதன் கூறினார். 2009-ல் உடல் நலக்குறைவு காரணமாக கருணாநிதி சக்கர நாற்காலிக்கு மாறிய பிறகு, நாகநாதன் தனது இந்த காலை வழக்கத்தை மிகவும் இழந்ததாகக் குறிப்பிட்டார்.

கருணாநிதியின் மறைவுக்குப் பின், அவரது தலைமுறையிலிருந்து கட்சியில் எஞ்சியிருந்த ஒரே தலைவர், முன்னாள் நிதியமைச்சரும், கருணாநிதியின் ஆரம்பகாலத்து நெருங்கிய தோழருமான 95 வயதுடைய க.அன்பழகன் மட்டுமே. கருணாநிதியின் அன்பைப் பெற்ற மற்றொரு தி.மு.க தலைவர் ஆ.ராசா ஆவார், அவர் சமீபத்தில் 2ஜி ஊழல் வழக்கில் இருந்து சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். கட்சியில் ஒரு மூத்த தலித் தலைவரான ராசா, பின்தங்கிய மாவட்டத்திலிருந்து மத்திய அமைச்சராக உயர்ந்தவர். கருணாநிதி அவரை ஆரம்பம் முதலே தனிப்பட்ட முறையில் ஆதரித்து பாதுகாத்தார். தனது கொள்கைப் பிடிப்பிற்காகவே கலைஞரின் அன்பையும் பாதுகாப்பையும் பெற்றதாக ராசா கூறுவார். அவர் திராவிடக் கொள்கைக்காகவும், சமத்துவ சமுதாயத்திற்காகவும் போராடிய ஒரு முழுமையான தலைவர். 2ஜி சர்ச்சையின் போது நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபோது, கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், என்னை 'கிராமப்புறத்தில் பூத்த புரட்சிப் பூ' என்று குறிப்பிட்டு அவர் ஒரு கட்டுரை எழுதினார். அவர் இல்லையென்றால் நான் அழிந்திருப்பேன் என்று ராசா கூறினார்.

மே 2016 தேர்தலுக்கு முன்னதாக ஒரு தேர்தல் பேரணியில் பங்கேற்பதற்காக கருணாநிதி தனது கடைசி திருச்சி பயணத்தை மேற்கொண்டிருந்த போது, அவருக்காக ஒரு அறையில் கூடி சிறப்புப் பிரார்த்தனை செய்த தலைவர்கள் குழுவில் ராசாவும் இருந்தார். நாத்திகத் தலைவருக்காக திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயில் அர்ச்சகர் ஒருவர்தான் அந்தப் பிரார்த்தனைகளை நடத்தினார்.

ராமேஸ்வரத்தில் சேதுசமுத்திரக் கப்பல் கால்வாய் திட்டத்திற்கு, இராம சேது மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற மத நம்பிக்கைகளைக் கூறி இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தபோது, "ராமர் என்ன சிவில் இன்ஜினியரா?" என்று கருணாநிதி கிண்டலாகக் கேட்டார். இந்த கருத்து ஒரு பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. உண்மையில், தனது கட்சியினரும், பிள்ளைகள் மற்றும் மனைவிகள் உட்பட தனது உறவினர்கள் பலரும் விசுவாசமான நம்பிக்கையாளர்கள் என்பதை கருணாநிதி நன்றாகவே அறிவார். கனிமொழியின் தாயாரான ராஜாத்தி அம்மாள், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலின் தீவிர பக்தராக இருக்கும் அதே வேளையில், அவரது அரசியல் எதிரியான ஜெ.ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலாவுடன் ராஜாத்தி அம்மாளுக்கு இருந்த நட்பையும் அவர் அறிந்திருந்தார். அவர்கள் ஆஞ்சநேயர் கோயிலில் அடிக்கடி சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வது வழக்கம். 2016 இல் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ராஜாத்தி அம்மாள் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று சசிகலாவைச் சந்தித்தார்.

பகுத்தறிவு இயக்கத்தில் வளர்ந்த ஒரு மூத்த தலைவராகவும் நாத்திகராகவும், கருணாநிதி இறுதிவரை தனது கொள்கைகளின்படியே வாழ்ந்தார். உடல்நலக்குறைவு அவரது பொது வாழ்க்கையைப் பறித்து, அவரைச் சக்கர நாற்காலியில் முடக்கியபோதும், அவர் தனது அரசியல் கொள்கையில் எவ்வளவு தீவிரமாக இருந்தார் என்பதை அவரது மகள் கனிமொழி சமீபத்தில் நினைவு கூர்ந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆற்றிய ஒரு உரையில், அவர் வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்; கருணாநிதியின் நலம் வேண்டி, அவரது பராமரிப்பாளரான நித்யா என்ற விசுவாசி, கருணாநிதியின் நெற்றியில் திருநீறு (புனித சாம்பல்) பூசியுள்ளார். "படுக்கையிலேயே கிடந்து பேச முடியாமல் இருந்தபோதிலும், தீவிர நாத்திகரான என் தந்தை உடனடியாக அதைத் துடைத்து எறிந்தார்" என்று கனிமொழி கூறினார்.



source https://tamil.indianexpress.com/explained/m-karunanidhi-thalaivar-kalaignar-the-man-the-writer-the-politician-bureaucrats-and-close-aides-recall-the-sharp-mind-of-karunanidhi-11902424