கரூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் சனிக்கிழமை (27.09.2025) உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, கரூர் காவல்துறை த.வெ.க கரூர் மாவட்ட நிர்வாகிகள் மதியழகன், பவுன்குமார் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும், த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் மற்றும் வதந்தி பரப்பியதாக 23 பேர் பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவறான தகவல்கள் மற்றும் வதந்தி பரப்பியதாக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர், யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை சைபர் கிரைம் போலீசாரல் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, த.வெ.க-வின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில், இலங்கை, நேபாளம் போல இளைஞர்களின் புரட்சி நடக்க வேண்டும் என்று கலவரத்தை தூண்டும் வகையில் திங்கள்கிழமை இரவு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆதவ் அர்ஜுனாவின் பதிவுக்கு அதிக அளவில் கண்டனம் எழுந்த நிலையில், அவர் அதிகாலையில் நீக்கிவிட்டார்.
இந்நிலையில், த.வெ.க-வின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா மீது 5 பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆதவ் அர்ஜுனா மீது 192 - கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பாடு. 196(1) வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை வளர்க்கும் அல்லது நல்லிணக்கத்தை பாதிக்கும் செயல்கள். 197 (1) (d) இந்திய இறையாண்மை, ஒற்றுமை அல்லது பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்தல். 353 (1) (b) பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகள் தவறான தகவல்கள் அல்லது வதந்திகளை வெளியிடுவது. 353 (2) பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் தகவலை வெளியிடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “என் தாயின் இழப்புக்கு பின்னர் கரூரில் என்னுடைய குடும்பத்தில் 41 பேரின் உயிரிழப்பு மிகப்பெரிய வலியை கொடுத்திருக்கிறது. தற்போது எதையும் பேசக் கூடிய மனநிலையில் நான் இல்லை. இதை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். விரைவில் கரூர் சென்று பொதுமக்களை சந்திப்போம். அவர்களுடன் மிகப்பெரிய பயணம் தொடரும். வாழ்க” என்று கூறினார்.