தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் புதிய நடைமுறையைத் தமிழக அரசு முன்வைத்துள்ளதாகவும் ஆளுநரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு, அவரின் விருப்பத்திற்கு ஏதுவாக இந்த புதிய ஏற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் தமிழச்சி தங்கப்பாண்டியன் சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது, " மரியாதைக்குரிய கழகத் தலைவர் அண்ணன் ஸ்டாலின் தலைமையிலான, திராவிட மாடல் ஆட்சியின் போது, நெடிய சட்டப்போராட்டம் நடத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சர் தான் இருக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பைப் பெற்றோம். அந்தச் சட்டத்தின் செல்லுபடியாக்கம் தொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், துணைவேந்தர்கள் தேடல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC -University Grants Commission) பிரதிநிதியை சேர்க்கும் நோக்கில், உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3-இல் இருந்து 5 ஆக உயர்த்துவது குறித்து பேசுவதும், அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு - உயர்கல்வித்துறை முன்னெடுப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்காமல், ஆளுநரின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய ஏற்பாடுகளை முன்வைப்பது - தமிழ்நாடு அரசின் சட்டநிலையையும், உயர்நீதிமன்றத்தில் அரசு முன்வைத்துள்ள வாதங்களையும் பலவீனப்படுத்தும். துணைவேந்தர்கள் தேடல் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தும் முயற்சியை உடனடியாக கைவிட்டு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கைத் திறம்பட நடத்தி, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில், திராவிட மாடல் ஆட்சியில், உச்சநீதிமன்றத்தில் நாம் பெற்ற வெற்றியை, தமிழ்நாடு அரசின் - மாநில அரசுகளின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கின்றேன். " என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
8 7 2926
source https://tamil.indianexpress.com/tamilnadu/thamizhachi-thangapandian-opposes-tn-govt-move-on-vice-chancellor-search-committee-12146701





