செவ்வாய், 20 மே, 2014

மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள்:




இனி மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் சிலவற்றைக் காண்போம்.

) குர்ஆனை இழிவுபடுத்தும் போக்கு

மவ்லிதுகள் வணக்கமாக மாறிவிட்ட பின் ஏற்பட்ட தீய விளைவுகளில் முக்கியமானது அதைக் குர்ஆனுக்குச் சமமாக சில சமயம் குர்ஆனுக்கும் மேலாகக் கருதும் நிலை ஏற்பட்டதாகும்.

அல்லாஹ்வுடைய வேதம் அல்குர்ஆன் வீடுகள் தோறும் இவ்வளவு முக்கியத்துவத்துடன் ஓதப்படுவதில்லை.

மங்கலமான நிகழ்ச்சிகளுக்கு மவ்லிது என்றும் அமங்கலமான நிகழ்ச்சிகளுக்கு குர்ஆன் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பொருள் தெரியாமல் ஓதினாலும் ஒவ்வொரு எழுத்துக்கும் நன்மை கிடைக்கும் என்ற குர்ஆனுக்குரிய தனித்தகுதி முகவரியற்ற யாரோ ஒரு கவிஞனால் இயற்றப்பட்ட பாட்டுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

குர்ஆன் எப்படி நோய் நிவாரணம் நாடி ஓதப்படுகிறதோ அவ்வாறே மார்க்க அறிவற்ற மனிதனால் இயற்றப்பட்ட அரபி பாடலைப் பாடி நோய் நிவாரணம் வேண்டப்படுகின்றது
.
அல்லாஹ்வின் வார்த்தைக்குச் சமமாகவும், அதற்கு மேலாகவும் மனிதனின் வார்த்தைகள் மதிக்கப்படுவது மவ்லிதினால் ஏற்பட்ட மிக மோசமான விளைவாகும்.

) தொழுகையை விட மவ்லிதை மேலானதாகக் கருதும் நிலை.

இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமை தொழுகை. மவ்லிதுக்காக இந்தத் தொழுகை இழிவுபடுத்தப்படுவதும் மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகளில் ஒன்றாகும்.

பள்ளிவாசலில் இமாமாகப் பணிபுரியும் சிலர் தொழுகைகளுக்குக் கூட சரியாக வருகை தர மாட்டார்கள். அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளிவாசல் நிர்வாகிகள் மவ்லிது சபைக்கு வரவில்லையானால் நடவடிக்கை எடுப்பதைக் காண்கிறோம்.

பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்படும் போது அதன் அருகில் உள்ள வீட்டில் மவ்லிது ஓதப்பட்டுக் கொண்டிருக்கும். மவ்லிது நிறுத்தப்பட மாட்டாது. அதன் பின்னர் பள்ளியில் தொழுகை நடைபெறும். அந்த நேரத்திலும் மவ்லிதுக் கச்சேரி நடந்து கொண்டிருக்கும். மவ்லிது எனும் மிகச் சிறந்த வணக்கத்தை (? நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது தொழுகை எல்லாம் பெரிய விஷயமா என்ன?

இப்படி தொழுகையை அலட்சியம் செய்யுமளவுக்கு மவ்லிது வெறி வேரூன்றியுள்ளது.

) பள்ளிவாசலின் புனிதம் கெடுதல்

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! (அல்குர்ஆன் 72:18) என்று இறைவன் கட்டளையிடுகிறான்.

இந்தக் கட்டளைக்கு மாற்றமாக பள்ளிவாயிலில் நபியே! ரஸுலே! முஹ்யித்தீனே! நாகூராரே! என்றெல்லாம் அழைக்கின்றனர். அவர்களிடம் பிரார்த்திக்கின்றனர். அல்லாஹ்வை அழைத்து உதவி தேடுவதற்காகக் கட்டப்பட்ட அவனுக்குச் சொந்தமான ஆலயத்தில் அவனது கட்டளை அப்பட்டமாக மீறப்படுகின்றது. இதனால் பள்ளிவாயிலின் புனிதம் கெடுகின்றது.

) பிறமதக் கலாச்சார ஊடுருவல்

பூஜையோ, புனஸ்காரமோ செய்த பின் சாதாரணப் பொருட்களும் புனிதப் பொருட்களாக மாறிவிடும் என்பது பிற சமயத்து நம்பிக்கை!

பூஜை நடத்தப்படுவதற்கு முன் சாதாரண சர்க்கரையாக இருந்தது பூஜைக்குப் பின் பிரசாதமாக மாறி விடுகிறது. துளியளவாவது கிடைக்காதா என்று பெரும் செல்வந்தர்களும் போட்டியிடும் அளவுக்கு அதில் 'என்னவோ' இறங்கி விட்டதாக நம்புவது பிற சமயத்து நம்பிக்கை.

மவ்லிது ஓதப்படுவதற்கு முன் சாதாரண பேரீச்சம் பழம் மவ்லிது முடிந்தவுடன் தபர்ருக்'(பிரசாதம் என்னும் நிலைக்கு உயர்கிறது. ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைப் பெறுவதற்காக கோடீஸ்வரர்களும் கியூவில் நிற்கும் நிலை! சாதாரண ஒரு மனிதனின் கவிதையைப் படித்தவுடன் சாதாரணப் பொருளும் பிரசாதமாக மாறிவிடும் என்று நம்புவது ஏகத்துவத்துக்கு எதிரானது அல்லவா? பிறமதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்டது அல்லவா?

) பிறருக்கு இடையூறு செய்தல்

இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் அமைதியாகவும், அடுத்தவருக்கு இடையூறு இராத வகையிலும் நிறைவேற்றப்பட்ட வேண்டியவை. இதை மற்றவர்களும் கூட அறிந்து வைத்துள்ளனர்.

மவ்லிது சீசனில் வீடுகளில் ஒலிபெருக்கியை அலறவிட்டு இந்த மவ்லிதுக் கச்சேரியை நடத்துகின்றனர். நபியைப் புகழ்கிறோம் என்ற பெயரில் பரீட்சைக்குப் படிக்கும் மாணவன், அமைதியைத் தேடும் இதய நோயாளி, உழைத்துக் களைத்து உறங்கும் சராசரி மனிதன் இன்னும் அமைதியை விரும்பும் மக்கள் ஆகியோரின் உறக்கத்தையும், அமைதியையும் கெடுத்து வருவதை நாம் பார்க்கிறோம்.

பிறர் நலம் பற்றி அக்கறைப்படாத மதத்தவர்கள் சில மாதங்களில் இவ்வாறு நடக்கிறார்கள் என்றால் தனது நாவாலும் கையாலும் பிறருக்கு இடையூறு அளிக்காதவனே முஸ்லிம்'
புகாரி 10,11,6448 முஸ்லிம் 57,58,59

என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றைப் பேண வேண்டியவர்கள் இப்படி நடக்கலாமா? இவ்வாறு நடக்கச் செய்தது இந்த மவ்லிதுகள் தாம்.

) ஒழுக்கக் கேடுகளை ஏற்படுத்துவது

பெண்கள் மாத்திரம் இருக்கும் இடங்களுக்கு அன்னிய ஆண்கள் செல்லக்கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை. எந்த ஒரு ஆணும் அந்நியப் பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3006, 5233.

மவ்லிதைக் காரணம் காட்டி பெண்கள் மட்டும் இருக்கும் வீடுகளுக்கு ஆண்கள் செல்ல முடிகிறது. இப்படிச் செல்வதால் எழுதக் கூசும் சமாச்சாரங்கள்' நடப்பதை அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம். இதற்காகவே அடித்து உதைத்து ஊரை விட்டு விரட்டப்பட்ட பேஷ் இமாம்களையும் நாம் அறிவோம்.

ஒழுக்கக் கேட்டுக்கு வழி வகுக்கும் இந்த வாசலைத் திறந்து வைத்தால் கெடாதவனும் கெட்டுவிடத் தான் செய்வான்.

) பெருமையும், ஆடம்பரமும்

உன் வீட்டு மவ்லிதை விட என் வீட்டு மவ்லிது பெரியது என்று பெருமையடிக்கும் வகையில் அலங்காரங்கள், மேற்கட்டுகள், மலர் ஜோடனைகள், வண்ண வண்ண விளக்குகள், காகித வேலைப்பாடுகள் ஆகியவற்றை நாம் காண்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்ட இந்த ஆடம்பரங்களையும் வீண் விரயங்களையும் செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்கிறார்கள் என்பது அறிவுக்குச் சிறிதளவாவது பொருந்துகிறதா? சிந்தியுங்கள்!

வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
அல்குர்ஆன் 6:141, 7:31.

விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 17:27

அவர்கள் செலவிடும் போது விரையம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும்.அல்குர்ஆன் 25:67

இவ்வளவு மோசமான விளைவுகளை இந்த மவ்லிதுகள் சமுதாயத்தில் ஏற்படுத்தி இருப்பதுடன் திருக்குர்ஆனுடனும் நபிவழியுடனும் நேரடியாக மோதக் கூடியதாகவும் அமைந்துள்ளன. ஸுப்ஹான மவ்லிதில் உள்ள சில வரிகளை நாம் ஆராய்ந்தால் இதை உணரலாம்