சனி, 21 ஜூன், 2025

அட்டவணை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: வேட்டை கருவிகளுடன் புதுச்சேரியில் பூர்வகுடி மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 

அட்டவணை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: வேட்டை கருவிகளுடன் புதுச்சேரியில் பூர்வகுடி மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Pondy tribal protest

புதுச்சேரியில் பூர்வ குடிகளாக இருக்கும் எருகுலா, மலக்குறவன், காட்டுநாயக்கன், குருமன்ஸ் ஆகிய பழங்குடியின மக்களை, மத்திய அரசு உடனடியாக அட்டவணை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, இன்று புதுச்சேரி சுதேசி மில், மறைமலைஅடிகள் சாலை அருகில் வேட்டை கருவிகளுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ராம்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. எம். இளங்கோவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராஜ்குமார், "புதுச்சேரி யூனியன் பிரதேச எருகுலா பழங்குடியினர் மக்கள் நலசங்கம் சார்பில் நாங்கள் இங்கு கூடி உள்ளோம். புதுச்சேரியில் பூர்வகுடிகளாக வசித்து வரும் எருகுலா, மலக்குறவன், காட்டுநாயக்கன், குருமன்ஸ் ஆகிய பழங்குடியின மக்கள் தற்போது எந்தவிதமான அரசு அங்கீகாரமும் இல்லாமல் மறைக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.

44 ஆண்டுகளுக்கும் மேலாக, புதுச்சேரி மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய அரசிடம் இந்த இனங்களை அட்டவணை பழங்குடியினராக அங்கீகரிக்கக் கோரி பேரணிகள், மாநாடுகள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

ஒவ்வொரு முறையும் எங்களின் கோரிக்கைகளுக்கான கோப்புகள் புதுச்சேரியிலிருந்து டெல்லிக்கு அனுப்பப்படுகின்றன; பின்னர் மீண்டும் டெல்லியிலிருந்து புதுச்சேரிக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றன. ஆனால் இதுவரை எங்களின் நியாயமான கோரிக்கைகள் எந்தவிதமான தீர்வும் பெறாமல் புறக்கணிக்கப்படுகின்றன. தென்னிந்தியா முழுவதிலும் இந்த நான்கு இன பழங்குடியின மக்கள் அட்டவணை பழங்குடியினர் பட்டியலில் தான் இருக்கிறார்கள்.

எனவே, மத்திய அரசும், புதுச்சேரி அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்திய அரசியலமைப்பு சட்டம் 342/2-ன் படி புதுச்சேரியில் வசிக்கும் எருகுலா, மலக்குறவன், காட்டுநாயக்கன், குருமன்ஸ் ஆகிய பழங்குடியின மக்களை அட்டவணை பழங்குடியினர் என்று அங்கீகரிக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.


source https://tamil.indianexpress.com/india/tribal-people-protest-at-pondicherry-9381061