சென்னை மாநகரில் சட்டவிரோத கட்டுமானங்கள் சாதாரணமாக மாறிவிட்ட நிலையில், இதனை தடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜே. குமரகுருபரனுக்கு ரூ1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள இந்த அபராதத் தொகையை ஆணையரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து, அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் கணக்கில் செலுத்தவும் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை மாநகராட்சி அமல்படுத்தத் தவறியதாகக் கூறி, வழக்கறிஞர் என். ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணையின்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 26 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு எதிராக மாநகராட்சி போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு விருப்பமில்லை என்ற எண்ணம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டது.
மேலும், ஆணையர் குமரகுருபரன், இத்தகைய விதிமீறல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த போதுமான விவரங்களை வேண்டுமென்றே வழங்கவில்லை என்றும் அமர்வு குற்றம் சாட்டியது. விதிமீறல் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதா, அவற்றுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளதா, அதன் பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, அங்கீகரிக்கப்படாத அல்லது விதிமீறல் கட்டிடங்கள் இடிக்கப்பட்டதா போன்ற விவரங்களை ஆணையர் வேண்டுமென்றே வழங்கத் தவறிவிட்டார்" என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
ஆணையர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் 14 ஆம் பத்தியில், 2022 ஜனவரி 1 முதல் 2025 பிப்ரவரி 12 வரை சுமார் 242 அங்கீகரிக்கப்படாத அல்லது விதிமீறல் கட்டிடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. "இது 4,115 'பணி நிறுத்து' நோட்டீஸ்களுக்கும், 1,966 'பூட்டு மற்றும் சீல்' நோட்டீஸ்களுக்கும் மாறானது. இவ்வளவு குறைந்த எண்ணிக்கையிலான கட்டிடங்கள் மட்டுமே ஏன் பூட்டி சீல் வைக்கப்பட்டன என்பதற்கு அவர் விளக்கமளிக்கவில்லை" என்றும் அமர்வு கேள்வி எழுப்பியது.
நீதிமன்றத்தின் இந்த கேள்விகளுக்குப் பதிலளித்த மாநகராட்சி கவுன்சில், அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்வதாகவும், மனுதாரர் வழக்கறிஞருக்கு ஒரு வாரத்திற்குள் ஆவணங்களை ஆய்வுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார். ஆனால், மாநகராட்சி வாக்குறுதியளித்தபடி விவரங்களை வழங்கத் தவறியதால், ஆணையருக்கு அபராதம் விதித்து அமர்வு உத்தரவிட்டது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-fine-1-lakh-cost-on-gcc-commissioner-9476083