வியாழன், 7 ஆகஸ்ட், 2025

கல்லூரியில் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் - ஸ்டாலின் அறிவிப்பு

 MK Stalin xy

வேலைவாய்ப்புத் துறைகள் மூலம் 2.65 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கி உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

திராவிட மாடல் அரசு என்பது இளைஞர்களுக்கானது என்று கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கல்லூரியில் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று புதன்கிழமை அறிவித்தார்.

மேலும், வேலைவாய்ப்புத் துறைகள் மூலம் 2.65 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கி உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் உதவிப் பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு பணி இடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்ட மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறேன். வளர்ச்சி விகிதம் 11.19% என மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீடு கூறுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “14 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் இறுதியாக இரட்டை இலக்கம் 11.15%ஆக இருந்தது. சாதாரணமாக இது நடந்து விடவில்லை. நெருக்கடி, அவதூறுகளை கடந்து சாதித்திருக்கிறோம். இது எனக்கான தனிப்பட்ட வெற்றி மட்டுமில்லை. கூட்டாக பெற்ற வெற்றி.” என்று ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திராவிட மாடல் ஆட்சிக்கான நற்சான்றிதழ் பத்திரம்தான் இந்த பொருளாதார வளர்ச்சி. இதோடு ஓய்ந்துவிடாமல் வளர்ச்சியை திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடருவோம்.” என்று உறுதி கூறினார்.

நேற்று இரவில் இருந்து இது தான் Talk of The Town; Talk of The Nation என்றே சொல்லலாம் என்று கூறிய ஸ்டாலின், “தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19% ஆக உயர்ந்துள்ளது. இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளது, திமுக ஆட்சியில் தான் தமிழகத்தின் பொருளாதாரம் அதிகரிக்கிறது.” என்று கூறினார்.

மேலும், “கல்வி கொடுத்தால் மட்டும் போதாது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நோக்கிலும் செயலாற்றுகிறோம். கடந்த 4 ஆண்டுகளில் TNPSC, TRB, MRB, TNUSRB உள்ளிட்ட தேர்வாணையங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் 1.08 லட்சம் பேருக்கு பணி நியமனங்கள் வழங்கியுள்ளோம்.” என்று கூறினார்.

“நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 3.28 லட்சம் பேருக்கும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைகள் மூலம் 2.65 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். திராவிட மாடல் அரசு என்பது இளைஞர்களுக்கானது. கல்லூரியில் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-announce-laptops-will-be-provide-to-20-lakh-college-students-9633374