சனி, 19 அக்டோபர், 2013

பேய், பிசாசு உண்டா ?

அளவற்ற அருலாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

மனித வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை அளிக்கும் வாழ்க்கை நெறியே இஸ்லாம். இதனை உணராத காரணத்தினால் தான் இன்று முஸ்லிம் சமுதாயம் தடம் புரண்டு சென்று கொண்டிருக்கிறது.

வணக்க வழிபாடுகளை மாத்திரம் சொல்லித் தருவதே இஸ்லாம் என்று சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மாத்திரமே இஸ்லாம் சொல்லித் தருகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். புறச்செயல்களை மாத்திரம் ஒழுங்கு படுத்தும் மார்க்கம் என்பர் வேறு சிலர். புறச்செயல்களைப் புறம் தள்ளிவிட்டு அகத்தை மட்டும் சுத்தம் செய்வதே இஸ்லாம் என்பர் இன்னும் சிலர். வெளிப்படையாக இவ்வாறு இவர்கள் கூறாவிடினும் தங்கள் நடவடிக்கைகள் மூலம் இவ்வாறு பிரகடனப்படுத்தி வருகின்றனர்.

பலரும் பலவிதமாக இஸ்லாத்திற்கு வடிவம் கொடுக்க முயன்றாலும், மனித வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளிலும் தலையிட்டு தக்க தீர்வை வழங்குவதே இஸ்லாம். மனிதனது செயல்களில் மட்டுமன்றி அவனது நம்பிக்கையிலும் எண்ணத்திலும் கூட இஸ்லாம் தலையிடுகிறது. எவற்றைச் செய்யலாம் எவற்றைச் செய்யலாகாது என்பதை இஸ்லாம் விளக்குவது போலவே, எவற்றை நம்பலாம் எவற்றை நம்பலாகாது என்பதையும் இஸ்லாம் விளக்கமாக எடுத்துரைக்கின்றது. செயல்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட சற்று அதிகமாகவே எண்ணத்திற்கு முக்கியத்துவம் தருகின்றது.

செய்ய வேண்டியவைகளைச் செய்யாமலிருப்பதும், செய்யக் கூடாதவைகளைச் செய்வதும் எப்படிக் குற்றமோ அது போலவே நம்ப வேண்டியவைகளை நம்பாமலிருப்பதும் நம்பக் கூடாதவற்றை நம்புவதும் குற்றமே. இதன் காரணமாகவே ‘பேய் பிசாசுகள் என்று மக்களால் நம்பப்படும் விசித்திரமான படைப்பைப் பற்றி இஸ்லாமிய அடிப்படையில் நாம் ஆராயும் அவசியம் ஏற்படுகிறது.

‘பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

‘பெண் என்றால் பேயும் இரங்கும்
‘நோய்க்கும் பார்க்க வேண்டும்; பேய்க்கும் பார்க்க வேண்டும்

என்றெல்லாம் தமிழகத்தில் வழங்கும் பழமொழிகள், தமிழர்களின் உள்ளங்களில் பேய்களுக்கு இருக்கும் இடத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

உலகின் பல பகுதிகளில் பேய்களின் நடமாட்டம் உண்டு எனினும் தமிழகத்தில் இவற்றின் நடமாட்டம் மிக அதிகம். எண்ணிலடங்காத பேய்கள் உலா வருவதால் அவற்றின் பெயர்களும் தன்மைகளும் மிகத்துல்லியமாக வித்தியாசப்பட்டுள்ளதை தமிழகத்தில் காண முடியும்.

நள்ளிரவில் கதவைத் தட்டும் பேய்களும் உள்ளன. வீடுகளில் கல்லெறிந்து விட்டு மாயமாய் மறைந்திடும் பேய்களும் உள்ளன. பழிவாங்கும் பேய்கள்; இரத்தம் குடிக்கும் பேய்கள்; இளைஞர்களை மாத்திரமே ‘தப்பு செய்வதற்காக அழைக்கும் மோகினிப் பேய்கள், வேண்டியவர்களுக்கு உதவி செய்யும் பேய்கள் என்றெல்லாம் பேய்களில் பல வகைகள் உள்ளன. இல்லறத்தில் தோல்வியடைந்து இலக்கின்றி அலையும் பேய்களும் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக மனிதன் மீது மேலாடுகின்ற மகாசக்தி படைத்த பேய்களும் உள்ளன.

பிசாசுகள், மோகினி, இரத்தக் காட்டேரி, கொள்ளிவாய்ப் பிசாசு என்பது போன்ற செல்லப் பெயர்களும் பேய்களுக்கு உள்ளன. பேய்களுக்கு தமிழகத்தில் இருக்கும் வெல்வாக்குக்கு இவை சான்றுகள்.

பேய் வீடு, பேய் மாளிகை என்றெல்லாம் பேய்களைக் கதாநாயகர்களாக்கி பி.டி. சாமி போன்றவர்கள் தமிழகத்தில் பிழைப்பு நடத்த முடிகின்றதென்றால் பேய் சமாச்சாரங்களை வெளியிட்டு தமிழகப் பத்திரிகைகள் பல சமூகத் தொண்டாற்ற (?) முடிகிறது என்றால் பேய்களின் ஆதிக்கத்தை அளவிட வேறு அளவுகோல் எதுவும் தேவையில்லை.

“அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்களென்பர்; துஞ்சுது முகட்டிலென்பார்; அந்த மரத்திலென்பார்; இந்தக் குளத்திலென்பார் என்று நெஞ்சு பொறுக்காமல் சில பேர் குமுறினாலும் சில சுயமரியாதையுள்ள பெரியார்கள் பேய்களுக்கெதிராக கடும் பிரச்சாரம் செய்தாலும் பேய் விசுவாசிகளின் நம்பிக்கையை அசைக்க முடியவில்லை.

மற்றவர்கள் பேய்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் நம்பிவிட்டுப் போகட்டும்! முஸ்லிம்கள் இது பற்றி எத்தகைய முடிவுக்கு வரவேண்டும் என்பதையும் பேய்களை நம்புவதனால் ஏற்படும் சாதக பாதகங்களையும் அவற்றை மறுப்பதால் ஏற்படும் சாதக பாதகங்களையும் திருக்குர்ஆன் வெளிச்சத்தில், திருநபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் துணையுடன் ஆராய்வோம்.

மனிதன் மரணித்த பிறகு அவனது உயிர் (ஆவி) எங்கே செல்கிறது? என்ன செய்கிறது? என்ற வினாக்களுக்கு விடை கண்டால் “பேய்கள் உண்டா? என்ற வினாவுக்கும் விடை கிடைக்கும். ஏனெனில் ‘இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பி வந்து சுற்றிக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கை தான் பேய்களைப் பற்றிய நம்பிக்கையின் அடிப்படை.

இறந்தவர்களது ஆவிகளின் நிலை என்ன? என்பதை முதலில் காண்போம். அதன் பிறகு பேய்களின் ஆதரவாளர்கள் எழுப்பும் வினாக்களையும் ஆராய்வோம்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 39:42)

பேய்-பிசாசுகள் கிடையாது என்பதற்கு திருக்குர்ஆனின் இந்த ஒரு வசனமே போதிய சான்றாக அமைந்துள்ளதை சிந்திப்பவர்களால் அறிய முடியும். இறந்து விட்ட மனிதர்களின் ஆவிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் (தனது கைவசத்தில்) வைத்திருப்பதாக தெளிவாகவே இங்கே இறைவன் குறிப்பிடுகிறான். இறைவனது கைவசத்திலேயே ஆவிகள் இருப்பதாக இறைவன் தெளிவாக அறிவித்த பின்னர் அவனது கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து விட்டு ஆவிகள் தப்பித்து வந்து விடுகின்றன என்று ஒரு முஸ்லிம் நம்ப முடியாது.

பேய்கள் இருப்பதாக நம்புபவர்கள் இறைவனது இந்த வசனத்தை மறுத்தவர்களாவார்கள்; அல்லது இறைவனது கட்டுப்பாடு வலுவற்றது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள். இரண்டில் எதை ஏற்றாலும் அவர்கள் இஸ்லாமிய வட்டத்திலிருந்து தாங்களாகவே வெளியேறி விடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஒரு பிரார்த்தனை இந்த வசனத்திற்கு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணுங்கள்.

உங்களில் யாரேனும் படுக்கைக்குச் சென்றால், ‘என் இறைவா! உன் திருப்பெயராலேயே திரும்பவும் எழுவேன் (உறக்கத்தில்) எனது உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அற்கு நீ அருள் புரிந்திடு! அதை நீ திரும்ப அனுப்பினால் உனது நல்லடியார்களை நீ பாதுகாப்பது போல் எனது உயிரையும் நீ பாதுகாத்து விடு என்று கூறட்டும்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

திருக்குர்ஆனின் 39:42 வசனம் கூறும் அதே கருத்தை இந்த நபிமொழியும் கூறுகின்றது. உறக்க நிலையிலும், மரணித்த பின்னரும் மனிதர்களின் ஆவிகள் இறைவனது கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன என்று அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் இரண்டாவது கருத்துக்கு இடமில்லாத வகையில் அறிவித்து விட்ட பின் பேய்களிருப்பதாக ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்? பேய்களை நம்புபவன், எப்படி இறைவனையும் இறைத் தூதரையும் நம்பியவனாக முடியும்?

இந்த இரண்டு சான்றுகளே பேய்களை மறுக்கப் போதுமானவை என்றாலும் அதிக விளக்கத்துக்காக மேலும் பல சான்றுகளையும் காண்போம்.
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
(அர்குர்ஆன் 23:99,100)

பேய்களைப் பற்றி நிலவும் எல்லா நம்பிக்கைகளையும் இந்த வசனம் தகர்த்தெறிகின்றது. இறைவா என்னைத் திரும்ப உலகுக்கு அனுப்பி வை என்று மனிதன் கேட்டுக் கொண்டாலும் கூட திரும்ப அனுப்புவதாக இல்லை என இறைவன் இங்கே தெரிவிக்கிறான். இதன் மூலம் இவ்வுலகுக்குத் திரும்பி வருவதற்கு மனிதன் ஆசைப்பட்டால் கூட அது நடக்கப் போவதில்லை என்பது தெளிவாகின்றது.

இவ்வுலகுக்கு திரும்பி வந்து தவறான காரியங்களில் ஈடுபடுவதற்கு இல்லாமல் நல்லறங்களைச் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே இவ்வாறு மனிதன் கேட்கிறான். நல்லறங்கள் செய்வதற்காகக் கூட உலகுக்குத் திரும்ப அனுப்புவது இயலாது என்று இறைவன் இங்கே அறிவிக்கின்றான்.

நல்லறங்கள் செய்வதற்காகக் கூட மனிதன் திரும்ப அனுப்பப்படுவதில்லை என்றால் பிறரைப் பயமுறுத்தவும், பிறருக்குத் தொல்லை தரவும், பிறர் மீது மேலாடி அமைதியின்மையை ஏற்படுத்தவும் இறந்தவர்களின் உயிர்கள் எப்படி உலகுக்குத் திரும்ப இயலும்?

இந்த வசனத்தின் இறுதிப் பகுதி முக்கியமான பகுதியாகும். மனிதன் மரணித்த பின்பு அவனுக்கும் உலகுக்கும் இடையே திரை இருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான். திரை என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் பர்ஸஹ் எனும் அரபிச் சொல் இடம் பெற்றுள்ளது. பர்ஸஹ் என்றால் கண்களுக்குப் புலப்படாத, உடைக்க முடியாத திரை என்பது பொருள். இதற்குச் சான்றாக இதே வார்த்தை இடம் பெற்றுள்ள மற்றொரு வசனத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக அமையும்.

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். . இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது. என்ற கருத்தை 55வது அத்தியாயம் 19,20 வசனங்களில் இறைவன் குறிப்பிடுகிறான். விஞ்ஞானிகளும் இதனை ஆராய்ந்து இரு கடல்களும் நமது பார்வைக்கு இணைந்திருப்பதாகத் தோன்றினாலும், ஒன்றுடன் மற்றொன்று கலந்து விடுவதில்லை என்று உறுதி செய்கின்றனர்.

அதே வார்த்தையைத் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்திலும் இறைவன் பயன்படுத்தியுள்ளான். மனிதன் இறந்த பின் அவனுக்கும் இவ்வுலகுக்கும் இடையே “பர்ஸஹ் எனும் திரை போடப்படுவதாக வல்ல இறைவன் குறிப்பிடுகின்றான். இறந்த மனிதன் எவ்வகையிலும் இவ்வுலகுடன் தொடர்பு வைத்திருக்க முடியாது என்பதை இதன் மூலம் அறிவிக்கின்றான். இறைவனின் இவ்வசனத்தை நம்பக் கூடிய ஒரு முஸ்லிம், ஆவிகள் வந்து நடமாடுவதை எப்படி நம்ப முடியும்? ஒன்றுக்கொன்று முரணான இரண்டு நம்பிக்கைகள், ஒரு உள்ளத்தில் எப்படி இருக்க முடியும்?

“பர்ஸஹ் எனும் மகத்தான திரை குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டும் போடப்படுவதில்லை. மாறாக, மனிதர்கள் திரும்பவும் உடலுடன் எழுப்பப்படும் காலம் வரையிலும் இந்த மகத்தான திரை இருந்து கொண்டிருக்கும் என்றும் இறைவன் அதே வசனத்தில் தெரிவிக்கின்றான்.

இறந்தது முதல் எழுப்பப்படும் வரை மகத்தான திரைக்குப் பின்னே இருக்கும் ஆவிகள் – நல்லறங்கள் செய்வதற்காக உலகுக்கு வர அனுமதி கேட்கும் போது அனுமதி மறுக்கப்பட்ட ஆவிகள் – எப்படி இந்த உலகுக்கு வர இயலும்? பேய்களுக்கு இஸ்லாத்தில் அறவே இடமில்லை என்பதை இவ்வசனத்தில் இருந்தும் உறுதி செய்து கொள்ளலாம்.

மரணித்தவரின் ஆவி ஒரு போதும் இவ்வுலகுக்கு வருவது சாத்தியமே இல்லை என்பதை அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது கருத்துக்கு இடமின்றி தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள்.

உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும் மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் உள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக அவர் இருப்பின் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்கு எடுத்துக் காண்பிக்கப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடமாகும் என்றும் அவரிடம் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூற்கள் : புகாரி, முஸ்லிம்

மரணித்த மனிதன் கியாம நாள் வரை (திரும்பவும் உடலுடன் எழுப்பப்படும் வரை) மண்ணறையிலேயே இருந்தாக வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய பிறகு இறந்தவரின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பவும் வருகின்றன என்று எப்படி நம்ப முடியும்? அப்படி நம்புபவன் நபி (ஸல்) அவர்களின் போதனையை பகிரங்கமாக மறத்தவனாக ஆவான் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.

மரணித்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருநிறமும் நீலநிறக் கண்களும் ​உடைய இரண்டு மலக்குகள் அவரிடம் வருவர். ஒருவர் “முன்கர் மற்றொருவர் “நகீர். இந்த மனிதர் பற்றி (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்? என்று அவ்விருவரும் கேட்பர். “அவர் அல்லாஹ்வின் தூதராகவும், அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரும் இல்லை; நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன் என்று அந்த மனிதர் கூறுவார். “உலகில் வாழும் போது இவ்வாறே நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்களும் அறிவோம் எனறு அம்மலக்குகள் பதிலளிப்பர்.

பின்னர் அவரது மண்ணறை விசாலமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஒளிமயமாக்கப்படும், பின்பு அவரை நோக்கி “உறங்குவீராக! என்று கூறப்படும். “நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் “நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவதைப் போல் நீர் உறங்குவீராக! இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக! என்று கூறுவார்கள்.

இறந்த மனிதன் முனாபிக்காக (சந்தர்ப்பவாதியாக) இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அம்மனிதன் “இந்த முஹம்மத் பற்றி மனிதர்கள் பலவிதமாகக் கூறுவதைச் செவிமடுத்தேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பான்.

அதற்கு அவ்வானவர்கள் “நீ இப்படித்தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாம் அறிவோம் எனக் கூறுவர். அதன் பின் பூமியை நோக்கி “இவரை நெருக்கு எனக் கூறப்படும். அவரது விலா எழும்புகள் நொருங்கும் அளவுக்கு பூமி அவரை நெருக்க ஆரம்பிக்கும். அவனது இடத்திலிருந்து அவனை இறைவன் எழுப்பும் வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதீ

நல்ல மனிதர்களது உயிர்களானாலும் கெட்ட மனிதர்களது உயிர்களானாலும் இவ்வுலகுக்குத் திரும்பி வர வழியே இல்லை என்பதற்கு இதுவும் பலமான சான்றாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் இங்கே பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் பேய்களுக்குச் சம்மட்டி அடியாக அமைந்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.