செவ்வாய், 7 ஜூலை, 2026

லோக் ஆயுக்தா சட்டம் தொடர்பான பொதுநல மனு: தமிழக அரசு 3 வாரங்களில் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

 

high court secreatariate

தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டத்தை திறம்பட செயல்படுத்தக் கோரும் பொதுநல மனுவுக்கு (PIL) பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஜூலை 06) உத்தரவிட்டது. 

2018-ல் அமலுக்கு வந்த தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்று கூறி வி. ஜீவகுமார் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய முதல் அமர்வு, மூன்று வாரங்களுக்குள் மாநில அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கில், மனுதாரரின் கூற்றுப்படி, ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக நிறுவப்பட்ட தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பு, இன்னும் திறம்பட செயல்படுத்தப்படவில்லை. லோக் ஆயுக்தா இணையதளத்தில் 2019 மற்றும் 2024-க்கு இடையில் 617 புகார்கள் தீர்க்கப்பட்டதாகவும், டிசம்பர் 2025 நிலவரப்படி 137 புகார்கள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது இருப்பினும், எத்தனை வழக்குகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளன அல்லது நிலுவையில் உள்ள புகார்களின் தற்போதைய நிலை என்ன என்பது போன்ற விவரங்களை இணையதளம் வெளியிடவில்லை என்று அவர் கூறினார்

மேலும் அந்த மனுவில், லோக் ஆயுக்தா செயலாளராக துணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியை நியமிக்க சட்டம் வழிவகை செய்யும் நிலையில், தற்போதைய அல்லது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியை செயலாளராக நியமிக்க அனுமதிக்கும் வகையில் விதிகளை திருத்தி மாநில அரசு 2020-ல் அரசாணை (GO) ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த திருத்தம் மத்திய சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று வாதிட்ட மனுதாரர், அந்த அரசாணையை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-order-tn-government-for-lok-ayukta-act-pil-case-12140687