சனி, 30 மே, 2026

தமிழகத்தின் 3 இடங்களில் என்.ஐ.ஏ ரெய்டு

 

Trichy NIA Raid

திருச்சியில் 19 பேரை பலிவாங்கிய வெடிமருந்து தொழிற்சாலையில் விடிய விடிய என்.ஐ.ஏ சோதனை

கேரள மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட முக்கிய வழக்கு தொடர்பாக, கொச்சின் மண்டல தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் திருச்சி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 3 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, திருச்சி துறையூர் அருகே கடந்த 2016-ல் 19 தொழிலாளர்களைப் பலிவாங்கிய தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் இந்த சோதனை நடைபெற்று வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துறையூர் உப்பிலியபுரம் அருகே உள்ள டி.முருங்கப்பட்டியில், கடந்த 2001-ம் ஆண்டு 'வெற்றி வேல் எக்ஸ்புளோசிவ்ஸ் பிரைவேட் லிமிடெட்' (Vetrivel Explosives Pvt Ltd) என்ற வெடிமருந்து தொழிற்சாலை தொடங்கப்பட்டது. சுமார் 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த ஆலையில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் வெடிமருந்துகள் மற்றும் உயரிய பட்டாசு வகைகள் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

தொழிற்சாலையின் இரண்டாவது யூனிட்டில், ஹைட்ரோகுளோரிக் ஆசிட், பென்டா எரித்ரோட்ரல் மற்றும் மெட்டா நைட்ரேட் பவுடர் ஆகியவற்றைச் சாம்பலுடன் சேர்த்து வெடிமருந்து தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியின் போது உருவாகும் பசை போன்ற கலவை குழாய் வழியாக மற்றொரு யூனிட்டுக்குக் கொண்டு செல்லப்படும். அப்போது அதன் உறை வெப்பநிலை (Freezing Temperature) சரியாக 24°C அளவில் பராமரிக்கப்பட வேண்டும்.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி, இந்த வெப்பநிலைப் பராமரிப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக ஆலை பயங்கர வெடி விபத்துக்கு உள்ளானது. இதில் 19 தொழிலாளர்கள் உடல் சிதறிப் பரிதாபமாகப் பலியாயினர். இந்த வழக்கு உள்ளூர் போலீசிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி-க்கு (CB-CID) மாற்றப்பட்டு, மத்திய அரசின் வெடிபொருள் விவகாரத்துறை ஆலையின் உரிமத்தை ரத்து செய்தது. அதன் பின்னர் நீண்ட நாள்களாக மூடப்பட்டிருந்த இந்த ஆலை, காலப்போக்கில் மீண்டும் திறக்கப்பட்டுத் தற்போது இயங்கி வருகிறது.

மீண்டும் ஆலை செயல்படத் தொடங்கிய நிலையில், இங்கிருந்து விநியோகிக்கப்படும் வெடிமருந்துகள் சட்டவிரோத மற்றும் பயங்கரவாதச் செயல்களுக்குச் சப்ளை செய்யப்படுவதாகப் பல்வேறு அதிர்ச்சிப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாகக் கேரளாவின் கொச்சின் மண்டல என்.ஐ.ஏ பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க முடிவுசெய்தனர். தொடர்ந்து, இன்று அதிகாலை 5.30 மணியளவில் 5 பேர் கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் குழுவினர், திருச்சி ஆயுதப்படை போலீசாருடன் ஆலைக்கு விரைந்தனர்.

அதிகாரிகள் உள்ளே நுழைந்ததும் தொழிற்சாலையின் அனைத்து நுழைவு வாயில்களும் முழுமையாக மூடப்பட்டன. அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் செல்போன்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. வெளிவாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆலையின் ஒவ்வொரு யூனிட்டாகச் சென்று வெடிமருந்துகள் இருப்பு, கையாளப்படும் விதம் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் கீழ்வரும் விபரங்கள் குறித்து ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது:

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு இங்கிருந்து அனுப்பப்படும் வெடிமருந்துகள் ஏதேனும் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதா? வெடிமருந்து தயாரிக்கப் பயன்படும் ஹைட்ரோகுளோரிக் ஆசிட், பென்டா எரித்ரோட்ரல், மெட்டா நைட்ரேட் பவுடர் போன்றவை எங்கிருந்து வாங்கப்படுகின்றன? அதற்கான உரிமங்கள் முறையாகப் புதுப்பிக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறதா? மத்திய அரசு அனுமதித்துள்ள அளவைவிடக் கூடுதலாக மூலப்பொருட்கள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளனவா? என விருதுநகர் மற்றும் திருச்சியின் முக்கிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்று என்.ஐ.ஏ சோதனை, தமிழக அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/nia-conducts-raids-across-tamil-nadu-search-underway-at-trichy-private-explosives-factory-nia-team-raids-vetrivel-explosives-factory-in-trichy-11890099