சனி, 30 மே, 2026

திருச்செந்தூர் போலி கடித சர்ச்சைக்கு காரசார விளக்கம்

 Thiruchendur Murugan temple priest suspend GPay bribe

'15 நாள் தூய ஆட்சிக்கு ஆடிப்போய் இருக்கிறார்கள்'... போலி கடித விவகாரத்தில் த.வெ.க காரசார அறிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாதாரண பக்தர் போல் மாறுவேடத்தில் சென்று ஆய்வு நடத்திய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உதவியாளரிடம், விரைவு தரிசனத்திற்காக ரூ.4,000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர், பாதுகாப்பு ஊழியர்கள் உட்பட 3 பேர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஐபி மற்றும் சிறப்பு தரிசனத்திற்கு பக்தர்களிடம் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் ஆயிரக்கணக்கில் பணம் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. தொடர்ந்து, நேற்று (மே 29) அதிகாலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் ரகசியமாகச் சோதனையில் ஈடுபட்டார். அமைச்சர் தனது அரசு வாகனத்தைத் தவிர்த்து, சாதாரண காரில் வந்து அதனைத் தூரமாய் நிறுத்தினார். அதிகாரிகளுக்குத் தகவல் தராமல், கருப்பு நிற டி-ஷர்ட் மற்றும் முகக்கவசம் (Mask) அணிந்து ஒரு சாதாரண பக்தர் போலத் தனது உதவியாளருடன் கோயிலுக்குள் சென்றார். சண்முகவிலாச மண்டப வாசலில் நின்றிருந்த ஊழியர்களிடம், "சீக்கிரம் சாமி கும்பிட என்ன செய்ய வேண்டும்?" என்று அவரது உதவியாளர் கேட்டுள்ளார். வந்திருப்பது அமைச்சர் என்று தெரியாமல், "தலைக்கு 1,000 ரூபாய் வீதம் 4 பேருக்கு 4,000 ரூபாய் கொடுத்தால் உடனே கூட்டிச் செல்கிறோம்" என அங்கிருந்தவர்கள் பேரம் பேசியுள்ளனர்.

கைவசம் பணம் இல்லை எனக் கூறிய அமைச்சர், அங்கிருந்த அர்ச்சகரின் 'ஜி-பே' எண்ணிற்கு உடனடியாக ரூ.4,000 பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்பினார். பணம் கணக்கிற்கு வந்ததும் அர்ச்சகர் அமைச்சரை அழைத்துச் செல்ல முயன்ற போது, முகக்கவசத்தைக் கழற்றித் தனது அடையாளத்தை வெளிப்படுத்திய அமைச்சர் ரமேஷ், டிஜிட்டல் ஆதாரத்துடன் அவர்களை கையும் களவுமாக பிடித்தார். சம்பவத்தை அடுத்து, கோயில் அலுவலகத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் உடனடியாக விளக்கக் கடிதம் பெறப்பட்டது. ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்திருந்தார். அதன்படி, அறநிலையத்துறை செயலர் உத்தரவின் பேரில் தற்போது 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாகத் திருச்செந்தூர் அர்ச்சகர்கள் எழுதியதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் கடிதம் முற்றிலும் போலியானது என்றும் அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

போலி கடிதம் இணையத்தில் பரப்பப்படுவது தொடர்பாக த.வெ.க விளக்கமளித்துள்ளது. அதில், தமிழ்நாட்டின் அடிமடியில் கைவைத்துச் சுரண்டிய தீய சக்தியும், ஊழல் சக்தியும் 15 நாள் தூய ஆட்சிக்கே ஆடிப்போய் இருக்கிறார்கள். ஒரு நிர்வாகத்துப்புரவை நடத்திக் கொண்டிருக்கிறார் வெற்றித்தலைவர் விஜய்.

அந்தத்துப்புரவில் 60 ஆண்டுகளாய் அகப்படாத ஆவணங்களும் சிக்கிக்கொண்டிருக்கின்றன; அகலவாய்த் திருடர்களின் சுரண்டல்களும் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கின்றன. டாஸ்மாக் ஊழல் துர்நாற்றம் களையப்பட்டு வருகிறது. இதுவரை அடித்த கொள்ளை, மக்கள் முன் விளக்கப்பட்டு வருகிறது. மின் துறையில் எரிபொருள், உபகரணம், மின் மாற்றி, துணை மின் நிலையம், மின் உற்பத்தி, மின் பகிர்மானம், மின் கொள்முதல், மின் துறை ஊழியர்கள் என ஷாக்கடிக்கும் ஊழல்களை சலவைக்குப்போட்டு வெளுத்து எடுத்துக்கொண்டிருக்கிறது வெற்றிக் கழக அரசு.

புகைப்படக்கலைஞர் முதல் உயர்நிலை அரசு செயலாளர் வரை அத்தனை நியமனங்களும் ஒழுக்கமான, நேர்மையான நிர்வாகம் என அசைக்க முடியாத வரையறைக்கு கீழே கொண்டுவரப்பட்டுள்ளன. தலை சுத்தமாக இருந்தால் தான், உடல் சரியாக இயங்கும். தலைமைச்செயலகம் என்கிற தமிழ்நாட்டின் நிர்வாகத்தலையை, மூளையை பீடித்திருந்த 'ப்ரோக்கர்' கலாச்சாரத்தை வெற்றித்தலைவர் அரியணையில் ஏறிய அடுத்து சில நாட்களுக்குள் அடியோடு ஒழித்திருக்கிறார். இனி வரும் எந்தக்காலத்திலும் ஊழல், கமிஷன், கையூட்டு இந்த வார்த்தைகளுக்கே இடமில்லை என்ற நிலையை தமிழ்நாட்டை நகர்த்திக்கொண்டிருக்கிறார் மனசாட்சியுள்ள மக்களாட்சியின் முதலமைச்சர்.

இந்த களையெடுப்பு நிர்வாகம், ஊழலிலும் சுரண்டலிலும் ஊறித்திளைத்து மாறி மாறி ஊழல் டீலிங் ஆட்சி நடத்தியவர்களின் தூக்கத்தையும், கனவுகளையும் குலைத்துப்போட்டிருக்கிறது. விரைவில் தமிழ்நாடு நிர்வாகம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டிருக்கும். பொய் செய்தி பரப்பும் திருட்டு முன்னேற்றக் கழக கொத்தடிமைகள் என்று குறிப்பிட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/they-are-shaken-by-our-15-day-clean-governance-tvk-slams-dmk-over-thiruchendur-temple-fake-letter-row-11890005