திங்கள், 23 ஜூன், 2025

பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த 2 பேர் கைது; என்.ஐ.ஏ நடவடிக்கை

 

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக உள்ளூர்வாசிகள் இருவரை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) கைது செய்துள்ளது.

“பஹல்காமின் பட்கோட்டைச் சேர்ந்த பர்வைஸ் அகமது ஜோதர் மற்றும் பஹல்காமின் ஹில் பார்க்கைச் சேர்ந்த பஷீர் அகமது ஜோதர் என அடையாளம் காணப்பட்ட இருவரும் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகளின் அடையாளங்களை வெளிப்படுத்தியுள்ளனர், மேலும் அவர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்,” என்று என்.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். மே 7 ஆம் தேதி, பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தாக்கியது, அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மூன்று நாட்கள் இராணுவ மோதல்கள் நடந்தன.


விசாரணையின்படி, பர்வைஸ் மற்றும் பஷீர் ஆகியோர் தாக்குதலுக்கு முன்னர் ஹில் பார்க்கில் உள்ள ஒரு பருவகால டோக்கில் (குடிசை) மூன்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை அறிந்தே தங்க வைத்தனர் என்று கூறிய செய்தித் தொடர்பாளர், “இருவரும் பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் தளவாட ஆதரவை வழங்கினர்” என்று கூறினார். மேலும் ”அதனைத்தொடர்ந்து தீவிரவாதிகள் துரதிர்ஷ்டவசமான பிற்பகலில், சுற்றுலாப் பயணிகளை அவர்களின் மத அடையாளத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து கொன்றனர், இது இதுவரை நடந்த மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாகும்” என்றும் செய்தி தொடர்பாளர் கூறினார்.

“1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவு 19 இன் கீழ் இருவரையும் கைது செய்த என்.ஐ.ஏ, உலகையே உலுக்கிய தாக்குதலுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வழக்கை மேலும் விசாரித்து வருகிறது… இந்த வழக்கில் மேலும் விசாரணைகள் தொடர்கின்றன,” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், உலகளாவிய பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) பஹல்காமில் நடந்த "கொடூரமான பயங்கரவாத தாக்குதலை" கண்டித்தது, மேலும் "பயங்கரவாத ஆதரவாளர்களிடையே நிதியை மாற்றுவதற்கான பணமும் வழிமுறைகளும் இல்லாமல்" இதுபோன்ற தாக்குதல்கள் நடக்காது என்று குறிப்பிட்டது.

22 6 2025 


source https://tamil.indianexpress.com/india/nia-arrests-2-pahalgam-residents-for-harbouring-let-terrorists-involved-in-april-22-terror-attack-9385269